கருணையற்ற வாழ்வின் ஒரு நடனம்: வாசகர் கடிதம் 3: எஸ்.பி பாமா

முன்பெல்லாம் மூத்த படைப்பாளர்களின் எழுத்துகள்தான் பிரபலமாகப் பேசப்பட்டும் புகழப்பட்டும் வந்தன.ஆனால் தற்போதைய நிலை அப்படியல்ல. புதுப்புது இளம் எழுத்தாளர்கள் எடுத்த எடுப்பிலேயே மிகவும் நுட்பமாக எழுதி தடம் பதிக்கிறார்கள். அவ்வகையில் நாடறிந்த எழுத்தாளர் பாலமுருகன் இளம் வயதிலேயே பல அற்புதப் படைப்புக்களை எழுதி பாராட்டையும் பரிசுகளையும் குவித்தவர்.

நடனம் சிறுகதை

இச்சிறுகதை மலேசியாவில் எழுதப்பட்ட மிக அண்மைய நவீனத்துவ சிறுகதை என்றே சொல்லலாம். இக்கதை உயிர்மை எனும் மின்னிதழில் வெளிவந்துள்ளது. இவரின் இக்கதை அவ்விதழில் வெளிவந்தது உண்மையில் பெருமைப்பட வேண்டிய விடயம்.

இக்கதை வாசகனுக்கு இடமளித்து அதனை ஓர் அழகியல் சார்ந்த இடைவெளியாக கதாசாரியர் கச்சிதமாகப் புனைத்துள்ளார். எல்லா தகவல்களையும் சொல்வதற்குரிய இடமாக சிறுகதையைப் பார்க்க இயலாது. பிறகு வாசகனுக்கு என்ன வேலை? நமது ஊகங்களுக்குச் சில விடயங்களை விட்டுச் செல்வதன் மூலம் நம் கற்பனையைப் பல எல்லைகளுக்கு விரிவாக்கிக் கொடுக்க முடியுமானால் அதுவே நவீன சிறுகதை.

இச்சிறுகதை வக்கிரமான வாழ்வுக்குள் மனித மனம் எத்துணை கருணையின்மையோடு நடந்து கொள்கிறது என்பதனை எழுத்தாளர் சித்தரிப்புகளால் காட்டிக் கொண்டே செல்கிறார். எடுத்துக்காட்டாக கதையின் இறுதி காட்சியில் வரும் ஒரு சீனத்தி அங்கிருக்கும் குப்பைகளை அகற்றுகிறாள்; ஆனால் குமாரோ தனது வளர்ப்பு மகளான கோமதியை ஒரு குப்பை போன்ற வாழ்க்கைக்குள் தள்ளுகிறான். இது எத்தனை முரணான ஒரு காட்சி. கதையை உள்வாங்கிக் கொள்ள கதாசிரியர் படைத்திருக்கும் இந்தக் காட்சி முரண்கள் நவீனத்தன்மைகளோடு புனையப்பட்டுள்ளது. மேலும் கதையில் எடுத்த எடுப்பிலேயே முக்காடு அணிந்த சிறுமி கடையின் விளக்குகளை தட்டிவிடுகிறாள். அவளின் அம்மா நாசி லெமாக் பொட்டலங்களை அடுக்கி வைக்கிறாள்.நாசி லெமாக் வாசம் சாக்கடையின் வீச்சத்தையும் தாண்டி வீசியது என்பதிலேயே நம்மை சிந்திக்கத் தூண்டிவிடுகிறார்.

கடைக்குள் உள்ள சிறுமி பாதுகாப்புடன் மணம் வீசுவதாகவும், நன்கு வாசனை திரவியங்களோடு குதிகாலுடன் இருக்கும் கோமதி சாக்கடைக்குள் தள்ளப்பட்டுவிட்டாள் என புரிந்துகொள்ள முடிகிறது.

கட்டுரையில்தான் தகவல்கள் வரும். சிறுகதையில் யாவும் காட்சிகள்தான் இடம்பெறும். அவற்றை கொண்டு நாமே அச்சிறுகதையை மனத்தினுள் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற ஒரு வாசக இடைவெளியை எழுத்தாளர் உருவாக்கியுள்ளார். எடுத்துக்காட்டாக, அப்பொழுதுதான் நாசி ஆயாம் சாப்பிட்டு விட்டு வந்த கோமதிக்கு உடனுக்குடன் பசி எடுப்பதாக ஆசிரியர் விவரித்துள்ளார். நான் வாசிக்கும்போது ஒருவேளை அவள் கர்ப்பம் தரித்திருக்கிறாளோ என ஊகிக்க வைத்தது. அப்படிக் கர்ப்பமாக இருந்தால் அடிக்கடி பசிக்கும் என்பது நமது அனுபவம். அதனை இச்சிறுகதையினோடு பொருத்திப் பார்த்தால், கதை இன்னும் பரிதாபத்திற்குள்ளாகிறது. ஒரு இளம் பெண்ணின் மீது நிகழ்த்தப்படும் வன்முறையும் அநீதியும் இன்னும் அடர்த்தியாகி மனத்தை வலிக்கச் செய்கிறது.

ஆக, வாசகந்தான் இக்கதையைத் தனக்குள் விரிவாக்கிக் கொள்ளும்படி எழுத்தாளர் நிறைய இடங்களைக் கொடுத்திருக்கிறார்.

கதாசிரியர் நமக்குப் பாடம் எடுக்கவில்லை. வாழ்க்கையின் குரூரமான பக்கங்களைத் திருப்பிக் காட்டுகிறார். அதைக் கண்டு நாம் மிரள்கிறோம். இப்படி பல உணர்ச்சிகளுக்குள் தள்ளப்படுகிறோம். ஒரு படைப்பை இத்தகைய அனுபவத்தைதான் நமக்கு வழங்கியிருக்க வேண்டும்.

எழுத்தாளர், கோமதியின் வயதைக் குறிபிடவில்லை. ஆனால் வாசிக்கும்போது அவளை நம்மால் காட்சி சித்தரிப்புகளில் ஊகித்து உருவமைத்துக் கொள்ள முடிகிறது. லலிதா ஏன் இறந்தார் எனக் குறிபிடவில்லை. ஒருவேளை கோமதியைப் போல் அவளையும் நாற்றத்தில் தள்ளியிருக்கலாம். தற்கொலையும் பண்ணியிருக்கலாம்.

லீனா, மேரி யாரென்று குறிபிடவில்லை. இவையனைத்தும் குறிப்பிடாமல் போனதற்குக் காரணமாக நான் பார்ப்பது கதைச்சொல்லி வட்டிக்காரன் குமார். அவனது பார்வையிலிருந்து கதை நகர்த்தப்படுகிறது. அவன் லலிதாவின் மரணத்தை மறைக்கிறான். அவன் பார்வையில் கீழானவர்களாக தெரியும் மேரி, லீனாவைப் பற்றி அவன் விவரிக்க விரும்பவில்லை. ஆனால், இவர்கள் கதையில் வரும் ஒரு சிறுத்துளிகள் மட்டுமே.

குமாரின் வாழ்வில் கோமதி மட்டுமே பெருமழை.

வாழ்ந்து கெட்ட குமாரின் வாழ்க்கையைச் சமன்படுத்த கோமதி பணைய வைக்கப்படும் கொடூரமே இச்சிறுகதையின் தரிசனம். அதன் முன்னே பெரும் வருத்தத்தோடும் நெகிழ்ச்சியுடனும் நின்று ,கடன்பட்டார் வாழ்வுக்குள் கடைசி குழந்தை வரை எப்படிச் சிதைக்கப்படுவார்கள் என நினைத்து அச்சப்பட வைக்கிறார் எழுத்தாளர்.

கொஞ்சமும் எதிர்பார்க்காத திருப்பம். சூட்சுமமாக எழுதப்பட்ட படைப்பு. வார்த்தைகளில் அழகியல் மிளிர்ந்தது. தலைப்பும் மிகப் பொருத்தமானது. நம் வாழ்க்கையும் நடனம் போன்றதுதான்.

நடனம் முடியும்போது ஒரு கோரத்தாண்டவமாக மாறுகிறது.

எஸ்.பி.பாமா

நடனம் சிறுகதையை வாசிக்க:

Share Button

About The Author

Comments are closed.