குறுங்கதை: ஒரு மாலை நேரத்து உறக்கம்

மாலையில் தூங்குவது எப்பொழுதாவதுதான் சாத்தியப்படும். அன்றைய நாள் அடை மழை. வானம் மின்னிக் கொண்டே இருந்தது. மின்சாரத் துண்டிப்பு வேறு. எங்கோ கடுமையான வெள்ள நெரிசல் உண்டாகியிருக்கலாம். வெளிவேலைக்கும் போக முடியாததால் வெகுநாளுக்குப் பிறகு மாலை உறக்கம் கிட்டியது. எனது அறை மேல் மாடியில் தனித்து இருக்கும்.

“ரெண்டு மணி நேரம் படுக்கறன்… எழுப்பாதீங்க…”கீழேயிருந்த மனைவியிடம் எச்சரிப்பது போல் சொல்லிவிட்டுக் கதவைச் சாத்திக் கொண்டேன். மனைவி என் அம்மாவுடன் சேர்ந்து நேற்றிரவு பார்க்கத் தவறிய தொடர் நாடகங்களை உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருக்கக்கூடும்.

குளிரூட்டி அறையைக் குளிர்ச்சிப்படுத்திவிட்டிருந்தது. அதுவும் மழைக்குளிரில் போர்வைக்குள் அடங்குவது வரம். இடி சத்தம் ஓயவில்லை. இப்படியொரு மழையைக் கண்டு வெகுநாளாகிவிட்டது.

எப்பொழுது கண்ணயர்ந்தேன் எனத் தெரியவில்லை. ஒரு பெரும் ஒளித்திரளில் மாட்டிக் கொண்டு தவிப்பது போன்ற ஒரு கனவு. மகா வெளிச்சம் என்னைச் சூழ்ந்து தடுத்துக் கொண்டது. சட்டென விழிப்பு. தூங்கச் செல்லும்போது மணி மாலை 3.00 இருந்திருக்கும். இப்பொழுது 5.00 ஆகி விட்டிருந்தது. அடுத்து ஒரு தேநீருக்குத் தயாராகலாம் எனக் கதவைத் திறந்து கீழே இறங்கினேன்.

யாரோ அறிமுகமில்லாதவர்கள் வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். நடுத்தர வயத்தை ஒத்த பெண்மணி என்னைப் பார்த்ததும் அதிர்ந்து கத்தினாள். வயதான ஆண் எழுந்து நின்று பின்னோக்கி நகர்ந்தார். சிறுபிள்ளை ஒருத்தி அம்மாவின் பின்னாள் ஒளிந்து கொண்டாள்.

“யாரு நீ? எங்க வீட்டுக்குள்ள எப்படி வந்த?” என அப்பெண்மணி கேட்டுக் கொண்டே மேசையிலிருந்த கைப்பேசியை எடுக்க முயன்றாள்.

“நீங்கலாம் யாரு? எங்க என் மனைவி? கீதா! கீதா!”ஒன்றும் புரியாதவனாய்ச் சுற்றிலும் பார்த்தேன். வேறு பொருள்கள், வேறு படங்கள், வேறு அலங்காரங்கள் ஆனால் அதே வீடுதான்.

“இருங்க… கீதாவா? நீங்க மனோகரா?”

அவள் ஆச்சரியத்துடன் கேட்டாள். நானும் ஆமாம் என்பது போல் தலையசைத்தேன்.

“பா… போன வருசம் இந்த வீட்ட அந்தக் கீதா அக்காகிட்ட இருந்துதான வாங்கனோம்… அவங்களோட ஹஸ்பன்ட் இவரு…”

எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. திக் பிரமையுடன் சுற்றிலும் பார்த்துக் கொண்டிருந்தேன்.

“நாலு வருசத்துக்கு முன்னால நீங்க காணம்னு சொன்னாங்க… வீட்டுலத்தான் படுக்கப் போனீங்க… ரூம்புக்குள்ள இல்ல… அப்புறம் போலிஸ் ரிப்போர்ட்… எனக்குச் சரியா தெரில சார்… நீங்க…”

தலை சுற்றலுடன் அப்படியே நாற்காலியில் உட்கார்ந்து கொண்டேன். ஒரு மாலை நேரத்து உறக்கத்திற்குப் பின் இப்படி நடந்தால் என்ன தோன்றும் எனக்கு? எதிரில் நின்றிருந்தவள் கீதாவிற்கு அழைப்பதாக வெளியில் சென்றாள்.

“அங்கள் நீங்க எப்படி எங்க வீட்டுக்குள்ள வந்தீங்க? நீங்க திருடனா?”

என் தோற்றத்தைப் பார்த்து வேடிக்கையுடன் சிறுமி கேட்டாள். சிறிது நேரத்தில் அப்பெண்மணி மீண்டும் உள்ளே வந்தார்.

“அவுங்க இங்க இல்லையாம்… சிங்கப்பூர்ல செட்டல் ஆயிட்டாங்களா… நான் ஏதோ பொய் சொல்றன்னு திட்டறாங்க… நான் வேணும்னா உங்கள போட்டோ எடுத்து அவுங்க வாட்சாப்க்கு அனுப்பட்டா சார்?”

எனக்கு எதுவும் தோன்றவில்லை. நினைவுகள் காலியானதைப் போல இருந்தது. வேண்டாமென மறுத்தேன்.

“ஒரேயொரு உதவி முடியுமா?”

தயங்கியப்படித்தான் கேட்டேன். அவரும் என்னவென்று கேட்டார்.

“இன்னும் ஒரு ரெண்டு மணி நேரம் மேல ரூம்புல தூங்கிக்கிட்டா?”

– கே.பாலமுருகன்

Share Button

About The Author

Comments are closed.