குறுங்கதை: ஒற்றைப் பந்து

வினோத் விளையாட்டு ஆசிரியர் வருவாரென ஆவலுடன் வகுப்பறைக்கு வெளியில் நின்றிருந்தான். அவர் காலை 7.20க்குள் வந்துவிடுவார். இன்று 7.25 ஆகியும் அவரது மகிழுந்து இன்னும் பள்ளியின் வளாகத்திற்குள் நுழையவில்லை. வினோத் பதற்றத்துடன் இருந்தான்.

“வினோத்து, என்ன சிலுவாரு கீழ கிழிஞ்சிருக்கு…?”

நண்பன் கேட்டதும் வினோத் விளையாட்டுக் காற்சாட்டையின் கால்பக்க நுனியைப் பார்த்தான். ஒரு சிறிய பொத்தல். காலூறையை மேலே இழுத்து அதனை மறைத்தான். இன்று எப்படியாவது விளையாட்டு உடையுடன் வந்திவிட வேண்டுமென உறுதியில் எடுத்து அணிந்து கொண்டான். அம்மா அப்பொழுதே திட்டினார்.

“டேய், இன்னிக்குப் சார் வருவாருதானே?”

“எனக்கெப்படிடா தெரியும்?”

வினோத்தால் நிலைக்கொள்ள முடியவில்லை. அவன் கடந்த எட்டு மாதங்களாக மாலையில் விளையாடச் செல்வதில்லை. தம்பி பிறந்தவுடன் தினமும் அவனைப் பார்த்துக் கொள்வதிலேயே பொழுதுகள் கழிந்துவிடும். வீட்டிற்கு எதிரில் விளையாட்டுத் திடல் என்பதால் மாலையில் நண்பர்கள் காற்பந்து விளையாடும்போது போடும் சத்தத்தைக் கேட்டுக் கொண்டே தம்பியின் தொட்டிலை ஆட்டிக் கொண்டிருப்பான்.

பள்ளி அடைக்கப்பட்டுக் கடந்த வாரம்தான் மீண்டும் திறந்திருந்தார்கள். ஆனால், இன்னுமும் விளையாட்டு ஆசிரியர் திடலுக்கு அழைத்துச் செல்லவில்லை. இன்று அழைத்துச் செல்லக்கூடும் என வினோத் நேற்று இரவிலிருந்து கற்பனை செய்து கொண்டிருந்தான்.

7.30க்கு ஆசிரியரின் மகிழுந்து வேகமாக வந்து பள்ளியின் வளாகத்தினுள் நுழைந்தது. உடனே, வினோத் மகிழுந்து நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு ஓடினான்.

“சார், இன்னிக்கு விளையாட்டு இருக்குமா?” என மூச்சிரைக்கக் கேட்டான்.

“யா, இன்னும் பள்ளிக்கூடமே ஆரம்பிக்கல… கிலாஸ்க்குப் போங்க சார் 7.45க்கு வரேன்…” என ஆசிரியர் சொன்னதும் வினோத் கவலையும் ஏக்கமும் நிரம்ப வகுப்பறைக்கு நடந்தான்.

கடந்த வாரம் போல வகுப்பறைக்குள்ளே நிற்க வைத்து உடற்பயிற்சியை முடித்துவிட்டு எழுத்து வேலைகள் கொடுத்துவிடுவாரோ என வினோத் பயந்தான். திடலைச் சுற்றி ஓட வேண்டும் என வினோத்தின் கால்கள் பரப்பரத்தன. மாணவர்கள் விளையாடாமல் திடலில் புற்கள் அடர்ந்து பச்சையாகத் தெரிந்தன.

பக்கத்திலிருந்த நண்பனின் கைக்கடிகாரத்தை வினாடிக்கு வினாடி நோட்டமிட்டுக் கொண்டிருந்தான். சரியாக 7.45க்கு ஆசிரியர் வகுப்பறைக்குள் வரும்போது எங்கிருந்து வந்ததெனத் தெரியாமல் சட்டென மழையும் பெய்யத் தொடங்கியிருந்தது.

“இன்னிக்குத்தான் திடலுக்குக் கூட்டிட்டுப் போலாம்னு நெனைச்சன்… ஓகே… எல்லாம் இடத்துல உக்காருங்க…” என ஆசிரியர் சொன்னதும் வினோத்தைத் தவிர மற்ற அனைவரும் அமர்ந்தனர்.

“டேய் வினோத்து… அங்கப் பாரு திடல்ல ஆறாம் ஆண்டு பையனுங்க நேத்து வெளையாண்ட பந்த அங்கயே வச்சிட்டுப் போய்ட்டானுங்க… ஓடிப் போய் எடுத்து வந்து ஸ்டோர்ல வச்சிரு… சாரோட இந்தக் குடைய எடுத்துக்கோ…” என்றதும் குடையை எடுத்துக் கொண்டு வினோத் திடலை நோக்கி வளைந்து வளைந்து ஓடினான். மழைநீர் தேங்கியிருந்த இடங்களையெல்லாம் தாவிக் குதித்துக் கடந்தான்.

அவனுக்காகவே அந்த ஒற்றைப் பந்து நேற்றிலிருந்து திடலில் காத்திருந்தது.

– கே.பாலமுருகன்

Share Button

About The Author

Comments are closed.