நடனம் சிறுகதை: வாசகப் பார்வை 4: சு.சுதாகர், விமலா ரெட்டி

நடனம்: வாசகர் பார்வை: சு.சுதாகர்

வணக்கம். மூன்று முறை  வாசித்த பிறகு கதையின் திறப்புகள் பலவகையாகின.

நகரத்தில் பெரும்பாலோர் அவரவர் வேலையில் மட்டும் பரபரப்பாக இருப்பவர்கள். மற்றவர்களின் செயல்பாடுகளை உற்றுநோக்க வேண்டிய நேரமோ, அவசியமோ அவர்களுக்கு இருப்பதில்லை. அதனால் சில தீய விசயங்களுக்கு ஏதுவாக நகரம் பல இடங்களை வைத்திருப்பதாக குமார் எண்ணிக்கொள்கிறான். குறுக்கு வழியில் பணம் சம்பாதித்து பழகிவிட்டவனால் வேறு வழியை யோசிக்கமுடியவில்லை. சிலந்திவலை போன்று அதில் சிக்கிக்கொண்டவன் அவன்.

குப்பையிலிருந்து எதையோ பொறுக்கும் சீனத்தி, நகரத்தில் நல்லவழியிலும் சம்பாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் முரண் பாத்திரமாகவே படுகிறாள். குமாரைப் போன்ற சுயநலவாதியால் பாதிக்கப்பட்டவளாக இருப்பாளோ என்றும் தோன்றியது. வேறு கோணத்தில் யோசித்தால் குமாரின் செய்கை அசுத்தமானது என்பதைக் குறிக்கும் குறியீடாகவும் தெரிந்தது.

தாயின் அரவணைப்பில் இருக்கும் மலாய்க்கார சிறுமி தன் இயல்பைத் தொலைக்காது அந்தப் பருவத்துக்கே உரியபடி இருக்கிறாள். தாயில்லாது, காரியவாதியாகிய தந்தையால் கோமதி குமாரின் சுயநலத்தால் சீரழிந்து கொண்டிருக்கிறாள். இருந்தாலும் அவளின் குழந்தைத்தனம் அவ்வப்போது வெளிப்படவே செய்கிறது.

இக்கதையின் தலைப்பானது நடனம். நடனம் பெரும்பாலும் மகிழ்ச்சியின் வெளிப்பாடாகவே  இருக்கும். இக்கதையில் கோமதி போதை மருந்து, மதுபானம் கொடுக்கப்பட்டு, அதன் மூலம் பரவச நிலைக்கு தூண்டப்பட்டு ஆடும் நடனமானது அவளுக்கானது அல்ல.

குழந்தையை மகிழ்ச்சிப்படுத்தக்கூடியவை அவர்களுக்குப் பிடித்தமான உணவு, பிடித்தமான விசயம் இப்படி சிறு விசயங்களில் அடங்கியுள்ளது. கோமதி தான் கேட்ட உணவை உண்டபின் ஏற்பட்ட களிப்பில் ஆடும் நடனம்தான் அவளுக்கானது. ஆட்டுவிப்பான் இறைவன் என்பார்கள். நம் நிலையைவிட சற்றே மேலாக இருப்பவர்களும் நம்மை ஆட்டுவிப்பவர்கள்தான். வாழ்வாதாரத்திற்காக தன்னிடம் வந்து நிற்கும் அனைவரையும் ஆட்டுவிக்கும் மேலான இடத்தில் இருப்பதாக ஒரு மமதை குமாருக்கு உண்டு. அதனால்தான் பெரியசாமியிடமோ, கோமதியிடமோ வெளிப்படும் கொஞ்சமும் பணிந்துபோகாததிடமும், துன்பத்தின் சாயல் துளியும் இல்லாத பார்வையும் அவனுக்கு உவகை அளிக்கவில்லை.

நடனம் என்பது ஆடுவது மட்டுமல்ல; ஆட்டுவிப்பதும் கூட என்பதை இத்தைலைப்பில் உணர்ந்தேன்.

  • சுதாகர் சுப்ரமணியம்

நடனம்- எனது பார்வையில்: விமலா ரெட்டி

கதையைப் படித்த உடனேயே என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இருப்பினும் மறுவாசிப்பு செய்தபோது கதைக்குள் ஆத்மார்த்தமாக உள்நுழைய முடிந்தது. ஒரு பிள்ளைக்குத் தாய் இல்லை என்றால் அப்பிள்ளையின் நிலைமை சிதைந்து போவதைச் சிறப்பாக எடுத்துக் காட்டியிருக்கிறார் எழுத்தாளர். தான் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் குமாரிடம் தன் மனைவிக்கு வேலை கேட்கிறான் பெரியசாமி. அதற்கு குமாரும் சரி அனுப்பி வை என்று சொன்னதும், பெரியசாமி எப்படி மகிழ்ந்து போய் மதமதப்புடன் இருக்கிறான். அப்படி என்றால் பெரியசாமிக்கு அது எப்படிப்பட்ட இடம் என்று தெரிந்தே இருக்கிறது. வேறு தொழிலுக்கு பயன்படுத்திக் கொள்வதற்காக இருக்குமோ? என எண்ணவும் தோன்றியது. இது எனது பார்வை மட்டுமே.

ஓர் இடத்தில் கோமதி குமாரிடம் கேட்கிறாள் ‘அங்கிள் அம்மா ஏன் செத்தாங்க’ என்று கேட்கும் பொழுது அவர் மாரடைப்பால் இறந்துவிட்டார்’ என்று சொல்கிறான். இது புரியாத புதிராக இருந்தாலும், மற்றுமொரு இடத்தில் கோமதி ‘அங்கிள் அங்க போனேனா  ஏதோ மாத்திரையைக் கொடுத்து கொஞ்சம் பீரும் தராங்க. அது இப்ப வரைக்கும் ஒரு மாதிரியா  ஆக்குது அது மட்டும் வேண்டாமுன்னு சொல்ல முடியுமா?’ என்று கேட்கும் பொழுது நமது கண்களும் ஈரமாகிறது.

இது போலத்தான் அவளது அம்மாவுக்கும் நேர்ந்து இருக்குமோ? அதுதான் அவள் தற்கொலைப் பண்ணிக் கொண்டாளோ?  என்று எண்ணவும் தோன்றுகிறது. வாசக இடைவெளி.

மகிழுந்தின் கண்ணாடியைத் திறந்து மழை நீரை உள்ளங்கையில் சேகரித்து  விளையாடும்போது அவள் சிறுமி என்பதை புரிய வைத்தது. அதைப் போலவே தூக்கு சப்பாத்தியைக் காட்டும் பொழுது அவள் பருவமங்கை என்பதையும் காட்டியது. எழுத்தாளர் அவளின் வயதை சொல்லவில்லை. ஆனால் காட்சிகளால் அவளின் வயதை காட்டியது சிறப்பு.

வாங்கிய கடனுக்காக பெரியசாமி மனைவியையும், பிள்ளையையும் கொடுத்து விடும் பொழுது பெரியசாமி இரக்கமற்ற மனதை காட்டுகிறது. தலைவன் சரியாக இருந்திருந்தால் மனைவி மக்களுக்கு இத்தனை பெரிய சோகம் நடப்பதற்கு வாய்ப்பே இல்லை. லீனா, மேரி போன்ற பெண்கள் பிற இனத்தவராக கடன் பெற்றுக் கொண்டு அதன் வட்டியைக் கட்ட முடியாமல் அவர்களின் வயிற்றெரிச்சலைக்  கொட்டி தீர்க்கும் போதும், சாபம் விடுவதும் குமார் போன்றவர்களின் சுயரூபம் தெரிய வருகிறது. அதையும் காட்சியாகத் தான் வெளிப்படுத்தி இருக்கிறார் எழுத்தாளர். 

சொல்ல வந்த செய்திகளை நேரடியாக சொல்லாமல் காட்சியாக சொல்வது அருமை. சிறப்பானக் கதை. ஆசிரியருக்கு எனது வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

– விமலா ரெட்டி

நடனம் சிறுகதையை வாசிக்க:

Share Button

About The Author

Comments are closed.