அறிவியல் சிறுகதை: தாழ்ப்பாள்

கதவிற்குப் புதிய தாழ்ப்பாள் போடும்வரை மனம் ஓயவில்லை. கதவைத் திறந்து வைத்திருந்தால் எனக்கு ஒவ்வாது. கதவென்றால் சாத்தித்தான் இருக்க வேண்டும். அதற்குத்தான் கதவு. எந்நேரமும் எல்லா வேளைகளிலும் கதவை இறுகப் பிடித்துக் கொள்ள ஏதாவது வேண்டும். இப்போதைக்குத் தாழ்ப்பாள் இல்லாத கதவு ஆபத்துமிக்கது.

கடந்த வாரம் இதே கிழமையில் இங்கு ஏற்பட்ட ஒரு சுழல் காற்று அனைத்தையுமே மாற்றிவிட்டுப் போய்விட்டது. அதுவொரு மழை இரவு. வானம் பளிச்சென்று விடாமல் மின்னிக் கொண்டிருந்தது. மின்னலொளி சுழற்சிக்குள் திரண்டு வந்து பேரோசையாக எழும்பி கொண்டிருந்தது. அத்தகையதொரு காட்சியை இதுவரை பார்த்ததில்லை.  தனியாக வீட்டிலிருந்து கொண்டு அதுவும் ஆறாவது மாடியிலிருந்து மழையின் உக்கிரத்தைக் கேட்கப் போதுமான மனத்திடமும் இல்லை. அன்றைய நாளில் சட்டென உருவான சுழல் காற்று வானிலிருந்து மின்னியவாறு இறங்கி வந்து மீண்டும் மேலெழுந்து பரவியது. 15 நிமிடங்களுக்கு மின்சாரம் இரத்தானது. அவ்விடமே இருண்டு ஒரு பெரும் புகைச்சலுக்குள் சிக்குண்டது. கால்கள் அதிர்வை உள்வாங்கிக் கொண்டன. வெளிக்காட்சிகள் மறைந்து ஒரு சுழலுக்குள் இருந்த நிமிடங்கள் இப்பொழுதும் மனத்தில் வியப்புடன் மிரள்கின்றன. தாழ்ப்பாள் இல்லாத கதவுகள் அதிர்ந்து அடித்துக் கொண்டன.

“தாழ்ப்பாளு கீழ செலவு ஜாமான் கடையில இருக்கும்தானே தாத்தா?”

அவர் பதில் பேசாமல் மீண்டும் என் கண்களைத் தேடிக் கொண்டிருப்பார். அன்று வீட்டுக் கதவிற்குத் தாழ்ப்பாள் முக்கியமமெனத் தோன்றியது. மாலை அத்துணை மந்தாரமாக இருக்கும் என நினைக்கவில்லை. கடந்த வாரம் நிகழ்ந்தது போல மீண்டும் இன்றோர் அதிசயத்திற்கு மனம் காத்திருந்து மப்பாகிக் குழம்பிக் கொண்டிருந்தது. தலையைச் சாய்த்து வெளியை நோக்கினேன். வீட்டுக்கு வெளியில் கொஞ்சம் தூரத்தில் வெளிவரந்தாவில் அரற்றிக் கொண்டிருந்தவர்களின் சத்தம் குறையவே இல்லை. மீதி இருப்பவர்களின் சத்தம் அது. அவ்வப்போது ஆறுதலாகவும் சில சமயங்களில் தொல்லையாகவும் தோன்றும். அதுவும் இன்றைய நாளில் அவர்களின் சத்தம் அச்சுறுத்தலாக இருந்தது. வீட்டிலுள்ள பொருள்களைக் கீழே இறக்கிக் கொண்டிருக்கும் சத்தமது. அநேகமாகக் கீழே ஒரு கனவுந்து உறுமிக் கொண்டிருக்கக்கூடும். அதில் ஏறி மறையப் போகும் பொழுதோடு அவர்களும் கரைந்திட ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

“எல்லாம் போங்கடா… இப்படியே ஓடிக்கிட்டே இருக்க வேண்டியதுதான்…”

அலுப்பின் உச்சம் ஓர் அனல் போல உள்ளுக்குள் கனன்று கொண்டிருந்தது. அம்மோய் அக்கா வீட்டுக்கு வெளியிலுள்ள சுவரோடு கம்பிக் கட்டிக் காய வைத்திருக்கும் துணியை அப்படியே மறந்துவிட்டுப் போய்விட்டாள். மழைக்காற்று அத்துணிகளை அசைத்து அதன் நெடியை இங்குவரை கொண்டு வந்து சேர்த்துக் கொண்டிருந்தது. கடைசி மகனின் ஒரு பழைய காற்சட்டையும் அவளது அம்மாவின் ஒரு கிழிந்த கைலியும் அப்படியே கைவிடப்பட்டிருந்தன. அதனை யாரும் திருடவும் இல்லை. எப்பொழுதும் இந்த அடுக்குமாடியில் எதையாவது மறந்து வெளியில் வைத்துவிட்டால் மறுநாள் அது காணாமல் போய்விடும். குறிப்பாக, காலணிகளைத் தேடிக் கொண்டு வருபவர்களின் தொல்லைகள் எரிச்சல் மிக்கவை.

“என் சப்பாத்திய பாத்தீங்களா?” இப்படித் தினமும் யாராவது இங்குத் தேடிக் கொண்டே வருவார்கள்; போவார்கள். பதில் சொல்ல சிலசமயங்களில் பிடிக்காமல் வெறுமனே பார்ப்பேன். வீட்டு வாசலில் அவர்களின் கண்கள் கவனத்துடன் பாய்ந்து செல்லும். பின்னர், புலம்பிக் கொண்டே பக்கத்து வீட்டின் வாசலுக்குப் போய்விடுவார்கள். என்னுடைய அறுந்துபோன ஜப்பான் சிலிப்பர் அவர்களுக்குப் பாதகமில்லை. அதுவும் ஜோடியில்லாமல் அறுந்து கிடக்கும் சிலிப்பரை அவர்கள் பார்த்துவிட்டுக் கழிவிறக்கத்துடன் நகர்ந்துவிடுவார்கள். அதனாலேயே அந்த ஒற்றைச் சிலிப்பரை நான் வாசலிலிருந்து அகற்றவே இல்லை.

லெபாய்மான் அடுக்குமாடி பலர் விட்டுச் சென்ற காலி வீடுகளுக்கு இடையில் ஆடம்பரமற்ற அங்கலாய்ப்புகளுடன் மிச்சம் மீதிகளைத் தனக்குள் அதக்கிக் கொண்டிருந்தது. கண்ணாடிச் சன்னலை மெதுவாகத் திறந்தேன். துருப்பிடித்த பிடி இலேசாக முனகியது. சில வாரங்களுக்கு முன் உடைந்திருந்த அனைத்துக் கண்ணாடிகளையும் மாற்றிவிட்டேன். சாத்த அடம்பிடிக்கும் முன் சன்னல்களையும் சரிப்படுத்திவிட்டேன். எல்லோரும் விட்டுப் போய்க்கொண்டிருக்கும் வீட்டை எதற்குச் சரி செய்ய வேண்டுமென மனம் கேட்டது.

இரண்டாண்டுகளுக்கு முன் லெபாய்மான் வட்டாரத்தில் இருந்த இரண்டு பெரிய தொழிற்சாலைகள் தீயில் கருகிய பிறகு அவ்விடம் கைவிடப்பட்டதைப் போல ஆகிவிட்டது. இங்கிருப்பவர்கள் பெரும்பாலும் அந்தத் தொழிற்சாலையில் வேலை பார்த்தவர்கள். சிலர் இரப்பர் தொழிற்சாலைக்கும் கையுறை தயாரிக்கும் தொழிற்சாலைக்கும் பாதுகாவலராகவும் இருந்தனர். காலையில் மூவர், இரவில் நால்வர் என இங்கிருந்துதான் ஆள்கள் செல்வார்கள். கணேசன் அண்ணன் அந்தத் தீ விபத்தை அருகில் நின்று பார்த்தவர் என்பதால் கடந்த வாரம் வரை எல்லோரிடமும் அச்சம்பவத்தை விவரித்தபடியே இருந்தார். அவர் கண்களில் தீயின் ஜூவாலைகள் பொங்கியபடியே இருந்தன. அவரும் நான்கு நாள்களுக்கு முன் மகனோடு இருந்துவிடலாம் எனச் சென்றுவிட்டார். சதா வெளிவரந்தாவில் யாராவது ஒருவரின் வீட்டுக்கு முன் நின்று கதை அளந்து கொண்டிருப்பார். எனக்கு அப்படியெல்லாம் பழக்கமில்லை. பக்கத்து வீட்டு ஆள்களிடம்கூட சாதாரண உரையாடலுக்கே தயங்குவேன். வார்த்தைகள் கெட்டியாக இறுகிக் கொண்டுவிடும். அதுவும் கடந்த ஒரு வாரத்தில் வீட்டிற்குள் கவனத்துடன் இருக்கிறேன். ஒரு மிரட்சியின் பிடிக்குள் தவித்துக் கொண்டிருந்தேன்.

“குமாரு, சும்மா விட்டுக்குள்ள தனியா உக்காந்து என்ன அடகாத்துக்கிட்டா இருக்க? நாளு மனுசாளுங்ககிட்ட வந்து பேசுடா…நல்லா படிச்சிருக்க… ஆனா வேற வேலைக்குப் போக மாட்டற…” கணேசன் அண்ணன் எப்பொழுதோ வீட்டுக்குள் இருந்த என்னைப் பார்த்துக் கத்திவிட்டுப் போனது மட்டும் நினைவில் உயிர்ப்புடன் ஒலித்துக் கொண்டிருந்தது. இப்பொழுது நினைத்தாலும் அவர் குரலை இங்குக் கேட்க இயலாது. யார் வீட்டின் முன்னும் அவர் நின்று பேசப்போவதில்லை. எல்லா வீட்டின் முன்பக்கமும் ஆள் அரவமில்லாமல் அமைதியில் கணத்துப்போகும். மௌனம் பித்துப் பிடித்தாற்போல அங்குமிங்குமாக அசைந்து கொண்டிருந்தது. இரப்பர் தொழிற்சாலையில் இருந்தவரை ஒரு மதிப்பு இருந்தது. ‘லைன் லீடர்’ என்று என் மீது சிலருக்குப் பயமும் இருந்தது. அந்தப் பயம் உருவாக்கிக் கொடுத்த வட்டத்தினுள் என்னை நானே பத்திரமாகப் புதைத்துக் கொண்டிருந்தேன்.

இப்பொழுது நிலைமை அப்படியல்ல. ஒரு சிலர் சிங்கப்பூருக்கு ஓடிவிட்டார்கள். கடன் தொல்லை அவர்களை விரட்டிவிட்டது. மேசையில் வெகுநேரம் காய்ந்து கொண்டிருந்த ரொட்டித் துண்டைக் கவனித்தேன். அதில் அண்ணாசி ‘ஜேம்’ தடவிச் சாப்பிட்டிருக்க வேண்டும். எப்பொழுது அதைச் செய்ய மறந்திருப்பேன் என ஞாபகமில்லை. அண்ணாசி ஜேம் போத்தல் காலியாகும் வரை நாவில் தித்திப்பைக் கொண்டு வர முடியும். அதுவும் முடிந்துவிட்டால் வெறும் ரொட்டியைத் தின்பதற்கு ஒரு மனத்திடம் வேண்டும். சட்டெனத் தாத்தா இரும்பினார். அறையின் இருளுக்குள் படுத்திருந்த அவருக்கு இன்று இரும்பல் அதிகரித்திருந்தது. அவரிருக்கும் அறையில் பழுதாகிப்போன விளக்கை மீண்டும் மாற்றவில்லை. அப்படியே விட்டுவிட்டேன். சன்னல்களையும் துணியால் இழுத்து மூடிவிட்டேன். பகல் வெளிச்சம்கூட உள்ளே நுழையாது. பகலிலும் வீடு இருண்டுதான் தெரியும். அவருக்கு அதுவொரு சமாதானமாகக்கூட இருக்கலாம். இருளை வெறித்திருப்பது அவருக்கு ஆறுதல் அளிக்கலாம். வெளிச்சத்தில் எல்லாமும் தெரிந்துவிடும். அதனை அவர் தாங்கிக் கொள்ள முடியாது. இருள் எல்லா உண்மைகளையும் ஒரு குழந்தையாக்கிவிடும்.

ஒரேயொரு மேசை விளக்கு. மஞ்சள் ஒளியைக் கக்கிக் கொண்டிருந்தது. அதுவும் வரவேற்பறையில் இருந்த மேசையில் வைத்து எரியவிட்டிருந்தேன். மெல்ல சக்தியை இழந்து கொண்டிருந்தது. மெழுகுவர்த்தியைத் தேடிப் பார்த்தேன். வீட்டில் அப்படி எதுவுமே இல்லை. இருந்தும் இல்லாததைப் போலத் தோன்றும் உணர்வு. முன்பு எப்பொழுதோ பற்ற வைத்துப் பாதி எரிந்து சன்னலுக்கடியில் குற்றுயிராய்க் கிடந்த மெழுகுவர்த்தி கண்ணில் பட்டது. பற்ற வைத்ததும் நெருப்புப் படபடத்தது. மெதுவாக சுடரை அணைத்தவாறு அறைக்குள் கொண்டு சென்றேன்.

தாத்தா ‘ஸ்ப்ரிங்’ மெலிந்து தொங்கும் கட்டிலில் படுத்திருந்தார். ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை இரும்பித் தன் இருப்பைக் காட்டிக் கொண்டிருந்தார். அந்தச் சத்தம் வெளியில் போகாமல் தற்காத்துக் கொள்ள வேண்டும். அறையைச் சாத்தியே வைப்பதுதான் அதற்கான தீர்வு. இருளும் அடைப்பும் தாத்தாவின் இருப்பைக் கவனமாகக் காத்துக் கொண்டிருந்தன.

“என்ன தாத்தா? மூத்திரம் போய்ட்டியா?”

பதில் பேசமாட்டார் எனத் தெரிந்தும் அவரிடம் பேசுவது எனக்குப் பிடிக்கும். என்னுடனே நான் பேசிக் கொள்வதற்கு ஒரு சந்தர்ப்பம் அது. இல்லையென்றால் சொந்தமாகப் பேசிக் கொள்ள வேண்டும். அது என்னை நானே அபூர்வமாகப் பார்க்கத் தூண்டிவிடும். அவர் உடலைச் சற்றே அசைத்தால் குப்பென்று ஒரு நெடி பரவும். தாத்தாவின் உடல் வியர்த்துப் பின்னர்க் காய்ந்து பிசுபிசுக்கும் சிறுநீர் வாடையில் கலந்து எழுப்பும் நெடியைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். பக்கத்தில் வெள்ளிப் பாத்திரத்தில் நேற்று வைத்த தண்ணீர் அப்படியே சில கொசுக்கள் செத்துக் கிடக்க அலம்பலில்லாமால் தெரிந்தது. அதனுள் ஊறிக் கிடந்த துணியை எடுத்துத் தாத்தாவின் முதுகுபுறத்தையும் கால்களையும் துடைத்துவிட்டேன்.

“என்ன தாத்தா, பயமா இருக்கா? இருட்டுன்னா பயமா?” சொல்லிவிட்டு வேடிக்கையாகச் சிரித்தேன். அவர் ஒன்றும் பேசவில்லை. கண்கள் அசையாமல் என்னையே கவனித்துக் கொண்டிருந்தன. அவரது உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. இரும்பும்போது நெஞ்செலும்புகள் புடைத்து அமிழும். அதைப் பார்க்க வேண்டாமென மெழுகுவர்த்தியைத் தள்ளிச் சுவரை நோக்கி வைத்தேன். சுவரில் என் உருவம் பெருத்துப் பரவியது.

தட்டில் வைத்திருந்த கஞ்சை எடுத்துத் தாத்தாவின் வாயில் வைத்தேன். நான்கு மணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டதால் கரண்டியைப் பதற்றத்துடன் கௌவினார். வாயிலிருந்து மிச்சக் கஞ்சி கட்டிலில் சரிந்து கீழே ஒழுகியது. வீட்டில் அரிசி இல்லை என்ற ஞாபகம் அப்பொழுதுதான் நினைவில் தட்டியது. வீட்டில் எதுவுமே இல்லை என்பதுதான் உண்மை. அறையிலிருந்து வெளியே வந்தேன். சிறிய வெளிச்சம் மட்டுமே எங்கும் பரவியிருந்தது. முழுவதும் இருள வேண்டும் எனக் காத்திருந்தேன்.

வீட்டில் இரண்டு நாற்காலிகள் மட்டுமே இருந்தன. ஒன்றில் குழி விழுந்து மஞ்சள் பஞ்சுகள் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன. இன்னொன்று கால் உடைந்து முட்டுக் கொடுக்கப்பட்டு இரும்பில் கட்டி வைக்கப்பட்டிருந்தது. சுவரில் அம்மாவின் படம். ஒரேயொரு பழுப்பு நிற மேசை. அதில் பழைய நாளிதழ்களும் மிச்ச ரொட்டித் துண்டும் கொஞ்சம் ஈக்களும் மொய்த்துக் கொண்டிருந்தன. அப்பா மட்டும் தற்கொலை செய்து கொள்ளாமல் இருந்திருந்தால் நானும் அம்மாவும் இந்த லெபாய்மான் அடுக்குமாடிக்கு வந்திருக்க மாட்டோம். கோலா கெட்டிலில் அப்பா வைத்திருந்த குளிர்சாதனம் பழுது பார்க்கும் கடைக்கு மேலேயே இருந்திருப்போம். எனக்கும் அங்கேயே ஏதாவது வேலையும் கிடைத்திருக்கும்.

அப்பாவின் கழுத்தை இறுக்கிப் பிடித்திருந்த கயிற்றை அவரிடமிருந்து விடுவிக்கும்போது நான் அவருடைய கண்களை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தேன். உயிரின் மொத்தக் கணமும் கண்களில்தான் மீந்திருக்கின்றது.

“ஊருல அங்கயும் இங்கயும் கடன வாங்கிட்டு இப்படித் தொங்கிட்டான்… கோழ…”

இந்த வரியைப் பிசிறில்லாமல் அடுக்கு மாறாமல் அம்மா கடைசிவரை சொல்லிக் கொண்டே இருந்தார். பிதற்றலாகவும் புலம்பலாகவும் கோபமாகவும் சாபமாகவும் எரிச்சலாகவும் துக்கமாகவும் அது ஒவ்வொரு சமயத்திலும் வெவ்வேறு தொனியில் காலம் முழுவதும் என்னைத் தொடர்ந்து கொண்டிருக்கும் வரி.

“அப்பாவும் அம்மாவும் தற்கொல கேஸ்… நீயும் பாத்திரு… உனக்கும் அந்த எண்ணம் வரலாம்… தனியா இருக்காதடா…”

எனக்குத் தெரிந்தவர்கள் நான் விரும்பாவிட்டாலும் என்னிடம் தொடர்ந்து சொன்ன ஆலோசனைகள் இவை. நான் தனித்திருக்கக்கூடாது என்பதே அவர்களின் அறிவுரை. நானும் தனித்திருக்க விரும்பவில்லை. என்னை நானே உள்நோக்கி பார்த்துக் கொள்ளும் தருணத்தில் எனக்குத் தற்கொலை உணர்வுகள் வரலாம் என நினைத்திருந்தேன். தாத்தா மீண்டும் இரும்பினார். அவருடைய இரும்பல் ஓர் அழைப்பைப் போன்று ஒலிக்கும். பெரும்பாலும் பொருட்படுத்த மாட்டேன். வெறுமனே இருண்டிருக்கும் அவருடைய அறையை எட்டிப் பார்ப்பேன். கட்டில் முனகும் சத்தம் கேட்கும்.

“தாத்தா… இந்த இருட்டுப் பயமா இருக்கா?”

அவரிடம் பதில் இருக்காது. நாங்கள் இருவரும் வெளிச்சத்திற்குள்ளும் இருளுக்குள்ளும் இருந்து கொள்கிறோம்.

“குமாரு, உன்னால இங்க இருக்க முடியலைன்னா… வள்ளலார் மன்றத்துக்குப் போய்ரு… அவுங்க பாத்துக்குவாங்க…”

பக்கத்து வீட்டு அம்மோய் அக்கா முதல் மேரி பெரியம்மா வரை எல்லோரும் வந்து சொல்லிவிட்டார்கள். நான் எங்கும் செல்ல நினைத்ததில்லை. நான் என்னுடனே இருக்க வேண்டும். என்னை நான் கவனித்துக் கொள்ள வேண்டும். எனது அனைத்து இயலாமைகளையும் நான் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். கடந்த ஒரு வாரமாக இத்தனைநாள் இருந்த தனிமை இல்லை. அன்று பெய்தோய்ந்த மழையும் அபூர்வமான சுழல் காற்றும் அதிசயம் வாய்ந்தவை. ஒரு மின்னல் வெட்டில் கடவுள் வந்துவிட்டுச் சென்றது போன்ற ஆச்சரியங்கள் நிறைந்த கணங்களைக் கொண்டவை. என்னைப் போல் இங்கிருந்தவர்களுக்கும் இது நடந்திருக்கக்கூடுமா என்கிற சந்தேகம் எழுவதுண்டு. அப்படி இருந்திருந்தால் இந்நேரம் இவ்விடம் களேபரம் பூண்டிருக்கும். எனக்கு மட்டுமே தெரிந்த அதிசயத்தின் முன்னே பேரதிர்ச்சியுடன் அமர்ந்திருந்தேன்.

“தாத்தா… நானும் செத்துருவேனோனு ஒரு பயம் இருந்துச்சி… ஆனா, நான் சாவமாட்டேன்னு நீ வந்து சொல்லிட்ட…”

தாத்தாவால் எழ முடியாது; கழிவறைக்குச் செல்ல முடியாது. கஞ்சை தவிர வேறு ஏதும் குடிக்கவும் முடியாது. அவற்றின் மீது நான் இருந்தேன்.

“தாத்தா… இவ்ள அதிசயத்தோட நீ வந்தது எதுக்கு? எனக்கு அது புரியல…”

கையிருப்பில் இருக்கும் கடைசி சேமிப்பு நாளை முடிந்துவிடும். பிறகு, கடன் வாங்க நேரிடும். அப்பாவின் நினைவுகள் சட்டெனப் பூதம் போல வந்துவிடுகின்றன. தாத்தாவின் உடல் அசைவைப் பார்த்தேன். ஒரு காலத்திரளாகப் புரண்டு படுத்துக் கொண்டிருந்தார். கடந்த வாரம் இதுபோன்ற ஓர் இரவில் உருவான பெருஞ்சுழலுக்குப் பின் ஒரு மின்னல்வெட்டு, மின்சாரம் மொத்தமாகப் பாய்ந்து எழுப்பிய இரைச்சலில் சட்டென வீட்டிற்குள் வந்தவர் இப்பொழுதுவரை ஒரு மாயமெனத் தெரிகிறார். கதவுகள் அதிர்ந்து அடித்துக் கொண்ட தருணத்தில் அறையிலிருந்து வெளியில் வந்து நின்றார். திடுக்கிட்டுப் பார்த்தேன்.

“என் பேரு குமாரு… இது என்னோட வீடு… நீ யாரு?”

இது மட்டும்தான் அவர் வந்ததிலிருந்து உச்சரித்துக் கொண்டே இருந்தார். அவரும் மின்சாரம் தாக்கியது போன்ற அதிர்ச்சியில் உறைந்திருந்தார்.

“என்ன வீடு மாறி வந்துட்டீங்களா…? வெளில போங்க…” துரத்தப் பார்த்தேன்.

“இல்ல இது என் வீடு… நான் குமாரு… நான் முன்ன உன்ன மாதிரித்தான் இருந்தன்…”

உற்று நோக்கினேன். முதிர்ந்த அவருடைய முகம் என்னுடையது எனத் தெரிந்து கொண்டதும் நிலைக்குத்திப் போனேன்.

“நீங்க நானா? எப்படி இங்க வந்தீங்க…?”

“எனக்கு 45 வயசு இருக்கும்போது ஒரு வயசானவனக இதே மாதிரி… இதே மின்னல்… காத்து… என் வீட்டுக்குள்ள வந்தாரு… ஒரு வாரத்துல செத்துட்டாரு… அப்படின்னா… அது…”

தடுமாறிக் கீழே உட்கார்ந்தவர்தான். அதன்பின் என் கண்களை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தார். வார்த்தைகள் எழவில்லை. அவருடைய ஏக்கமிகு கண்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். நான் என்னை உற்று நோக்கும் ஒரு தருணம் கிடைத்தது. ஒன்றும் புரியாமல் சலிப்பின் உச்சத்தில் இருந்த நானும் அவரின் எதிரே அமர்ந்து சூழலைக் கண்காணிக்கத் துவங்கினேன்.

“இன்னும் முப்பது வருசத்துல நான் உன்ன மாதிரிதான் இருப்பன் தாத்தா…”

நான் எனது எதிர்காலத்தின் முன்னே அமர்ந்திருந்தேன். ஆச்சரியங்களுக்குள்ளும் குழப்பத்திற்குள்ளும் மிதப்பது ஒரு போதை. தற்கொலை உணர்வுகள் கூட்டாகச் சேர்ந்து உருவாக்கும் மாயையாகக்கூட இருக்கலாம் எனத் தோன்றியது. மனத்திற்கு ஏதோ நோய் வந்துவிட்டது என்றே நினைத்தேன். ஆனால், தாத்தா இரும்பும் சத்தத்தைக் கேட்டுப் பக்கத்து வீட்டுச் சிறுமி, “யார் அங்கள் இரும்பனது?” எனக் கேட்டுவிட்டுப் போன மறுகணம் எல்லாம் உண்மையென உணர்ந்தேன்.

கதவுக்குத் தாழ்ப்பாள் வாங்க வேண்டும். அதற்கும் பணம் தேவை. இப்போதைக்கு ஒரு நெகிழிக் கயிற்றைக் கொண்டு முன்கதவை அதன் நாதாங்கி ஓட்டையில் வைத்து இறுகக் கட்டினேன். மனத்திற்குள் ஒரு பூரிப்பு. கதவை இழுத்துப் பார்த்தேன். அத்துணை எளிதில் திறக்க வாய்ப்பில்லை. வரவேற்பறையில் தூங்கினாலும் தாழ்ப்பாள் இல்லாத கதவு இதுவரை இப்படி உறுத்தியதில்லை. இன்று பல மணி நேரங்களாக அக்கதவு இம்சித்துக் கொண்டிருந்தது.

“தாத்தா இருட்டிருச்சி…”

அறைக்குள் எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தி இரவு காற்றில் பதற்றம் கொண்டது. தாத்தா இப்பொழுது சத்தமாக இரும்பினார். உள்ளே சென்று அவருடன் மஞ்சள்வெளியில் திட்டுத்திட்டாய் பரவிக் கொண்டிருக்கும் இருளுக்குள் அமர்ந்து கொண்டேன்.

“நாளைக்கு வீட்டுக்காரன் வந்து கத்துவான் தாத்தா… போன வாரமே வீட்ட கொடுக்கச் சொல்லிட்டான்… பங்களாடேஷ்காரனுங்க வாடகைக்கு வரப் போறானுங்களாம்…”

லெபாய்மான் அடுக்குமாடி ஒரு மௌனத்திற்குள் ஆழ்ந்து அடங்கிக் கொண்டிருந்தது. சில வீடுகளில் மட்டும் விளக்குகள் மின்னிக் கொண்டிருந்தன. இடையிடையே தெரியும் இருள் மனத்தை என்னவோ செய்தது. மீண்டும் தாத்தாவைப் பார்த்தேன்.

“நீ என்னோட எதிர்காலத்துலேந்து வந்துருக்கனா… நான் இன்னும் பல வருசங்கள் இங்கதான் இதே எரிச்சலோட… தனிமைக்குள்ள, வறுமையில… பேச நாதியில்லாம கெடந்துருக்கன்… உன்ன பார்க்கும்போது என் மிச்ச வாழ்க்கய நெனைச்சா பயமா இருக்கு, தாத்தா… யேன் நீ இங்க வரணும்? எப்படி வந்த? எனக்கு மெசெஜ் கொடுக்க வந்துருக்கியா? நானும் உன் வயசுக்கு வந்தோன இப்படி என்னோட இறந்தகாலத்துக்குப் போய்த்தான் சாகணும்னா… இது நடந்துகிட்டேதான் இருக்கா?”

எல்லாம் அந்த மழையும் சுழல் காற்றும் மின்னலொளியும் உருவாக்கிய வேடிக்கை. மீண்டுமோர் அடைமழையும் காற்றுச் சுழற்சியும் தோன்றிட வேண்டும். என்னை மீண்டும் எடுத்துச் செல்ல வேண்டும். இப்பொழுது நான் இல்லாத எனது எதிர்காலம் எங்கோ நகர்ந்து கொண்டிருக்கிறது. வாழ்க்கையையும் இயற்கையையும் முழுமையாகப் புரிந்துகொள்ளும் முன்பே நாம் அதற்குள் சுருண்டு சிறுத்துக் காணாமல் போய்விடுகிறோம்.

“தாத்தா பயமா இருக்கா?”

அந்த இருளுக்குள்ளும் தாத்தாவின் கண்கள் என் கண்களைத் தேடிக் கொண்டிருந்தன. நான் அதற்கு வாய்ப்பளிக்காமல் தீச்சுடரின் சுவர் நடனத்தில் இணைந்து கொண்டேன். எங்கள் உருவங்கள் சிறுத்தும் பெருத்தும் அறைச்சுவரில் வித்தையென விரிந்து கொண்டிருந்தன.

“தாத்தா நாம இல்லாத ஒரு காலத்த… உலகத்த கற்பனை செஞ்சி பாரேன்… நான் இப்ப இல்லன்னா நீ இல்ல… இந்தக் காலம் இல்லன்னா அந்தக் காலமும் இல்ல… காலமும் காலமும் செய்ற ஒப்பந்தம்… நீ செத்துட்டா நான் இருப்பன்… இன்னும் முப்பது வருசத்துக்கு இங்கயே இருப்பன்… இதே நினைவுகளோட… மறுபடியும் அந்தச் சுழல் காத்து வரும்… நான் வயசாயி திரும்பியும் என்னோட 45ஆவது வயசுக்கு வருவன்… என்ன தாத்தா இது? இவ்ள விந்தையா இருக்கு? இது நடக்காம இருக்கணும்னா… அதுக்கு ஒரே வழித்தான்…”

தாத்தாவின் தளர்ந்த கைகள் இரண்டையும் ஒன்று சேர்த்து என் கைகளுக்குள் பிடித்துக் கொண்டேன். அவர் முரண்டு பிடிக்கவில்லை. இருள் எங்கள் இருவரையும் சுற்றி ஒரு வேலியை உருவாக்கிக் கொண்டிருந்தது. மீண்டும் அதே மழை பளிச்சிடும் மின்னலொளியுடன் பெய்யத் தொடங்கியது. கயிற்றால் கட்டியிருந்த தாழ்ப்பாள் கதவை உறுதியுடன் பற்றியிருந்தது.

-கே.பாலமுருகன்

Share Button

About The Author

One Response so far.

  1. DHANESHWARRAN says:

    So interesting
    This story is.
    Nice and. Intresting