‘நடனம்’ சிறுகதையின் பார்வை- வாசகர் கடிதம் 2

வாசிப்புக்கான தளம் விரிவடையும் போது அங்கு தேடலுக்கான வழிகள் தானாகவே உருவாகி விடுகின்றன. கூர்மையான பார்வையும் நோக்கும் சமூகத்தில் நிகழக்கூடிய பல்வேறு சிக்கல்களைக் கண் முன் நிறுத்துகிறது. அத்தகைய பிரச்சனைகளுக்கு என்னதான் தீர்வு என்பது இதுவரையிலும் கேள்விக்குறியான ஒன்று. அத்தகைய சிக்கலுக்கான தீர்வைத் தேடி நாம் இலக்கியம் வாசிப்பதில்லை. ஆனால், இலக்கியம் நம் கண்ணோட்டத்தைத் திசைமாற்றி விடுகிறது. வேறு கண் கொண்டு வாழ்க்கையைக் கவனிக்குக் கற்றுக் கொடுக்கிறது.

“நடனம்” சமூக சிக்கலின் ஒரு பார்வையை தன் தன் அசைவுகளின் வழி அபிநயத்துக் காட்டுகிறது. நடனமெங்கும் பயணிக்கையில் நம் மனமும் அவ்வப்போது கணத்து அசைந்து ஒடுங்குகிறது. வாழ்க்கை நாம் நினைப்பது போல் அத்துனை சாதூர்யமானதைல்ல. நாம் கடந்து வரும் ஒவ்வொரு விநாடிகள் அனைத்தும் ஒவ்வொரு மன அசைவுகளைப் படம் பிடித்துக் காட்டுகிறது.

எழுத்தாளர் கதை நெடுகிலும் பல சமூக சிதைவுகளைக் குறியீடுகளாக விட்டுச் சென்று நம்மை ஆழமாக சிந்திக்க வைத்து விட்டார். “சாக்கடை வீச்சத்தையும் தாண்டி நாசி லெமாக் வாசனை…” என்பதை இச்சமூகத்தில் நிகழக்கூடிய அனைத்துக் கர்மவினைகளும் பல மாயத் திரைகளிட்டு நடமாடிக் கொண்டிருப்பதை உணர்ந்தவல்லது. யாவரும் உணர்ந்தும் உணராத அறிந்திட முயலாத விடயங்களாகவே சமூகச் சிதைவுகள் தாண்டவமாடிக் கொண்டிருக்கின்றன.

கடன்பட்டார் நெஞ்சத்து வாழ்வை பெரியசாமியின் பார்வையில் அலட்சியமாக இருப்பது இன்று சிலரது நடைமுறை வாழ்க்கையில் காண முடிகிறது. கொடுப்பவர் நிறைய இருக்கக் கேட்பவர் கெட்டுத்தான் போகிறார். கடன் நீரிழிவு நோயைப் போன்றதுதான். இனிப்பு ஒரு கட்டுக்குள் இருக்கும் வரை அது நோயாகத் தெரிவதில்லை. அதன் அளவை நாம் அதிகரிக்கும் போது முழுநேர நோயாளியாகி விடுகிறோம்.

பணத்தாசையின் கீழ் குமார் சம்பாதித்து இழந்தபோது குறுக்கு வெட்டாக கோமதி பலிகடாவாகும் அவலம் மனத்தைக் கிள்ளி நகையாடுகிறது. பணத்தாசையில் மூழ்கியவனுக்கு நேர்வழி என்பது சற்று புத்திக்கு அப்பாற்பட்டதுதான். அத்துணை விபரீதமான மனித கண்களும் சிந்தனைகளும் சுயநலம் எனும் போர்வைக்குள் உறங்கிக் கொண்டிருக்கிறது‌.

குமார் அதிக லாபத்தில் வாழ்ந்து, அவற்றை இழந்து விட்ட போது மேலும் கழிவிரக்கம் இல்லாதவனாகத்தான் உருமாற்றம் பெறுகிறான். அந்த உருமாற்றம் இச்சமூகத்தின் மூலமாகத்தான் நிகழ்கிறது. வட்டித் தொழிலில் அவரவர்களுக்கு தோன்றும்போது நியாயம் அநியாயங்களும் தனிமனித சாடல்களாகவே நடமாடுகின்றது. தான் உண்டு தன் வேலை உண்டு என்று வாழும் சுயநலமிக்க மெத்தனப் போக்கால் கோமதியின் மீது நிகழ்த்தப்படும் அவலத்தைக் கண்டுக்கொள்வார் எவருமில்லை‌. சமூகத்தின் முதல் தளம் குடும்பம்தான். ஒரு தந்தையின் பொறுப்பற்ற போக்கு சிதைவுக்கு வித்திடுகிறது.

கடைக்குள்ளே உட்கார்ந்து கொண்டு ஒரு சிறுமி வரைந்து கொண்டிருக்கிறாள். பாதுகாப்பு உணர்வுடன். வீதியில் ஒரு சிறுமி அழகான ஆடைபுலனுடன் பாதுகாப்பு எனும் போலிக்குள் நடனமாடிக் கொண்டிருக்கிறாள். வரைபவள் கையில் தூரிகை அழகான ஓவியமாகும். விளக்கு வெளிச்சத்தின் கீழ் நடனம் ஆடுபவள் இருண்மையின் அடுக்குகளில் வாழ்க்கையைத் தொலைக்க தயாராக்கப்பட்டுக் கொண்டிருக்கிறாள். நேற்றைய போதையில் இன்றைய சம்பவம் நாளைய சமூக சிதைவுகளாகிறது. நகரம் எப்போதும் ஓர் இடத்தைக் கொடையாக அளிக்க காத்திருக்கையில் கோமதி வெளிச்சத்தில் நடமாடும் இருளாக மாறிக் கொண்டிருக்கிறாள்.

நடனம் சிறுகதையில் மொழியின் பயன்பாடு மற்றும் வார்த்தைகளின் பங்களிப்பு மிக கவனமாக நேர்த்தியாக கையாளப்பட்டது பாராட்டப்பட வேண்டியதொன்று. அனைத்து தரப்பினரின் வாசிப்புக்கும் இக்கதை ஏற்றது. மலேசிய இலக்கியச் சூழலில் நடனம் தனித்துவம் வாய்ந்து நிற்கிறது. எழுத்தாளருக்குப் பாராட்டுக்கள்.

  • காந்தி முருகன்

நடனம் சிறுகதையை வாசிக்க:

Share Button

About The Author

Comments are closed.