சித்தி நூர்ஹலிசாவின் மகத்துவமான குரல்

தமது 16ஆவது வயதில் பாடத்துவங்கிய மலேசியாவின் புகழ்ப்பெற்ற பாடகர் சித்தி நூர்ஹலிசா ‘முன்பே வா’ பாடலை ரஹ்மான் கலை நிகழ்ச்சியில் பாடி மலேசிய இரசிகர்களின் மொத்த கவனத்தையும் தம் பக்கம் ஈர்த்துக் கொண்டார். நிகழ்ச்சிக்குப் போக முடியாவிட்டாலும் சமூக ஊடகங்களில் அவருடைய இக்குரல் ஒலித்துக் கொண்டே இருப்பதைக் கேட்டு இரசிக்க முடிகிறது. குறிப்பாக மற்ற மலாய் சகோதரர்களும் ‘முன்பே வா’ பாடலைத் தேடிப் பயிற்சி செய்து பாடத் துவங்கி எல்லைகளற்ற ஓர் இசை அலையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அதுவரை இப்பாடலைப் பலமுறை கேட்ட நான் நூர்ஹாலிசா பாடிய பின்னர் அதைவிட அதிகம் கேட்கத் துவங்கியுள்ளேன். சித்தி நூர்ஹலிசாவின் இத்தனை ஆண்டு காலக் கலை ஆளுமையின் வெளிபாடுதான் மொழி, இனம் தாண்டி அம்மொழியிலுள்ள பாடலின் ஆன்மாவைத் தொட முடிந்திருக்கிறது. இளம் வயதிலேயே நூர்ஹலிசாவின் பாடலை மலாய் நண்பர்கள் பேசியும் பாடியும் கேட்டிருக்கிறேன்; அவருடைய பிரபலமான மலாய்ப் பாடல்களையும் கேட்டிருக்கிறேன். ஆனால், ரஹ்மான் உருவாக்கிய மேடையில் அவர் பாடிய இந்த ‘முன்பே வா’ பாடலின் வழி தீவிர இரசிகனாகிவிட்டேன் எனத் தோன்றுகிறது.

முன்பே வா siti Nurhaliza version என்கிற அலை கிளம்பிவிட்டது. இனி சில வாரங்களுக்கு இந்தக் காய்ச்சல் தொடரும். இன்னும் பல பாடல்களை நூர்ஹலிசா தமிழில் பாட வேண்டும். அவரின் குரல் மலாய் சகோதரர்களைத் தமிழ் இசையின் மீது கவனத்தைக் குவிக்கும்படி செய்துள்ளது. தமிழைச் சரியாக உச்சரிக்க முயன்றிருக்கும் அவருடைய கலை யத்தனம் போற்றுதலுக்குரியது. தமிழிசைக்குள் நுர்ஹலிசாவின் குரல் சற்றும் துருத்தலின்றி உள்நுழைந்து கரைந்து கொள்கிறது. சபாஷ்.

அவர் மலேசியாவில் பாடிய பாடலைக் கேட்க:

https://www.facebook.com/balabalamurugankesavan/videos/581291880511776

#sitinurhaliza #arrahmanconcert

Share Button

About The Author

Comments are closed.