குறுங்கதை: பவித்திராவின் ஓவியம்

அப்பாவிடம் எப்படிக் காண்பிப்பது எனத் தெரியாமல் வெகுநேரம் தவித்துக் கொண்டிருந்தாள் பவித்திரா. வழக்கமாக ஓவியத்திற்கு வண்ணம் தீட்டிவிட்டு அப்பாவிடம் அல்லது அம்மாவிடம் காட்டிப் பாராட்டுப் பெற்ற பின்னரே மறுநாள் பள்ளியில் ஒப்படைப்பாள்.

இன்று அப்பா அம்மாவிடம் சண்டையிட்டு ஓய்ந்திருந்தார். முகம் வேறு கடுப்புடன் தெரிந்தது.

“புது வீடு விலையே 4 லட்சம்… இப்போ அதைச் செய்யணும் இதை மாத்தணும்னு… இன்னும் ரெண்டு லட்சத்துக்கு எங்க போவன்?”

அறையினுள்ளே இருந்த அம்மாவிடம் கத்தத் தொடங்கினார். இப்பொழுது இருக்கும் வீட்டிலிருந்து வெளியேற இன்னும் மூன்று மாதங்கள் மட்டும்தான் கெடு.

“சேவா வீட்டுல இருந்தா இதான் தொல்ல… நமக்குனு சொந்தமா ஒரு வீடு… அதை நம்ம நெனைச்ச மாதிரி செஞ்சிட்டுப் போனாதானே நல்லாருக்கும்?”

பதிலுக்கு அம்மாவும் அறையிலிருந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பவித்திரா ஓவியத்தைக் காட்டுவதிலிருந்து பின்வாங்கினாள். இப்பொழுது போனால் ஒருவேளை ஓவியம் கிழிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்பதை உணர்ந்தாள்.

“முன்னுக்குக் கல்லுப் போடணும், சைட்ல லேன்ஸ்கேப் செய்யணும்… பின்னால கிட்ச்சன் இழுக்கணும்… இன்னும் என்ன?”

“ஆமா… வீட்ட முழுசா செஞ்சிட்டுத்தான போக முடியும்? அப்புறம் என்ன அங்க இருந்துக்கிட்டா செய்வீங்க? தூசு… அது இதுன்னு பெரச்சன வராதா?”

பவித்திராவிற்கு மனம் ஆதரவடையவில்லை. அம்மாவிடமாவது ஓவியத்தைக் காட்டிவிடலாம் என அறைக்குள் நுழைந்தாள்.

“ரெண்டு லட்சம் வராது… ஒன்றர லட்சத்துல முடிச்சிறலாம்… நீங்க யேன் சிரமப்படறீங்க… நான் லோன் எடுத்துத் தறென்…” என அம்மா முனகிக் கொண்டிருந்தபோது பவித்திரா ஓவியத்தை நீட்டினாள்.

“என்னம்மா இந்த நேரத்துல நொய் நொய்ன்னு…?” எனத் திட்டிக் கொண்டே அம்மா ஓவியத்தை வாங்கினாள்.

பவித்திரா அழகான முருகன் படத்திற்கு வண்ணம் தீட்டியிருந்தாள்.

“ஏன்மா… உள்ள மட்டும்தான் கலர் அடிச்சிருக்க? சுத்தி பின்னால எல்லாம் கலர் அடிச்சிட்டா இன்னும் நல்லாருக்குமே?” என்றார் அம்மா.

“இல்லம்மா… டீச்சர் சொன்னாங்க முருகனோட உருவத்துக்குத்தான் கலர் அடிக்கணும்னு… வெளில அடிச்சாலும் மார்க் இல்லம்மா… அப்புறம் அடிக்கச் சொன்னாங்கனா நான் வெளில நீலக் கலரு சுத்தி அடிச்சிக்கறன்…” என்றால் பவித்திரா.

அம்மா ஓவியத்தை நன்கு உற்றுக் கவனித்தார். உடனே அறைக்கு வெளியே வந்தார்.

“ங்ஙே… இல்லன்னா முதல்ல வீட்டு உள்ள என்ன தேவையோ அத எல்லாம் செஞ்சிக்கலாம்… வெளில செய்ய வேண்டியத நாம எப்ப வேணும்னாலும் காசு இருக்கறப்ப செஞ்சிக்கலாம்…” என்று கூறிவிட்டுப் பவித்திராவின் ஓவியத்தை மீண்டும் பார்த்தார்.

-கே.பாலமுருகன்

Share Button

About The Author

Comments are closed.