குறுங்கதை: தூக்குக் கோவில்

பெரிய சாலையிலிருந்து செம்பனைத் தோட்டத்தில் நுழைந்து இரு கிலோ மீட்டர் சென்றால்தான் கம்பத்திற்குச் செல்லும் பாதை வரும். வேலையிடத்திலிருந்து இதுதான் குறுக்குப் பாதை. பெட்ரோல் மிச்சம். வேடியப்பனுக்கு இந்தப் பாதையில் பெரிதாக மிரட்சி இல்லை. ‘தூக்குக் கோவிலை’ தாண்டும் போது மட்டும் மனம் பீதியடைவதை அவனால் தவிர்க்க முடிந்ததில்லை.

“அங்கன இருந்த எஸ்டேட்டுக் கோயிலு அது… கடன் தொல்ல தாங்காம முனியாண்டி பூசாரி கோயில்லயே தூக்குப் போட்டுக்கிட்டாரு… அதுனாலத்தான் அது தூக்குக் கோயிலு… அதுலேந்து கோயிலயும் கைவிட்டுட்டாங்க…” என அக்கோவிலைப் பற்றி சொல்லாதவர்கள் இல்லை.

“அந்தக் கோயில் பக்கம் வரும்போது மட்டும் யாராவது நிப்பாட்டனா நின்னுறாத… நாக்கத் தொங்க போட்டுக்கிட்டு முனியாண்டி பூசாரி அந்தப் பாதையில நடக்கறத முன்ன காட்டுக்கு வேலைக்குப் போனவங்க பாத்திருக்காங்க…”

காளிமுத்து தாத்தா அந்தச் செம்பனைத் தோட்டப் பாதையைப் பயன்படுத்துவோரிடம் எப்பொழுதும் நினைவுப்படுத்துவார். அவர்தான் கம்பத்தில் பழைய ஆள். முன்பிருந்த தோட்டத்தை விட்டுத்தான் எல்லோரும் இந்தக் கம்பத்திற்கு வந்தனர். கித்தா தோட்டம் அழிந்து செம்பனை தோட்டமாகியது.

வேடியப்பன் இன்று துணைக்கு உடன் வேலை செய்யும் மாரியையும் அழைத்து வந்தான். வழக்கமாக மாரி கம்பெனி வேனில்தான் போவான். இருவரும் மோட்டாரில் செம்பனை பாதையில் நுழைந்தனர். மோட்டாரின் முன்விளக்கு வெளிச்சம் பாதையைச் சூழ்ந்திருந்த இருளைச் சற்றும் அசைக்க முடியவில்லை.

தூரத்தில் இடது பக்கம் இடிந்து கிடக்கும் சுவரும் அதைச் சூழ்ந்து அடர்ந்து வளர்ந்திருக்கும் காட்டுச் செடிகளும் என அச்சுறுத்தலாகக் காட்சியளித்தது ‘தூக்குக் கோவில்’.

“அந்தப் பூசாரி தூக்குப் போட்ட செத்தக் கோயில்தான…?”

பின்னால் அமர்ந்திருந்த மாரி சில ஆண்டுகளுக்குப் பின்னர் அப்பொழுதுதான் அந்தப் பாதையில் வருவதால் கோவிலைப் பற்றி விசாரித்தான்.

“டேய், சும்மா இருடா… மனுசனுக்கே இங்க பீதி கெளம்புது…”

“அட நீங்க ஒன்னு… இந்தக் கம்பத்துல உள்ள பழசுங்க எல்லாம் கட்டுக் கதை சொல்லி ஏமாத்திச்சிருங்க… எங்க பாட்டி சாவுறதுக்கு முன்னால என்கிட்ட இந்தக் கோயில பத்தி ஒரு கதை சொன்னுச்சி… தெரியுமா?”வேடியப்பனுக்கு ஆச்சரியமாக இருந்தது.

“என்னடா சொல்ற?”

“ஆமாம்ணே… அறுபது வருசத்துக்கு முன்னால இங்க இருந்த தோட்டத்துல சீன முதலாளியோட மகனுங்கக்குள்ள பயங்கர சொத்துப் பெரச்சன… ஒரே தோட்டத்த ரெண்டாக்கிட்டானுங்க… டிவிஷன் ஒன்னு, டிவிஷன் ரெண்டுன்னு பிரிஞ்சி போச்சி… அப்போ டிவிஷன் ஒன்னுல இருந்த முனியாண்டி கோயில் சிலைய அங்கேந்து தூக்கிட்டு இங்க வந்து வச்சிட்டாங்க… அதான் ‘தூக்கி வந்த கோவில்’ன்னு சொல்லுவாங்களாம்… இவனுங்க தூக்குக் கோயில்னு அவுட்டா விட்டுட்டாய்ங்க… கொண்டு வந்தவங்க அதுக்கப்பறம் ஒழுங்கா பராமரிக்கல… என்ன ஆச்சின்னு தெரில…”

வேடியப்பன் சட்டெனப் ‘ப்ரேக்’ பிடித்துவிட்டு இடிந்து கிடக்கும் தங்களின் மூதாதையர்கள் தூக்கி வந்து கைவிட்ட கோவிலையும் அதனுள் கரைந்திருக்கும் இருளையும் பார்த்தான்.

-கே.பாலமுருகன்

Share Button

About The Author

Comments are closed.