குறுங்கதை: போட்டி

முதல் நாள் வகுப்பை ஒரு கதையுடன் தொடங்கலாம் என மூர்த்தி முடிவெடுத்தார். முதலாம் ஆண்டு மாணவர்கள் பதற்றத்துடனும் அழுது ஓய்ந்த களைப்புடனும் அமர்ந்திருந்தனர்.

“சரி, இன்னிக்கு எல்லாம் கதை சொல்லப் போறிங்க… எல்லாத்துக்கும் கதைன்னா பிடிக்கும்தான?” என ஆசிரியர் கேட்டதும் அனைவரும் உற்சாகத்துடன் கையை உயர்த்தினர். சிறுவர்கள் சொல்வதற்கு ஏராளமான கதைகளைத் தனக்குள் பூட்டி வைத்திருக்கிறார்கள்.

“சரிமா… நீங்க வாங்க…”முன்வரிசையில் அமர்ந்திருந்த கவினா எழுந்து வந்தாள். புன்னகையும் வெட்கமும் அவள் பார்வையில் கலந்திருந்தன.

“கதை சொல்லுவிங்களா?” என மூர்த்தி கேட்டதும் “எங்க அப்பாவோட ‘திக்தோக்ல’ நிறைய கதை சொல்லிருக்கன், நீங்க பார்த்தது இல்லயா?” எனப் பதிலுக்கு கவினாவும் கேட்டாள்.

“சரி என்ன கதை சொல்லப் போறீங்க?”

“நல்ல முயலும் கெட்ட ஆமையும்…” என்று சொல்லிவிட்டு முறைத்தாள்.

“ஏன்மா கோவமா பாக்கறீங்க?”

“ஆமா சார்… அதென்ன எல்லாக் கதையிலும் ஆமை நல்லதா இருக்கு… முயலு சோம்பேறியா இருக்கு? எங்க வீட்டுல நான் வளர்க்கற முயல் நல்லா வேகமா ஓடும்… ரொம்ப நல்லது… தெரியுமா?” என்றவள் முயல் போல் ஓடிக் காண்பித்தாள்.

“சரிமா, கதையெ சொல்லுங்க…”

“ஒரு ஊர்ல முயல் மட்டும்தான் இருந்துச்சாம்… ம்ம்ம்… சரி… பரவால… பாவம்… அதே ஊர்ல ஒரு ஆமையும் இருந்துச்சாம்…”

“ஓ! அப்படியா?”

“ஆமாம்… அதுல முயலுக்குக் காது கேட்காதாம்…” என்று சோகமாகச் சொன்னாள்.

“ஓ! ரெண்டும் என்னா பண்ணுச்சாம்?”

“அதுங்க அதுங்க வேலைய பாத்துக்கிட்டு இருந்துச்சாம்…” என்று கூறினாள்.

“அப்போ ரெண்டுக்கும் ஓட்டப்பந்தய போட்டி நடக்கலையா?”

கவினா மீண்டும் மூர்த்தியைப் பார்த்து முறைத்தாள்.

“நீங்க என்னம்மா சும்மா சும்மா சார பார்த்து முறைக்கிறீங்க?”

“அதுங்களே அதுங்க பாட்டுக்கு இருக்குங்க… நீங்க யேன் போட்டி வைக்கறீங்க? அதனாலத்தான் என் செல்ல முயலு கதையில கெட்டதா வருது, பாவம்! வேணும்னா ஆமைக்கும் ஆமைக்கும் போட்டி வச்சுக்கங்க…” என்று முகத்தைச் சோகமாக வைத்துக் கொண்டாள்.

“சரிமா… போட்டியே வேணாம்… ஓகேவா?”

சிறிது நேரம் சிந்தித்தவள், “போட்டியே இல்லாமல் எல்லாம் மிருகங்களும் மகிழ்ச்சியா வாழ்ந்துச்சாம்… தெரியுமா சார்?” என்றாள்.

“சரிமா… கதைய சொல்லி முடிங்க…”

“ஒரு ஊர்ல ஒரு முயல் இருந்துச்சாம்…”

“சரி இருக்கட்டும்… அப்புறம் என்ன நடந்துச்சி?” மூர்த்தி பொறுமையை இழந்தார்.

“ஒன்னுமே நடக்கல சார்… எல்லாம் ஓடுனுச்சாம்?” எனப் புருவத்தை உயர்த்தினாள்.

“யேன் மா? ஏதும் போட்டியா?” என மூர்த்தி ஆர்வத்துடன் கேட்டார். கவினா மீண்டும் அவரைப் பார்த்து முறைத்தாள்.

“சரி, யேன் அந்த முயலுக்குக் காது கேட்காதுமா?”

“யேன்னா… நீங்கத்தான் போட்டி போட்டின்னு சொல்லிக்கிட்டே இருக்கீங்கள… அதான் அதுக்குக் காது கேட்காம நிம்மதியா இருக்கட்டும்…” என்றவள் கோபத்துடன் போய் உட்கார்ந்தாள்.

கே.பாலமுருகன்

Share Button

About The Author

Comments are closed.