குறுங்கதை: வார்த்தைகளின் பாதுகாவலன்

வாழ்த்து அட்டையைத் தயார் செய்துவிட்டேன். கடைசி ஒரு வார்த்தையை எழுத வேண்டும். அது மட்டும்தான் வாய்க்கவில்லை. நேற்றிலிருந்து பல கடைகள் சென்றலைந்தும் மனத்திற்குப் பிடித்த ஒரு கார்ட் கிடைக்கவில்லை. கடைசியில் மணிலா அட்டையில் நானே ஒரு கார்ட்டைத் தயார் செய்துவிட்டேன். இப்பொழுது உறையும் காத்திருந்தது. அந்த வார்த்தையை எழுதி உள்ளே வைத்துவிட்டால் கார்ட் பெறுநரை நோக்கிப் பயணத்தைத் தொடங்கும்.

என்ன எழுதலாம் என்கிற கேள்விக்கு முன் மனம் அல்லல்பட்டுக் கொண்டிருந்தது. இதுவரை யாருக்கும் இப்படியொரு வாழ்த்து அட்டை அனுப்பிய அனுபவம் இல்லை. முதல் முறையாக அனுப்ப வேண்டுமெனத் தோன்றியது. மேசை விளக்கின் வெளிச்சம் போதவில்லை. பற்ற வைத்து விரல் இடுக்கிலேயே புகைந்து கொண்டிருந்த சிகரெட்டைப் பார்த்தேன். நெருப்பைத் துறந்த நுனி சாம்பல் விழத் தயாராக இருந்தது. எடுத்து நானே மேசையின் மீது தட்டிவிட்டு சிகரெட்டை அணைத்தேன்.

படித்து முடிக்கலாம் என மேசையில் வைத்திருந்த நாவலைப் புரட்டினால் ஏதாவது வார்த்தைகள் கிடைக்கக்கூடும் என்கிற சிந்தனை இவ்வளவு தாமதமாக வந்திருக்கக்கூடாது எனத் தோன்றியது. படித்து முடிக்காமல் எனக்காகப் பல வாரங்கள் காத்திருக்கும் புத்தகத்தைத் தொடவே அவமானமாக இருந்தது. அறையைச் சுற்றிலும் படித்து முடிக்காத புத்தகங்கள் சூழ்ந்திருந்தன.எனது இன்றைய பொழுதைக் கடக்கவிடாமல் செய்யும் இன்னும் சிக்காமல் அடம்பிடித்துக் கொண்டிருந்த வார்த்தையின் மீது கோபமாக இருந்தது. கிடைத்தால் மட்டும் என்ன செய்துவிடப் போகிறேன்? உடனே கார்ட்டில் எழுதி அனுப்பிவிடுவேன்.

இப்படிக்கு

வடிவேல்

(ஷார்ப் தொழிற்சாலையின் பாதுகாவலர்)

கார்ட்டின் முடிவுவரை எழுதிவிட்டேன். இடையில் ஒரு வார்த்தை போதும். படிப்பவருக்கு மனம் சில்லிட வேண்டும். மீண்டும் மீண்டும் படித்துப் பூரிப்படைய வேண்டும். கண்கள் குளிர்ந்து போக வேண்டும். நமது ஒரு வார்த்தையில் ஒருவரின் வாழ்நாள் முழுவதும் அதை நினைத்து மகிழ முடிந்தால் இனி என்ன வேண்டும் எனத் தோன்றியது.

நான் விட்டுவிட்டால் பேனாவே அந்த வார்த்தையை எழுதி கொள்ளும் என்பதுபோல் துடித்துக் கொண்டிருந்தது. ரவுண்ட் செல்வதற்கு நேரமாகிவிட்டது. சாப்பிட்டேனா என்று கூட கேட்க ஆளில்லாத வெறும் இயந்திரங்கள் எழுந்து கத்திக் கொண்டிருக்கும் இவ்விடத்தைச் சுற்றி வலம் வரும் நேரம். அந்தக் கசப்பான தருணத்திற்கு முன் வார்த்தை கிடைத்துவிட்டால் பேரானந்தத்துடன் தொழிற்சாலையை வலம் வரலாம்.

ஒருவேளை வார்த்தை கிடைத்துவிட்டாலும் கார்ட்டில் எழுதி யாரிடம் கொடுப்பது?

எழுந்து காற்சட்டையைத் தூக்கி இடுப்பில் உட்கார வைத்தேன். இந்த 56 ஆண்டுகளில் அப்படியொரு வார்த்தை எனக்குச் சிக்கியதே இல்லை.

-கே.பாலமுருகன்

Share Button

About The Author

Comments are closed.