பொன்னியின் செல்வன் – பாகம் 1 (சில கேள்விகளும் பதில்களும்)

1. ஒரு திரைப்படமாக இப்படைப்பு ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?

இலக்கியத்தின் ஒரு பகுதியைப் படமாக்குவது என்பது எழுத்தாளர்கள், இலக்கிய வாசகர்கள் பலரும் பெரிதும் எதிர்ப்பார்க்கும் ஒரு கலை தருணமாகும். சிறுகதைகள் திரைப்படங்களாக வேண்டும்; நாவல் படமாக்கப்பட வேண்டும் என்றெல்லாம் தொடர்ந்து பல உரையாடல்களில் முன்னிலைப்படுத்தப்பட்டதுண்டு. அவ்வகையில் கல்கியின் மாபெரும் சரித்திரத் தமிழ் நாவலை 70 ஆண்டுகளுக்குப் பின்னர் படமாக்கியிருப்பதை நாம் வரவேற்கவே வேண்டும்.

2. இப்படம் நாவலை எந்த அளவில் வெளிக்கொணர்ந்துள்ளது?

நாவலும் திரைப்படமும் வடிவ ரீதியிலும் உள்ளடக்கத்திலும் மாறுப்பட்டக் கலை கட்டமைப்புகள் கொண்டவை. நாவலில் முக்கியமான தருணமாக இருக்கும் காட்சிகள் ஒருவேளை திரைப்படத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு வேறு அலைகளுடன் வேறு தருணத்திற்குள் உருவாக்கப்பட்டிருக்கக்கூடும். இந்த நூதனமான வேறுபாட்டை இருவேறு கலை வடிவங்களின் கட்டமைப்புகளைப் புரிந்து கொள்வதன் மூலமே அதன் வெளிப்பாட்டுத் தன்மையையும் ஆராய முடியும்.

நாவல், மொழியைப் பிரதானமாகக் கொண்டு காட்சிகளை உருவகித்துச் செல்கிறது என்றால், திரைப்படம் காட்சியைப் பிரதானமாகக் கொண்டு ஒரு கதைச்சொல்லலை உருவகித்துச் செல்கிறது. இரண்டின் மொழி உச்சங்களும் கச்சாப்பொருளும் வெவ்வேறானவை. அவற்றை புரிந்து கொள்ளும்போதே நாவலிலிருந்து திரைப்படம் எங்கணம் கச்சிதமாகவும் சுருக்கியும் தேவையானவற்றை எடுத்துக் கொண்டு உருவாகிறது என்பதையும் அளவிட முடியும்.

ஐந்து பெரும் பாகங்கள் கொண்ட நாவலை இரண்டு பாகங்களாக சினிமாவிற்குள் சுருக்கும்போதே இயக்குநருக்கு ஒரு நெருக்கடி உருவாவதையும் தவ்ர்க்க இயலாது. ஆக, ஒரு திரைமொழிக்குள் எவ்வளவு சொல்ல முடியும் எதைச் சொல்ல முடியும் என்கிற சுயத்தேர்வுக்கு ஆளாக நேரிடுகிறது. அதனைக் கொண்டே மணிரத்திரனம் இப்படத்தை இயக்கியுள்ளார். கதை நகர்தலில் ஓர் அவசரத்தன்மை ஏற்பட்டுவிடுவதைத் தவிர்க்க முடியாமல் போயிருக்கலாம். அவை தாவித் தாவி செல்வதை நாவல் வாசகர்கள் அடையாளம் கண்டு கொள்வார்கள். ஆயினும், முன்பே சொன்னது போல இது ஒரு கலை படைப்பு இன்னொரு வடிவத்திற்குள் நுழையும்போது ஏற்படும் தவிர்க்க இயலாத நெருக்கடிகள் சார்ந்தவை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

3. நிறைய நடிகர்கள் இருந்தாலும் அனைத்துப் பாத்திரங்களும் மனத்தில் இடம்பிடிக்கின்றனவா?

இப்படத்தின் நடிகர்கள் தேர்வு கவனமாகக் கையாளப்பட்டுள்ளது. யாருக்கு எந்தக் கதாப்பாத்திரம் பொருத்தமானதாக இருக்கும் என்பதைக் கடந்த பல ஆண்டுகளாகத் தமிழ் சினிவாவைத் தீவரமாக அவதானித்து வரும் மணி அவர்கள் உன்னிப்பாகக் கவனித்து வடிவமைத்துள்ளார்.

துரோகமும் வஞ்சமும் சூழ்ந்து நிற்கும் ஆதித்தக் கரிகாலன், பாண்டிய வம்சத்தின் மொத்த வன்மத்தையும் தனக்குள் ஏந்திக் கொண்டு சோழ அரியணையின் வீழ்ச்சியைக் குறிவைத்துக் காத்திருக்கும் நந்தினி, திமிரும் கர்வமும் புத்திசாலித்தனமும் நிறைந்திருக்கும் குந்தவை என ஒவ்வொரு பாத்திர வடிவமைப்பும் மிகைப்படுத்தப்படாமல் கையாளப்பட்டுள்ளன.

நந்தினி கதாபாத்திரத்தை மட்டும் இன்னுமும் கூர்மையுடன் வடிவமைத்திருக்கலாம் என நினைக்கத் தூண்டியது. தன் மொத்த வன்மத்தையும் பழிவாங்கும் உணர்ச்சியையும் தனது அழகெனும் மாயைக்குள் அவள் கவனமாகப் பதுக்கி வைத்திருக்கும் தருணங்களை இன்னும் அதிகரித்துக் காட்டியிருந்தால் அக்கதாபாத்திரம் மனத்தினுள் விரிவாகியிருக்கக்கூடும்.

4. சண்டை காட்சிகள் ஏன் பிரம்மாண்டமாக இல்லை?

வழக்கமான சரித்திர நாவலைப் போன்று போரை மட்டுமே பகிங்கரமாக காட்டும் நோக்கில் எழுதப்பட்டத் தொகுதிகள் அல்ல பொன்னியின் செல்வன் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். துரோகத்தாலும் வன்மத்தாலும் எழும் வஞ்சகம் எப்படிச் சோழ அரியணையினை நோக்கி நகர்கிறது என்பதை மையப்படுத்தும் இலக்கியப் படைப்பு. ஆக, பாகுபலி போல் போரைப் பிரம்மாண்டமாகக் காட்ட வேண்டும் என்கிற நெருக்குதல் இப்படத்திற்கு இல்லை என்பதே எனது பார்வை. அதனால்தான் சண்டை காட்சிகள் கதை எவ்வளவு கோருகிறதோ அந்த அளவிலேயே யதார்த்தமாகக் கையாளப்பட்டுள்ளன.

– தொடரும்

கே.பாலமுருகன்

பின்குறிப்பு: தாராளமாக நம்மில் பலர் இரசனையாலும் கலையை உள்வாங்கும் நிலையிலும் மாறுபடலாம். பொன்னியின் செல்வனை மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டியுள்ளது.

Share Button

About The Author

Comments are closed.