நடனம் சிறுகதை ஒரு பார்வை: வாசகர் கடிதம்: ஆதித்தன் மகாமுனி

எழுத்தாளர் கே. பாலமுருகனின் தொடர் படைப்பாகிய ‘நடனம்’ சிறுகதை வாசித்தேன். நிகழ்கால சூழலுக்குள் பிண்ணிக்கிடக்கும் அவலங்களை எழுத்திலே கொண்டு வந்திருக்கிறார். மக்கள் அவரவர் பணியில் தீவிரமாக இருக்க இன்னொருபுறம் வாழ்க்கை விற்பனையாகி கொண்டிருக்கிறது என்பதே ‘நடனம்’ சிறுகதையின் பாணி. சமூகத்தின் சீர்கேடு என்பதும் சீரழிவு என்பதும் சாபகேடாகவே இருக்கிறது.

அசைவுகளின் வழியாக கதை சொல்லுவது நடனம் என்றால் சொல்லும் கதையைப் புரிந்து கொள்ள ஓர் இசை வேண்டும் அல்லவா? அது கதறலாக இருக்கலாம், கடுமையான கோபத்தின் வெளிபாடாக இருக்கலாம், சிரிப்பின், மகிழ்ச்சியின் கொண்டாட்டமாகவும் இருக்கலாம். அழுகையாகவும்கூட இருக்கலாம். இவை அனைத்திலும் ஓர் இராகம் ஒளிந்திருக்கிறது. அதை கதைக்குள் அச்சு பிசராமல் எழுத்தில் கொண்டு வருவதென்பது அவ்வளவு எளிதானது அல்ல. எழுத்தாளர் கே. பாலமுருகன் கதையை நடத்தி செல்லும் விதத்தில் அதை காண முடிகிறது. தேர்ந்த எழுத்தாளனுக்கும் தீவிர வாசகனுக்குமான இடைவெளி என்பது ஒரு புள்ளியில் முடிவதல்ல. அது பல குறியீடுகளைக் கொடுத்துக் கடந்து போக கூடியது.

அப்படிதான் இந்தக் கதைக்குள் கடந்து வந்த வாசகர் இடைவெளியும் குறியீடும் என்னை வியப்பிற்குள்ளாக்கியது. கதையின் திருப்புமுனை என்னைத் திருப்பிப் போட்டது எனலாம்.

சீனத்தி ஒருத்தி சாலையோரத்தில் எதையோ கிளறி கொண்டிருக்கும் காட்சி எதற்கு என்கிற கேள்வியே கதையின் முழு அவலங்களையும் காட்சிப்படுத்தி விடுகிறது. சாதாரணமாக ஒரு இளம் சீனத்தி அவ்வாறு தெருவோர குப்பையைக் கிளறுவது கிடையாது. பேரளம் பெண்ணாக இருந்திருக்க வேண்டும். அதாவது சீன கிழவியைதான் அப்படி சொல்லுகிறேன். ஆண்டு அனுபவித்த கிழவியின் பண பற்றாக்குறையோ அல்லது பணத்தாசையோ விடாமல் துரத்தும்கால் அவ்வாறு ஒருத்தி குப்பையைக் கிண்டுவது சாத்தியமாகும். இங்கு இருவகையான உத்தியை நான் காண்கிறேன். ஒன்று மேலே குறிப்பிட்ட உத்தி. இன்னொன்று உலக மக்கள் அவரவர் வேலையில் மிக கவனமாக இருக்கிறார்கள் என்பதும்.

கோமதியின் நிலையிலிருந்து பார்த்தால், இற்றைய சூழ்நிலையில் இப்படி பல்கலைக்கழக மாணவிகள் சிலர் தங்கள் மேற்படிப்பிற்காக தன்னை அடைமானம் வைக்கவும் துணிந்திருக்கின்றனர். இது கண்ணுக்குத் தெரியாத உண்மை. அதை வெட்டவெளிக்கு கொண்டுவருவதென்பது எளிதானதும் அல்ல. ஆனால் எழுத்தாளர் கே. பாலமுருகன் தன் எழுத்தாற்றலால் கருவின் மூலத்திலிருந்து கொஞ்சம் விடுபட்டு ஆழமான சித்தரிப்புகளாலும் புனைவுகளாலும் அதை சிறுகதையாக வடித்துவிட்டார்.

ஒரு தகப்பன் நிலை தடுமாறும்போதும், குடும்பத்திடமிருந்து விலகி செல்லும்போதும், இன்ன பிற காரணங்களால் பொறுப்பிலிருந்து தள்ளி நிற்கும்போது வீட்டில் வளரும் பிள்ளைகள் தடம் மாறுவது இயல்பாகி விட்ட ஒன்றுதான். ஆனால் கதையில் எதார்த்த சூழலுக்குள் நுழையும் எழுத்தாளர், வட்டிக்குக் கடன்வாங்கும் தகப்பனின் சுயநல போக்கினால் பெற்ற பிள்ளையின் வாழ்க்கையே பேரம் பேசப்படும் அளவிற்கும் மாறும் என்பதை காட்சிபடுத்தியிருக்கிறார்.

பிள்ளையைப் பெற்றுக் கொள்பவனெல்லாம் தந்தையாகிவிட முடியாது. எவ்வளவு துன்பம் வந்தாலும் சுமைகளைத் தாங்கி குடும்பத்தைக் கரைசேர்ப்பவனே சிறந்த ஆணாகவும் பின்னரே தகப்பனாகவும் பார்க்கப்படுகிறான். இந்த நிதர்சன உண்மையைக் காட்டுவதே ‘நடனம்’ சிறுகதை.

மனைவி பின்னர் மகளுக்கு என பேரமாகவும் அடைமானமாகவும் ஒருவனுக்கு பிணையாகிபோன குடும்பத்தின் நடன அசைவுகளே இந்த நடனம் சிறுகதை. எழுத்துலகத்தில் காட்சியாகும் வாழ்க்கையின் அசைவு!

-ஆதித்தன் மகாமுனி-

சிறுகதையை வாசிக்க:

Share Button

About The Author

Comments are closed.