குறுங்கதை : 101 இரவுகள்


அன்றுதான் 101ஆவது இரவு. சாலினி அன்பு இல்லத்தின் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு இரவையும் மனத்தினுள் வரைந்து வைத்திருக்கிறாள். அவன் வரும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. இன்று இரவு உணவிற்குப் பின் அவர்களுக்கு ‘ஆலிஸ் இன் வொண்டர்லெண்ட்’ நாவலின் கடைசி பாகத்தை வாசித்துக் காட்டுவதாகச் சொல்லியிருந்தான்.


சாலினி அன்பு இல்லத்திற்கு வந்து சில வருடங்கள் ஆகியிருந்தன. வெளிச்சத்தை வெறுத்தவள் அவன் வந்துபோன பிறகுதான் மெல்ல அங்குள்ள பிள்ளைகளோடு விளையாடத் துவங்கினாள். சாலினியின் அம்மா இறந்த பிறகு அவளுடைய சித்தி இங்குக் கொண்டு வந்து விட்டுச் சென்றாள். அதன் பின்னர் அவளைக் காண முதலில் வந்தது அவன்தான். வாடிக்கையாக அன்பளிப்புகள், உதவிகள் கொடுக்க வருபவர்களைத் தாண்டி அவன் வித்தியாசமானவனாக இருந்தான்.


“உங்கம்மா இருந்த தாமான்லத்தான் நானும் இருந்தன்… நீ குழந்தைய இருக்கறப்பலேந்து எனக்குத் தெரியும்…” என அவன் சொன்னபோது சாலினிக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்த உலகத்தில் ஒருவராவது தன்னைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள் எனப் பெருமை கொண்டாள். அவள் உதட்டில் முதல் புன்னகை அவன் எதிரில் இருக்கும்போதுதான் பூத்தது.


அன்றிலிருந்து தினமும் இரவு உணவுகளைப் பொட்டலம் கட்டிக் கொண்டு சாலினிக்கும் அன்பு இல்லத்தில் இருக்கும் மற்ற பிள்ளைகளுக்கும் கொடுத்துவிட்டுப் போவான். அனைவரும் வட்டமாக அமர்ந்து கொண்டு அவன் வாசித்துத் தமிழில் விளக்கும் ‘ஆலிஸ் இன் வொண்டர்லெண்ட்’ நாவலை ஆவலுடன் கேட்பார்கள்.


இன்று அவன் வாங்கி வரும் உணவைவிட நாவலின் கடைசி பாகத்தைக் கேட்கவே சாலினி ஆவலுடன் காத்திருந்தாள். கதைகளைப் பிறர் வாசிக்கக் கேட்கும்போதுதான் சாலினிக்கு அத்துணைச் சுவையாக இருந்தது. ஆலிஸுடன் இருந்த அதிசயப் பூனை அவளுடன் அறைக்குள் உலாவுவதை அவள் கற்பனை செய்து கொண்டாள்.

சற்றுத் தாமதமாக வந்தவன் முகத்தில் பொழிவில்லாமல் தெரிந்தான். சாலினியிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை. கடைசி பாகத்தை உயிரோட்டமில்லாமல் வாசித்துவிட்டுப் போய்விட்டான். அத்தனை மாதங்கள் அவளுக்குள் தனியுலகமாக நிகழ்ந்து கொண்டிருந்த ஆலிஸ் நாவல் மெல்ல உறைந்து கொண்டிருந்தது.

அதன் பின்னர் சில வாரங்கள் கடந்தும் அவன் வரவில்லை. கடைசியாக அவன் வந்துபோன 101ஆவது இரவு மட்டுமே ஒரு நினைவாக அவள் சேமித்து வைத்திருந்தாள். பிறகு, அன்பு இல்லத்திற்கு வரும் பலரிடம் அவள், அவனைத்தான் தேடித் தோல்வியுற்றாள். அவன் விட்டுப்போன அந்த ஆலிஸின் மாயப்பூனை மட்டுமே சாலினிக்குத் துணையாக இருந்தது.


சில மாதங்கள் கடந்து ஒரு புத்தகம் சாலினிக்குத் தபாலில் வந்தது. அவளுக்கு ஆங்கிலம் படிக்கத் தெரியாது. யாராவது படித்துக் காட்டுவார்கள் என அந்தப் புத்தகத்தை முயலின் மரபொந்து என நினைத்து அலமாரிக்குள் பத்திரப்படுத்தி வைத்தாள்.


‘நூற்றி ஒரு இரவுகள்’ எனப் பெயரிடப்பட்டிருந்த அந்த நூலின் எழுத்தாளன் இறப்பதற்கு முன் எழுதிய நூல் என சாலினிக்கு யாராவது படித்துச் சொன்னால்தான் தெரிய வரும்.


-கே.பாலமுருகன்

Share Button

About The Author

Comments are closed.