குறுங்கதை: பதில்களின் மௌனம்

இருவரும் பேசாமலே புந்தோங் மலையின் உச்சியைத் தொடும் தூரம் வரை வந்துவிட்டனர். மலையேறும்போது மகேன் கேட்டக் கேள்விக்கு அவர் எந்தப் பதிலும் சொல்லவில்லை. இடையில் அதிக மூச்சிரைத்ததால் சற்று நேரம் அங்கிருந்த கூடாரத்தின்கீழ் நின்று ஓய்வெடுத்தபோதும் அவர் பதில் சொல்வார் என மகேன் அவரின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். அவர் வாயைத் திறந்து வைத்து மூச்சு வாங்கிக் கொண்டிருந்தார்.


‘சிறந்த எழுத்து உருவாவறதுக்கு நான் என்ன செய்யணும், சார்?’ என அவன் கேட்டக் கேள்வியை மறக்காமல் மீண்டும் கேட்கத் தயாராகவே இருந்தான்.

எப்பொழுதும் ஞானிகள் ஒரு ஞானத்தை வழங்குவதற்குச் சரியான இடத்தையும் நேரத்தையும் மனத்தினுள் திட்டமிட்டிருப்பார்கள். ஆக, மலை உச்சியும் மாலை மயக்கமும் அவருக்கு உற்சாகத்தைக் கொடுத்துப் பேச வைக்கலாம் என மகேன் ஆறுதல் கூறிக் கொண்டு நடந்தான். மலையை அடைந்ததும் குறைந்தது ஒரு மணி நேரம் பேசுவார் என ஊகித்திருந்தான். ஒரு சில சிறிய சறுக்கங்களில் இறங்கி ஏறும்போது அவர் மகேனின் தோளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு நடந்தார்.


ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதி சில முக்கியமான விருதுகளையும் பெற்ற எழுத்தாளரோடு இவ்வளவு தூரம் நடந்து வந்ததைப் பெருமையாக நினைத்தான். அன்று தனக்குக் கிடைக்கும் ஆசீர்வாதங்கள் அவனை உயர்த்தப் போவதாகக் கற்பனை செய்தான்.

“உங்க ஒவ்வொரு கவிதையும் ஒரு தத்துவத் திறப்பு சார்!” என்று மகேன் தூண்டிலைப் போட்டான்.


அவர் பதிலேதும் சொல்லாமல் மூச்சிரைத்துக் கொண்டிருந்தார். மகேனுக்கு மௌனத்திற்குள் இருக்க மிகவும் சவாலாக இருந்தது. 50 வயதைத் தாண்டியிருந்ததை அவருடைய நடை நினைவூட்டியது.


ஒரு சிறு பள்ளம் வந்தபோது மகேனின் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். எத்தனை நாவல்கள் எழுதிய கை நம்மைத் தொடுகிறதே என மெய்சிலிர்த்துக் கொண்டான். திரும்பி அவரின் கண்களைப் பார்த்தான். அதில் விழுந்துவிடுவோம் என்கிற பயம் மட்டுமே தெரிந்ததால் பள்ளத்தில் அவரைக் கவனமாக வழிநடத்திச் சென்றான். இருவரும் போராடி மலையின் உச்சியை அடைந்தனர். காற்றை நன்றாக உள்ளிழுத்துக் கொண்டு சிறுத்துத் தெரியும் நகரை நோக்கி இரு கைகளையும் விரித்தார்.


“சார், நான் ஒரு கேள்வி கேட்டன்…” என அவன் சொல்லி முடிப்பதற்குள் எழுத்தாளர் களைப்பாகி தரையில் அமர்ந்துவிட்டார். அதற்குமேல் அவரால் நிற்க முடியவில்லை. குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த அவருடைய கண்கள் பூண்டிருந்த மௌனம் நிறைய சொல்லிக் கொண்டிருந்தது. இனி, எந்தப் பதிலும் தேவையில்லை என மகேனுக்குத் தோன்றியது. இருவரும் மௌனமாக அமர்ந்திருந்தனர்.

கே.பாலமுருகன்

Share Button

About The Author

Comments are closed.