குறுங்கதை 22: கூண்டு

‘உங்களின் குற்றவுணர்ச்சியிலிருந்து மீண்டு நல்வாழ்வு வாழ்வதற்கான சிறப்பு வாய்ப்பு’ என்கிற பெயர் பலகை கூண்டிற்கு மேலே பொருத்தப்பட்டிருந்தது.

மாணிக்கம் வெகுநேரம் அந்தக் கூண்டை வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தார்.கம்பிகளால் பொருத்தப்பட்ட கூண்டு நான்கு பெரிய வசிப்பிடங்களுக்குச் செல்லும் சாலையில் வைக்கப்பட்டது. இதுதான் முதல் முயற்சி என முடிவெடுத்து அங்கு வைத்திருந்தார்கள். குற்றங்கள் செய்துவிட்டு அதை மறைத்து, தண்டனை கிடைக்காமல் குற்றவுணர்ச்சியில் வாழ்பவர்களுக்கான சிறப்புக் கூண்டு அது. சிறப்புக் கழிவில் ஒரு மணி நேரம் உள்ளே சென்று தன்னை அடைத்துக் கொண்டால் ஒரு வருடம் சிறையில் இருந்ததற்குச் சமம் என்று ஒரு குறிப்பும் கூண்டுக்குக் கீழ் வழங்கப்பட்டிருந்தது.

கூண்டுக்கு யாரும் பாதுகாப்பு இல்லை. வைக்கப்பட்டுச் சில மாதங்கள் ஆகியும் யாரும் அதனுள் செல்லவில்லை. அன்று மாணிக்கம் மட்டும் கூண்டுக்குப் பக்கத்தில் வெகுநேரம் நின்று கொண்டிருந்தார். போவோர் வருவோர் மாணிக்கம் அந்தக் கூண்டிற்குள் போக வாய்ப்புள்ளது எனப் பேசிக் கொண்டார்கள்.

“இவன் மேல அப்பவே சந்தேகம் இருந்துச்சி… பொண்டாடிய அடிச்சி வெரட்டனவன்… அந்தக் குற்றம் மனசுக்குள்ள குறுகுறுக்குது போல…”

“எத்தன பேருக்குத் துரோகம் செஞ்சிருக்கானோ… ஆறு மணி நேரமாவது கூண்டுக்குள்ள இருக்கணும் இந்த நாயி…”

மாணிக்கத்திற்கு விளங்கும்படியே எல்லோரும் பேசிவிட்டு அந்தச் சாலையைக் கடந்து போய்க்கொண்டிருந்தார்கள். மாணிக்கம் வீட்டிலிருந்து ஒரு நாற்காலியைக் கொண்டு வந்து கூண்டின் அருகில் போட்டுக் கொண்டார். அமர்ந்தபடி கூண்டை வேடிக்கைப் பார்க்கத் துவங்கினார்.

மாலையில் வீடு திரும்பியவர்கள் மாணிக்கம் இன்னுமும் கூண்டுக்குள் போகாமல் இருந்ததை வெறுப்புடன் பார்த்தனர்.

“ஒரு பத்து நாளு கூண்டுக்குள்ள இருக்கப் போறானோ? இப்படி யோசிச்சிக்கிட்டு இருக்கான்… பாவம் செஞ்சி கொளுத்துப் போனவன் போல…”

மாதங்கள் பல கடந்து இன்றாவது ஒருவன் கூண்டுக்குப் பக்கத்தில் போய் நின்றானே எனப் பலர் ஆர்வத்துடன் அந்தச் சாலையில் வாகனங்களை நிறுத்திவிட்டு மாணிக்கத்தை வேடிக்கைப் பார்த்தனர். மாணிக்கம் உள்ளே போவதற்கான எந்தச் சமிக்ஞையும் இல்லாமல் வெறுமனே அமர்ந்திருந்தார்.

வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களில் சிலர் அவரை அடித்து வலுக்கட்டாயமாகக் கூண்டுக்குள் தள்ளிவிட்டனர்.

– கே.பாலமுருகன்

Share Button

About The Author

Comments are closed.