குறுங்கதை: வரிசையில் ஒருவன்

வரிசையின் பிற்பகுதியில் இருந்ததால் ராமசாமி சற்று ஆசுவாசமாக உணர்ந்தான். அவ்வளவாகப் பயம் இல்லாமல் கொஞ்சம் புன்னகைக்கவும் செய்தான். அவன் இயல்பாக இருப்பதை வரிசையின் முன்னே நிற்கும் சிலர் கோபத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

“என்னா பாக்குறீங்க? இப்ப நான் பயந்து நடுங்கணும்… அதானே வேணும்?” எனக் கேலியாகப் பேசிவிட்டுச் சிரித்தான். வரிசை மெல்ல முன்னகர்ந்தது.

பின்னால் நின்றிருப்பவனின் கால்கள் நடுங்குவதை ராமசாமி பார்த்துவிட்டார். வரிசை முன்னேறும் போதெல்லாம் உடன் நிற்பவர்களின் சுபாவங்கள் மாறிக் கொண்டிருந்தன.

“சார், உங்களுக்குப் பயமே இல்லையா?”

பின்னால் நின்றவன் மரியாதையுடன் ராமசாமியின் முதுகைச் சுரண்டினான். வரிசை இன்னும் ஒரு சில அடிகள் முன்னகர்ந்தது.

“எப்படி இருந்தாலும் வரிசைலேந்து நகர முடியாது… முன்னுக்குப் போய்த்தான் ஆகணும்… அதுக்குள்ள ஏன் பயப்படணும்?”

ராமசாமி அலட்சியமாகச் சொல்லிவிட்டு நகரும் வரிசையோடு முன்னகர்ந்தார்.

“டேய்! கொஞ்சம் சிரிக்காம வர்றீயா? ஆளையும் மூஞ்சையும் பாரு…” என வரிசையின் முன்னாள் நிற்பவர்கள் ராமசாமியைக் கடிந்து கொண்டார்கள். முன்னால் நிற்பவர்கள் திரும்பி வரிசையின் நீளத்தைப் பார்த்து நடுக்கம் கொண்டனர். அதிக நேரம் நின்றதால் இடுப்பு வலி தாளாமல் ராமசாமி சற்றே குனிந்து நின்று கொண்டார்.

இந்த வரிசையில் முன்னால் சென்று நிற்கவோ அல்லது பின்னால் நகர்ந்து போகவோ அனுமதியில்லை. வழங்கப்பட்ட இடத்திலிருந்துதான் வரிசையோடு நகர வேண்டும். வரிசை மேலும் முன்னகர்ந்தது. வெயில் அதிகமாக இருந்ததால் ராமசாமியின் தோல் சுருங்கிக் கொண்டது.

வரிசையைப் பயில்வான்கள் போல சிலர் சுற்றிலும் வலம் வந்து கண்காணித்துக் கொண்டிருந்தனர். ராமசாமி வரிசையின் முதல் ஆளாக வர இன்னும் சில தூரம் மட்டுமே இருந்தது. இருமல் அதிகரிக்கத் துவங்கியதும் மெல்ல அவரின் கால்களும் நடுங்கத் தொடங்கின. வரிசையைத் திரும்பிப் பார்த்தார்.

அடுத்து சில நொடிகளில் வரிசையின் முதல் ஆள் ராமசாமி. காலம் மௌனத்துடன் அவரை வரவேற்றுக் கொண்டிருந்தது.

– கே.பாலமுருகன்

Share Button

About The Author

Comments are closed.