குறுங்கதை: எழுத்தாளனின் கதை – 2

எழுத்தாளர், பங்சார் அடுக்குமாடியில் பகல் தூக்கத்தில் இருந்தார். தமது மூன்றாவது நாவலின் இறுதி பாகத்தை எழுதி முடிக்க முடியாமல் இரவெல்லாம் போராடித் தூங்கியதால் எழவே சிரமமாகிவிட்டது. ஒவ்வொரு நாவலுக்கும் பத்து ஆண்டுகள் இடைவெளி.


கண் பார்வையும் மங்கிவிட்டது. அவரைத் தவிர வேறு யாருமற்ற வீடு. இங்குள்ள ஒரு பொது நூலகத்தில் அதிகாரியாக இருக்கின்றார். வேலை முடிந்து வீடு வந்ததும் தம் நாவல் எழுதும் வேலையைத் தொடங்கிவிடுவார். வாங்கி வந்திருக்கும் உணவு சிலசமயம் அப்படியே இருந்து கெட்டுப் போய்விடுவதுண்டு. எழுந்தவர் கெட்டு வீச்சம் அடித்துக் கொண்டிருக்கும் பொட்டலத்தைத் தூக்கிக் குப்பையில் வீசினார். பகல் வெளிச்சம் குளிர்ந்திருந்தது.


அவரைப் பார்க்க யாரும் வரமாட்டார்கள் என எழுத்தாளருக்குத் தெரியும். அவர் வீட்டு முகவரியை யாருக்கும் தருவதில்லை. யாரையும் அவர் சந்திப்பதையும் விரும்புவதில்லை. அவர் எழுதி கொண்டிருக்கும் மூன்றாவது நாவலின் தலைப்பு மரணப் படுக்கை. கடைசி பாகத்தில் எழுத்தாளரின் புனைவு கதாநாயகனான ராஜனைத் தோட்டத்திலிருந்து தூக்கிச் செல்கிறார்கள். நோயால் சூழப்பட்டிருந்த அவனைச் சாகடிக்க வேண்டுமா அல்லது பிழைத்து எங்காவது அனுப்பி வைத்துவிடலாமா என்பதே எழுத்தாளரின் தடுமாற்றம்.


300 பக்கங்கள் வரை வாழ்ந்த ராஜனைக் கொல்வதில் எழுத்தாளருக்கு உடன்பாடில்லை. கொல்லாமல் விட்டாலும் நாவலின் கரு சிதைந்துவிடும் எனத் தயங்கினார். இரவெல்லாம் சிந்தித்தும் அவரால் முடிவெடுக்க இயலவில்லை. அனைத்து உறவுகளும் கைவிட்டுத் துரத்திய பின்னர் தான் வாழ்ந்த தோட்ட வீட்டுக்கு வந்து தனியாக வாழும் ராஜனின் சிதைந்துபோன மொத்த பாடுகளையும் எழுத்தாளர் எழுதிவிட்டார். இனி, முடிவு மட்டும்தான். என்ன செய்யலாம் என அப்படியே உட்கார்ந்துவிட்டார்.


“இதுதான் சார் என் கதை… ஒரு நாவலை எழுதி முடிக்க ஒரு எழுத்தாளர் கடைசி நிமிசத்துல போராடிக்கிட்டு இருக்காரு,”


என்கிற சத்தம் கேட்டதும் எழுத்தாளர் மேலே பார்த்தார். ஒருவன் நாற்காலியில் உட்கார்ந்தபடியே கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தான். அவன் பெருத்துப் பன்மடங்கு பெரிதாகத் தெரிந்தான். எழுத்தாளர் குனிந்து தன்னைப் பார்த்தார். எழுத்துகளால் சூழ்ந்திருந்த ஒரு தாளின் மேற்பரப்பில் நின்று கொண்டிருந்தார்.


– கே.பாலமுருகன்

Share Button

About The Author

Comments are closed.