சிறுகதை: கடைசி ஸ்பைடர்மேன் – வருடம் 2135

‘இந்த எடத்துல இப்ப ரெண்டு இனம்தான் மிச்சமா இருக்கு… வயசானவங்க… மிச்சபேரு ரொம்ப நாள் உயிர் வாழ முடியாத நோயாளிங்க…’

ஸ்பைடர்மேன் தாத்தா வெளியில் வந்து நின்றார். வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. எப்படியும் 50 செல்சியஸ் இருக்கும். வெட்டவெளி. தூரத்தில் காய்ந்து மக்கிப் போன ஒரு ரம்புத்தான் மரம் மட்டும் பெரிய கால்வாயின் ஓரம் குற்றுயிராய் அசைவில்லாமல் நின்று கொண்டிருந்தது. நேற்று முழுவதும் கடுமையான வெப்பக் காற்று வீசி ஓய்ந்ததன் மிச்சமாய் அவ்விடத்தின் அலங்கோலம் மேலும் கூடியிருந்தது. இடிந்து விழுந்த படிக்கட்டுச் சுவர்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. அருகில் இருந்த சிறிய காட்டின் வழியே கொடிகள் படர்ந்து இரண்டு புளோக்குகளின் மீதும் அடர்ந்து படர்ந்திருந்தன. நிதானமாக அடியெடுத்து வைத்து நடக்க வேண்டும். ஏ புளோக்கைத் தாங்கிப் பிடித்திருந்த தூண்களில் நீர் ஒழுகி காய்ந்து பாசி உருவாகியிருந்தது. சுற்றிலும் பார்வையைக் கவனமாகப் படர்விட்டுத் தாத்தா முன்னகர்ந்தார்.

சட்டென பார்த்தால் வெறும் ஸ்பைடர்மேன் உடை மட்டும் கொக்கியில் மாட்டி வைத்திருப்பதைப் போன்றே காட்சியளிக்கக்கூடிய வகையில் தாத்தா மெலிந்து காணப்பட்டார். இன்று பசிக்கு இரண்டு காய்ந்த ரொட்டி மட்டுமே. ஒவ்வொரு நாளும் உணவின் மீது தாத்தாவிற்கு அதீதமான கவனமும் பொறுப்பும் இருந்தது. அங்குலம் அங்குலமாக கணக்கிட்டுத் தினமும் சாப்பிட்டுவிட்டு ஆறாமல் உடலில் தகித்துக் கொண்டிருக்கும் பசி தணியும்வரை பொறுத்திருந்து பழகினார். பசியை உடலிலிருந்து அகற்ற இயலாது. ஆனால், அதனை மறக்க வைக்க மூளைக்குப் பயிற்சியளிக்க முடியும் என்று நம்பினார்.

“பூமிக்கும் வயசாச்சு எனக்கும் வயசாச்சு. ரெண்டு பேருமே சீக்குக் கோழிங்க…” என்றவாறு தாத்தா முணுமுணுத்துக் கொண்டார். பேச்சுத் துணைக்கு உடன் இருந்த பெரியசாமியும் ஒரு வாரத்திற்கு முன் நோய் முற்றி இறந்துபோனார். இந்த எட்டு மாதங்களைக் கடத்த பெரியசாமியின் துணை தாத்தாவிற்குப் பேருதவியாக இருந்தது. சதா பெரியசாமி பேசும் அனைத்தையும் கேட்டுக் கேட்டு உயிர் வாழ்ந்திட முடியும் எனும் அளவிற்கு அவருடைய வார்த்தைகள் உறுதியானவை. கண் முன்னே நிகழும் அத்தனைக்கும் ஒரு நண்பனின் ஆறுதல் வார்த்தை போதும், அதனைச் சிரித்துக் கடக்க. பெரியசாமி அப்படிப்பட்டவர்தான். ஏ புளோக்கின் மூன்றாவது மாடியில் இருந்தவரை அதுவரைக்கும் தாத்தாவிற்கு அறிமுகவே இல்லை. பெரும்பாலும் வயதானவர்கள் வீட்டிற்குள் முடக்கப்பட்டதன் விளைவு.

“பெரியசாமி! இந்நேரத்துக்கு நீ இருந்துறதா என்ன சொல்லியிருப்ப? போக்கத்தவனுங்க விட்டுப்போன பூமி… ஹா… ஹா…அப்படித்தான் இருக்குயா… நாசமா போச்சு…”

தாத்தா வானத்தைப் பார்த்து வணக்கம் வைத்துவிட்டுக் கண்களில் ஏற்பட்ட எரிச்சலைச் சமாதானப்படுத்தும் நோக்கில் உள்ளங்கையைக் கண்களில் வைத்து ஒத்தடம் கொடுப்பதைப் போல செய்தார். உடலில் உருவாகும் நோவை மருந்து கொண்டு நீக்கும் கட்டங்களைத் தாண்டிவிட்ட நிலையில் இப்படி ஏதாவது ஒரு வித்தையைச் செய்து உடலையும் உள்ளத்தையும் சமாதானப்படுத்தத் துவங்கி சில மாதங்கள் கடந்துவிட்டன.

அணிந்திருந்த ஸ்பைடர்மேன் உடையின் கால் பகுதியில் ஒரு சின்ன ஓட்டைத் தெரிந்தது. அது மேற்கொண்டு கிளிந்து பெரியதாக மாறுவதற்குள் அதனை அடைக்க வேண்டும் என்று தோன்றியது. வயத்தைக் குறைத்துக் காட்ட இந்த ஸ்பைடர்மேன் உடை அவருக்கு எப்பொழுதும் தேவைப்பட்டது. வயோதிகத்தை மறைத்து ஒரு பேராற்றலைக் கொடுக்கும் சக்தி அவ்வுடைக்கு இருப்பதாக தாத்தா நம்பினார். சுற்றிலும் காற்று மாசுப்பட்டு ஓலமிட்டுக் கொண்டிருந்தது. பாழ்பட்ட நிலத்தின் நெடி காற்றில் கலந்து வீசியது. பி புளோக்கின் வலது மூலையில் தெரிந்த கடைவரிசைக்குச் சென்றால் ஏதாவது கிடைக்கலாம் என்று மெல்ல நடக்கத் துவங்கினார். கால்களில் அவ்வளவாக வலுவில்லை. ஒவ்வொரு அடிக்குப் பின்பும் முட்டியிலிருந்து ஒரு வலி. எலும்பு தேய்ந்து எழுப்பிக் கொண்டிருக்கும் அசூசையாகக்கூட இருக்கலாம்.

“ஸ்பைடர்மேன் தாத்தா வந்தாராம்… கையிலு கயிறு விட்டாராம்… பூமிய ஆபத்துலேந்து காத்திட்டாராம்…”

தாத்தா, அப்புவோடு அவன் பயிலும் தனியார் பள்ளிக்குச் சென்று ஒருநாள் முழுவதும் காட்சிப் பொருளாக வித்தைகள் காட்டிய அன்றைய தினம் இன்னமும் அவர் மனத்தில் காட்சிகளாக மீண்டும் மீண்டும் ஓடிக் கொண்டிருந்தன. கடைசியாக அப்புவுடன் ஏற்பட்ட ஓர் இனிய நாள் அது.

“தாத்தா! நம்மளும் ஜுப்பிட்டருக்குப் போவமா? தாத்தா… நீங்க வந்தாதான் நான் போவன்… சரியா?”

தாத்தா ஸ்பைடர்மேன் உடையில் இருந்ததால் அதற்குத் தோதாக வலது கையை வான்நோக்கி நீட்டியவாறே, “நீங்க ரோக்கேட்ல போங்க…தாத்தா இப்படி கயித்தப் போட்டு அப்பறம் வந்துருவன்…” என்று செய்து காட்டினார். அப்பு கைகள் இரண்டையும் தட்டிக் கொண்டே குதித்தான். அந்ததொரு தருணம் அதன் பிறகு அப்புவை சிரித்த முகமாக தாத்தா பார்க்கவே இல்லை.

கடைத்தெருவில் நிறுத்தப்பட்டிருந்த மகிழுந்துகளில் பெரும்பாலும் வர்ணம் தெரியாத அளவிற்கு தூசு படிந்து மூடியிருந்தது. அதில் ஒரு மகிழுந்தின் கதவை யாரோ உடைத்துத் திறந்து எதையோ திருடியிருக்கலாம் என்பதைப் போல தெரிந்தது. பெரும்பாலான வீடுகள் காலி செய்யப்பட்டுவிட்டன. ஒன்றிரண்டு வீடுகளில் புற்றுநோயாளிகள் இருக்கக்கூடும் என்று தாத்தாவிற்குச் சந்தேகமும் இருந்தது. பசியில் செத்துக்கிடந்த பெரியசாமியின் வயிற்றுக் குடல்களைப் பிதுக்கியெடுத்த அவர்களில் ஒருவனின் குரூரமான கண்கள் இன்னமும் தாத்தாவின் மனத்தில் அவரின் பலவீனமடைந்து வரும் தேகத்தைக் கூர்மையாகப் பார்ப்பதைப் போன்று தோன்றியது. ஆகவே, பதுங்கியவாறே முன்னே தெரிந்த ஒரு கடைக்குள் நுழைந்தார். கண்ணாடிகள் உடைந்து பாழ்பட்டு மிச்சமாய் சில தேவைப்படாத பொருள்கள் மட்டும் மூலைகளில் பதுக்கப்பட்டிருந்தன.

“ஓடிப்போய்ட்டான் போல… பயந்தாங்கோலி…” என்று பிதற்றியவாறு அங்கிருந்து மூட்டைகளைப் பிரித்துப் பார்த்தார். பெரும்பாலும் துணிகள் மட்டுமே நிரம்பிக் கிடந்தன. அதிலிருந்து ஒரு துணியை உருவி அதனை நீளமாகக் கிழித்து எடுத்துக் கால் பகுதியில் ஓட்டையிருந்த இடத்தில் கட்டிக் கொண்டார். கால் எலும்புகளை ஏதோ பற்றிக்கொண்டதைப் போல ஒரு பிடிமானம் கிடைத்தது. அப்படியே சுவரோடு முதுகைச் சாய்த்துக் கொண்டார். வெற்றுச் சுவர் சில கிறுக்கல்கள் மட்டும் ஆங்காங்கே பளிச்சிட்டன.

“தாத்தா நீங்க எப்ப ஸ்பைடர்மேன் ஆனீங்க?”

“எனக்கு 40 வயசு இருக்கும். செஞ்ச வேலப் போச்சு. கம்பெனிய அடைச்சிட்டாங்க. முன்ன மாதிரி அரிசி, செம்பன, அன்னாசி… எந்த விளைச்சலும் சரியா இல்ல. சைம் டர்பி பல தோட்டங்கள அரசாங்கத்துகிட்டக் கொடுத்துட்டுப் போய்ட்டாங்க. மண்ணுக்குச் சீக்கு… என்னா பண்றதுனே தெரில…”

“ஐயோ! அப்புறம் என்னத்தான் செஞ்சிங்க தாத்தா…?”

“உங்க அப்பாவுக்கு அப்ப 8 வயசுதான் இருக்கும். உங்க பாட்டியயும் அப்பாவயும் கூட்டிக்கிட்டு பெனாங்குக்கு வந்து ‘ஸ்பீட்’ பேர்ரில வேல செஞ்சன்…”

“அது என்ன வேல தாத்தா?”

“அதுலாம் சொல்லக்கூடாது. அசிங்கம்…நாத்தம்… ஆனா… எனக்கு அப்பத்தான் இந்த ஸ்பைடர்மேன் ஐடியா கெடச்சது… பேர்ரிக்கு வெளில ஆளுங்க வந்து எறங்கி நடந்து டவுனுக்குப் போற பாதைல… ஸ்பைடர்மேன் உடுப்பெ போட்டுக்கிட்டு பொம்மைங்க வித்தன்…”

“வாவ்வ்வ்! பிள்ளைங்களுக்கெல்லாம் உங்கள பிடிச்சதா தாத்தா?”

“ஆமாம்… அப்போ ஸ்பைடர்மேன் கார்ட்டுன்லாம் நிண்டு பல வருசம் ஆயிருந்துச்சி…என் காலத்து வரைக்கும் ஸ்பைடர்மேன், சூப்பர்மேன்லாம் பழைய ஹிரோங்க… ஆனா பின்னால எல்லாம் ரோபோர்த்திக்தான்…அதனால நான் ஸ்பைடர்மேன் உடுப்புல நிண்டோன எல்லா பிள்ளைகளும் ரொம்ப சந்தோஷமா பார்த்துப் பிரமிச்சாங்க. அவுங்களோட ஆச்சரியம்… எனக்கு பிஸ்னஸ்…”

தாத்தா சொல்லி முடித்ததும் அவர் கண்கள் கலங்கியிருந்தன.

“யேன் தாத்தா அழறீங்க?”

“அந்த உடுப்புப் போட்டு நிண்டா பிள்ளைங்களுக்குப் பிடிக்கும்… ஆனா… அதுல கஷ்டமும் இருக்கு… நெனைச்சாலாம் ஒன்னுக்குப் போக முடியாது. ஜீப் பின்னால இருக்கும்… முழுசா கழட்டி வெளிய எடுத்துட்டுத்தான் பாத்ரூம்க்குப் போக முடியும்… அப்படியே அடக்கிக்கிட்டு இருக்கணும்… வேர்த்து வடியும்… சில ஆளுங்க எத்திட்டுப் போவாங்க…”

“நீங்கத்தான் ஸ்பைடர்மேன் ஆச்சே! அந்தக் கெட்டவங்கள அப்படியே கயித்த விட்டுக் கட்டிப்போட்டு அடிக்க வேண்டியதுதான?”

தாத்தா மெல்ல சிரித்துவிட்டு அப்புவைக் கட்டியணைத்துக் கொண்டது அவ்வெற்றுச் சுவரில் காட்சிகளாக விரிந்து தெரிந்து கொண்டிருந்தன. சூன்யம் மனத்தின் ஆழத்திலுள்ள அத்தனை காட்சிகளையும் உருவாக்கி வித்தை காட்டிக் கொண்டு அலைந்து திரிந்து கொண்டிருந்தது.சூன்யத்தை விட்டு அகல வேண்டும். இல்லையென்றால் ‘நொஸ்தோல்ஜியாவில்’ சிக்கிக் கொண்டு அழ வேண்டும் அல்லது சோர்வுற்று பலமற்று இங்கேயே காலத்தின் கால்களில் சிக்க ஒழிய வேண்டும். தம் கட்டி எழுந்து நின்றார். கடைக்கு வெளியில் வந்து நின்றதும் அங்கே வீட்டில் மீதமிருக்கும் உணவுகள் பற்றிய ஞாகபம். எப்படியும் இன்னும் இரண்டு நாள்கள் மட்டுமே தாங்கும். உணவைத் தேடி வேறு எங்காவது போக வேண்டும். அல்லது அடுத்த சில நாள்களில் மரணம் நிச்சயம். தண்ணீரைக் குடித்து மேற்கொண்டு வாழ வயதும் தெம்பும் இல்லை.

நோயாளிகள் பலரும் வெளியில் இன்னமும் திரிந்து கொண்டிருக்கலாம். என்னைப் போன்றவர்களை வேட்டையாட அவர்களுக்கு உடலில் போதுமான பலம் இருந்தது. பசியில் சாவதைக் காட்டிலும் கேவலமான ஒரு மரணம் அது. நிச்சயமாக அவர்களின் கண்ணில் படாமல் மீதி இருக்கும் நாள்களில் உணவுகள் போதுமான அளவு கிடைக்கும் வரை கடத்த வேண்டும். அதன்பின் பசியில் வாடி வதங்கி செத்துவிடலாம் என்கிற முடிவுடனே தாத்தா உலாவிக் கொண்டிருந்தார். உணவுத் தீர்ந்துவிடும் ஒரு கட்டத்தில் மனித சதைகள் பலியாகும்.

“முருகா! ஆறு படையில ஒரு படைக்கூடவா இல்ல எங்களக் காப்பாத்த?”

வெயில் முகத்தில் பளீர் என்று அறைந்தது.

அவ்வடுக்குமாடி வீடுகளில் பெரும்பாலான வீடுகள் உடைக்கப்பட்டுக் கொள்ளை யடிக்கப்பட்டிருந்தன. நாட்டிலிருந்து அவசரமாகச் சென்றவர்களும் வீட்டில் அப்படியொன்றையும் விட்டுப்போகவில்லை. சில விலையுயர்ந்த தொலைக்காட்சிகளும், வீட்டு உபயோகப் பொருள்களும் மட்டுமே எஞ்சியிருந்தன. அதையும் ஜுப்பிட்டருக்குக் கொண்டு போக முடியும் என்று யாராவது சொல்லியிருந்தால் கட்டியெடுத்துப் போயிருப்பார்கள் என்றே தாத்தாவிற்குத் தோன்றியது. உடைக்கப்பட்ட வீடுகளில் நுழைந்து தாத்தா தேடுவது உணவுப் பொருள்கள் மட்டுமே. சில வீடுகளில் குளிர்சாதனப் பெட்டிகளில் கிடைத்த பழங்களைச் சிலநாள்கள் தாத்தா வைத்திருந்து சாப்பிட்டார்.

ஜுருந்தோங் அடுக்குமாடி. தெருநாய்களின் குடியிருப்பாக மாறிப் போயிருந்தது. சிறுவர்கள் கத்திக் கொண்டே இரயிலோட்டியபடியே ஏ புளோக்கிலிருந்து பி புளோக்கிற்கு ஓடி படியில் ஏறி மறுமுனையிலுள்ள படியில் இறங்கியோடும்போது பலருடைய வீட்டில் அமைதி சீர்குலைந்து அவர்கள் பின்னர் புளோக்கின் தடுப்பு சுவரிலிருந்து எரிச்சல் கலந்த தகாத வார்த்தைகளில் கீழிருப்பவர்களிடம் கத்தும் சத்தம் இன்னமும் தாத்தாவிற்குக் கேட்பது போலவே தோன்றியது. காயப்போடப்பட்ட நீர் ஒழுகும் துணிகள், சுவர் விளிம்புகளை அலங்கரித்திருக்கும் பூச்செடிகள், அதிலிருந்து விட்டு விட்டு ஒழுகும் நீர்க்கோடுகள், படிக்கட்டுகளுக்குக் கீழே கட்டப்பட்டு நாள்தோறும் குரைத்துக் கொண்டே இருக்கும் நாய்களின் சத்தங்கள் என அனைத்துமே விரிந்து ஒருசேரக் காட்சியளித்து மறைந்தன. எட்டே மாதங்களில் எல்லோரும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று மன்றாடி அனுமதி பெற்று ஓடிவிட்டார்கள். இங்கிருந்தவர்களில் பாதிப்பேர் வேலையிழந்து மூடப்பட்டத் தொழிற்சாலைகளின் முதலாளிமார்களை எதிர்த்துப் போராடித் தோற்றவர்கள். அவர்களின் மனமும் பணமும் பலவீனமாகியிருந்த காலக்கட்டம். மூடப்பட்டுக் கொண்டிருந்த பலநூறு தொழிற்சாலைகள் அனைவருக்குமே அச்சத்தை ஏற்படுத்தின. கடைசியாக வந்த வாய்ப்பு இது. பூமியை விட்டு ஓடிவிட்டார்கள்.

ஜுருந்தோம் அடுக்குமாடியில் வசித்த மக்கள் 437ஆவது ஜுப்பிட்டர் காலணியத்தைச் சேர்ந்தவர்கள் என்று அப்புவின் அப்பா சொன்னதாக ஞாபகம். இன்னும் பத்து மாதங்களில் அவர்கள் அங்குச் சேர்ந்ததும் புதிய மண்ணில் கால் பதிப்பார்கள். ஸ்பைடர்மேன் தாத்தா அடுக்குமாடி படியில் ஏறி இன்னும் மிச்சம் இருக்கும் வீடுகளில் ஏதாவது கிடைக்குமா என்று தீவிரமாகத் தேடத் தயாரானார். முகம் களைத்துத் தொங்கிப் போயிருந்தது. இரு கண்களும் உள்ளே பதுங்கியிருந்தன.

“அந்தக் கருப்பு அரக்கனுக்கு மேல ஒரு வானம் இருக்குல… அதுதான் ஸ்படைர்மேன் தலைமையகம். எனக்கு அங்கேந்துதான் அழைப்பு வரும். அப்ப நான் அங்கப் போய்ட்டுப் பூமிய காப்பாத்தறதுக்கு அனுமதி வாங்குவன். அப்புறம் நீங்கலாம் போனோனே இங்க இருப்பவங்கள காப்பாத்திட்டு அப்புறம் நான் அங்க வந்துருவன்… சரியா?” அப்புவிற்காக சொல்லப்பட்ட ஆறுதல் வார்த்தைகளில் எத்தனை பொய்மைகள் என்று அவருடைய மனத்திற்கு மட்டுமே தெரியும். ஆழிருளுக்குள் அக்குரல்களை அப்புவின் நினைவுகளை அடக்கி மறைக்க வேண்டும். ஏனோ அவன் திரும்பி வருவான் என்று மேலுழும் ஆசைகளைக் கொல்ல வேண்டும்.

இரண்டு ‘மினரல்’ போத்தல்கள், ஐந்து ‘மேகி’ பொட்டலம், கெட்டழுகிவிட்ட சில ஆப்பிள் பழங்கள். நெஞ்சோடு அணைத்துக் கொண்டு தாத்தா புளோக்கிலிருந்து கீழறங்கினார். மேலே, காலடி சத்தங்கள் ஆக்ரோஷமாகக் கேட்கத் துவங்கின. சத்தம் நெருங்கி வருவது கேட்டதும் கீழுள்ள படிக்கட்டிற்குப் பின்னால் சென்று மறைந்து கொண்டார். புற்று நோயாளிகளின் தேடுதல் வேட்டையில் சிக்கிக் கொள்ளாமல் தப்பிக்க இதுபோன்ற படிக்கட்டுகள் பெரிதும் உதவின. பசி கொண்ட கண்களுடன் அவர்கள் சதைகளைத் தேடி அலசும்போதும் தப்பிக்க ஒரே வழி இவ்விருண்ட படிக்கட்டுகளுக்குக் கீழ்ப்பகுதிதான். ஏற்கனவே அங்குப் படுத்துச் சோர்ந்திருந்த நாய் ஒன்று தரையில் வைத்திருந்த தாடையை உயர்த்தி என்னைப் பார்த்துவிட்டு வேறு பக்கம் திரும்பிக் கொண்டது. அது பசியின் உச்சத்தில் இருந்து சோர்ந்திருக்கக்கூடும். அடுத்து தாத்தாவின் மீது பாய்ந்து அவர் வைத்திருக்கும் உணவுகளைப் பறிக்கக்கூடும். தாத்தா அவற்றை இடது தொடைக்குப் பக்கத்தில் வைத்து மறைத்தார்.

“நாய்ங்களுக்குப் பசி. வெறிப்பிடிச்சி நிக்குது. உன் சதையெ கடிச்சிக் கொதறனாலும் ஆச்சரியமில்ல… சட்டுனு மேல ஏறு…”

பெரியசாமி சொன்னதை இன்றளவும் தாத்தா கவனத்துடன் பின்பற்றுகிறார். நாய்களை நெருக்கத்தில் பார்ப்பதற்கான சந்தர்ப்பங்கள் இதுவரை உருவாகவில்லை. அதுவும் இப்பொழுது அவர் பக்கத்தில் இருக்கும் நாய் பி புளோக்கின் பீட்டர் என்பவர் வளர்த்த நாய். அவருக்கு மிகவும் பழக்கமானது. கீழே இறங்கி வரும்போதெல்லாம் அதனிடம் விளையாடிவிட்டுத்தான் தாத்தா வெளியில் போவார். பெரும்பாலும் கட்டிடத்தின் கீழே கட்டப்பட்டிருந்த நாய்களுக்கு பலரும் முதலாளிகளாகவே இருந்தார்கள். திருட்டும் போதைப்பித்தர்கள் நடமாட்டமும் அதிகம் இருந்ததால் நாய் வளர்க்க அனுமதித்த ஒரே அடுக்குமாடி குடியிருப்பு இது.

பீட்டரின் நாய் மெல்ல உருமத் துவங்கியது. தாத்தாவிற்குக் கால்கள் வெளவெளத்தன. அது சற்றே கோபத்தின் ஆழத்திலிருந்து நாய்கள் உறுமும் சத்தத்தின் முதல் ஒலி. மெல்ல அங்கிருந்து நகர எத்தனிக்கும்போது அங்கே சதைகள் சிதறிக் குதறப்பட்டிருந்த இன்னொரு நாயின் எலும்புக்கூட்டைக் கவனித்தார். அப்படியே நடுக்கத்தில் ஸ்தம்பித்து உட்கார்ந்தார். கண்கள் வேறு எங்குமே நகரவில்லை. அழுகிய வீச்சத்துடன் குதறப்பட்டுக் கிடக்கும் நாயின் எலும்புக்கூட்டையே பார்த்துக் கொண்டிருந்தார். 

“யேய்ய்ய்ய்! எங்க தாத்தா ஒரு கிரேட் ஸ்பைடர்மேன்…” என்று கூறிவிட்டு அப்பு கைத்தட்டுவது அவ்விருளில் சன்னமாகக் கேட்டது.

அப்புவின் கடைசியான பார்வையில் எத்தனை அழுத்தமான நம்பிக்கை? அன்றிரவு எல்லாம் சென்றவுடன் ஜுருந்தோங் அடுக்குமாடி அமைதியுடன் இருந்தது. சில வீடுகளில் எரிந்து கொண்டிருந்த விளக்குகள், சிறிய சலசலப்புகள் மீதமிருக்கும் வயதானவர்களை ஞாகபப்படுத்தின. மகன் வாங்கிக் கொடுத்துக் குவித்து வைத்திருந்த நெகிழி, புட்டி போன்றவற்றில் அடைக்கப்பட்டிருந்த உணவு சேகரிப்புகளைத் தாத்தா பார்த்தார். திதியின்போது படைக்க வேண்டிய அத்தனை உணவுகளையும் மகன் முன்னமே படைத்துவிட்டுப் போய்விட்டான் என்றே தோன்றியது. மௌனச் சிரிப்புடன் வீட்டிற்கு வெளியில் வந்து தடுப்புச் சுவரில் சாய்ந்தவாறே கீழே பார்த்தார்.

“ஸ்பைடர்மேன்! நம்மள விட்டு வைப்பானுங்கன்னு நெனைக்கிறயா? சாவறதுக்கு ரெடியாகு…” என்று கீழிருந்த மூன்றாவது மாடியிலிருந்து யாரோ கிழட்டுத் தொனியில் சொல்வது தாத்தாவிற்குக் கேட்டது. தாத்தா எக்கிப் பார்த்தார். பெரியசாமி என்கிற இன்னொரு கிழவன் பற்களில்லாத பொக்கை வாயில் சிரிப்பை உருவாக்கிக் கொண்டிருந்ததை தாத்தா மீண்டும் சிந்தித்துப் பார்த்தார்.

“நாயும் மனுசனும் இப்ப ஒரே புத்தியிலத்தான் இருக்கு… கவனம்… எல்லா திசையிலயும் உன் கண்ணு இருக்கணும்…” பெரியசாமியின் குரல் மீண்டும் உள்ளார்ந்து ஒலித்ததும் எச்சரிக்கை உணர்வு கூடியது. தாத்தா முணுமுணுத்துக் கொண்டே மெல்ல எழுந்தார். தலையின் வலது பக்கத்தைத் தட்டிக் கொண்டே அடுத்த புளோக்கிற்கு ஓடினார்.

வீட்டிற்குள் புகுந்ததும் கதவைச் சாத்திக் கொண்டார். அழுகிபோன ஆப்பிளில் ஏதாவது பகுதி உண்பதற்கு ஏதுவானதாக இருக்குமா என்று அலசி பார்த்தும் ஒன்றுமில்லை. அவ்வாப்பிள் முழுவதும் அழுகித்தான் போயிருந்தது. மெல்ல கடித்துத் தின்றார். மனித சதைக்கு மனம் ஏங்கும் தருணம் உண்டாகும் வரை கிடைப்பதைச் சாப்பிட்டாக வேண்டும். மனம் பசியின் உச்சத்தில் நாய்க்குச் சமானமாகிவிடும். சற்று முன்பு கேட்ட காற்றின் தனித்த ஓலம் மெல்ல அடங்கிப் போயிருந்தது.

‘உங்கள் ருசிக்குப் புதிய வகை பொறித்தக் கோழி…கே.எஃ.சி சிக்கன்… ஒருமுறை முயன்றால் பலமுறை தேடுவீர்கள். உங்கள் திருப்திக்கு நாங்கள் உத்தரவாதம்’ என்று அச்சிடப்பட்டிருந்த விளம்பரத் தாள் மேசையில் அப்படியே கிடந்தது. பல்லியின் முட்டை அதில் விழுந்து உடைந்திருந்த சிறிய அடையாளம் வலது மூலையில் தெரிந்தது.

“நான் உன்னெ என் பசிக்கான தீனியா பாக்கறத்துக்கு முன்னயோ இல்ல நீ என்னெ அப்படி பாக்கறதுக்கு முன்னயோ நம்ம இந்த பில்டிங்லேந்து விழுந்து செத்துக்கலாம்… எனக்கு இத்தன வயசு வரைக்குமே இப்படியொரு கூட்டாளி கெடைச்சது இல்லடா… ரிமேம்பர் திஸ்… ஐ எம் நோட் யோ சிக்கன்… ஓகே?” என்றவாறு பெரியசாமி சொல்லி சிரித்த தருணம் அங்கே இன்னமும் நிகழ்ந்து கொண்டிருப்பதைத் தாத்தா பார்த்தார்.

இந்த விளம்பரம் கிடைக்கப் பெற்ற நாளில் பெரியசாமி உடன் இருந்தது எத்தனை ஆறுதலானது. இல்லையென்றால் தாத்தா அவ்விளம்பரத் தாளைக் கடித்துக் குதறி ஒரு மிருகக்குணத்திற்குக்கூட போயிருப்பார். பெரியசாமியின் சமயோசிதமான வழிநடத்துதல் தாத்தாவை இத்தனை நாள் காப்பாற்றி வைத்திருந்ததை அவ்விளம்பரத் தாள் ஞாபகப்படுத்தியது.

செத்தொழியட்டும் என்று நோயாளிகளையும் வயதானவர்களையும் ஒன்றாகத் தூக்கி வீசிவிட்டப் பூமியில் என்ன நடந்திருக்கும் என்று அங்கே பல மாதங்களாக வேறொரு பூமிக்குப் பயணப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு என்னென்ன கற்பனைகள் உதித்திருக்கும்? சற்றும் குற்றவுணர்ச்சிகள் தாக்காதிருக்க அவர்கள் ஒரு கனவை உற்பத்தி செய்து கொண்டிருப்பார்கள். இங்கே வயதானவர்கள், நோயாளிகளைப் பார்த்துக் கொள்வதைப் போலவும் நோயாளிகள் தம்மால் முயன்றவரை உணவுகளைத் தேடிக் கொண்டு வந்து வயதானவர்களை உயிர் வாழ வைப்பது போலவும் அவர்கள் ஓர் உன்னத அன்பில் நிறைந்த, தங்களால் கைவிடப்பட்டப் பூமியைக் கற்பனை செய்து கொண்டே பயணித்துக் கொண்டிருப்பார்கள்.

கண்கள் இருளத் துவங்கின. எக்கிருந்தோ பறந்து வந்த கழுகு கட்டிடத்தை வட்டமிட்டு மேலும் உயரப் பறந்து மறைந்தது. பிணவாடைகள் அதனை ஈர்த்திருக்கலாம். தூரத்தில் யாரோ கத்துவதும் பின்னர் அழுது ஆர்ப்பரிப்பதும் கேட்டுக் கொண்டிருந்தது. எதையும் கூர்ந்து கேட்கும் மனநிலையில் தாத்தா இல்லை.

கெட்டுப்போன உணவுகளைச் சாப்பிட்டு வயிற்று உபாதைகளெல்லாம் பழகி போயிருந்தாலும் சில சமயம் உடல் எதிர்வினையாற்றும். அப்படியே சோர்ந்து கிடக்க வேண்டும். அடுத்து வாந்தி அல்லது பேதி உண்டாகும். அதன் பிறகு கொடுப்பனை இருந்தால் அடுத்த நாளைச் சந்திக்கலாம் என்று தாத்தாவிற்குத் தெரியும். பெரியசாமி தூரத்தில் வந்து நிற்பதைப் போன்று நிழல் உருவம் தென்பட்டது.

“சாமி… வந்துட்டீயா? என்னால முடியலயா… கூட்டிட்டுப் போய்ரு… எங்கயோ போய் சாவறதுக்கு உன் மடியில செத்துப் போய்ரேன்யா…”

தாத்தாவின் கண்களின் எரிச்சல் தாள முடியாத ஒரு நிலைக்குச் சென்றதும் கண்களை மூடிக் கொண்டார். மூக்கிலிருந்து நீர் வடியத் துவங்கியது. வயிற்றில் கடுமையான வலி. இறுகப் பற்றிக் கொண்டு அப்படியே உடலைக் குறுக்கினார். தூரத்தில் ஏதேதோ பேச்சொலிகள் கேட்கத் துவங்கின.

“தாத்தா… கயித்த விட்டு அங்க வந்துருங்க… மறந்துறாதீங்க…”

“ஜுப்பிட்டர் உங்களை அன்புடன் வரவேற்கிறது…”

“மொதல்ல தண்ணீ இருக்கறத கண்டு பிடிச்சானுங்க… அப்புறம் 50 வருசத்துல ஆளுங்க வாழ முடியும்னு கண்டுபிடிச்சானுங்க… இப்ப அங்கயும் போய் அதையும் அழிக்கலாம்னு முடிவெடுத்துட்டானுங்க… நாசமா போறவனுங்க…”

“ப்பா… நீங்க அங்க வரமுடியாதுனு ஒரு ரூல்ஸ் போட்டுருக்காங்க…”

“மிச்ச இருக்க நாள்கள சந்தோஷமா சுத்தமான சாப்பாட்டெ சாப்ட்டு இருக்கறவங்கக்கூட பேசிக்கிட்டு வாழ்ந்து சாகலாம்…”

“தெரியும்டா… வயசானவங்களும் நோயாளிகங்களும் அங்கப் போக முடியாது. அதானே? அதெல்லாம் செய்தியிலே நான் பார்த்துட்டன்… போடா…”

“ஸ்பைடர்மேன்? யாரு நீயா? டேய் கெழட்டுப் பயல… காலுலாம் நடுங்குது… இவரு ஸ்பைடர்மேனா?”

“எங்க தாத்தா ஒரு ஸ்பைடர்மேன்…தெரியுமா?”

“டென்ண்ட்டடைங்… நான் தான் பூமில இருக்கற கடைசி ஸ்பைடர்மேன். அப்பு ஜுப்பிட்டர் போயி ஒரு மாசத்துக்குள்ள அங்க நான் வருவன்…”

பேச்சொலிகள் அவரைச் சூழ்ந்து வட்டமிடத் துவங்கின. உடலை, மனத்தை, ஆன்மாவைச் சூழ்ந்திருந்த குரல்கள் ஒவ்வொன்றாகத் தப்பி வெளியேறிக் கொண்டிருந்தன. மகா சூன்யத்தின் பிடிக்குள் செல்வதைப் போல உலகம் திரண்டு வெறும் குரல்களாக மாறிக் கொண்டிருந்தன. அப்படியே மயக்கம் எங்கேயோ இழுத்துச் சென்று கொண்டிருந்தது. குரல்கள் புரியாத ஒரு மொழிக்கு மாறிக் கொண்டிருந்தன. அப்புவின் குரல் தூரத்தில் ஒலிக்கிறது.

இரண்டு முரட்டுக் கைகள் உடலை இழுத்துச் செல்வதைப் போன்று தாத்தா உணர்கிறார். நோயாளிகளாக இருக்கும். தன்னைப் பிடித்துவிட்டார்கள் என்று தாத்தா மனம் சோர்ந்தார். எதில் விழக்கூடாது; கொடூரமான சாவை நோக்கி போய்விடக்கூடாது என்று இத்தனை நாள் போராடினாரோ இப்பொழுது அதே சூழலுக்குள் தள்ளப்படவிருக்கிறார். உள்ளுக்குள்ளேயே அவருடைய வார்த்தைகள் இறுகிக் கொண்டன. வீட்டுக்கு வெளியில் வந்ததும் கட்டிடத்திலிருந்து கீழே அந்தரத்தில் இறக்கப்படுவதையும் தாத்தா உணர்ந்தார். பறப்பதைப் போன்ற ஓர் உணர்வு.

கண்களைத் திறக்க முயன்றார். கண்ணெரிச்சல் இமைகளைத் திறக்க விடாதப்படிக்கு அழுத்திக் கொண்டிருந்தது. சட்டென பளிச்சென்ற ஆயிரம் விளக்குகள் ஒன்றாக இணைந்து எரிவதைப் போன்ற ஓர் உணர்வை மூடியிருக்கும் கண்கள் கொடுத்தன. உடல் பரிப்பூரணம் அடைவதாக உணர்ந்தார். முட்டியில் இருந்த வலி முதற்கொண்டு அனைத்தும் குணமாகத் துவங்கியிருந்து போல உணர்ந்தார். கண் எரிச்சல் குறைந்து கொண்டிருந்தது. ஒருவேளை தான் இறந்துவிட்டேனோ என்றுகூட சிந்தித்தார். கண்களை மெல்லத் திறந்தார்.

எதிரில் நின்றிருந்த தலைப்பகுதி கணினியைப் போலவும் உடல் வட்ட வடிவில் நான்கு கால்களுடன் தென்பட்ட ஒன்று பேனாவைப் போன்றிருந்த லேசர் மூலம் அவரைப் பரிசோதித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார். என்ன நடக்கிறது, தான் எதற்குள் இருக்கிறேன் என்றெல்லாம் சிந்திப்பதற்குள் அந்தக் கப்பல் வான்நோக்கி அதிவேகத்துடன் பறக்கத் துவங்கியது.

“ஜுப்பிட்டர் – 6 hours…Appu Calling…”

என அறிவித்துவிட்டு அசூர ஒலியுடன் மின்னல் வேகத்தில் அக்கப்பல் புறப்படுவதைப் போன்று தாத்தாவிற்குத் தோன்றியது. மனமெல்லாம் பூரிப்புடன் அப்படியே அந்தரத்தில் மிதப்பதைப் போன்று உணர்ந்தார். கைகளைப் பறவையைப் போல அசைத்தார்.

ஏ புளோக்கின் நான்காவது மாடியிலிருந்து தாத்தா தரையை நோக்கி விழ இன்னும் 50 மீட்டர் மட்டுமே இருந்தது. ஜுருந்தோங் அடுக்குமாடியில் இருந்த கடைசி மனிதன் ஒரு ஸ்பைடர்மேன் என்பது பூமியின் வரலாற்றில் எழுதக்கூட நாதியற்ற நிலம் அவரைத் தாங்கிப் பிடித்துத் தனக்குள் இழுத்துக் கொள்ளத் தயாராகக் காத்திருந்தது.

-ஆக்கம்: கே.பாலமுருகன்

Share Button

About The Author

11 Responses so far.

  1. Christina Mani says:

    ஐயா… உங்கள் கற்பனை அபாரம்👌தாத்தா…. spider man நம்பவே முடியாத imagination…கதையோட்டம்… வேற்றுலகம் காெண்டுச் செல்வது,நாமும் அவர்களுடன் செல்வதைப் போல ஒரு பிரமிப்பு!!! வாழ்த்துக்கள் ஐயா✍️👌👍🤝

  2. THARSHINI A/P JAYARAJ says:

    Hi sir this சிறுகதை is super

  3. K.Lalitha says:

    unggal kathai migavum arputham…athil spiderman tata vin … pasiyai katte paduthum mana pakkuvamum…nanbarin aanmigathin ookamothom varthaigalum..ariviyal sarntha karpanaigalum migavum aarputham..👏🏻👏🏻👏🏻👏🏻💐💐💐Tq Sir.

  4. இரத்தினவேல் says:

    நாம் வசிக்கும் இந்தப் பூமிக்கு மிக விரைவில் இந்த அவல நிலை வந்துவிடுமோ என்ற அச்சம் எப்பொழுதும் மனத்தில் உண்டு. அருமையான கதையோட்டம் :)

  5. Dashni says:

    சிறப்பான கதை….வாழ்த்துக்கள்…

  6. பாமா சுப்ரமணியம் says:

    அற்புதம் ஐயா. எதிர்காலத்தில் இப்படியும் நடக்கலாம் என்பதை கண்முன்னே நிழலாய் அல்ல நிஜமாய் காட்டீனீர்..பல சமூக அவலங்கள் கதையோட்டத்தினூடே சொல்லப்பட்ட விதம் அருமை. பின்னோக்கு உத்தியை அப்பு எனும் கதைமாந்தனின் வழி பயன்படுத்தியிருப்பது கதைக்கு வலு சேர்க்கிறது. இருக்கும் ஒரு பூமியைக் காக்க மறந்தால் மனிதன் அழிவான் என்பது திண்ணம்.

  7. G. Thivaagar says:

    Super

  8. துர்காஷினி த/பெ தயாளன் says:

    நன்றி ஐயா இந்தச் சிறப்பான கதையை வழங்கியதற்கு.

  9. Hashini says:

    Sir your story super👌

  10. A.Kheshvin says:

    Sir super story.