மரணத் தண்டனையை அகற்றிய மனித உரிமை நாடாக மலேசியாத் திகழ வேண்டும் – 2020 தூர இலக்கின் முதல் வெற்றியாகட்டும்

‘கட்டாய மரண தண்டனை விதிக்கும் சட்டத்தை அகற்ற உத்தேசிக்கப்பட்டிருப்பதால் ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கான மாற்றுத் தண்டனை குறித்து பரிசீலிக்க வேண்டியுள்ளது ‘

மேற்கண்ட கூற்றை பிரதமர்துறை அமைச்சர் லியு வுய் கியோங் இன்று  மனித உரிமை நாளை முன்னிட்டு கோலாலம்பூரில் அறிவித்துள்ளார்.

செய்தி: https://malaysiaindru.my/180287

 

 

இச்செய்தி என் கவனத்தை ஈர்த்ததற்கான முக்கியமான காரணங்களை முன்னிறுத்தியே இச்சிறிய பகிர்வாகும். 2018 அக்டோபருக்குப் பின்னுள்ள கணக்கின்படி உலகின் 106 நாடுகள் மரணத் தண்டனையை இரத்து செய்துவிட்டு அதற்கு மாற்றான தண்டனைகளையும் சீர்த்திருத்தங்கள் பற்றியும் ஆலோசித்துக் கடைப்பிடித்தும் வருகிறது. 26 பிப்ரவரி 2002ஆம் ஆண்டு செர்பியா நாட்டின் அரசு மரணத் தண்டனையை அதிகாரப்பூர்வமாக இரத்து செய்தபோது அவர்கள் உலகிற்குக் கவனப்படுத்திய காரணம் ‘ஒருபோதும் மரணத் தண்டனைகள் குற்றங்களைக் குறைக்க உதவாதபோது ஏன் அதனை அமல்படுத்த வேண்டும் என்கிற மையக்கேள்வியிலிருந்தே மரணத் தண்டனையை இரத்துச் செய்யும் கலந்துரையாடல் தொடங்கியது’.

ஆனால், தூக்குத் தண்டனையை இரத்து செய்துவிட்டால் குற்றம் அதிகரித்துவிடும் எனக் கவலைப்படுவதும் நியாயமான ஒரு சிந்தனையே. இருப்பினும், ஒவ்வொரு ஆண்டும் தூக்குத் தண்டனையால்தான் குற்றங்கள் குறைகிறது அல்லது குற்றவாளிகள் பயமுறுகிறார்கள் என்று ஆதாரத்துடன் நம்மால் நிரூபிக்க இயல்கிறதா? அதனைக் கலந்துரையாட வேண்டிய நிலையிலேயே நாம் உள்ளோம்.

 

அதே போல, Uzbekistan நாடு 2005ஆம் ஆண்டு மரணத் தண்டனையை முற்றாக நிராரிக்கும் சட்ட மசோதாவை அறிமுகப்படுத்தி 2008ஆம் ஆண்டு மரணத் தண்டனைச் சட்ட ஏட்டிலிருந்து நீக்கியது. நாகரிமடைந்து வரும் அரசு மனித உரிமையின் மீது அதீத கவனம் செலுத்துவதோடு மக்களுக்குப் பாதுகாப்பு அரணை அமைப்பதில் முன்னுரிமை செலுத்த வேண்டும் என்பதே அந்நாட்டின் அரசு மேற்கொண்ட கருத்தியல்வாதம் ஆகும்.

2007ஆம் ஆண்டு கசகஸ்த்தான் நாட்டின் பிரதமர் நுர்சுல்தான் அவர்கள் அனைத்துத் தூக்குத் தண்டனை கைதிகளுக்கும் ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டார். குற்றங்களை ஒழிக்க நாமும் குற்றத்தையே கையிலெடுக்கக்கூடாது என்பதே அப்போதையை வாதமாக முன்வைக்கப்பட்டிருந்தது. இப்படியாக ஒவ்வொரு நாடும் தனக்கே உரிய மேம்பட்ட கருத்துகளின் புரிதல்களின் அடிப்படையில் மரணத் தண்டனையை மறு ஆய்வு செய்து இரத்தும் செய்திருப்பது வரலாற்றுச் சான்றுகளாகும்.

உலகின் 193 நாடுகளில் 106 நாடுகள் மரணத் தண்டனைய இரத்துச் செய்துவிட்டது என்பது வரலாற்றில் மனித உரிமை மறுகண்டுபிடிப்பு செய்யப்பட்டுத் தொடர்ந்து அரசுகளால் நிறுவப்பட்டு வருவதைக் குறிக்கிறது. ஆகக் கடைசியாக கடந்த 2017ஆம் ஆண்டில் கென்யா நாடு மரணத் தண்டனையை இரத்துச் செய்துவிட்டிருக்கிறது. அடுத்து வரலாற்றின் அவ்வரிசையில் மலேசியா இடம்பெறுமாயின் இந்நாட்டின் குடிமகனாகப் பெரும் மகிழ்ச்சிக் கொள்வேன். கொலைக்குப் பதில் கொலைத்தான் என்பது மனோவியலின்படி  சரியான தீர்வாகாது. அதனைச் சட்டப்படுத்தி அமல்படுத்தினாலும்  சரியான அணுகுமுறையல்ல என்று பரவலாக உலகமெங்கும் வாதிக்கப்பட்டும் வந்திருக்கின்றன. இதனை நம் நாடு மறுஆய்விற்கு எடுத்திருப்பது நாம் மனித உரிமையிலும் வளர்ந்து நிற்கிறோம் என்பதற்கான தக்கச் சான்றாகும். குற்றத்திற்கான நிரந்தரத் தீர்வை எப்படி எங்கிருந்து அமலாக்கம் செய்ய வேண்டும் என்கிற சிந்தனைத்தூண்டல் நம்மில் ஆழம் கொள்ள வேண்டிய காலக்கட்டம் இது.

 

சட்டம், தவறிழைத்த ஒரு மனிதனைச் சீர்ப்படுத்த வேண்டுமே தவிர அவனை மேலும் மிருகமாக்கும் வழிமுறைகளைக் கையாளக்கூடாது. அதே போல ஒரு குற்றவாளியைக் கொன்று விடுவதன் மூலம் சமூக விழிப்புணர்வை உண்டாக்கி இனியொருவனும் தவறிழைக்காமல் பார்த்துக் கொள்ள முடியும் என்பதே ஒரு தவறான புரிதலாகும். 1981ஆம் ஆண்டு நாட்டிற்கே அச்சுறுத்தலாக இருந்த ‘போத்தாக் சீன்’ அவர்களை அரசு தூக்கிலிட்டது. காவல் துணை அதிகாரி திரு.குலசிங்கம் அவர்களைக் கொல்ல ‘போத்தாக் சீன்’ செய்த முயற்சி தவறியதும் உருவான காவல்படை சிறப்புக் குழுவால் போத்தாக் சீன் கைது செய்யப்பட்டார். ஆனால், போத்தாக் சீன்க்கு வழங்கப்பட்ட மரணத் தண்டனை ஒருபோதும் குண்டர் கும்பல் சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்பதே வரலாறு நமக்குப் போதித்த உண்மை. ‘போத்தாக் சீன்க்கு’ பிறகு பெந்தோங் காளி என்று குண்டர் கும்பல் கலாச்சாரம் நாட்டில் மேலும் விரிவடைந்து தலைத்தூக்கியது என்பதே கசக்கும் உண்மை. ஆக, இவ்விடத்தில் மரணத்தண்டனையின் இலட்சியம்தான் என்ன என்பது கேள்விக்குறியாகின்றது.

தண்டனைகள் எல்லோருக்கும் நியாயமானதாக அமல்படுத்தப்படுகிறதா? காசுள்ளவன் சட்டத்தின் ஓட்டையிலிருந்து தப்பித்து விடுகிறான். சட்டப் பின்புலம் இல்லாதவன் தண்டிக்கப்படுகிறான். is it we applying a fare punishtment to all? இதுவே விவாதிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக அமலில் இருக்கும் மரணத்தண்டனைத்தான் இந்நாட்டின் குற்றவியல் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வாக விளங்குகிறதா என்று கேட்டால் நிச்சயம் அதற்குரிய விடை நம்மிடம் இல்லை. சீர்த்திருத்தம் என்பதை அரசு மறுஆய்வு செய்து புதிய சட்டத்திருத்தங்களைக் கொண்டு வருவது என்பதே நாட்டில் நிலவும் பலவகையான குற்றவியல்களுக்குக் குறைந்தது ஒரு சிறிய தீர்விற்கு முன்னெடுப்பாக இருக்கும். தொழில்புரட்சி, அறிவியல் புரட்சி என நாடுகள் நகர்ந்து கொண்டிருக்கையில் அதற்கெல்லாம் அடிப்படையாக இருக்கும் அறிவுப்புரட்சியைக் கொண்டு இதுபோன்ற மனித அடிப்படை தொடர்பான விடயங்களில்  ஆராய்தல் வேண்டும். இனி தவறே செய்ய நினைக்காத ஒரு புதிய தலைமுறையை உருவாக்க வேண்டும்.

சிறைச்சாலைகள் ஒரு குற்றவாளி தன் குற்றத்தை உணர்ந்து மறுவாழ்வை அடைவதற்குரிய இடமாகத் திகழ வேண்டும். மிருகத்தனம் தலைத்தூக்குவதால் உருவாகும் மனப்பிசகல் காரணமாக குற்றம் இழைக்கும் ஒருவன் சிறைச்சாலை சென்று மேலும் மோசமாகி வெளியேற்றப்படக்கூடாது என்பதே மனித உரிமையின் தலையாய எதிர்ப்பார்ப்பாகும். வகுப்பில் ஒரு மாணவன் தசறிழைத்துவிட்டாலே அவனைக் குற்றவாளியைப் போல விசாரிக்காமல் முறையான அணுகுமுறையைக் கையாள வேண்டும் என்று நாம் கவனப்படுத்திக் கொண்டிருக்கிறோம். இந்த வாழ்க்கையும் ஒரு வகுப்பறை மாதிரியே. இதில் பலர் இன்னும் மனத்தளவில் மேம்படாமல் வளர்ப்புக் காரணத்தால் பாதிக்கப்பட்டு சிதைந்து கிடக்கிறார்கள். அவர்களுக்குரிய சரியான அணுகுமுறை கையாளப்பட்டாலே இங்கு மனிதத்திற்கு எதிரான செயல்களைத் தடுக்க முடியும்.

‘மண்ணில் பிறக்கையில் எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைத்தான்’ எனும் மூத்தோர் வாக்குப் பொய்யல்ல.குற்றத்திற்கான வேர்களைத் தேடி அதனைக் களையும் நூதனமான உளவியல் அணுகுமுறைகளைக் கையிலெடுக்க வேண்டியக் கடப்பாடு நமக்கு உள்ளது. குற்றங்களுக்குப் பகிங்கரமான தண்டனைகளை வழங்கி சமூகத்தில் ஓர் அச்ச உணர்வை உண்டாக்குவதன் மூலம் ஒருவனை அல்லது ஒரு சமூகத்தைச் சீர்ப்படுத்த முடியுமா என்று கேட்டால் நிச்சயம் அத்தகைய வழிமுறைகள் தொடர்ந்து தோல்விகளையே தழுவி வருகிறன்றன. பயம் என்பது தற்காலிகமான அதிர்வை உண்டாக்குமே தவிர நிரந்தர தீர்வல்ல, மரணத்தண்டனை என்பது வலி மாத்திரிரையைப் போலத்தான். கொஞ்சம் நேரம் வலியை மறக்கடிக்கும். குற்றம் இழைப்பவர்களைச் சிறிது காலத்திற்கு அச்சுறுத்தும்; ஆனால், குற்றங்களை நிரந்தரமாக நிறுத்திவிடாது. அதற்கு மாற்றான ஒன்றை நாம் முன்னிறுத்த வேண்டிய கட்டத்திலும் கட்டாயத்திலும் இருக்கின்றோம். பல்துறை அறிவுஜீவிகளின் ஆலோசனைகளுடன் ஒரு கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே இன்றைய தேவையாகும்.

இங்கு ஒரு பெண்ணின் வாழ்வை நாசப்படுத்துபவனுக்கு என்ன தண்டனைகள் என்கிற விவரங்கள் எல்லாம் சரியாக இருக்கின்றது. ஆனால், அப்படியொருவன் சமூகத்தில்  உருவாகாமல் இருக்க/ வளராமல் இருக்க என்ன செய்திருக்கிறோம் என்பதே என் கேள்வியாக முன்வைக்கலாம்.

இவையாவற்றையும் நான் தீர்வாக முன்வைக்கவில்லை. நாம் விவாதிக்க ஒரு தளமாக அமைக்க விரும்புகிறேன்.

ஆக, மலேசியா மரணத் தண்டனையை இரத்து செய்யும் திட்டத்தை முன்னெடுத்திருப்பது ஆரோக்கியமான ஒரு துவக்கம் என்றே சொல்லலாம். இதற்கு ஆதரவாக இன்று ‘மனித உரிமை நாள்’ எனவே நாம் இணைந்து இன்னும் ஒரு மூன்று நாள்களுக்கு ‘மரணத் தண்டனையை இரத்து செய்ய ஆலோசித்துக் கொண்டிருக்கும் மலேசியாவிற்கு நல்வாழ்த்துகள்’ என்று முகநூல், புலனத்தில் பகிர்வோம். ஜனவரி மாதத்தில் புதியதொரு விடியல் மலேசியக் குற்ற ஒழிப்பில் உதயமாகும் என்று எதிர்ப்பார்ப்போம்.

கே.பாலமுருகன் 

(மனித உரிமை நாளை முன்னிட்டு…)

 

 

Share Button

About The Author

Comments are closed.