இளையோர் சிறுகதை இலக்கிய விழா 2019 – இளம் எழுத்தாளர்கள் படை

நாட்டிலுள்ள இடைநிலைப்பள்ளி மாணவர்களை இலக்கியத்தின் பக்கம் ஈர்ப்பதன் மூலம் மொழியாளுமையைப் புகட்டுவதோடு அவர்களின் கட்டொழுங்கு சிக்கல்களையும் குறைக்கலாம்’

கே.பாலமுருகன்

 

 

மலேசியத் தமிழ் விடிவெள்ளி கற்பனையாற்றல் கழகம் இந்நாட்டிலுள்ள இளையோர்கள் மத்தியில் நல்ல தரமான எழுத்தாளர்களை அடையாளம் காண வேண்டும் என்கிற நோக்கத்துடன் நடத்திய தேசிய இளையோர் சிறுகதைப் போட்டியின் பரிசளிப்பு விழாவும் வெற்றியாளர்களின் சிறுகதைகள் அடங்கிய நூல் வெளியீடும் கோலாலம்பூர் தேசிய வகை தம்பூசாமி தமிழ்ப்பள்ளியில் கடந்த சனிக்கிழமை 30ஆம் திகதி சிறப்பாக நடைபெற்றது.

 

 

போட்டி அறிவிக்கப்பட்ட கடந்த ஜூலை மாதம் தொடங்கி அக்டோபர் வரையிலும் நாடெங்கிலிருந்தும் சுமார் 215 சிறுகதைகள் மலேசிய இடைநிலைப்பள்ளி மாணவர்களிடமிருந்து கிடைக்கப் பெற்றதாகக் கூறுகிறார் தமிழ் விடிவெள்ளி கற்பனையாற்றல் கழகத்தின் தலைவரும் நாடறிந்த எழுத்தாளருமான திரு.கே.பாலமுருகன். கிடைக்கப்பெற்ற சிறுகதைகளில் சிறந்த பத்து சிறுகதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு கதைகள் எழுதிய இளையோர்களுக்குப் பரிசும் ரொக்கத் தொகையும் வழங்கப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டன. தன்னைப் போல இந்நாட்டில் சிறுவர்களும் இளையோர்களும் எழுத்துத் துறையில் மிளிர வேண்டும் என்கிற இலட்சியத்தோடு திரு.கே.பாலமுருகன் தொடங்கிய சிறுவர்/இளையோர் இலக்கிய விழா ஒரே ஆண்டில் இரண்டுமுறை நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். பத்து இளம் எழுத்தாளர்களின் சிறுகதைகளை அடையாளம் கண்டு ‘படைப்பிலக்கியத்தின் குரல்கள்’ எனும் தலைப்பில் நூலாகவும் வெளியிடப்பட்டது. ஆசிரியரும் எழுத்தாளருமான திரு.கே.பாலமுருகன் இந்நூலை மிகச் சிறப்பாகத் தொகுத்துள்ளார்.

 

தேசிய அளவில் நடத்தப்பட்ட இச்சிறுகதைப் போட்டிக்குத் தலைமை நடுவராக இருந்த மலேசியக் கல்வி அமைச்சு தேர்வு வாரியத்தின் தமிழ்ப்பிரிவு மேனாள் இணை இயக்குனரும் தமிழாசிரியர் கழகத்தின் தலைவருமான திரு.பி.எம் மூர்த்தி அவர்கள் இதுபோன்ற அரிய முயற்சிகள் அடுத்து வரும் இளம் தலைமுறையினர் மத்தியில் நல்ல எழுத்தாளர்களை உருவாக்கத் துணைப்புரியும் என்று பாராட்டினார்.

 

போட்டியோடு என்பதோடு மட்டுமல்லாமல் இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்குச் சிறுகதை எழுதும் கருத்தரங்கமும் இலவசமாக நடத்தப்பட்டது. கோலா சிலாங்கூர் ஈப்போ, ஜொகூர், கோலாலம்பூர் போன்ற பகுதியிலிருந்து மாணவர்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர். எஸ்.பி.எம் தேர்வில் தமிழ் இலக்கியப் பாடத்தை எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் துணைப்புரியும் என்று ஏற்பாட்டுக் குழுத் தலைவரும் எழுத்தாளருமான திரு.கே.பாலமுருகன் வழியுறுத்தினார்.

நாட்டின் மிக முக்கியமான எழுத்தாளர்கள் திரு.கே.பாலமுருகன், திரு.பி.எம் மூர்த்தி, திரு.ந.பச்சைபாலன். திரு.மதியழகன், திரு.ஆ.குணநாதன், உப்ஷி பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை தலைவர் திருமதி மனோன்மணி, பாரதி முன்னேற்ற இயக்கத் தலைவர் திரு.விஜயன் என்று பலரும் கலந்து கொண்ட இளையோர் சிறுகதை விழா நாட்டின் இளம் படைப்பாளர்களை உருவாக்கி அங்கீகரித்து வரலாற்றில் இடம்பெற்றது. நிகழ்ச்சியில் பேசிய இலக்கிய ஆசிரியர் நாடறிந்த எழுத்தாளர் திரு.ந.பச்சைபாலன் அவர்கள் தனக்குப் பிடித்த உலகில் கவனிக்கப்பட்ட நல்ல சிறுகதைகளைப் பற்றி இரசிக்கும்படி எடுத்துரைத்தார். மேலும், கோலா சிலாங்கூர் இடைநிலைப்பள்ளியின் ஆசிரியரும் சிறுவர் கதைகள் எழுத்தாளருமான திரு.ஆ.குணநாதன் அவர்கள் தன்னைக் கவர்ந்த சிறுகதைகள் பற்றி மிகவும் நகைச்சுவை உணர்வுடன் பகிர்ந்து கொண்டார். மர்ம நாவல், திகில் நாவல்கள் எழுதி வரும் எழுத்தாளர் மு.மதியழகன் அவர்கள் தனக்கே உரிய பாணியில் மாணவர்களைக் கவரும் வகையில் தன்னுடைய திரைக்கதை அனுபவங்களைக் கொண்டு சிறுகதைக்கான தேவையான கூறுகளைப் பற்றி பகிர்ந்து கொண்டார்.

https://www.youtube.com/watch?v=nt-H6JebNCc

தேசிய அளவிலான இளையோர் சிறுகதை எழுதும் போட்டியில் முதல் நிலை பரிசை சிலாங்கூரைச் சேர்ந்த சிந்து சந்திரன் அவர்கள் பெற்றார். அவர் எழுதிய சிறுகதையையின் தலைப்பு ‘மனசாட்சி’ ஆகும். மேலும், லோகாசினி முருகையா அவர்கள் தன்னுடைய ‘கை கொடுக்கும் கை’ எனும் சிறுகதைக்காக இரண்டாம் நிலை பரிசைத் தட்டிச் சென்றார். அடுத்ததாக, பினாங்கு புக்கிட் மெர்தாஜாம் உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த ஹரீஷ் ஆசைத்தம்பி அவர்கள் மூன்றாம் நிலை பரிசைத் தன்னுடைய ‘முற்றுப்புள்ளி’ எனும் சிறுகதைக்காகப் பெற்றார். ஆறுதல் பரிசு வரிசையில் சுபத்தரா தேவி நவமணி, கிருபாஷிணி தேவன், இலக்கியா சரவணன், பூவிழி ஆனந்தன், ரேஷ்னா ஸ்ரீ சுந்தரேசன், ஹரிசங்கர் கதிரவன், ரீனாமாலினி சந்திர சேகரன் ஆகியோர் பெற்றனர்.

இன்றைய இளையோர் புலனம், டிக் டோக், முகநூல் அரட்டை என சமூக வலைத்தளங்களால் பாதிக்கப்பட்டு நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் நேரத்தை நல்வழிக்குத் திசை மாற்றும் பொருட்டு ஆசிரியர் கே.பாலமுருகன் அவர்களால் நடத்தப்பட்ட ‘வாசிப்புக் காணொளி போட்டி 2019’ பலரின் கவனத்தை ஈர்த்தது என்றே சொல்லலாம். அப்போட்டியில் மாணவர்கள் தாங்கள் வாசித்த ஒரு தமிழ் புத்தகத்தைப் பற்றி இரண்டு நிமிடங்கள் பேசி காணொளியாக முகநூலில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன் வழி பரிசுக்குரியதாகத் தேர்வான ஏழு வெற்றியாளர்களும் அன்றைய நிகழ்ச்சியில் பரிசும், ரொக்கத் தொகையும் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டார்கள். பீடோங் இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த பிரிவின்குமார் ஜெயவாணன் முதல் பரிசை வென்றார். தைப்பிங் திரேசா தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த தமிழ்செல்வன் கணகநாதன் அவர்கள் இரண்டாம் நிலையும் ஜொகூர் கங்கார் பூலாயைச் சேர்ந்த மாணவி தஷ்வினா முரளி அவர்கள் மூன்றாம் நிலையையும் வென்றார்கள். அதோடுமட்டுமல்லாமல் கோலா சிலாங்கூர் இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த கீர்த்தனா சுப்ரமணியன், தபாஹாவ் தோட்டத்தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த தீர்த்தனா முத்துராமன், சுபாங் ஜெயா துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த ஈஷ்வர் ராமசந்திரன், சுங்கை சிப்புட்டைச் சேர்ந்த சஞ்சீவி மகேந்திரன் ஆகியோர் ஆறுதல் பரிசுகளை வென்று சாதனை படைத்தனர்.

Mr.P.M Murthy’s Talk about Book Launching

இளையோர் இலக்கியம் என்பது இளையோர்களின் மனங்களையும் வலிகளையும் போராட்டங்களையும் மகிழ்ச்சியையும் கொண்டாட்டங்களையும் சொல்லக்கூடிய ஓர் இலக்கிய வடிவம் என்று திரு.பி.எம் மூர்த்தி மிகவும் சுவைப்பட விழாவில் தனதுரையில் குறிப்பிட்டார்.

 

 

மொழிக்கும் இலக்கியத்திற்கும் அடுத்த வாரிசுகளை உருவாக்கும் பணியில் மலேசியத் தமிழ் விடிவெள்ளி கற்பனையாற்றல் கழகம் அயராமல் பல அரிய முயற்சிகளை முன்னெடுக்கும் என்று அக்கழகத்தின் தோற்றுனர் எழுத்தாளர் கே.பாலமுருகன் வெளிப்படுத்தினார்.

நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழு செயலாளரும் எழுத்தாளருமான யோகி அவர்களின் நன்றி உரையோடு நிகழ்ச்சி ஒரு நிறைவை நாடியது. தனதுரையில் யோகி அவர்கள் இன்றைய இளையோர்கள் தன்னைச் சுற்றி நடக்கும் சம்பவங்களையும் சமூக சிக்கல்களையும் கூர்மையாக நோக்கி அறிதல் வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

செய்தி/ஆக்கம்

Tamil Vidivelli Creativity Club Of Malaysia

Share Button

About The Author

Comments are closed.