ஆப்பே கடையில் நடந்த 236ஆவது மேசை உரையாடல் குறுநாவல் சர்ச்சை ஒரு விளக்கம்

குறிப்பு 1: ஒரு சில காரணங்களுக்காக சிலரின் பெயர்களை நான் இக்கட்டுரையில் குறிப்பிடவில்லை. நன்றி.

ஏறக்குறைய ஐந்தாண்டுகளுக்குப் பின்னர் எழுதும் ஓர் எதிர்வினை கட்டுரை என்றே சொல்லலாம். இதுவும்கூட ஒரு விளக்கக் கட்டுரை என்றுகூட அடையாளப்படுத்திக் கொள்ளலாம்.. முடிந்தவரை இலக்கிய விவாதங்களிலிருந்து விலகியே இருந்தேன்; இருக்கின்றேன். பெரும்பாலான இலக்கிய விவாதங்களில், இலக்கிய சர்ச்சைகளில் இலக்கியம் கருப்பொருளாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அவ்விவாதங்களின் இறுதியில் உடைந்துவிடுகிறன என்பதனாலேயே இத்தனை காலம் இப்படியொரு முடிவு.

மேலும், இப்பொழுது தோன்றியுள்ள என் குறுநாவலை முன்வைத்த விவாதங்களை ஒரு சர்ச்சையாக முன்வைக்கும் நோக்கம் எனக்கில்லை என்பதனாலேயே இதைப் பற்றி எந்தக் களேபரமும் முகநூலிலோ புலனத்திலோ நான் ஏற்படுத்தவில்லை. எதையும் நிதானமாக எதிர்க்கொள்ள வேண்டும் என எனக்கு நானே அளித்துக் கொண்ட பயிற்சியின் விளைவு. இருப்பினும், இச்சர்ச்சை என் குறுநாவல் தொடர்பாக எழுந்துள்ளதால் நானே இதனைப் பற்றி தன்னிலை விளக்கமாக எழுதுவதுதான் சரி என்று தோன்றியது.

குறுநாவல் பற்றிய சர்ச்சை

நான் 2014ஆம் ஆண்டில் எழுதி, 2015ஆம் ஆண்டு வெளியிட்ட இரண்டு குறுநாவல்கள் அடங்கிய புத்தகம்தான் ‘ஆப்பே கடையில் நடந்த 236ஆவது மேசை உரையாடல்’ ஆகும். இக்குறுநாவல் தொகுப்பில் இடம்பெற்ற மலேசிய இந்திய குண்டர் கும்பலைப் பற்றிய குறுநாவலான ‘ஆப்பே கடையில் நடந்த 236ஆவது மேசை உரையாடல்’ நேரிடையாக கள ஆய்வின் மூலமும், சில நேர்காணல்கள், சில தரவுகள் சேகரிப்பு, மலேசியாவில் குண்டர் கும்பல் பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வையும் அடிப்படையாகக் கொண்டு கடுமையான உழைப்பு தேவைப்பட்டு எழுதப்பட்ட நாவலாகும். அதற்குரிய சான்றுகள், மேற்கோள்கள் அக்குறுநாவலில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

மலேசியாவில் (கெடா, கோலாலம்பூர்) ஆகிய இரண்டு இடங்களில் இக்குறுநாவல் தொகுப்பு வெளியீடு கண்டு வாசகர்களைச் சென்றடைந்தது. ஏற்கனவே இக்குறுநாவல் தொடர்பாக தமிழக எழுத்தாளர் அ.ராமசாமி, சிங்கை அழகுநிலா, பாண்டியன் ஆகியோர் விமர்சனம் எழுதியிருந்தனர்.

2017ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலிருந்து கெடாவிற்கு வருகையளித்திருந்த *அத்தமிழக எழுத்தாளரைக் கெடா, கூலிம் போன்ற இலக்கியக் கூட்டங்களுக்கு அழைத்துச் சென்று வீட்டிற்கு வரவழைத்து உபசரித்தும் இருந்தேன். அப்பொழுது அவரிடம் இக்குறுநாவலையும் மேலும் என்னுடைய சில நூல்களையும் அன்பளிப்பாகக் கொடுத்திருந்தேன். அதன் பின்னர், கடந்த வருடம் எழுத்தாளர் பாண்டியன் அந்த எழுத்தாளர் எழுதிய ‘கடவுச் சீட்டு’ என்கிற நாவலில் சில பக்கங்களைப் படம் பிடித்து என் புலனத்திற்கு அனுப்பி இவைகளை நீங்கள் எங்கும் படித்ததுண்டா எனக் கேட்டார். அப்பொழுதுதான் எனக்கான முதல் அதிர்ச்சி காத்திருந்தது. அந்நாவலில் அவர் கையாண்டிருக்கும் சில வரிகள், வர்ணனைகள், தகவல்கள் அப்படியே என் நாவலிலிருந்து முழுவதுமாக எடுத்துக் கையாளப்பட்டிருப்பதுதான் அதிர்ச்சியாக இருந்தது. எடுத்துக்காட்டாக ஒன்றை முன்வைக்கலாம்:

எனது குறுநாவலில் வரும் சில உண்மையான இடங்களின் பெயர்களை புனைவுக்காக  நான் மாற்றியிருப்பேன். பீடோங் எனும் ஊரை ‘பெடோங்’ என்றும், ‘ரூசா தோட்டத்தை’‘மூசா தோட்டம்’ என்றும் மறுபெயரிட்டிருப்பேன். அப்படியொரு இடங்கள் மலேசியாவில் இல்லை. ஆனால், என் குறுநாவலை வாசித்து அதிலிருந்து குறிப்புகள் எடுத்துக் கொண்ட அவர் இதுபோன்ற இடங்கள் இருப்பதைப் போல அப்படியே பயன்படுத்தியிருக்கும் இடங்களில் கடுமையான நெருடலை உண்டாக்கியது. மேலும், காப்பி கடை அமைப்பு, திருவிழா சண்டை, அதன் காட்சியமைப்பு என்று இன்னும் பலவற்றை இம்மி பிசகாமல் எடுத்துக் கையாண்டுள்ளார். இதனைச் சட்ட ரீதியிலும் என்னால் கொண்டு செல்ல முடியும். இந்நாவலை முறையே நான் பதிப்புரிமை சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளேன்.

இதைப் பற்றி எழுத்தாளர் பாண்டியன் வல்லினம் என்கிற மலேசிய இலக்கிய இணைய இதழில் இவ்வருடம் ஜனவரியில் எதிர்வினைக் கட்டுரையாக எழுதியிருந்தார். அவர் இதனைப் பொதுவில் எழுத முடிவெடுத்தார்; நான் மறுநாள் ஜனவரி சம்பந்தப்பட்ட அத்தமிழக எழுத்தாளரிடம் நேரிடையாகவே முகநூல் வழியாகக் கேட்டேன். அவருக்கும் எனக்கும் அப்பொழுது பேச்சு இருந்ததால் நேரிடையாகக் கேட்பதே சரி என்று தோன்றியது. அவருக்கும் எனக்கும்  ஜனவரி 2 நடந்த உரையாடலுக்கான ஆதாரம் முகநூல் இன்பாக்சில் இருக்கிறது. (தோழி யோகியிடமும் இதனைக் காட்டியிருந்தேன்) யாரையும் அவமானப்படுத்தும் நோக்கு எனக்கில்லை அதற்குரிய சுபாவத்தில் நான் தற்போது இல்லை என்பதால் அப்பதிவுகளை நான் வெளியிடவில்லை. (ஆதாரம் வேண்டும் என்பவர்களும் நான் சம்பந்தப்பட்ட எழுத்தாளரிடம் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை என்று நினைப்பவர்களும் தனிப்பட்ட முறையில் ஆதாரத்தைக் கேட்டுப் பெறலாம்.)

நான் கேட்ட விடயங்களில் உள்ள சில நியாயங்களை மறுக்காமல் ‘பின்னர் விரிவாய் எழுதுவேன்’ என்று கூறிய ஒரு மூத்தப் படைப்பாளியைத் தொடர்ந்து இம்சிக்க முடியுமா? ஆகவேத்தான் அவருடைய விரிவான பதில் கட்டுரைக்காகக் காத்திருந்தேன். ஆனால், ஐந்து மாதங்கள் கடந்தும் பதில் இல்லை என்பதால் அவர் மீது வருத்தம் இருக்கவே செய்தது. அவர் வல்லினத்தில் வெளிவந்த பாண்டியனின் கட்டுரைக்கு ஆற்றிய எதிர்வினை, பாதிக்கப்பட்ட எனக்கான பதில் அல்ல என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். ஆகவே, அவரிடமிருந்து வரக்கூடிய ஒரு முழுமையான விளக்கக் கட்டுரைக்கு நான் இடமளித்து, இச்சர்ச்சையைப் பொதுவில் எழுதாமல் இருந்தேன். ஒருவேளை சர்ச்சையையும் களேபரத்தையும் உருவாக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் அவ்வெழுத்தாளர் மலேசியா வருகிறார் என்று தெரிந்த அடுத்த கணத்திலிருந்து முகநூல் எதிர்வினைகள், மறுப்புகள் போன்றவற்றை எழுதி இப்பிரச்சனையைப் பெரிதாக்கியிருப்பேன். அவர் விரிவான ஒரு பொது பதிவிடுவார் என்று கொடுத்த அவகாசத்தைச் சமரசம் என்று அவர் திரித்துக் கொண்டது உண்மையில் கண்டனத்திற்குரியதாகும். அவ்வார்த்தையைப் பயன்படுத்தியே அவர் எல்லோரையும் சமாதானமும்படுத்தியுள்ளார். நடந்தது தவறென்று அவர் யோகியிடம் ஒப்புக்கொண்டு வருந்துகிறேன் என்று சொன்னதை ஒரு பொது மன்னிப்பாகக் கேட்டிருக்கலாமே? இத்தனை சிக்கலும் எழுந்திருக்காது அல்லவா? 

ஆனால், இப்பிரச்சனை எழுவதற்கு முன்பே என் தோழி ஒருவரால் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட நிகழ்ச்சித்தான்   ‘பெண்மை’ சிறுகதை தொகுப்பு அறிமுக விழாவும் அதன் சார்ந்தும் நடவடிக்கைகளும் ஆகும். ஆக, அவர்கள் கூட்டான முயற்சியில் முன்னெடுத்திருக்கும் ஓர் இலக்கிய செயல்பாட்டை நான் எவ்விதத்திலும் பாதிக்கக்கூடாது; அவர்களின் விருந்தாளியாக வருபவரை நாம் அவமானப்படுத்தக்கூடாது என்கிற எண்ணமே நான் இப்பிரச்சனையை இத்தருணத்தில் ***பொதுவில் சர்ச்சையாக்காததற்கு முக்கியமான காரணமாகும்.

ஆனால், வாய்ப்பிருந்தால் அவ்வெழுத்தாளரிடம் இக்குறுநாவல் சர்ச்சை பற்றி கேளுங்கள் என்று நான் என் நட்பில் உள்ள மூன்று நண்பர்களிடம் கேட்டிருந்தேன் (நெருக்கடி தரவில்லை). ***வாய்ப்பிருந்தால் நிகழ்ச்சி முடிந்து கேளுங்கள் என்பதே என் தொனியாக இருந்தது. அதுவும் அவர் வாக்களித்த விரிவான விளக்கம் தொடர்பான நினைவுறுத்தலாக இருக்கும் என்பதாலும் என்னால் அங்கு நேரில் வர இயலவில்லை என்பதாலும் நான் கேட்ட மூவரும் என் நண்பர்கள் என்பதாலும் மட்டுமே இக்கோரிக்கை விடுக்கப்பட்டது.

 

மேலும், நான் முதலிலேயே சொன்னதைப் போல இந்நிகழ்ச்சி ஏற்பாட்டிலும் இம்முயற்சியிலும் எனக்கு எந்தப் பகைமை உணர்வும் இல்லை. ஒருவேளை ‘பெண்மை’ சிறுகதைகளை வாசித்தால், அச்சிறுகதைகள் தொடர்பான இலக்கிய விமர்சனத்தை முன்வைப்பேனே தவிர என் தோழி இருவரின் முயற்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சி தொடர்பாக எனக்குத் தனிப்பட்ட விரோதம் இல்லை. அப்படி ஏதும் மாற்றுக் கருத்து இருந்திருந்தால் நான் ஆரம்பத்திலேயே அவர்களுக்கு நெருக்கடிகள் கொடுத்திருக்கக்கூடும் அல்லவா? நிகழ்ச்சி அன்று நான் நட்பு ரீதியில் முடிந்தால் அவரிடம் இது தொடர்பாகக் கேட்டுப் பாருங்கள்; நான் கேட்டு அவர் பதில் கொடுத்தும் பின்னர் அவரிடமிருந்து நான் எதிர்ப்பார்த்த விரிவான பதில் வராததால்தான் நண்பர்களின் மூலம் கேட்டாலாவது அதன் அழுத்தம் புரிந்து அவர் உடனே செயல்படுவார் என்று நினைத்தேன். (உண்மையில் அதன்படியே இப்பொழுது முகநூலில் ஒரு சுருக்கமான பதிவும் இட்டுள்ளார்)

மேலும், இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த என் தோழி, நீங்கள் நேரில் வாருங்கள், சம்பந்தப்பட்ட எழுத்தாளரிடம் நிகழ்ச்சி முடிந்து நேரில் கலந்துரையாட ஒரு வாய்ப்பும் ஏற்படுத்திக் கொடுப்பதாகச் சொன்னார். ஆனால், என்னால் வர இயலாததால்(ஜொகூர் பயணத்தில் இருந்தேன்), இத்தனை உரிமையுடன் எனக்கு வாய்ப்பளித்த நண்பரிடம் வாய்ப்பிருந்தால் நீங்களும் கேட்டுப் பாருங்கள் என்றதில் அப்படியொரு தவறு இருந்துவிடுமா? இத்தனைக்கும் நான் யாரையும் நீங்கள் கேட்டுத்தான் ஆக வேண்டும் என்று நிர்ப்பந்திக்கவில்லை என்பதையும் சம்பந்தப்பட்டத் தோழிகள் உணர்ந்திருப்பார்கள் என்று நம்புகிறேன். ஒருவேளை நான் கேட்பதற்குரிய எந்த முயற்சியையும் மேற்கொள்ளாமல் பிறரை விட்டுக் கேட்கச் சொல்லியிருந்தால் அது விமர்சனத்திற்குரியவையே. ஆனால், நான் சம்பந்தப்பட்டவரிடம் கேட்டுவிட்டேன்; அவரும் விரிவாய் எழுதுவதாகச் சொல்லியும் விட்டார். இது சமரசம் அல்ல. எதிர்வினையாகவும், நேரிடையாகவும் நாம் கேட்டாயிற்று. அவர் தரப்பில் பதில் இருந்தால்தான் நான் தொடர்ந்து ஒரு முடிவுக்கு வர முடியும் அல்லவா?

அடுத்து, எழுத்தாளர் பாண்டியன் நேற்றைய முன்தினம் முகநூலில் பதிவிட்டது நான் தூண்டி அவர் எழுதியவை என்கிற குற்றச்சாட்டுப் பரவலாக முன்வைக்கப்படுகிறது. பாண்டியன் இப்பிரச்சனையை வல்லினத்தில் எழுத வேண்டும் என்று எடுத்த முடிவே எனதல்ல. அது அவருடைய சுதந்திரம் தொடர்பான விடயம். படைப்பாளிகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்பதில் எப்பொழுதுமே தெளிவாக இருக்கவே முயற்சிக்கிறேன். அவர் நேற்றைய முன்தினம் முகநூலில் பதிவிட்டதும் அவருடைய சுய முடிவாகும்; நான் தூண்டிவிட்டு அவர் எழுதவில்லை என்பதை அவரே பதிவிடுவார் என்று நான் நம்புகிறேன். என் தரப்பில் நான் எனக்கான பதிலுக்காக முயற்சித்துக் கொண்டிருக்கையில் இலக்கியம் சார்ந்து அவருக்கிருக்கும் உரிமை தொடர்பாக அவர் எழுதிக் கொண்டிருக்கிறார். இத்தனைக்கும் பாலமுருகன் அல்ல; அவ்விடத்தில் வேறு யார் இருந்தாலும் நான் எழுதுவேன் என்று அவரே என்னிடம் கூறியும் இருக்கும்போது நான் எப்படி அவரைத் தூண்டியிருக்க முடியும்?

மேலும், எனது நாவல் பகுதி எடுக்கப்பட்டிருப்பதை பாண்டியன் அறிவித்தோடு அதனை ஓர் எதிர்வினை கட்டுரையாக எழுதியிருந்தார். பாண்டியன் எழுதிய எதிர்வினைக்குப் பதில் கொடுக்கும்போது பாண்டியனையும் அவர் சார்ந்திருக்கும் இணைய இதழையும் அத்தமிழக எழுத்தாளர் சாடினாரே தவிர அவருடைய பதிவில் எனக்கு எந்தப் பதிலும் இல்லை என்பதே என் ஆதங்கம். இருப்பினும் இன்றுவரை அம்மூத்த எழுத்தாளர் மீது நான் மரியாதையைப் பாதிக்கும் வகையில் உரையாடவில்லை; அல்லது வார்த்தைகளைப் பிரயோகிக்கவில்லை. அவரே நண்பர்களிடம் கவனக்குறைவை ஒப்புக் கொண்டபோது மேலும் அவரை நாம் அழுத்த முடியுமா?

 

சிறார் இலக்கியக் கட்டுரை- விளக்கம்

அடுத்து, அத்தமிழக எழுத்தாளர், தான் திண்டுக்கல் குழந்தை மாநாட்டில் என்னுடைய சிறுவர் நாவல்கள் பற்றி கட்டுரை படைத்ததாகவும் அதனால் பாலமுருகன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார் என்றும் இங்குள்ள சிலரிடம் (தோழி ராஜி உட்பட) சொல்லி என் மீதான மறைமுக சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கிறார். அவர் மின்னஞ்சல் அனுப்பியதும் உண்மைத்தான். அம்மின்னஞ்சலில் மாநாடு தொடர்பான புகைப்படங்கள் அனுப்பியதும் உண்மைத்தான்.

//மலேசியா பாலமுருகனின் 3 சிறார் நூல்கள் பற்றிய மலேசியா குணநாதனின் சிறப்பான ஆய்வு திண்டுக்கல் மாநாட்டில்..இப்படி. மலேசியா ஆளுமைகள் எப்போதும் பாராட்டைப் பெறுபவர்கள்//

அதாவது திண்டுக்கல் மாநாட்டில் உண்மையில் எனது சிறுவர் நாவல்கள் பற்றிய கட்டுரை படைத்தது மலேசிய இடைநிலைப்பள்ளி ஆசிரியர் இனிய நண்பர் திரு.ஆ.குணநாதன் ஆவார். இது எனக்கு முன்னமே தெரியும். மாநாட்டிற்குச் செல்லும் அன்றைய இரவு வரை எனக்கும் குணநாதன் அவர்களுக்கும் பேச்சு இருந்தது. ஆக, அங்குள்ள புகைப்படங்களை அனுப்பி வைக்கும் உதவி மட்டுமே அத்தமிழக எழுத்தாளர் செய்தார். அதற்காக அவருக்கு நான் நன்றியும் சொல்லியிருந்தேன். உண்மையில் நான் பாராட்டி நன்றி தெரிவிக்க வேண்டியர் திரு.ஆ.குணநாதன் அவர்களே. இதனை **அத்தமிழக எழுத்தாளர் இங்கு மலேசியாவில் தவறாகப் பரப்பியதில் எனக்கு மிகுந்த வருத்தம்.

இனி…

நான் நேற்று மீண்டும் அந்த எழுத்தாளரிடம் என் கோரிக்கையைக் கேள்வியை முன்வைத்துள்ளேன். உங்களின் விரிவான ஒரு பொது பதிவு மட்டுமே இங்கு நிகழ்ந்து கொண்டிருக்கும் தேவையற்ற முரண்களைப் போக்கும் என்றும் கூறியிருக்கிறேன். சுற்றுலாவில் இருப்பதால் விரைவில் நிச்சயம் பதிவிடுவதாக அவர் பதிலளித்துள்ளார். (அவர் சுற்றுலா மனநிலையில் இருப்பார் நாம் எல்லாம் அடித்துத் திட்டிக் கொண்டு மன உளைச்சலில் இருப்போம்?) மேலும் இன்று, அத்தமிழக எழுத்தாளர் ஒரு பொதுவான முகநூல் பதிவிட்டுள்ளார், பின்வருமாறு:

//ஈப்போ. என் சில நாவல்கள் அனுபவங்கள் பற்றிப் பேசினேன். பின்னர் தோழி யோகி கடவுச்சீட்டு பற்றிக் கேட்டார். அதில் சிறு சாப்பாட்டு க்கடை பகுதி என்னை பாதித்த பாலமுருகன் நாவலிலும் பிற கதைகளிலும் திரைப்படங்களில் ௨ள்ளதும் அவரின் நாவலின் மலேசிய வார்த்தைகளை என் சேகரிப்புக் குறிப்புகளிலிருந்து எடுத்துப் பயன்படுத்தியதையும். அடுத்து வரும் பதிப்பில் அவற்றைக் குறிப்பிடுவேன் என்பதையும் சொன்னேன்.//

இதுதான் விரிவான பதில் என்று என்னால் ஏற்றுக்கொள்ள இயலாது. தமிழ்நாடு சென்றதும் முறையாக தட்டச்சு செய்து அனுப்புவதாகவும் நாவலின் அடுத்த பதிப்பில் என் நாவலில் சேகரிக்கப்பட்ட தகவல் பற்றி குறிப்பிடுவதாகவும் இன்று (25/06/2019 – மாலை 2.36) மீண்டும் எனக்கு இன்பாக்ஸ் செய்திருந்தார். இதுதான் எங்களுக்கிடையில் நடந்து கொண்டிருக்கும் நாவல் தொடர்பான சர்ச்சையின் விவரங்கள் ஆகும். அவருக்கு நான் கொடுத்திருந்த அவகாசமும் வாய்ப்பும்தான் இதுவரை இதனைப் பதிவிடாத காரணமும்கூட.

ஆக, இப்பிரச்சனையை இனி நானே சம்பந்தப்பட்ட எழுத்தாளரின் மூலம் நிவர்த்திக்க முயற்சிக்கிறேன். அவருடைய விளக்கங்கள் அடங்கிய ஒரு பொதுப்பதிவு விரைவில் அவரிடம் இருந்து வரும் என்றும் எதிர்ப்பார்க்கிறேன். இதனை முன்வைத்து இனி சர்ச்சைகள் வேண்டாம் என்பதே எனது வேண்டுக்கோள்.

எனக்கு யார் மீதும் தனிப்பட்ட பகைமை இல்லை. என் பெயர் குறிபிடப்பட்ட ஒரு முகநூல் பதிவிற்காகவே இக்கட்டுரை எழுதினேன். இல்லையென்றால் இதுவும்கூட தவிர்க்கப்பட்டிருக்கும். இங்கு நாம் வளர்க்க நினைப்பது இலக்கியமே தவிர பகைமையும் வேறுபாடுகளும் அல்ல. இனி சம்பந்தப்பட்ட அந்த எழுத்தாளரிடமிருந்து பதில் (அவரே பொது பதிவு இடுவதாக வாக்குக் கொடுத்துள்ளார்) வரும்வரை காத்திருப்போம். படைப்புச் சுரண்டல் தெரிந்தோ தெரியாமலோ நடந்திருந்தாலும் அதனைக் கேள்விக் கேட்கக்கூடிய கடப்பாடு நாம் அனைவருக்கும் உண்டு. ஆனால், அது கேட்கப்படும் முறை, அதற்குரிய பதிலில் இருக்கும் தார்மீகம் ஆகியவையும் முக்கியமானவையாகும்.

பின்குறிப்பு: எனது புலனத்தகவலைப் படிக்கும் முன்பே எழுத்தாளர் தோழி யோகி அவரை நிகழ்ச்சிற்குப் பின் சந்தித்து இதைப் பற்றிக் கேட்டுள்ளார். நான் சொல்லும் முன்பே எழுத்தாளர் ஒருவர் பயணத்தில் வரும்போது அவரிடம் இதைக் கேட்டுள்ளார். நான் சொல்லும் முன்பே எழுத்தாளர் நண்பர் ஒருவர் என்னையும் அவரையும் சந்திக்க வைக்க முற்பட்டுள்ளார். நிகழ்ச்சி முடிந்து தவறாமல் தோழி ராஜி அவரிடம் இதைக் கேட்டுள்ளார். கேட்க வேண்டும் என்று உங்கள் அனைவரிடத்திலும் தோன்றிய அந்தக் குரல்தான் படைப்பாளியினுடையது. அந்தக் குரலின் மீது எனக்கிருக்கும் நம்பிக்கை மாறாது. உங்களில் யாருக்கேனும் இனி இதுபோன்று நடந்தாலும் நான் மௌனம் காக்கப் போவதில்லை என்பதும் உறுதியே. அன்பும் நன்றியும்.

கே,பாலமுருகன்

 

***தமிழக எழுத்தாளர்: திரு.சுப்ரபாரதிமணியம்

ஆப்பே நாவல் பற்றிய என் விரிவான நேர்காணல்: https://selliyal.com/archives/88939

 

Share Button

About The Author

Comments are closed.