சமூக நன்மதிப்பைப் பெறுவது எப்படி? – பாகம் 1

சமூக நன்மதிப்பைப் பெறுவது எப்படி?

வளர நினைக்கும் அனைவருக்கும் இக்கேள்வி முதன்மையாக மனத்தில் தோன்றும். சமூகத்திற்குள் ஓர் அங்கமான குடும்பத்தில் வளர்க்கப்படும் எல்லோருக்கும் தோன்றும் முக்கியமான கேள்வியும்கூட. வீட்டில் அப்பாவிலிருந்து அம்மாவரை அனைவரும் சொல்லும் வார்த்தையும் இதுவாகவே இருக்கும். நாளைக்குச் சமூகம் உன்னை மதிக்கும்படி வாழ் என்கிற கட்டளையைக் கேட்டுக் கேட்டுப் பழகியிருப்போம்.

சமூகத்தில் நீ மதிக்கப்பட வேண்டுமென்றால் நீ மருத்துவர், ஆசிரியர், வழக்கறிஞர் ஆக வேண்டும் என்கிற முதல் கட்டளை குடும்பத்தில் பிறப்பிக்கப்படும். பின்னர், அதே கட்டளையை ஊராரும் சொல்லிக் கேட்டிருப்போம். ஆக, மீண்டும் மீண்டும் சொல்லப்படும் அக்கட்டளை/விதிமுறை நம் மனத்தில் ஆழப் பதிந்து விடுகிறது. சமூகம் எதிர்ப்பார்ப்பதைப் போல ஆக வேண்டும் அதன் நன்மதிப்பைப் பெற்றுவிட வேண்டும் என்று போராடி கடைசியில் அப்படி ஆக முடியாமல் போகும் ஒவ்வொரு இளைஞனும் ஒரு தோல்வி மனப்பான்மைக்குள்ளாகுவதும் இந்தக் கட்டளைகளால்தான். கட்டளைகளை உற்பத்தி செய்தவர்கள்கூட மறைந்து போயிருப்பார்கள். ஆனால், அக்கட்டளைகளைக் காலம் முழுவதும் சுமந்து திரிந்த இளையோர் அதனால் பாதிப்பிற்குள்ளாகி சமூக மதிப்பை இழந்துவிட்டோம் என்கிற புரிதலுக்குள் தள்ளப்படுகிறார்கள்.

மருத்துவராக முடியாமல் மருத்துவ உதவியாளராகவும், வழக்கறிஞர் ஆக முடியாமல் வழக்கறிஞர் அலுவலகத்தில் வேலை செய்பவராககவும் வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மில் பலர் சமூகத்தின் முன் குருகி நின்றுவிடுகிறார்கள். தாம் வெற்றிப்பெற வில்லை என்கிற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். சமூகம் என்றால் என்ன? வழக்கறிஞர்களும் மருத்துவர்களும் மட்டும் வாழும் மாளிகையா? முதலில் அதுபோன்ற மாயையிலிருந்து நம் இளம் தலைமுறையை விடுவிக்க வேண்டும்.

சமூகம் என்றால் என்ன? மனிதர்கள் விதிக்கப்பட்ட சில வரையறைகளைப் பின்பற்றி அவரவர் குடும்பத்திற்குள் வாழ்வது ஆகும். சமூக அமைப்பிற்கென்ற பல விதிமுறைகள் இருக்கலாம். ஆனால், அச்சமூகம் எந்தத் தனிமனிதனின் சுதந்திரத்தையும் கட்டுப்படுத்த இயலாது. விதிமுறைகளை உருவாக்கி அதன்படி பின்பற்றுவோர் தான் இந்தச் சமூகம் என்று அடையாளப்படுத்திக் கொள்வதற்கான வசதிகள் மட்டுமே சமூகத்தின் வழி நாம் பெறக்கூடிய வாய்ப்புகள் ஆகும். மற்றப்படி ஒவ்வொரு தனிமனிதனும் அவனுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கான முழு சுதந்திரம் பெற்றவன் என்பதை இளம் தலைமுறையினர் உணரும்படி செய்தல் வேண்டும். சமூகத்தை மீற வேண்டும்; சமூகத்தை அவமதிப்பு செய்ய வேண்டும் என்பதல்ல இவ்விவாதம்; சமூகத்தை மதி; சமூகத்திற்கு வாழ்; ஆனால், உன் வாழ்க்கையையும் சுதந்திரத்தையும் சமூகத்திடமும் சமூக மதிப்பீடுகளிடமும் கொடுத்து விடாதே என்பதையே இங்கே வலியுறுத்துகிறேன்.

சமூகம் 1960களில் சொன்ன ஒரு விதி இப்பொழுது நடைமுறையில் உண்டா? உதாரணத்திற்குப் பெண்கள் இரவில் வெளியில் செல்லக்கூடாது என்கிற விதி ஆரம்பகாலங்களில் சமூகத்தின் வழியாகக் குடும்பங்களில் தரவிறக்கம் செய்யப்பட்டுப் பின்பற்றப்பட்டும் வந்து கொண்டிருந்தது. ஆனால், அவ்விதி 1980களில் பெண்கள் தொழிற்சாலை வேலைக்குச் செல்லத் துவங்கியதும் உடைந்து போனதை எல்லோரும் அறிவோம். குடும்ப சவால்களை எதிர்க்கொள்ள பெண்கள் கூட்டம் கூட்டமாக தொழிற்சாலை வேலைக்கு இரவு பகல் என்று ‘shift’ அமைப்பில் செல்லத் துவங்கினார்கள். ஆக, சமூகம் விதிக்கும் விதிகளைச் சமூகமே மீறி மறுவடிவமைப்பு செய்து கொள்ளும்போது நம் வாழ்க்கையைத் திட்டமிட, வடிவமைத்திட ஏன் சமூக விதிகளைப் பிரதானமாக மேற்கொள் கொள்ள வேண்டும்? மேலும், அச்சமூகம் விதித்த விதிகளுக்கு முன் ஏன் தோல்வி அடைவதாக நினைத்துக் கொள்ள வேண்டும்?

இன்று மருத்துவர் இல்லாவிட்டாலும் தொழிலில் உயர்ந்து விளங்குபவர்களையும் சமூகம் மதிக்கத் தொடங்கியுள்ளதைக் காணலாம். ஆக, சமூக மதிப்பீடு என்பது மாறிகொண்டே இருக்கக்கூடிய ஒன்றாகும். அத்தகைய சமூக மதிப்பீடுகளை மாற்றியமைக்கும் வல்லமை நம்மிடம்தான் உண்டு. எத்தனையோ தனிமனிதர்கள் தங்களின் சாதனையால் சமூக மதிப்பீடுகளை மாற்றியுள்ளார்கள். சமூகம் நம்மை மதிக்காமல் போய்விடும் என்று பயப்படுவதைத் தவிர்த்துவிட்டு, சமூகத்தின் மதிப்பீடுகளைச் சீரமைப்பு செய்யும் வகையில் நாம் வாழ்ந்து காட்ட முயல வேண்டும்.

அதற்காக சோம்பேறியாக இருந்துவிட்டு சமூகம் என்னை மதிக்கவில்லை என புலம்புவதும் அபத்தம் என்பதை ஞாகபத்தில் கொள்ள வேண்டும். உங்களுக்கென்று ஒரு திறமை இருக்கும்; ஓர் ஈடுபாடு இருக்கும். அவற்றில் சிறந்து விளங்கினால் இதற்கு முன் சமூகம் நிர்ணயித்து வைத்திருக்கும் மதிப்பீடுகள் உடையும்.

அப்பேற்பட்ட பாரதியையே அவர் வாழ்ந்த காலத்தில் சமூகம் மதிக்கவில்லையே. ஆனால், இன்று இலக்கியம், மொழி, சமூகவியல், கல்வி என்று பாரதி பேசப்படாத இடங்களே அல்ல என்பதைக் கருத்தில் கொள்வோம்.

ஆகவே, சமூக நன்மதிப்பைப் பெறுவது எப்படி?

சமூகம் என்ன சொல்லும், சமூகம் என்ன நினைக்கும் சமூகம் மதிக்குமா என்கிற பயம் இல்லாமல் வாழ்ந்து உங்களின் தனித்துவ வழியில் வெற்றிப் பெற்றுக் காட்டுவதே சிறந்த வழியாகும்.

 

-கே.பாலமுருகன் 

Share Button

About The Author

Comments are closed.