ராஜியின் சில கேள்விகளும் பதில்களும் – குறுநாவல் சர்ச்சை பாகம் 2

தொடர்ந்து பல திசைகளுக்குக் கிளையிட்டுக் கொண்டிருக்கும் குறுநாவல் தொடர்பான சர்ச்சைகளில் எனக்கு ஈடுபாடு இல்லை. என் கருத்துகள், எண்ணங்கள், விளக்கங்களை நான் தெளிவான ஒரு கட்டுரையாக எழுதிப் பதிவிட்டுவிட்டேன்.

ஆப்பே கடையில் நடந்த 236ஆவது மேசை உரையாடல் குறுநாவல் சர்ச்சை ஒரு விளக்கம்

 

எழுப்பப்படும் தவறான கேள்விகள் படைப்புச் சுரண்டல் தொடர்பாக இவ்விவாதத்தின் போக்கைக் கொண்டு போகாமல் தனிமனித தாக்குதலுக்குள் இட்டுச் சென்றுவிடும். இலக்கியம் சார்ந்த சர்ச்சைகள் உலகளவில்கூட ஓய்ந்தது இல்லைத்தான். ஆனால், உங்கள் கேள்விகளை நான் அப்படிப் பார்க்கவில்லை. உண்மையில் இவ்விவாதம் உங்களுக்கும் உங்கள் நிகழ்ச்சியைப் பற்றிய ‘இலக்கியம் கொச்சைப்பட்டுவிட்டதாக’ எழுதிய பாண்டியனுக்கும் இருக்க வேண்டுமே தவிர ஏன் மீண்டும் மீண்டும் நான் உள்ளே இழுக்கப்படுகிறேன் என்பதே எனக்குக் குழப்பமாக உள்ளது. நான் தூண்டி அவர் எழுதவில்லை என்பதை அவரே குறிப்பிட்டுவிட்டார் என்பதால் இவ்விவாதங்கள் உங்கள் இருவருக்குமிடையே தொடர்ந்திருக்க வேண்டும்.

கபாலி படம் தொடர்பான ஐயங்களை முதலில் எனக்குக் கூறியது எழுத்தாளர் அ.ராமசாமி அவர்கள்தான். அதன் பின்னரே அப்படத்தைப் பார்த்துக் குறிப்பிட்ட சிலவற்றில் என் நாவலின் தழுவல் இருப்பதாக உணர்ந்தேன். குறிப்பாக கபாலி படத்தில் கடைசி காட்சியும், ‘கட்டி’ அதாவது கஞ்சா விற்கும் பெண்மணியும் அவருடைய மகனை கபாலி இடத்தில் சேர்க்க நினைக்கும் இடமும்கூட என் குறுநாவலில் வரும் சரசுடன் பொருந்தியது. இது முதலில் தற்செயலாக நடந்தவையா அல்லது ரஞ்சித் அப்போதைக்கு இந்தியக் குண்டர் கும்பல் தொடர்பாக மலேசியாவில் எழுதப்பட்டிருந்த ஒரே குறுநாவல் என்பதால் வாசித்து அங்கிருந்து சிந்தித்திருப்பாரா என்பதே எனது கேள்வியாகும். அதனையும் ஒரு கேள்வியாகவே முன்வைத்திருந்தேன். மேலும், கபாலி படம் தொடர்பான அரசியல் சிக்கல்கள் பற்றியும் தவறான அரசியல் பார்வையைப் பற்றியும் ஒரு விமர்சனமாகவும் முன்வைத்திருந்தேன். ஆக, நான் கபாலி படத்தோடு உடன்படாத ஒன்றை தனி விமர்சனங்களாக எழுத்து வடிவில் முன்வைத்தாயிற்று. அதற்கு மேல் எனக்கு எந்த வழிகாட்டுதலும் யார் மூலமாகவும் வழங்கப்படவில்லை. எப்படி யாரைக் கொண்டு இதனை முன்னிறுத்துவது அல்லது நிரூபிப்பது என்றும் அப்போதைக்கு என்னால் வகுத்துக் கொள்ளவும் முடியவில்லை. சொன்னார்களே தவிர யாரும் அதைப் பற்றி பதிவிடவும் இல்லை.

ஒரு பட நிருவனத்தை அதுவும் காட்சி ரீதியில் அதனை மறுப்புனைவு செய்து கொண்டதை (பெயர் தோற்றம் போன்றவற்றில் மாற்றங்கள்) எப்படி நிரூபிப்பது என்று அதன் உள்ளார்ந்த வழிமுறைகள் இன்றுவரை சிக்கலான விடயமே. ஆனால், எழுத்தாளர் சுப்ரபாரதி மணியம் தொடர்பான சர்ச்சையில் அவர் தன் நாவலில் அப்பட்டமாக என் குறுநாவலில் உள்ள இடம், இடத்தின் பெயர், கதாப்பாத்திர வடிவமைப்பு, காட்சிகள் என்று கையாண்டதை வெகு எளினையாகச் சுட்டிக்காட்டி நிரூபிக்கவும் முடிந்தது.

அடுத்து, பாண்டியன் அவர்களுடைய கட்டுரையில் இடம்பெற்ற வரிகளையொட்டி என்னிடம் உங்கள் நிகழ்ச்சி தொடர்பான நிலைபாடு என்ன ஏதும் சர்ச்சை உண்டு செய்யதி திட்டமிட்டீர்களா என்று கேட்டுள்ளீர்கள். அதனை நானே நான்கு கேள்விகளாக முன்வைக்கிறேன். அது உங்களுக்கான கேள்வி அல்ல; உங்களுக்கான பதிலைக் கண்டறிவதற்கானது.

 

கேள்வி 1: நீங்கள் அல்லது தோழி ஒருவர் எடுத்து நடத்தும் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சி இது என்று தெரிந்திருந்த மறுகணமே இதனை நீங்கள் செய்யக்கூடாது, இதுதான் உங்கள் தார்மீகமா, நீங்கள் இப்படிச் செய்யலாமா என்று தனிப்பட்ட முறையிலோ அல்லது பொதுவிலோ நான் பதிவிட்டுள்ளேனா? உங்களுக்கு நான் அனுப்பிய புலனம் கூட நிகழ்ச்சி முடிந்ததும் வாய்ப்பிருந்தால் கேளுங்கள் என்கிற தொனியில் இருந்ததே தவிர அது சர்ச்சையை உண்டு பண்ணும் தொனியாக இருக்கவில்லையே.

கேள்வி 2:ஒருவேளை நான் சர்ச்சையாக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் அவர் மலேசியாவிற்கு வந்தவுடனே சர்ச்சையான பதிவுகள் போட்டு எல்லோரையும் அவதூறுகளுக்குள்ளாக்கியிருப்பேன் அல்லவா? எனது மௌனம் இந்நிகழ்ச்சியில் எனக்கு எந்தக் கருத்து வேறுபாடும் அல்ல என்பதற்கானதே.

கேள்வி 3: இதுபோன்ற நிகழ்ச்சிகள் வரவேற்கத்தக்க ஒன்றாகவே நான் அனைவரிடத்திலும் சொல்லியிருந்தேன். ஒரு  காலக்கட்டத் தொகுப்பின் வழியாக இலக்கிய நகர்ச்சியை நாம் ஆவணப்படுத்த முடியும். அதனால்தான்  இலக்கியம் சார்ந்து நான் அதனை மேற்கொண்டு வருகிறேன். நான் அதற்குக் குறுக்கே இருக்க வேண்டும் என்று நினைத்ததும் இல்லை. நினைத்திருந்தால் என் சர்ச்சை உங்கள் நிகழ்ச்சியை நோக்கியதாக இருந்திருக்கும் அல்லவா? ஆனால் என் சர்ச்சை நியாயமான முறையில் சம்பந்தப்பட எழுத்தாளரை நோக்கியே இருந்ததால்தான் அதனை நான் முறையாகக் கையாள வேண்டிக் காத்திருந்தேன். யோகி, நீங்கள், இன்னொரு தோழி ஆகியோரிடம் நான் முன்வைத்த கோரிக்கை அவரைத் தனிப்பட்ட முறையில் சந்தித்து நிகழ்ச்சி முடிந்து கேட்க வேண்டும் என்பதாகவே இருந்தது. நாம் அனைவரும் நட்பில் இருக்கும்போது நான் ஏன் இதைப் பொதுவில் போட்டுப் புதிய சர்ச்சையை உண்டாக்கியிருக்க வேண்டும்?

கேள்வி 4: ஒருவேளை நான் மறைமுகமாக நீங்கள் நடத்தும் நிகழ்ச்சியில் சர்ச்சையை உண்டு செய்ய வேண்டும் என்கிற திட்டத்துடன் இருந்திருந்தால் நான் ஏன் உங்களுக்குப் புலனத்தின் வழியாகத் தகவல் அனுப்பியிருக்க வேண்டும்? நீங்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஆயிற்றே. சர்ச்சையை மறைமுகமாக எழுப்ப வேண்டுமென்றால் அந்நியர் அல்லது நிகழ்ச்சி ஏற்பாட்டிலிருந்து புறத்தே உள்ள ஒருவரை அல்லவா நான் தயார் செய்து ஏவிவிட்டிருக்க வேண்டும்? சிந்தித்துப் பாருங்கள் தோழி. என் நோக்க அதுவல்ல. இப்பொழுதும் இதுபோன்ற இலக்கிய நிகழ்ச்சிகள் தேவை என்றே கூறுகிறேன். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. உங்கள் இலக்கிய நிகழ்ச்சி தொடர்பான எதிர்வாதத்தை முன்வைத்தவருடனே உங்கள் ஆரோக்கியமான விவாதம் தொடர வேண்டும்.

பாண்டியன் அவர்களின் கட்டுரையில் நான் நிகழ்ச்சியில் வினாவை எழுப்ப சந்தர்ப்பதை உருவாக்கி வருவதாக எழுதியுள்ள பதிவு ஒருவேளை அவருடைய புரிதலால் உண்டாகியிருக்கலாம். அன்றைய நாளில் நான் தெரிந்தும் ஏன் மௌனமாக இருக்கிறேன் , நான் ஏதும் சமரசம் செய்து கொண்டுவிட்டேனா என்கிற கேள்வியை முன்வைத்தார். எனக்கு உண்மையில் அக்கேள்வி வருத்தத்தை ஏற்படுத்தியது. இச்சர்ச்சையெல்லாம் நடக்கும் முன் உருவான திட்டத்தில் என்னால் எந்த இடையூரும் வேண்டாம் என்றே அமைதி காத்திருந்தேன். ஆனால், என் எதிர்வினை நீங்கள் நடத்தும் நிகழ்ச்சியையொட்டியதாக இல்லை. ஆகவே, சுப்ரபாரதி மணியத்தின் நிகழ்ச்சியில் இருக்கும் என் தோழிகளிடம் கேள்விகள் கேட்கச் சொல்லியிருக்கிறேன். சுப்ரபாரதிமணியம் தொடர்பான படைப்புச்சுரண்டல் பற்றி அவர்களிடம் கூறியுள்ளேன் என்பதாகவே இருந்தது. நான் பிரச்சனையை உண்டு செய்து நிகழ்ச்சியைச் சிதைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் இல்லை என்பதை அவர் புரிந்திருக்க வேண்டும். யோகியிடம் நான் கேட்ட உரிமைத்தொனிக்கூட அந்நிகழ்ச்சியைக் களைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் அல்ல; மாற்றாக சுப்ரபாரதிமணியத்தைச் சந்தித்து இதைக் கேளுங்கள் என்பதாகவே இருந்தது. பின்னர் ஏன் அப்படியொரு வார்த்தை கட்டுரையில் இடம்பெற்றிருக்கிறது என்பது குழப்பமாகவே உள்ளது. அதை அவர் நீக்குவார் அல்லது திருத்துவார் என்று நம்புகிறேன். இதையும் ராஜி ஒரு கேள்வியாகப் பொதுவில் முன்வைத்ததால் நான் அதற்குரிய பதிலை இங்குப் பதிவிடுகிறேன்.

கிண்டல் பதிவு ஏதும் போடாமல் மிக நேர்மையாக தொடர்ந்து கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கும் உங்கள் நேர்மையை இன்னமும் நான் மதிக்கிறேன். அது எல்லா திசைகளிலும் எல்லார்க்கும் பொதுவானதான இருக்க வேண்டும் என்றும் நம்புகிறேன்.

ஆனால், உங்கள் எழுதும் தொனியை இன்னும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே இந்த நண்பனின் வேண்டுகோள். மேலும், இச்சர்ச்சை சென்று கொண்டிருக்கும் திசை, அதில் பதில் அளித்துக் கொண்டிருப்பவர்களின் தார்மீகம், வாதத்தை முன்வைக்கும் விதம் என அனைத்தையும் அனைவரும் கண்கானித்துக் கொண்டுத்தான் இருக்கிறார்கள். இந்த இலக்கிய விவாதமாவது தனிமனித தாக்குதல்களாக இல்லாமல்; நியாயத்தை நோக்கிய குரலாக இருக்கட்டும்.

எனது அடுத்த பதிவு, ஆப்பே கடையில் நடந்த 236ஆவது மேசை உரையாடல் உருவான கதை பகிரப்படும். இக்குறுநாவல் உருவாக்கத்தில் ஆரம்பத்திலிருந்தே உடன் இருந்தவர் எழுத்தாளர் பாண்டியன். அக்குறுநாவலை மறுவாசிப்பு செய்து, திருத்தங்களுக்கு உதவி, அதனை நூல் வெளியீட்டில் விமர்சனம் செய்த மலேசிய இலக்கிய விமர்சகர் பாண்டியன் அவர்களே. ஆக, ஒரு சிறுகதையாக எழுதப்பட்டு, பின்னர் விரிவாக்கம் அடைந்து ஒரு குறுநாவலாக மாற்றி, அதற்குரிய நேர்காணல்கள், நேராகச் சிலரைச் சந்தித்தல், மலேசியாவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு குண்டர் கும்பல்  ஆய்வேட்டின் துணையோடு தரவுகள் கொண்டு எழுதப்பட்ட அக்குறுநாவல் தொடர்பான பதிவு விரைவில்.

நன்றி, கே.பாலமுருகன்

 

எழுத்தாளர் அ.ராமசாமி எழுதிய ஆப்பே குறுநாவல் தொடர்பான விமர்சனம்: http://ramasamywritings.blogspot.com/2015/05/blog-post_20.html

Share Button

About The Author

Comments are closed.