அறிவியல் சிறுகதை தொடர்: ஒலி – 2

குறிப்பு: இச்சிறுகதை, ஒலி என்கிற அறிவியல் சிறுகதையின் தொடர்ச்சி என்பதால் முதல் பாகத்தைப் படித்துவிட்டு இரண்டாம் பாகத்தைத் தொடர்ந்து வாசிக்கவும். இணைப்பு: http://balamurugan.org/2021/07/24/அறிவியல்-சிறுகதை-ஒலி/

பலகோடி துகள்களின் ஒரு மகத்தான மௌனம் இது. தூரத்தில் மின்னி பின்னர் இருளில் கரைந்தொழுகும் ஒரு வண்ணக் கலவையால் சூழ்ந்திருக்கும் பிரபஞ்சம். சப்தமற்ற இருள்வெளி. கோடி மைல் தூரத்துக்கு அப்பால் ஒளி மிளிர்கின்றன.

“வாசு, யாராவது உன்கிட்ட எப்பவாது  453ஆம் ரூம்பு, C-vid 12ஆவது சேட்டலைட் அப்படின்னு சொன்னா சிரிச்சிறாத… இந்த வாழ்க்கய 57 வருசம் வாழ்ந்துட்டோம்… அதனால சொல்றன்…கேவலமா சிரிச்சிறாத…”

“யேன் யோகி, அப்படிச் சொல்ற? நீ என்ன தப்பு பண்ண? உன்ன மாதிரி என்ன மாதிரி… இங்க வெளில எத்தனாயிரம் பேரு இருக்காங்கன்னு தெரியுமா?”

நாங்களிருக்கும் அறைக்கு வெளியே ஓயாமல் சுழன்று கொண்டே இருக்கும் வட்ட அறைகள் பல்லாயிரம் முறை இரவுகளை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கின்றன. இரவு ஒரு நட்சத்திரம் போல இணைந்து இணைந்து உருவெடுத்து ஒரு பெரும்சுவரென எங்களை மூடியிருந்தது.

“ஒரு வைரஸ் நம்மள என்னலாம் செஞ்சிருச்சி பாத்தீயா? ம்ம்ம்ம்… இப்படி இந்த இடத்துல இவ்ள இருட்டுக்குள்ள வந்து ஒளிஞ்சிக்கிட்டு… என்ன மாதிரியான வாழ்க்க இது வாசு? உனக்குக் கொஞ்சம்கூட அலுக்கலயா?”

“நீ அப்படி நெனைக்கறதுல அர்த்தமே இல்ல… இப்ப மட்டும் உன்ன மாதிரி இந்த இருபதாயிரம் குழந்தைங்களும் அப்போ கொண்டுட்டு வராம இருந்திருந்தா… இப்ப மனுசன்னு சொல்லிக்க இந்த ஸ்பேஸ்லே யாரும் இருந்திருக்க மாட்டாங்க…நம்ம அதிர்ஷ்டசாலி தெரியுமா?”

கால்களைத் தரையில் வைத்து அழுத்திப் பார்த்தேன். கால்கள் மிதக்கக்கூடாது. ஒவ்வொரு அறையையும் செயற்கை புவி ஈர்ப்புச் சக்தி தமக்குள் இணைத்திருந்தது. ஒருவேளை புவி ஈர்ப்பு சக்தியைக் குறைப்பதன் மூலம் மையச் செயலகம் நம்மைக் கைவிடுவதற்கான ஆய்த்தநிலைக்கு வந்துவிட்டதாக புரிந்து கொள்ளலாம். அது ஒரு மாயையென கால்களைச் சுற்றிப் பிணைந்திருக்கிறது.

“வாசு, கால் மிதக்குதா?”

“இல்ல… நல்லாத்தான் இருக்கோம்…ஏன்?”

அவனிடமே நான் பலமுறை சொல்லிவிட்டேன். பிரபஞ்சத்தில் நம்மை கைவிட முதலில் அவர்கள் புவி ஈர்ப்பு மையத்திலிருந்து நம்மைத் துண்டிக்க வேண்டும். நம் உடல் மிதக்கும். மெல்ல இங்கிருந்து விடைபெற்றுப் பிரபஞ்சத்தின் மிக விரிந்த தாய்மடியில் மிதப்போம். அதுதான் நம் மரணத்துக்கான தொடக்கம். அவனுக்கு இது புரிவதில்லை.

“வாசு, நம்ம ஏன் மத்தவங்ககிட்ட பேசக்கூடாது; பழகக்கூடாதுன்னு தெரியுமா? ஏன் அவுங்க முகங்கள நம்ம ஞாபகம் வச்சுக்கக்கூடாதுன்னு யோசிச்சி பார்த்துருக்கியா?”

அவன் சுவரில் தெரியும் அசையாமல் இருக்கும் கடலலைகளை அவனது கண்களால் கற்பனையால் அசைத்து விளையாடிக் கொண்டிருந்தான்.

“அங்கப் போய் வாழணும், யோகி… இது மட்டும்தான் என் நெனைப்புல இருக்கு…”

“ம்ம்ம்… இதுக்கப்பறம் என்ன வாழ்க்க வாழணும்னு தெரில… வாழ்ந்து முடிச்ச மாதிரி சோர்வா இருக்கு… ரொம்ப அமைதியா இருக்கு இந்த இடம்… அம்பது வருசமா இந்த அமைதிய பார்த்துக்கிட்டு இருக்கோம் வாசு… உனக்குத் தெரியும்தான?”

அவன் அமைதியாக இருந்தான். கடைசி கேள்வியும் பதிலும் என்னுடையதாகவே இருக்கும். அவன் அந்த நேரத்தில் பேசமாட்டான். அமைதியாக இந்தப் பிரபஞ்ச வெளியின் அமைதிக்குள் அமர்ந்திருப்பான்.

“வாசு… உண்மையில பூமிக்குப் போறதுல உனக்கு மகிழ்ச்சியா?”

“ஆமாம்… அங்க இருக்கற இயற்கையோட சத்தத்த நான் காது குளிர கேக்கணும்… அதுவொரு பேரின்பம்…”

“நீ போவேன்னு நெனைக்கறீயா?”

“இன்னும் ஒரு பரீட்சைத்தானே…? போய்றலாம்…”

“வாசு, உனக்கு ஞாபகம் இருக்கா…? நமக்கு மேல 454ஆவது ரூம்புல இருந்தவரு…?”

“யேஸ்… மிஸ்டர் கோவிந்தசாமி… மனநோயாளி…”

கோவிந்தசாமி பொது அரங்குக்கு வந்த அன்றைய நாள் கத்திக் கொண்டே இருந்தார். நான் பூமிக்குச் செல்லவில்லை என அதுவரை அங்கிருந்த அமைதியைச் சீர்குழைக்கும் வகையில் அவரது குரல் இருந்தது. அவர் மாத்திரைகள் சாப்பிடவில்லை என்றும் இங்குள்ள விதிகளை மீறிவிட்டார் என்றும் மைய செயலகத்திலிருந்து சிலர் அங்கு வந்து சேர்ந்தனர். மைய செயலகத்தினர் இப்படி ஏதாவது அசம்பாவிதங்கள் நடக்கும்போது மட்டுமே வெளியில் வருவார்கள். உருவம் தெரியாத அளவில் முழுவதுமாக விண்வெளி உடையில் தங்களை மறைத்துக் கொண்டிருந்தனர்.

“அப்படியில்ல வாசு… மனநோயாளியா ஆயிட்டாரு… இந்த ரூம்புங்களுக்கு ஏன் ஜன்னல் வைக்கலன்னு தெரியுமா?”

“இந்த இருட்டு அவ்ள பயங்கரமானது இல்லையா?”

அறையைச் சுற்றி பளிச்சிட்டுக் கொண்டிருந்த வெளிச்சத்தில் பூமியின் அத்தனை அழகும் ஒன்றுசேர்ந்து காட்சியளித்தன. வாசு ஒரு ஏமாளி. ஓவியங்களைத் தடவி பார்த்துப் பூமியைத் தொடுவதாகக் கற்பனை செய்து கொள்வான். இவையனைத்தும் உண்மையென நம்புகிறவன். அவனுக்குத் தெரிந்து இருளின் மறுபக்கம் வெளிச்சம். அந்த வெளிச்சத்தை நோக்கி தவம் கிடக்கிறான்.

“சரியா சொன்ன வாசு… உன்ன மாதிரி ஒரு புத்திசாலி எல்லா இன்பத்துக்கும் ஆசைப்படற மாதிரி எல்லா துன்பத்துக்கும் துக்கப்படவும் செய்யலாம்…”

“அதுக்குப் புத்திசாலியா இருந்தாகணுமா?”

“உன் கனவுல பூமி மட்டும்தான் இருக்கு வாசு… உன்ன பூமிக்குத் தகுந்த ஒரு மனுசனா நீ மாத்திக்கிட்டே இருக்க… ஆனா என்னால அப்படி முடியாது… நான் இந்தப் பிரபஞ்சத்துக்கு உரியவன்… உன்னோட சின்ன பூமில என்னால வாழ முடியுமான்னு தெரில…”

“யோகி, இப்படித்தான் அந்த மிஸ்டர் கோவிந்தசாமி சாவறத்துக்கு முன்ன நான் பூமிக்குப் போகல பூமிக்குப் போகலன்னு கத்திக்கிட்டு இருந்தாராம்…”

அவர் கடைசியில் என்ன ஆனார் என்பது வியப்புத்தான். கடைசிவரை அவரை நான் மீண்டும் பொது அரங்கில் சந்திக்கவில்லை. கோவிந்தசாமி எங்கோ அழைத்துச் செல்லப்பட்டார். அநேகமாக பிரபஞ்சத்தில் கைவிடப்பட்டிருக்கலாம். அவருக்கான புவி ஈர்ப்புச் சக்தி துண்டிக்கப்பட்டிருக்கலாம். பூமிக்கும் மையச் செயலகத்துக்கும் இடையில் விரிந்திருக்கும் இருள்வெளியில் கோவிந்தசாமியின் உடல் சிதைந்து பாகங்களாக மிதந்து கொண்டிருக்கக்கூடும். இருவரும் இப்பொழுது அமைதியாக இருந்தோம். நாங்கள் அமர்ந்திருந்த அறை சுழல்வதற்கான எந்த அறிகுறியும் காட்டாமல் நிசப்தமாகவே இருந்தது.

“இப்பவே கீழ குதிச்சரலாமா, வாசு?”

“என்ன பேசற? பைத்தியமா உனக்கு, யோகி?”

அவன் உள்ளுக்குள் பரபரப்பானான். நான் இந்தக் கேள்வியை அவனிடம் பலமுறை கேட்டுவிட்டேன். இந்த அறையின் கதவு எனது கட்டுப்பாட்டில் இல்லை. நான் நினைத்தாலும் கதவைத் திறக்க முடியாது. புவி ஈர்ப்பு நம் உடலை மையச் செயலகத்துடன் இணைத்துள்ளது. நினைத்தாலும் நம் கால்கள் பிரபஞ்சவெளியில் குதிக்க இயலாது.

“நீ, நான், மத்தவங்க யார் நெனைச்சாலும் இந்தக் கால்கள விடுவிக்கற சக்தி அவுங்களுக்கு மட்டும்தான் இருக்கு, வாசு”

பொது அரங்குக்குச் செல்லும்போது மட்டுமே இந்த அறையின் கதவு திறக்கப்படும். அதுவும் பொது அரங்கின் ஏறுதளத்தில் நின்று கொண்டு இந்தப் பிரபஞ்ச வெளியில் இத்துணைத் தனிமையில் ஓர் உலகம் இயங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது ஆச்சரியமாகவும் பயமாகவும் இருக்கும். அப்பொழுதே கீழே குதித்துவிடலாம் என்றும் தோன்றுவதுண்டு. ஆனால், நொடியில் அறைக்குள் ஏறிவிட வேண்டும். இல்லையேல் அலாராம் அடிக்கும். அந்தக் கதவு சில விநாடிகள் மட்டுமே திறக்கும்.  

“ஒருநாள் நம்மளயும் இவங்க கைவிட்டுடுவாங்க, வாசு… நாளைக்கு சைக்கலோஜி பரீட்சையில தோத்துட்டம்னா இங்கயே இந்த இருட்டுக்குள்ளயே இன்னும் பல வருசங்கள் கெடந்து சாகணும், வாசு…”

இருள் ஒரு இராட்சத பூச்சி. சத்தம் எழுப்பாமல் ஒவ்வொரு கணமும் எங்களைக் கவனித்துக் கொண்டிருந்தது.

“என்னால கதவ திறக்க முடியாதுன்னு நெனைச்சியா, வாசு?”

“உன்னால மட்டும் இல்ல… நம்ம யார்னாலயும் இந்தக் கதவுகள திறக்க முடியாது… திறக்கவும் தேவையில்ல… நமக்காக அவுங்க பூமிய திறப்பாங்க… அப்போ அங்கப் போய்க்கலாம்…”

வாசு-2087 பரிதாபத்திற்குரிய ஒரு ஜீவன். இங்குள்ள நியதியை முழுவதுமாக ஏற்று வாழ்பவன். அவனை என் சிறுவயதிலிருந்தே பார்த்துக் கொண்டிருக்கிறேன். இவ்வளவு வயதாகியும் பூமியின் மீது சிறுகுழந்தையைப் போல ஆசைப்படுகிறான். பூமி என்றதும் அவன் துள்ளுகிறான். எனக்கு வேடிக்கையாக இருக்கிறது.

“என்ன சிரிக்கற, யோகி? கீழ குதிச்சா அப்படியே பூமியில போய் விழுந்துடலாமா?”

வாசு ஏன் இத்துணை கருணைமிக்கவனாக இருக்கின்றான் எனத் தெரியவில்லை. மரணத்திலும் ஒரு பூமியைக் கற்பனை செய்கிறான். அவன் ஒரு சிலந்தியாகி ஒவ்வொருநாளும் பூமியைப் பின்னிக் கொண்டிருக்கிறான்.

“வாசு, நம்ம இந்தப் பிரபஞ்சத்துல ஒரு மகா சின்ன ரூம்புல இருந்துகிட்டு எவ்ள பெருசு இருக்கும்னு தெரியாத ஒரு பூமிக்குச் செல்லக் கனவு கண்டுகிட்டு இருக்கோம் தெரியுமா?”

“நீ ஒரு முட்டாள். அங்க பூமிக்குப் போனா இந்த மாதிரி ஆயிரம் ரூம்புகள்ல வாழலாம்…”

வாசு ஒரு குரங்கு. சிந்தனைகளால் தாவிக் கொண்டிருந்தான். வந்த சிரிப்பை என்னால் அடக்கிக் கொள்ள இயலவில்லை. அவனது பரிதாபங்களும் ஏக்கங்களும் மிக்க கண்கள் ஒரு யாசகத்திற்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றன.

“வாசு, நீ ஒரு கூண்டுக்குள்ள இருக்கற மட்டமான ஒரு மிருகம்… என்ன இந்தக் கூண்டுக்குப் பேரு சையின்ஸ்… சொல்லும்போது கிளேமரா இருக்குல…?”

வாசு நான் கேலி செய்கிறேன் என்பதை ஊகித்துக் கொண்டான். எனது கேலிகளை அவன் நட்சத்திரங்களாக மாற்றிக் கொள்ளும் திறன் உடையவன். இந்த அறையில் அப்படிப் பலநூறு நட்சத்திரங்களைச் சேகரித்து வைத்துள்ளான். அவை அவனைத் தாண்டி ஒளி வேகத்தில் தூரப்பயணித்து மின்னிப் புள்ளியாகிவிடுவதாக அவனே கற்பனை செய்து கொள்வான்.

“தூங்கலாமா?”

“வாசு, நாளைக்கு நடக்கவிருக்கும் சைக்கலோஜி பரீட்சையில நீ தோத்துறவன்னு பயம் இப்பவே வந்துருச்சி போல…?”

“ஏன் சாபம் விடற? போறது உனக்குப் பிடிக்கலயா, யோகி?”

“வாசு, நம்ம எல்லாம் ஒரு கனவுக்குள்ள இருக்கோம்… இந்தக் கனவுல சையின்ஸ் இருக்கு… நம்ம மூளையே அப்படியொரு சையின்ஸ கற்பனை செஞ்சி வச்சிருக்கு… இந்தக் கனவுக்குள்ள நம்ம பல வருசமா மாட்டிக்கிட்டு இருக்கோம்… பூமின்னு ஒன்னு இல்ல… இது எல்லாம் பொய்… நம்ம இந்த அறைக்கு வெளில விரிஞ்சிருக்கும் இருளுக்குள்ள குதிச்சோம்னா ஒரு எலக்ட்ரோனா ஆயி… உடைஞ்சி பிரபஞ்சத்துல துகள்களா கரைஞ்சிருவோம்… நான் சொல்றத கேளு…”

வாசு ஆச்சரியத்துடன் பார்த்தான். புத்திசாலிகளைக் குழப்பது எனக்கு அத்துணைக் கடினமல்ல. புத்திசாலிகளுக்கு இரண்டு பக்கங்கள் மட்டுமே தெரியும். நான் அவன் கற்பனை செய்து வைத்திருந்த வெளிச்சத்தின் பாதைக்குள் நுழைந்துவிட்டேன்.

“நாளைக்கு ஒரு நாள்தான்… அந்தப் பரீட்சையில புள்ளிகள் எடுத்துட்டா நம்ம எல்லோரும் பூமிக்குப் போகலாம், யோகி…”

“அங்க போய் என்ன செய்ய போற…?”

“கடல் அலைகள கேட்கப் போறன்… பரந்தவெளியில ஓடப்போறன்… மண்ணுல சேத்துல குதிச்சி வெளையாடப் போறன்… உணர்ச்சிகளால சூழ்ந்து பெருகி வழியப் போறன்…”

ஒரு ஜடம் போல அமர்ந்திருந்த என்னை வாசு உணர்ந்திருப்பான்.

“உணர்ச்சி… இந்தப் பாடத்துல சொல்லிக் கொடுப்பாங்களே அதுவா… பார்த்துப் பார்த்து சலிச்சிப்போய் அப்புறம் கத்துக்கிட்டதாக நெனைச்சி வாழ்ந்துகிட்டு இருக்கோமே… அதுவா? தோ, இந்த ரூம்புல ஒரு வெளிச்சத்துல வந்து பேசனதே பேசிக்கிட்டு இருப்பாங்களே, அவுங்க சொல்ற அந்த உணர்ச்சிகளா…? வாசு, கேவலமா இருக்கு… என்னால கோபப்பட முடியுல… பொறாமைப்பட முடியுல… ஆசைன்னா என்னா? முத்தம்னா என்ன? தோ, அங்க இருக்குப் பாரு வரிசையா டேப்ளட்ஸ்… அதுல ஒவ்வொருநாளும் பத்து சாப்டறோம்… எதுக்குத் தெரியுமா?”

வாசு ஆச்சரியமாக பெட்டியில் அடுக்கப்பட்டிருந்த மாத்திரைகளைப் பார்த்தான். அவனிடம் இந்தக் கேள்வியை நான் கேட்கும் போதெல்லாம் கொஞ்சமும் பதற்றமில்லாமல் ஆச்சரியப்படுவதைப் போல கண்களை மாற்றிக் கொள்வான். உறுப்புகளையும் அதனுள் இருக்கும் பாவனைகளையும் அதன் இயல்பிலிருந்து மாற்றினால் அதுதான் உணர்ச்சி என என்னைப் போல அவனும் நம்பிக் கொண்டிருந்தான். புருவங்களை உயர்த்திக் கண்களை விரித்தால் அது ஆச்சரியம்.

“அது நம்மளோட சாப்பாடு…”

“வாசு, இங்க வாழணும்னா நீ ஆசை படக்கூடாது… உனக்குள்ள உணர்ச்சிகள் இருக்கக்கூடாது… அவுங்க சொல்லித் தரும் எதையுமே நம்ம பாடமாத்தான் படிச்சிக்கிட்டு அத பொய்யா செஞ்சி பார்த்துக்குறோம்…”

“அப்படின்னா நம்ம யாரு?”

“நீ சொல்றீயே அந்தப் பூமியில புதையுண்டு கெடக்கும் கோடி பிணங்களோட வாரிசு… இன்னொரு பிணம்… அவ்ளத்தான்… நம்மள பூமிக்கு அனுப்பி ஆராய்ச்சி செய்யப் போறாங்க… நம்மனால அங்க வாழ முடிஞ்சிருச்சின்னா… நம்மள கொன்னுட்டு அவுங்க எல்லாம் பூமிக்கு வந்துருவாங்க…”

“அவுங்கன்னா யாரு?”

“மையச் செயலகத்துல இருக்கறவங்க…”

வாசு குழப்பத்திற்குள் சென்றான். நாளை அவன் உளவியல் சோதனையில் நிச்சயம் தடுமாறுவான். அவன் பூமிக்குச் செல்லத் தகுதியற்றவன் என நிரூபிக்கப்படும். இன்னும் சில ஆண்டுகள் இருந்துவிட்டால் இவர்களே தூக்கி பிரபஞ்சவெளியில் வீசிவிடுவார்கள். அப்படித்தான் பலரைத் தூக்கி வீசிவிட்டார்கள்.

“நீ என்ன குழப்பற… நான் மருந்து சாப்டப் போறன்… எனக்கு என்னமோ பண்ணுது… நம்மள வாழ வைக்கத்தான் பூமிக்கு அனுப்புறாங்க…”

நான் சத்தமாகச் சிரித்தேன்.

“57 வயசாச்சு… இன்னும் என்ன வாசு நீ வாழணும்? உன் கால்கள் பூமியத் தொட்டவுடன் நடுங்க ஆரம்பிச்சிரும்… உன் தோல் சுருங்கிரும்… உனக்குப் பசிக்கும்… உனக்குக் காதல் வரும்… உனக்கு ஆசைகள் பெருகும்… அது ஒரு வெள்ளம்போல உன்ன அடிச்சிட்டுப் போய் கொன்னுரும்… உன் மனசு அத தாங்காது வாசு… ஒரே நேரத்துல அவ்ள இன்பமும் உன்ன சாவடிச்சிரும்…”

சுவரில் தெரிந்த பூமியின் வரைப்படங்களை வாசு நடுக்கத்துடன் தொட்டான்.

“எனக்கு என்ன? என் கால் நடுங்கல… என் தோல் சுருங்கல… அப்புறம் எப்படி?”

“நம் உணவுன்னு சொன்னீயே… அந்தக் கெமிக்கல் உன்ன பத்தி உனக்குத் தப்பாகவே காட்டிக்கிட்டு இருக்கு, வாசு… நீ அங்க போனோன நீ நீயாயிருவ… உன் வயசு உனக்குத் தெரியும்… உன் கால்கள் நடுங்கும்…”

சட்டென அறைக்குள் மின் நூலகம் உயிர்ப்பெற்றது. ஒளி வடிவில் பேராசிரியர் அப்துல்லா தோன்றினார். இது உளவியலுக்கான நேரம். வந்ததும் முதலில் அவர் சொன்னது, “வாசு! உன்னோட மருந்துகள நீ சாப்ட்டியா?” என்பதுதான். அவர் கேட்பதற்குள் மஞ்சள் வர்ணத்தில் இருந்த மாத்திரையை வாசு எடுத்துச் சாப்பிட்டான். அந்த மாத்திரியைச் சாப்பிட்டதும் நான் மறைந்துவிடுவேன் எனத் தெரியும். அப்படியே சுருண்டு வாசுவிற்குள் நான் கரைந்துவிடுவேன்.

“நான் மீண்டும் உனக்குள்ள வருவன், வாசு…”

வாய்க்குள் போடப்பட்ட மாத்திரை உள்சென்று என்னைச் சிறுக சிறுக கரைத்துக் கொண்டிருக்கிறது. வாசு மீண்டும் வாசுவானான்.

-தொடரும்

-கே.பாலமுருகன்

முதல் பாகத்தை வாசிக்கக் கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

Share Button

About The Author

4 Responses so far.

  1. கஸ்தாஸ் says:

    ஆழமான சிந்தனை ஐயா

  2. Sharmile says:

    Nice story sir.awesome

  3. Chris says:

    அப்பாற்பட்ட சிந்தனை ஐயா…தொடரட்டும் உங்கள் சிந்தனை. வாழ்த்துகள்👍👌

  4. K.S.Maniam says:

    அருமையான சிந்தனை. அறிவியல் கதைகள் எழுதுவது மற்ற கதைகளைப்போல் எளிதல்ல. இதற்கு கற்பனை வளமும் அறிவியல் தெளிவும் வேண்டும் அது உங்களுக்கு கைவரப்பெற்ற ஒன்றாக இருக்கிறது. வாழ்த்துகள்.