வாசகர் பார்வைகள்: அறிவியல் புனைவு: மாலை 7.03: இராஜேஸ் கன்னி ஆறுமுகம்

#எனது_பார்வையில்_மாலை_7.03

அறிவியல் புனைவு சிறுகதைகளை எழுதுவது என்பது ஆழமான ஒரு விடயம் தான். பல நுணுக்கங்களைக் கையாண்டு வாசிப்பவர்களின் எண்ணம் சிதறாமல் அவர்களுக்குச் சலிப்பு தட்டாமல் கதையோட்டத்தினைக் கொண்டு செல்ல வேண்டும். அவ்வாறு வாசகர்களின் எதிர்பார்ப்பினை நிறைவாய் பூர்த்தியாக்கி இருக்கிறார் தனது அறிவியல் புனைவு சிறுகதையான மாலை 7:03 இல் எழுத்தாளரும் ஆசிரியருமான திரு கே. பாலமுருகன் அவர்கள்.

கதையின் தொடக்கமே, வாசிப்பவர்களை எங்கும் நிறுத்த விடாமல் மேலும் ஆர்வத்தோடு தொடர்ந்து வாசிக்கத் தூண்டுகிறது.

மார்ச் 2 எட்டாவது முறையான மாலை 5.55.

“காலம் தொடர்ந்து உன்னை வாந்தியெடுத்துகிட்டே இருக்கும்.”

இவ்வாறாகக் கதை தொடங்கிட , எட்டு முறையும் என்ன தான் நடந்திருக்கும். தொடக்கமே புதிரோடு இருக்க வாசிப்பவர்களுக்குத் தொடர்ந்து வாசிக்கும் ஆவல் கண்டிப்பாக எழும்மேலும் இக்கதையினை வாசிப்பவர்கள் , கண்டிப்பாகக் கதையினூடே பயணித்து கதையோடு கலந்து விடுவார்கள் என்பது உண்மை. நானும் அவ்வாறே பயணித்தேன் என்பதும் உண்மை. மாலை 7:03 இன் கதைக்குள் என்ன தான் நடக்கிறது. கதை ஒரு பரபரப்பான நகரத்தில் வாழும் ஒரு கதாபாத்திரத்தை வளைத்து பின்னப்பட்டுள்ளது. ஒரே நாளில் சிக்கி கொண்டு மீண்டும் மீண்டும் அதே நிகழ்வுக்குள் பயணிக்கும் ஒருவரின் மனநிலை தான் கதையோட்டம். அறிவியல் ரீதியாக பார்க்கும் போது ஒரே நாளுக்குள்ள மாட்டி கொண்டு, அதாவது மாலை 7:03 க்கு படிகளிலிருந்து கீழே விழுந்து மீண்டும் மாலை 3:00 மணிக்குச் சென்று, இப்படியாக அன்றைய நாள் மீணடும் மீண்டும் அவன் வாழ்க்கையில் வருகிறது. உளவியல் ரீதியில் பார்க்கும் போது அந்தக் கதாபாத்திரம் அந்த ஒரு நாளில் நடக்கும் நிகழ்வுகளைத் மீண்டும் மீண்டும் நிகழ்த்தி, அதில் ஏதாவது மாற்றங்கள் வருமா என்று எதிர்பார்க்கிறது என்றே எண்ண தோன்றுகிறது.

கதையில் ஆசிரியர் குறிப்பிட்டு இருக்கும் சூழல்கள், கதாபாத்திரத்தின் வேலை, வேலையோடு தொடர்புடைய நேரம், முதல் நாள் பெய்த மழை, காயாத துணிகள், குவளை விழும் சத்தம், அந்த அடுக்குமாடி குடியிருப்பின் சூழல், மீ கோரேங், புடுராயா படிக்கட்டுகள், தன்னிடம் காப்புறுதி வாங்கியவரின் நினைவு, சீன முதலாளியின் தோற்றம், இதற்கிடையே அப்பா வந்து போன ஞாபகங்கள். இப்படி கதாபாத்திரத்தின் வாழ்வில் மீண்டும் மீண்டும், மறுபடியும் மறுபடியும் வரும் நேரச் சுழற்சியோடு…… ‘அடுத்து என்ன தான் நடக்கபோகிறது ? ‘என்ற கேள்வியோடு , வாசிக்கும் ஒவ்வொரு வரிகளையும் கண் முன் காட்சியாகக் கற்பனைச் செய்ய வைத்தும் வாசிப்பவர்களையும் கதைக்குள் சேர்ந்து பயணிக்க வைத்திருக்கிறார் ஆசிரியர் திரு கே. பாலமுருகன்.

கண்டிப்பாக வாசித்து உய்த்துணர வேண்டிய அருமையான அறிவியல் புனைவு கதை

இராஜேஸ்கன்னி ஆறுமுகம்

சிறுகதையை வாசிக்க: http://balamurugan.org/2021/08/03/அறிவியல்-சிறுகதை-மாலை-7-03/

Share Button

About The Author

Comments are closed.