அறிவியல் சிறுகதை: ஒலி

மிக நீளமான ஒரு மௌனம். ஆளரவமற்ற பொழுதுகள் பொங்கிக் கிடக்கும் வெளியில் ஒரு தனிப்பெருங்கனவுடன் காத்திருக்கிறது மனம்.

“இங்கிருந்து போய்ரு…”

ஆழ்மனத்தில் என்னுடனே நான் பேசிக் கொள்கிறேன். இப்படி ஆயிரம் வார்த்தைகள்; உரையாடல்கள் எனக்கு நானே நிகழ்த்திப் பார்த்துக் கொண்டவை.

“அங்க போனோனே… முதல்ல என்ன செய்வ?”

கேள்விகளின் பின்னே கேளிக்கையாக பல புதிர்கள். அவற்றுள் ஒவ்வொரு வளர்ச்சியிலும் நான். கற்பனை யாரும் கற்றுக்கொடுக்காமலே அரக்கன் போல உள்ளே வளர்ந்திருந்தது.

இருண்டிருந்த அரங்கில் அழுத்துப்போன வெண்திரை. கண்கள் அளவில்லாமல் கூசின. எவ்வளவு காலம்தான் இதையே பார்த்துக் கொண்டிருப்பது. உடல் நாற்காலியில் திடமில்லாமல் வெறுமனே ஒட்டிக் கொண்டிருந்தது. நிமிர்ந்தும் சரிந்தும் அமர்ந்து பார்த்தேன். என்ன நடக்கும் என்கின்ற படபடப்பு எப்பொழுதும் என்னை முழுமையாக ஆட்கொண்டிருந்தது. இந்தப் படபடப்பும் ஒருவித கலவரமும் நீடித்த ஒன்றாகவே எனக்குள் வழக்கமாகியிருந்தன. அடர்ந்த மௌனத்திலும் சில ஒலிகள் கேட்கும். அது மனத்தின் ஒலியா அல்லது கற்பனையின் ஒலியா என்றுகூட வேறுப்படுத்தத் தெரியவில்லை. ஒரு பேரமைதிக்குள் எண்ணங்கள் சுழன்றும் அமிழ்ந்தும் பதறின. சட்டென அரங்கின் விளக்குகள் உயிர்ப்பெற்றுப் பளப்பளப்புடன் தோன்றி கொண்டிருந்தன. இது இங்கிருக்கும் பல அரங்குகளில் ஒன்று. இன்னும் இதுபோல பல அரங்குகள் பார்வைக்கு அப்பால் இருக்கின்றன.

“ஒகே டியர்ஸ்… இன்னிக்குப் பார்த்த காணொளியில என்ன கத்துக்கிட்டீங்க?”

மீண்டும் திரை அமிழ்ந்து வழக்கம்போலக் கறுப்புச் சட்டை அணிந்திருக்கும் ஒருவர் திரையில் ஒரு புள்ளியைப் போல் தோன்றினார். அமைதி களைந்தது போல் சிறிய முனகல் சத்தம் அரங்கம் முழுவதும் ஓடிப் பரவியது. இன்று பிராதனமாக தற்காப்பு உணர்வு பற்றிய போதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தோம். தற்காப்பு உணர்வு நமக்குள் இருக்கும் ஆதியான உணர்வு என அவர் பேசத் துவங்கினார். இதற்கு முன்பும் பேசப்பட்டவைகள்தான். இங்கு அனைத்தும் மீண்டும் நிகழ்ந்து கொண்டிருந்தன. புதிதாகச் செய்வதற்கு ஒன்றில்லாத வேளைகளில் பலமுறை கேட்டுச் சலித்தவைகள் மீண்டும் புதிது போலவே நிகழ்த்தப்படும். அதையும் முகம் கோணாமல் கேட்க வேண்டும்.

“ஒவ்வொரு உயிருக்குள்ளும் இந்தத் தற்காப்பு உணர்வு இருக்கு… அது வெளிப்படற விதமும் வெளிப்படுத்தற விதமும்தான் வித்தியாசம்… உயிர் வாழ வேண்டி நமக்குள்ள தற்காத்துக் கொள்ளும் எனர்ஜி இருக்கணும்… அப்பத்தான் எங்கயுமே சமாளிச்சு வாழ முடியும்… இப்ப உங்க உயிர தற்காத்துக் கொள்ள என்ன செய்வீங்க?”

நான் கணித்திருந்த அந்த வயோதிக குரல்தான் சட்டென பதில்களைச் சொல்லி மேலாளரின் நன்மதிப்பைப் பெறத் துடித்தெழுந்தன. தொண்டையைச் செருமிவிட்டுப் பதில் சொல்லப்பட்டது. மேலாளர் அதிகப்பட்சம் என்ன செய்வார்? கைத்தட்டி சபாஷ் எனச் சொல்வார். இந்தக் கைத்தட்டல் ஒலியும் சவாஷ் என்ற சொல்லும் ஆகப் பழமையென திகட்டின.

“ஆபத்தான விஷயங்கள செய்ய மாட்டன்…”

நேற்று அறிவியல் விரைவுரைஞர் கற்றுக் கொடுத்த பாடத்தை அப்படியே கக்கிக் கொண்டிருந்தான். மேலாளர் புன்னகைத்துவிட்டு, “சபாஷ்!” எனக் கத்தினார். அடுத்து, காணொளியில் கால்வாயில் விழுந்துவிட்ட நாய் பல மணி நேரங்கள் மேலேறி வரத் துடித்துக் கொண்டிருப்பதைக் காட்டினார். திரையில் மீண்டும் வெளிச்சம்.

“இதுல பாருங்க… நாய் தன்னோட உயிர காப்பாத்திக்க எவ்ள போராடுதுன்னு…அது ஒரு மிருகம்… நம்மள விட புத்திசாலி இல்ல…ஆனா அதுக்குள்ள இருக்கற விவேகத்த பாருங்க… தன் உயிர காப்பாத்திக்க அது செய்யற போராட்டத்தப் பாருங்க…”

இதுபோன்ற சமயங்களில் மெய்சிலிர்த்துப் போகும். உயிர் வாழ்தல் எத்தனை பெரிய வரம் எனப் போற்றிக் கொள்வேன். அப்படிச் செய்து கொண்டால்தான் இத்தனை பெரும் தனிமையையும் ஒழுங்குகளையும் பின்பற்றிக்கொள்ளத் தோதான மனம் உண்டாகும்.

“நமக்குள்ளயும் அது இருக்கணும்… அப்பத்தான் இங்க நம்மனால உயிரோட இருக்க முடியும்…”

அரங்கத்தில் எல்லோரும் ஐந்து மீட்டர் இடைவெளியில்தான் அமர்ந்திருந்தோம். ஒருவரையொருவர் தொட்டுக்கொள்ள முடியாத தூரமே எங்களுக்குள் கடைப்பிடிக்கப்பட்டிருந்தது. ஒருவரையொருவர் இதுபோன்ற பொதுக்கூட்டத்தில்தான் தூரத்திலிருந்து பார்த்துக் கொள்ள முடியும். அப்பொழுதெல்லாம் நான் உயிருடன் இருக்கிறேன் என்கிற தன்னுணர்வு மேலோங்கும். மேலதிகமாக எதையும் பேசிக்கொள்ள அல்லது உறவாடிக் கொள்ள அனுமதி இல்லை.

அங்கு இருப்பவர்களின் பலரின் பெயரும் தெரியாது. ஆனால்,எங்களின் அறைகள் மட்டும் ஒன்று போலவேதான் இருக்கும். எனக்குக் கிடைக்கும் வெளிச்சமும் இருளும் பயிற்சிகளும்தான் மற்ற அனைவருக்குமே ஒன்றுபோல வழங்கப்பட்டிருக்கும் என நினைத்துக் கொள்வேன்.

“ஓகே… மனுசன் ஏன் உயிர் வாழணும்?”

அவர் கேட்டக் கேள்வியைத்தான் சில நாள்களுக்கு முன் மனோவியல் விரிவுரைஞரும் என்னிடம் கேட்டிருந்தார். அந்தக் கேள்வியை என்னால் புரிந்து கொள்ள முடியாமல் தடுமாறினேன். சொல்லப்போனால் எல்லாம் புரிந்து பிறகு அதிகமாக புரிந்து பின்னர் மெல்ல புரியாத்தன்மைக்குள் போய்விட்டதைப் போல மாறிவிட்டன. புரிதலின் எல்லையை எத்தனை காலத்திற்குத் தக்க வைத்துக் கொள்ளப் போராடுவது? அதன்பிறகு சலிப்புத்தான் மிஞ்சும்.

“நாயவிட மனுசன் உயர்ந்தவன்… அதுனால அவன் உயிர் வாழணும்…”

மீண்டும் அதே குரல். அரங்கம் கைத்தட்டி அவனுக்கு உற்சாகமூட்டியது. முன் வரிசையில் அமர்ந்திருந்ததால் சட்டென பதில் சொல்ல முடிகிறது. எனக்குக் கேள்வி புரிவதற்குள் அவன் பதில் சொல்லியிருப்பான். நானும் கைத்தட்டினேன். கைகளைத் தட்டினால் அது அடுத்தவருக்கு ஊக்கம் கொடுக்கும் என்கிற விதி. இத்துடன் நாங்கள் பார்க்கும் 2593ஆவது காணொளி அது. அவை பலவிதமான ஒலிகளை எனக்குள் உருவாக்கியிருந்தது. கற்பனைக்கு எட்டாத தூரம் வரை ஒலிகளால் அவ்விடத்தை அடைய முனைந்து கொண்டிருந்தேன்.

தொடக்கத்தில் காணொளிகளைப் பார்த்தால் பதில் சொல்லத் தெரியாது. தோன்றாது. அமைதியாகத் திரையை வேடிக்கைப் பார்த்துவிட்டுப் போய்விடுவேன். பிறகு, திரையில் தோன்றும் மனிதர்களின் விநோதமான பேச்சும் செயலும் என்னை ஈர்க்கத் துவங்கின. மானுடத்தை இரசிக்கத் துவங்கினேன். இங்கே முழுநேரமும் ஏதோ தியானத்தில் ஆழ்ந்திருப்பது போன்று தோன்றும். பேரமைதி. அறைக்கும் அரங்குக்கும் வெளியே மகா இருட்டு. அங்கே அப்படியில்லை. அனைத்துவிதமான ஆர்பாட்டமான ஒலிகளால் அவர்கள் சூழ்ந்திருக்கிறார்கள்.

அவர்களின் கைப்பேசிகள் சதா அவர்களை ஒலிகளால் துரத்திக் கொண்டே இருக்கின்றன. அதனைப் பார்த்துச் சிரிக்கிறார்கள்; மகிழ்கிறார்கள்; கத்துகிறார்கள்; காதல் கொள்கிறார்கள்; முத்தமிடுகிறார்கள்; தூக்கியெறிகிறார்கள். அத்துணைச் சிறிய கைப்பேசியின் ஒலிகள் அவர்களிடத்தில் அவ்வளவு மகிமையுடன் இருந்தது ஆச்சரியம்தான்.

ஒலிகள் விநோதமானவையாக எனக்குள் விரிந்தன. காணொளியில் கேட்டுப் பழகிய ஒலிகளை அறைக்குள் சுயமாக எழுப்பிக் கொள்வேன். பறவையைப் போல் கரைந்து பார்ப்பேன்; புலியைப் போல் உறுமிக் கொள்வேன். சப்தங்களுக்குள் ஒரு வெளிச்சத்தைத் தேடிக் கொண்டிருந்தேன். சத்தம் பலவிதமான உருவங்களாகின. ஒலிகளின் கோர்வைக்குள் என்னைக் கிடத்தியிருந்தேன்.

“மனிதனுக்கு வேறு என்னென்ன குணங்கள் உள்ளன?” மீண்டும் அரங்கில் கேள்வி.

இம்முறை நான்தான் முதலில் கையைத் தூக்கினேன். மற்ற அனைவரும் என்னை நோட்டமிட்டார்கள்.

“எரிச்சல், கோபம், மிருகத்தன்மை, பேராசை…” எனப் பதற்றமான குரலில் நான் சொன்னதும் அரங்கத்தில் கைத்தட்டு.

எனது பக்கத்தில் அமர்ந்திருந்த இன்னொரு குரல், “இவையெல்லாத்துக்கும் நியாயம் சொல்ற புத்தியும் இருக்கும்…” எனச் சொல்லி அமர்ந்தது.

அதற்கும் அரங்கத்தில் கைத்தட்டு. இருவரின் அறிதல் நிலைக்கும் ஒரே வகையான கைத்தட்டு. ஒரே விதமான சத்தம். புள்ளிகளும் சமம். மனிதம், மனம், உயிர் என அனைத்துக்குமே புள்ளிகள் வழங்கப்பட்டன. இங்கிருந்த இத்தனை ஆண்டுகளிலும் புள்ளிகளே எங்களைப் பிரித்துக் காட்டின.

எனக்கு இன்னும் 25 புள்ளிகள்தான். முழுமையடைந்ததும் நான் தயார். மனத்தளவில் தயாரா என்று கேட்டால் அதற்குப் பதில் தெரியவில்லை. ஆனால், சென்றுவிட வேண்டும் என்கின்ற துடிப்பு மட்டும் இன்னொரு இதயமாக உள்ளுக்குள் கிடந்து கலவரப்படுத்திக் கொண்டிருந்தது. கற்பனை செய்து வைத்திருந்த ஒலிகளால் ஆன அவ்விடத்தை எட்டிவிட வேண்டும் என்கிற பதற்றம் உள்ளூர இருந்தது. எத்தனை காலம் உணர்வுகளைப் படித்துப் பார்த்துத் தெரிந்து கொண்டே இருக்க முடியும்? வாழ்தலைவிட அறிதல் அலுப்பூட்டுபவையாக அடர்ந்திருந்தது.

மேலும், பலர் எழுந்து பேசிப் புள்ளிகள் பெறப் போராடிக் கொண்டிருந்தார்கள். இவ்வளவு புரிந்துகொண்டும் நான் யார் என்கிற கேள்வியே மீண்டும் உள்ளே நெளியும். அந்தக் கேள்வியின் முன் இதுவரை கற்றவைகள் எல்லாம் குழந்தைகளாகிவிடும். பேரிரைச்சலாக அவை உள்ளே ஒலிக்கும்.

“ஓகே. இன்றைய பொதுச் சோதனை முடிந்தது… எல்லோரும் அவங்கங்க அறைக்குப் போகலாம்… 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றவங்க மட்டும் இங்கயே இருங்க…”

நானும் அந்தக் குழுவைச் சேர்ந்தவன் என்பதில் பெருமையாக இருந்தது. என் பக்கத்து நாற்காலியில் சற்றே தூரத்தில் அமர்ந்திருந்தவன் என்னைப் பார்க்கிறான். அப்படித்தான் என்கிற என் நினைப்பு. கண் பார்வை அத்துணைக் கூர்மையாக இல்லை. எனது வெண்புருவங்களை உயர்த்தி பெருமையை அவனோடு பகிர்ந்து கொண்டேன். நமக்கான ஏதோ தகவல் அல்லது நற்செய்தி காத்திருக்கக்கூடும் என மனம் துடித்தது. இப்பொழுது உடல் நாற்காலியின் மீது திருப்தி கொண்டது. ஒரு குழந்தையைப் போல நாற்காலியில் ஆர்வத்துடன் அமர்ந்திருந்தேன். மற்றவர்கள் வரிசையுடன் சென்றதும் அரங்கத்தின் இரைச்சல் மெல்லக் குறைந்து மௌனமானது. திரையில் சந்தித்த அந்த நபர் மீண்டும் தோன்றினார்.

“ஹாய்… டியர்ஸ். நீங்க 23 பேர்தான் முதலில் போகப் போறீங்க… உங்க மனநிலை எப்படி இருக்கு?”

எதிர்ப்பார்த்த குரல்தான். நான் அமர்ந்திருந்த வரிசையின் கடைசி நாற்காலியில் அமர்ந்திருந்தவன். அவனுடைய பெயர் ஞாபகத்தில் இல்லை.

“நான் ரொம்ப ஆர்வமா இருக்கன்…எங்க அம்மா அப்பா அங்க இருப்பாங்களா?”

வேடிக்கையான கேள்வி. இந்தக் கேள்வி இந்த அரங்கில் பல ஆண்டுகளாகக் கேட்கப்பட்ட ஒன்றாகும். ஆனால், அதை ஒரு கேள்வியாகவே யாரும் பொருட்படுத்தியதில்லை. பதிலும் இருக்காது. பின்னாளில் ஏதோ சடங்குபோல அனைவரும் அந்தக் கேள்வியை மட்டும் கேட்டுக் கொள்வோம்.

ஒருசிலர் பேசி முடித்ததும் நானும் எழுந்தேன்.

“நான் ஒவ்வொருநாளும் அந்தக் கனவுலதான் இருக்கன்…”

சொல்லி முடித்ததும் மீண்டும் அமர்ந்தேன். மனனம் செய்து ஒப்புவிப்பது அத்துணைக் கடினமாகத் தெரியவில்லை. இந்த ஒவ்வொருநாளும் என்பது எத்தனை அடர்த்தியானது; எத்தனை நீண்ட நெடிய இரவுகள் கொண்டவை; எத்தனை தனிமை மிகுந்த வலிகள் கொண்டவை எனச் சொல்லிப் புரிய வைத்திடல் முடியுமா என்பது குழப்பம்தான்.

“ஓகே டியர்ஸ்…இன்னும் 25-30 புள்ளிகள்தான்… அதுக்கு ஒரு சைக்கோலோஜி பரிட்சை இருக்கு. அவ்ளதான்… நீங்க எல்லாம் ரெடி… உங்கள விட நாங்கத்தான் ஆர்வமா இருக்கோம்… இது நம்மளோட பல வருஷ கனவு…”

இன்னுமொரு சோதனையா? மனம் கோபம் கொண்டது. சற்றுமுன் திரையில் பார்த்தவனின் எரிச்சலை நன்றாகப் பழகிக் கொண்டிருந்தேன். நான் இங்கு ஒளிப்பரப்பட்டக் காணொளிகளின் தொகுப்பென்றே நினைத்துக் கொண்டிருக்கிறேன். எனது தன்னுணர்வு அப்படியாகத்தான் உள்ளெழுப்பட்டுள்ளது. எனது ஒவ்வொரு உணர்வுகளையும் நான் காணொளிகளிலிருந்து கற்று உள்ளே பெருக்கிக் கொண்டவை.

அரங்கத்திலிருந்து வெளியேறியும் முன் வழக்கமாகக் கொடுக்கப்படும் மாத்திரைகள் வழங்கப்பட்டன. உணர்வுகளைப் பாதுகாக்கும்; கட்டுபடுத்தும் ஆற்றல் கொண்டவை. அவை சிறுவயதிலிருந்து கொடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு மாத்திரையின் ருசியையும் அறிவேன். ஒவ்வொன்றும் சாப்பிட்ட பின் ஏதோ மயக்கத்திற்குள்ளாக்கும்; மகிழ்ச்சியை உற்பத்தி செய்து மனத்தை இலேசாக்கும். வெளியில் என் பெயரிட்ட காத்திருப்புத் தளத்தில் நின்றிருந்த பந்து போன்ற பளபளக்கும் கண்ணாடி சுவர்களால் ஆன எனது அறையில் ஏறி அமர்ந்து கொண்டேன். அது என்னைச் சுமந்து கொண்டு பெரும் இரும்பு கொக்கியின் மூலம் அதனுடைய வட்டப் பாதைக்குச் சென்று சுழலத் துவங்கியது. இங்கு எல்லாமும் சுழன்று கொண்டும் வட்டமிட்டுக் கொண்டும் இருக்கும்.

எல்லாவற்றையும் இயக்கிக் கொண்டிருக்கும் மையச் செயலகம் உற்பத்தி செய்யும் ஈர்ப்புச் சக்தியோடு எல்லாம் நிர்ணயிக்கப்பட்ட சுழல் பாதையில் சுழன்று கொண்டே இருக்கும். அது பலநூறு சுழல் வட்டங்களாக விரிந்து நிர்ணயிக்க இயலாத எல்லைவரை காட்சியளிக்கும். ஒருகண நேரப் பார்வையில் பார்க்கும்போதெல்லாம் வெறுமையும் இருளும் மட்டுமே தெரியும்.

அறைக்குள் போனதும் சுழற்சியை உணர முடியாது. மனத்தில் எப்பொழுதும் இல்லாத ஒரு புதுத்தெம்பு. சுழற்சிகள் இல்லாத எப்பொழுதுமே நிரந்திரமாக நிற்கும் ஒரு நிலத்திற்குப் பயணம். வேகமாக ஓடலாம்; தாவிக் குதிக்கலாம்; சத்தமாகக் கத்தலாம்; ஒருவரையொருவர் திட்டிக் கொள்ளலாம்; கோபத்தால் ஏதாவது பொருள்களை உடைக்கலாம்; பகைமையை வளர்த்துக் கொண்டு பழி வாங்கலாம்; அன்பு செய்யலாம்; முத்தமிடலாம்; காற்றில் பட்டம் விடலாம்; அந்தப் பறத்தலுக்குப் பின்னால் விரிந்திருக்கும் வானத்தைப் பார்க்கலாம். அங்கு வானம் வெளிச்சமாக இருக்கும் என மின்நூலகத்தில் தெரிவித்திருக்கிறார்கள்.

அங்குச் சென்றால் இவையாவும் நம் கண் முன்னே நாம் செய்து பார்க்கலாம். கால்கள் பரபரத்தன. அறையைச் சுற்றித் தெரிந்த ஓவியங்கள் உண்மை போலவே நினைத்துக் கொண்டேன். வயல்வெளி, வாழைத்தோப்பு, கடற்கரை, மலைமுடுக்கு. அங்கு ஓயாமல் கரையில் அலைந்து கொண்டிருக்கும் அலையும் பேரிரைச்சலுடன் கேட்கும் காற்றும். சுவரைத் தொட்டுத் தடவினேன். தோல் சுருங்கிய கைகள் சில்லிட்டன.

அறையின் கதவுக்கு மேலே ‘வாசு 2087’ என நான் இங்குக் கொண்டு வரப்பட்ட திகதியுடன் என் பெயர் தங்க நிறத்தில் பளிச்சிட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். இன்னும் சில நாள்களில் இந்த அறை காலியாகும். இங்கு அடுத்து யார் இருப்பார் என நான் கடற்கரையிலோ வாழைத்தோப்பிலோ வெயிலுக்குக் கீழே பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு நகரத்தின் நடுவிலோ இருந்து கொண்டு சிந்திக்கக்கூடிய ஒரு நாள் ஏற்படும். அப்பொழுது இங்கு யார் இருப்பார் என எனக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஆனால், ஒரு நினைவு மனத்தை வருடும். ஒரு விடுதலையை உள்ளார்ந்து ருசிக்க முடியும். அகம் விரிந்து நிற்பதை உணர முடியும்.

சட்டெனச் சிறிய ஒலியுடன் மின் நூலகத்திலிருந்து அப்பெண்மணி தோன்றினாள். அப்பொழுதுதான் இது பயிலரங்கத்திற்கான நேரம் என மறந்து விட்டிருப்பதைக் கவனித்தேன். ஒளியின் வழியாக அறைக்குள் அவர் வந்து நின்றார். அவரைத் தொட முடியாது. அவர் வரும்போதும் போகும்போதும் ஒலிகள் கேட்கும்; பெரிதாக ஏதும் முன்னறிவிப்பில்லாமல்தான் ஒளிவடிவில் அறைக்குள் நுழைந்து விடுவார். பல முறை அவருடைய போதனை பிடிக்காமல் அவரது உருவத்தைத் தள்ள முயன்றுள்ளேன். கைகள் காற்றில் அலைந்து ஒளிக்கீற்றுகளுள் நுழைந்து மீண்டும் மறுபக்கம் வருமே தவிர அவரை ஒன்றுமே செய்ய இயலாது. ஆனால், ஓயாமல் சிரித்த வண்ணமே என் பெயரை அழகான உச்சரிப்புடன் அவர் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருப்பார். எனக்குத் தோல் சுருங்கியதைப் போன்று அவருக்கு அப்படி நிகழவில்லை. எனக்கு உடல் மெலிந்ததைப் போன்று அவருக்கு அப்படி நிகழ்ந்ததில்லை. ஒவ்வொரு வருடங்களிலும் அவர் ஒரே மாதிரியாகவே காட்சியளிக்கிறார் என்பது ஆச்சரியமாக இருக்கும்.

அவர் வாஞ்சையுடன் என் பெயரை அழைக்கும் போதெல்லாம் மனம் குளிரும். யாரோ நம்மோடு இருக்கிறார்கள் என்கிற நினைப்பு மேலோங்கும். மகா தனிமை மெல்ல அகலும். பலமுறை ஆண், பெண் என்கிற பேதங்களை இவர்தான் அழுத்தமாக எனக்குள் கடத்தியுள்ளார். இவரிடமிருந்தே பெண் என்பவளை ஆழமாகப் புரிந்து கொண்டேன். ஒளியில் தோன்றும் மற்ற விரிவுரைஞர்களைவுட இவரையே மனம் பின்னாளில் தேடத் துவங்கியது. நான் இடைமறித்து என்ன பேசினாலும் அவர் சற்றும் தடுமாறாமல் அவர் சொல்ல வந்ததைச் சொல்லிக் கொண்டே இருப்பார். ஒருவேளை என் அம்மாவும் இப்படித்தான் இருந்திருப்பார் என நினைத்துள்ளேன். அவர் இல்லாத நேரத்தில் அவரை அறைக்குள் கற்பனையால் கொண்டு வந்து விடுவேன்.

“ஹாய் டியர் வாசு… இன்னிக்கு நம்ம மன அழுத்தம் ஏற்பட்டா அதை எப்படிக் கொண்ட்ரோல் பண்றதுன்னு பாக்கப் போறோம்…”

கடந்த வாரம் முழுவதும் அன்பை எப்படிக் காட்டுவது எனப் பாடம் எடுத்தார். இந்த வாரம் மனத்தை எப்படி அடக்கியாள்வது எனப் பேசிக் கொண்டிருக்கிறார். உடலில் மனம் என்பது எங்கு இருக்கிறது என்று மட்டும் அவர் இன்னுமும் சொல்லவில்லை. அதுவும் ஓர் உடல் உறுப்பாக இருக்குமோ என்று அறிவியல் விரிவுரைஞரிடம் நான் கேட்ட போது அது மனநல விரிவுரைஞர் விளக்குவார் எனச் சொல்லிவிட்டார். ஆனால், இவரோ எங்கிருக்கிறது எனத் தெரியாத ஒன்றை எப்படி அடக்க வேண்டும் எனப் பேசிக் கொண்டிருக்கிறார். எனக்கு இது புரியவில்லை. ஒருவேளை புரியாவிட்டால் அந்தக் கடைசி மனநலச் சோதனையில் நான் தேர்ச்சி பெறாமல் போய்விடுவேனோ என்கின்ற அச்சமும் மனத்தை வாட்டியது. வேறு வழியில்லை. விரிவுரைஞர் சொல்வதை வழக்கம்போல மனனம் செய்து கொள்ள வேண்டும். கேட்டதைப் பிசிறில்லாமல் மீண்டும் சொல்லிக் கொள்ள வேண்டும். அவரது கண்களை அதிக நேரம் உற்றுப் பார்க்காமல் செவிகளை மட்டும் கூர்த்தீட்டிக் கொள்ள வேண்டும் என என்னை ஆய்த்தப்படுத்திக் கொண்டேன்.

“ஓகே டியர் வாசு… சில கேள்விகள் கேட்கப் போறன்… பதில் சொல்லணும்…”

தெரிந்த கேள்விகள்தான். எனது நான்காவது வயதிலிருந்து கேட்டுப் பழகிய கேள்விகள். ஒவ்வொரு விரிவுரைஞரும் தவறாமல் பாடத்தை முடிக்கும்போது இந்தக் கேள்விகளைக் கேட்டாக வேண்டும். அது அவர்களின் கடமை. அதற்குப் பதில் சொல்ல வேண்டியது எனது கடமை. இங்கு கடமைகளுக்கு மட்டுமே அளவுகோல் இருந்தது; புள்ளிகளும் இருந்தன.

“நீங்க எங்க இருக்கீங்க?”

“அறை எண் 453, C-vid 12ஆவது சேட்டலைட்”

“நீங்க ஏன் இங்க இருக்கீங்க…?”

“நாங்க சாவிலிருந்து காக்கப்பட்டவர்கள்…”

“நீங்க இங்க வந்த வருசம் என்ன?”

“2087, ஜூன் 27”

“நீங்க பூமிக்குப் போக ஆசைப்படறீங்களா?”

“அதுக்காகவே நான் காத்திருக்கன்…”

கைத்தட்டல் சத்தம் கேட்டது. தொடக்கத்தில் அறையைச் சுற்றி யாரோ நின்று கவனித்துக் கைத்தட்டுகிறார்கள் என்று சந்தேகம் கொண்டேன். பின்னர் அந்தச் சத்தம் இயந்திரம் எழுப்பும் ஒலி எனப் புரிந்து கொண்டேன்.

“ஓகே டியர் வாசு… நன்றி…”

அறையிலிருந்து அவர் மறைந்தார். அவர் சென்ற பிறகு நிலவும் தனிமை கொடூரமானது. சத்தமற்ற பொழுது வீரியத்துடன் மீண்டும் வந்து அமர்ந்து கொண்டது.

“அங்க இப்ப யாருமே இல்ல… மொத்த பூமியும் வைரஸ்னால அழிக்கப்பட்டு… இப்போ இயற்கையாவே சுத்தமாய்க்கிட்டு இருக்கு…”

ஒருமுறை பொது சோதனையில் தலைமை விஞ்ஞானி சொன்ன வார்த்தைகளை நான் கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன். அப்படியென்றால் என் அம்மா, என் குடும்பம் எதுவுமே அங்கிருக்க வாய்ப்பில்லை என்கிற உண்மையை மனம் ஏற்க மறுத்தது. என் வருகையின்போது என்னை வரவேற்க அங்கு யாரும் இருக்கமாட்டார்கள். நான் யாராக அங்குப் போய் நிற்பேன் எனக் குழம்பினேன். காணொளியில் பார்த்தது போல் பிள்ளை பள்ளிக்கூடம் முடிந்து வீட்டிற்கு வந்தால் வாறி கட்டியணைக்க ஒரு பெண் அங்கிருக்க வேண்டும் என மனம் கற்பனைச் செய்து கொண்டது.

“கண்ணுக்குத் தெரியாத ஒரு வைரஸ்கிட்ட மொத்த அறிவியலும் தோத்துப் போச்சு…” எனச் சோகம் படர்ந்த அவருடைய கடைசி உரையை அடிக்கடி போட்டுக் காட்டுவார்கள். அவர் இறந்து சில ஆண்டுகள் ஆகிவிட்டன. அவருடைய திட்டம்தான் நாங்கள் எல்லோரும் எனச் சொல்லி அவருக்கு நன்றி உரைக்கக் கட்டாயப்படுத்துவார்கள்.

“எங்களைப் பூமியிலிருந்து காப்பாற்றி அனுப்பி வைத்த எங்கள் தந்தையே… உம் மூளை தெய்வங்களால் ஆசீர்வதிக்கப்பட்டப் பொக்கிஷம் என நாங்கள் உணர்ந்து போற்றுகிறோம்… மீண்டும் நாங்கள் பூமியைப் புதுப்பிக்கக் கடமைப்பட்டுள்ளோம்… இயற்கைக்குப் புறம்பான காரியங்களில் ஈடுபட மாட்டோம் என உறுதி கொள்கிறோம்…” மனத்தில் ஓர் ஒழுங்கு செய்யப்பட்ட ஒலிகளாக இந்த அனைத்து வார்த்தைகளும் எனக்குள் பல்லாண்டுகளாகச் சூழ்ந்திருக்கின்றன. மண்டைக்குள் எப்பொழுதும் சுழன்று கொண்டே இருக்கின்றன. தினமும் பலமுறை சொல்லிப் பார்த்துப் பழகி கொண்டிருக்கும் வார்த்தைகள் அவை.

“முயற்சி செய்றவங்க… ஆர்வம் உள்ளவங்க… எங்களோடு ஒத்துழைத்து முழுப்புள்ளிகள் பெற்றுத் தகுதி பெறுபவர்கள் மட்டும்தான் அங்க போக முடியும்… இல்லைன்னா இங்கயே இருந்து வயசாயி செத்துறணும்…”

எனக்கு மேலே சுழன்று கொண்டிருக்கும் சில அறைகள் காலியான சம்பவங்கள் எப்பொழுதும் அச்சுறுத்திக் கொண்டே இருக்கின்றன. அவர்கள் என்னைவிட வயதில் மூத்தவர்கள். உடல் தளர்ந்து தனிமை தாளாமல் முதுமையடைந்து அறைக்குள்ளே இறந்து கிடந்தார்கள். அத்தகையதொரு மரணம் கொடூரமானது. அரங்கைவிட்டு அறையில் ஏறும்போதும் இறங்கும்போதும் அவர்களின் அறைகள் திறக்கப்படாமல் மூடியே கிடப்பது மனத்தை என்னவோ செய்யும்.

வரும்போது யாரென்று தெரியாமல், பின்னர் ஏன் இறக்கிறோம் எனத் தெரியாமல் இடையில் சுழன்று கரைந்து காணாமல்போன வாழ்க்கை. என் சுயம் எனக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றது.

“இங்கேந்து போய்ரு…”

85,000 கிலோ மீட்டருக்கு அப்பால் கோவிட், வைரஸ் என எந்தக் கொடிய நோய்களும் இப்பொழுது இல்லாமல் எங்கள் வருகைக்காக கடந்த 57 ஆண்டுகளாக ஓயாமல் கரைகளைத் தொடும் அலைகளும் மென்காற்றும் மரங்களின் உரசல்களும் என ஒலிகளுடன் மட்டும் காத்திருக்கும் பூமியை மனத்தில் நினைத்துக் கொண்டேன்.

கே.பாலமுருகன்

ஒலி – 2 (இரண்டாம் பாகத்தை வாசிக்க)

Share Button

About The Author

7 Responses so far.

  1. T.Hessina says:

    Super and amazing story sir i like your story📚🙏🏻

  2. Cikgu Ramasamy says:

    *இது ஒரு எதிர்காலவியல்.. கே.பாலமுருகனின் அறிவியல் கற்பனை சிறுகதை*

    இளையோர் விரும்பும் கதைக்கரு!

    கோறணி நச்சில் தொற்றில் உலகில் இறந்த மனிதர்களின் மீட்கப்பட்ட எச்சங்களாக 2087-ல் விண்வெளிக்கு அனுப்பட்ட சிறுவர்கள். பல்வேறு சோதனைக்குப் பின் 2137-ல் பூமிக்கு திரும்புவதாய் முடிகிறது!
    வாசகர் தாம் விண்வெளியில் இருந்து இக்கதையை வாசிப்பதாக ஆங்கிலப்பட பாணியில் வாசிக்க தொடங்கினால் கதைக்கரு உயிரோட்டமாய் விளங்கும்.

    நான் முன்பு ஒரு சீன படத்தைப் பார்த்துள்ளேன்! பெயர் நினைவில்லை! அதில் உலகம் கடல்கோளால் அழியும் என்று தெரிந்தவுடன் உலகப் பெரும் பணக்காரர்கள் மட்டும் ஒரு அதிநவீன கப்பலைச் செய்து அதில் தப்பிப்பது போன்று முடியும்!

    ஆனால், இக்கதை ஒரு புதுமையான விண்வெளி கற்பனையாக அமைந்துள்ளது. ஆகவே, இச்சிறுகதை மாணவர்களின் கற்பனை திறனை மென்மேலும் வளம்பெற வித்திடும்!

    மலேசிய எழுத்தாளார்களில் மாணிக்கம் பாலமுருகனுக்கு வாழ்த்துகள். சிறுகதையை வாசித்து வாழ்த்துங்கள்!

    அன்புடன் செகு இராமசாமி.

  3. காந்தி முருகன் says:

    அறிவியல் புனைவு சிறுகதைகள் மக்களிடையே ஒரு அறிவியல் தாக்கமாகவோ,புனைவுகளின் வெளிப்பாடாகவோ மட்டும் இருந்து விடவில்லை.ஒரு முறைக்கு இரு இரு வாசிப்பாக அமைவதோடு அறிவியல் புனைவின் மீது ஒரு எதிர்பார்ப்பை உருவாக்க உருவாக்கி வருகிறது.புனைவுகளாக பார்க்கப்படும் கதைக்கரு வெற்றிப் பெறாது.அப்புனைவுக்குள் ஒளிந்திருந்திருக்கும் எதார்த்தம் அந்நிலையை வெற்றி அடைய செய்கிறது.சிறந்த படைப்புகளைத் தாங்கி வரும் பாலா சாரின் சிந்தனைக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துகளும்.

  4. இரத்தினவேல் முனியாண்டி says:

    அருமையான கற்பனை ஆற்றல் ஐயா. சில நிமிடங்கள் நான் தங்களின் கற்பனை வளத்தால் விண்வெளிக்குச் சென்றுவிட்டேன். கோறணி நச்சில் அழிவதற்கான அறிகுறியே இல்லாமல் போய்விட்டது! இந்த நச்சியம் தொடர்ந்து வீரியம் அடைந்தே வருகிறது! உலகம் இனி என்ன ஆகுமோ என்ற அச்சம் மனதைப் பீடிக்கும் பேய்களாகி விட்டது.

    இதே நிலை தொடர்ந்தால் தங்கள் சிறுகதையில் வெளிவந்த கற்பனையைப் போன்றே நமது நிலை ஆகிவிடுமோ? தங்கள் கதையை வாசிக்கும் போது நானும் கதையின் நாயகனாகி ஒரு ஹீரோவாக பூமியை மீட்டெடுக்க வந்துவிட்டேன்.

    தங்களின் கற்பனை ஆற்றலுக்கு எமது வாழ்த்துகள் ஐயா. தொடரட்டும் தங்கள் பணி. இளைஞர்களின் எண்ணங்களில் தங்களின் அறிவியல் சிந்தனை ஊடுருவி புத்தாக்கத்தை உருவாக்கட்டும்.

  5. யோகாம்பிகை இளமுருகன் says:

    வணக்கம் ஐயா 🙏ஒலி சிறுகதை எனக்குள் சிறந்த ஒரு படிப்பினையை விதைத்தது. இன்றைய சூழ்நிலையில் அனைவரும் கைப்பேசியின் பின் பக்கம் செல்கின்றனர். அதன் ஒளி, ஒலியை இரசித்து மகிழ்கின்றனர். ஆனால் ஒரு சூழ்நிலை வரும் பொழுது அந்த ஒளியும்,ஒலியும் வெறுத்துப் போகிறது. எங்குச் சென்றாலும் இயற்கைதான் மனதிற்கு மகிழ்வையும் நிறைவையும் அளிக்கின்றது என்பதனை உணர்த்தும் வகையில் தாம் எழுதியுள்ளீர்கள். மேலும், இயற்கைக்குப் புறம்பாகச் செய்யும் செயல் மனிதனையே அழித்து விடும் என்பது “கண்ணுக்குத் தெரியாத ஒரு வைரஸ்கிட்ட மொத்த அறிவியலும் தோத்துப் போச்சு…” என்ற வரிகள் எச்சரிக்கையாக அமைந்துள்ளது. பலர் இயற்கையை அழித்துக் கண்டுபிடிப்புகளை மேற்கொண்டாலும் இறுதியில் மனிதன் அழிவான் என்று பொருள் உணர்த்தியுள்ளீர். கோவிட் போன்று பல கிருமிகள் உலகை உலுக்கும் பொழுதுதான் மனிதன் தன்னை உணருகிறான்; இயற்கையின் அருமையைப் போற்றுகிறான். அனைத்திற்கும் மேலாக வாழ்க்கை வாழ்வதற்கு அவ்வளவு எளிது அல்ல; உயிர் வாழ உறவுகளும் இயற்கையும் துணை இருக்க வேண்டும் என்று மிகப்பெரிய தத்துவத்தை இச்சிறுகதையின் மூலம் உணர்த்தியுள்ளீர்கள். மிக அருமையான கதை ❤️ அன்பும் வாழ்த்தும் உரித்தாகுக ஐயா😇♥️

  6. THULASI DEVI says:

    அற்புதமான கதை ஐயா. எதிர்காலத்தில் நம் சிறுவர்கள் இந்த கண்ணுக்குத் தெரியாத வைரசினால் தங்களின் குடும்பத்தை விட்டு,வாழ்க்கையின் அழகான விடயங்களை அனுபவிக்க முடியாமல் எங்கேயோ இருக்கும் ஓர் அடர்ந்த விண்வெளிக்கு அனுப்பப்படுகிறார்கள் என அழகாக சொல்லும் இந்த கதையை நான் படிக்கும்போது மிகவும் வியந்து போனேன். ஒரு சக மானிடம் எதற்கு வாழ்கிறது எதற்கு இறக்கிறது என தெரியாமலேயே வாழ்க்கைப் பயணத்தை ஓட்டுகிறது என நினக்கும்போது, ஆச்சிரியமாக இருந்தாலும் ,அச்சம் ஒன்றை கூட்டியது.மிகவும் அருமையான கற்பனை கதை ஐயா.. 😊😊😊😊