‘அவன்’ சிறுகதை ஒரு பார்வை: ஆதித்தன்

திரைப்படத்தினூடே உளவியல் சார்ந்த பேய்மை கதை களத்தைப் பார்த்திருப்போம். நம்முள்ளேயே அசைபோட்டிருப்போம். எடுத்துக் காட்டாக ‘சந்திரமுகி’ திரைப்படத்தை எடுத்துக் கொள்ளலாம். SPLIT PERSONALITY அல்லது MULTIPLE  PERSONALITY DISODER எனப்படும் ஒருவகை நோயானது மனகோளாறு உள்ளவர்களுக்கு ஏற்படும். அதனுடைய பின்னணியைச் சென்று ஆராய்ந்தால் சிறுவயதில் அவர்கள், பார்த்தது, அனுபவித்தது, மன அழுத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புப் போன்றவற்றால் இக்கோளாறு ஏற்படுகிறது. 1996 ஆம் ஆண்டு சின்னத்திரையில் ஒளிப்பரப்பான (அண்மைய சில மாதங்களில்) ‘மர்ம தேசம் – விடாது கருப்பு’  எனும் தொடரைப் பலரும் பார்த்திருப்பீர்கள். MULTIPLE  PERSONALITY DISODER எனப்படும் மன கோளாறால் பாதிக்கப்பட்டவன்தான் கருப்பு சாமியாக இருந்து அந்தக் கிராமத்தைப் பாதுகாத்து வருவான். இந்தக் கோளாறினால் நன்மையும் உண்டு தீமையும் உண்டு என்பதை எடுத்துச் சொல்லும் கதையின் கருவாக அமைந்திருக்கிறது ‘அவன்’ எனும் கே. பாலமுருகன் அவர்கள் எழுதிய சிறுகதை. பேய்மையை உள்ளாங்கியிருக்கும் இக்கதையின் மையத்தில் சுழன்று கொண்டிருக்கும் ஒரு வட்டம்தான் கதையை இறுதிவரை கொண்டு சென்று வாசகனை யோசிக்கத் தூண்டுகிறது. சிறைசாலைக்கென்றே உள்ள சிறப்பான தன்மையைத், தனிமையை இந்தச் சிறுகதையைப் படிக்கும் போது உணர முடிகிறது.

தூக்கு மேடைக்காகக் காத்திருக்கும் சில கைதிகளின் மனக்குரல்களை அவ்வப்போது ஆங்காங்கே வெறுமனே சொல்லிவிட்டுப் போகாமல் அதற்குள்ளும் ஒரு மனக்குறிப்பை வரைந்திருக்கிறார் எழுத்தாளர். மனத்திட்பமுடைய ஒருவன் ஆழ்ந்து வாசிக்கின்ற ஒரு நாவலையோ அல்லது சிறுகதையையோ உள்வாங்கி படிக்கும்போது ஏற்படுகின்ற நிறைவில் நிறைவடைய முடியாமல் மீண்டும் மீண்டும் அசைப்போட வைக்கின்ற நூல்போலதான் தவற்றைச் செய்துவிட்டு தூக்குத் தண்டனைக்காகக் காத்திருப்பவனின் மன போராட்டம் இருக்கும். அந்த நூலை என்னால் வைக்க முடியவில்லை என்று எப்போது ஒரு வாசகன் மனகுறிப்பு வரைகின்றானோ அப்போதே அந்த நூல் வெற்றியடைந்து விடுகிறது. அதுபோல எப்போது ஒரு குற்றவாளி தான் செய்த தவற்றை மீண்டும் நினைத்து, வருந்தி தன்னையே புதியவனாக உருமாற்றி கொள்ள நினைக்கின்றானோ அப்போது தூக்கு தண்டனை அவனுக்கு மனப்போராட்டத்தின் வெற்றி. அந்த வெற்றியைதான் இச்சிறுகதை மிக ஆழமான புனைவுகளின் மூலமாகவும் சித்தரிப்புகளின் வழியாகவும் சொல்கிறது.

சிறுவயதில் தான் அனுபவித்த அழுத்தத்தின் காரணமாக மனக்கோளாறால் பாதிக்கப்பட்டவனின் நிலையிலிருந்து கதை நகர்ந்து போய்க்கொண்டிருக்கும். இடையில் நமக்கே தெரியாமல் ஒரு கதை உடன் பயணிக்கும். அந்த கதையினை மட்டும் உள்வாங்கி கொண்டு ஒரு வாசகன்  கதையோடு பயணித்தால் மட்டுமே அதன் பேய்மையை உணர முடியும். மன இருளுக்குள் அடைந்து கிடக்கும் எத்தனையோ சோகங்களும் சிறையின் இருளுக்குள் அடைந்து கிடக்கும் சொல்ல முடியாத வேதனைகளும் ஒன்றாக திரண்டு தலைக்கு மேலே தொங்கி கொண்டிருக்கிறது. அது எந்நேரத்திலும் உச்சந்தலையைப் பதம்பார்க்கலாம். அதனுடைய கூர்மையை மட்டும் உணர்ந்து விட்டால் இக்கதையின் மையத்தோடு பயணிக்க இலகுவாக இருக்கும்.

‘அவன்’ தேடிக் கண்டடைய வேண்டிய உள்ளுணர்வின் சரிபாதி.

ஆக்கம்: ஆதித்தன் மகாமுனி

அவன் சிறுகதையை வாசிக்க: http://balamurugan.org/2020/12/23/சிறுகதை-அவன்/

Share Button

About The Author

Comments are closed.