சிறுகதை: அவன்

“அவன் வந்துட்டான் சார்… இன்னிக்கு யார கொல்லுவான்னு தெரில… அவன் ரொம்ப கருப்பா இருக்கான்… கண்ணுலாம் செவப்பா இருக்கு…”

சட்டென கபிலன் உறக்கத்திலிருந்து எழுந்து நாலாப்பக்கமும் சூழ்ந்திருக்கும் கருமை படிந்துபோன சுவரை வெறித்தான். இன்று அதிகாலையில் தனசேகரைத் தூக்கிலிட்டதால் புளோக் டி-யில் கைதிகள் பாடும் சத்தம் கேட்டது. அவன் இருக்கும் சிறைக்கு மேல்பகுதியில்தான் ப்ளோக் டி. அங்குத்தான் தூக்கிலிட அழைத்துச் செல்வார்கள். கபிலனின் சிறை எண் 15. இந்த அறையைத் தாண்டித்தான் மேல் புளோக்கிற்குச் செல்லப் படியில் ஏற வேண்டும். தூக்கிலிடும் அறைக்குப் பக்கத்து அறைக்கு நேற்று தனசேகரை அழைத்துச் செல்வதைப் பார்த்தான். மரண வாசலுக்குச் செல்லும் ஒவ்வொரு கைதிகளின் முகத்திலும் கலவரத்தைவிட அமைதியைத்தான் அதிகம் பார்த்திருக்கிறான். வாழ்தலின் மீதான அதீத வெறுப்பிற்குப் பிறகு உருவாகும் அமைதி அது. நேற்று கருப்புத் துணியில் மூடப்பட்டிருந்த தனசேகரின் முகத்தைக் கபிலனால் ஊகித்துக் கொள்ள முடிந்தது. எந்த ஆரவாரமும் இல்லாமல் அமைதியாக நடந்தான்.

அதீதமான இருள் ஒருவகையான வெப்பத்தை உள்ளுக்குள் உருவாக்கியப்படியே இருந்தது. மனவெப்பம் என்று சொல்லலாம். அந்த வெப்பமானது மெல்ல நெஞ்சிலிருந்து தலைக்கும் ஏறிக் கொண்டிருந்தது. ஆங்காங்கே ஒட்டடைகள் சூழ தரை முனையில் எறும்புகள் ஊர்ந்து கொண்டிருந்தன. கபிலன் தலைக்கு மேலே கவனித்தான். அந்தச் சுழற்சி இன்னும் உயிர்ப்புடன் சுவரைச் சுற்றி வட்டமிட்டப்படியே இருப்பதை அவனால் உணர முடிந்தது. கால்களைத் தரையில் வைக்க இயலவில்லை. பாதங்களிரண்டும் கணமாக இருந்தன.

அன்றுடன் அவன் சிறைக்கு வந்து மூன்று மாதங்கள் கடந்துவிட்டன. எப்பொழுதுதாவது வினோஜாவின் நினைவுகள் வந்துபோகும். கடைசியாக பார்த்த அவள் கண்களில் தெரிந்த உயிர் வாழ்தலின் மீதுள்ள அழுத்தமான பிடிப்பு அவனது சிந்தைக்குள்ளே தங்கிவிட்டது. எத்தனைமுறை உதறினாலும் அவள் மூளைக்குள் ஒரு பட்டாம்பூச்சியாய் பறந்து கொண்டிருக்கிறாள். எட்டடிக்கு வைத்தால் ஒரு அரைத்தடுப்பு. அதற்கு அப்பால் கழிவறை. எந்நேரமும் வீசும் வாடை நாசியில் ஒட்டிக் கொண்டு நிரந்திரமாக இம்சித்துக் கொண்டிருந்தது. இரவில்கூட எழுந்து கழுவிக் கொண்டிருப்பான். நீரை உள்ளங்கையில் அள்ளி ஊற்றுவான். ஏனோ அந்த வாடை மறையாது.

“சார்! அவன் செஞ்ச கொலைக்கு என்ன ஏன் சார் தண்டிச்சிங்க? அசந்துருக்கும் நேரம் பாத்து செண்டன்ஸ் போட்டுட்டீங்க சார்… அவன் ரெண்டு தடவ வினோஜாவ கொன்னான் சார்…”

கடந்த மூன்று மாதங்களும் கபிலன் பார்ப்பவர்களிடமெல்லாம் மறவாமல் உச்சரிக்கும் ஒரு வாக்கியம் அது. இம்மியும் பிசகாமல் வரிசை தவறாமல் உச்சரிப்பான். சொல்லப்போனால் அவன் அவ்வாக்கியத்தை மனனம் செய்ய சிரமப்பட்டதில்லை. நீதிமன்ற செவிமடுப்பிலெல்லாம் கபிலன் ஒன்றுமே மறுக்கவியலவில்லை. வினோஜாவின் கண்கள் அவனை ஆட்கொண்டிருந்தன. இறுதி மன்னிப்பு மனுவும் நிராகரிக்கப்பட்ட பின்னரே சிறைக்கு வந்து சேர்ந்தான். மற்றவையெல்லாம் குழப்பமாகவே இருந்தது. யாரையாவது பார்த்தால் அவன் வாய் இந்த வாக்கியத்தையே சொந்தமாக பேசிக் கொள்கிறது. அது செய்யும் முதல் வித்தை இந்த வாக்கியத்தைக் கொட்டி விடுவது.

“கழுத்துல கயிறு மாட்டற வரைக்குமே தனசேகர் பாடிக்கிட்டேதான் இருந்துருக்கான்…”

“அவனுக்குப் பிடிச்ச பாட்டுத்தானே…? நிலாவே வா… நில்லாமல் வா… நான் சிவப்புராணம்தான்…”

தனசேகர் 24ஆவது எண் கொண்ட சிறையில் இருந்தவன். காலையில் அவனைத்தான் தூக்கிலிட்டார்கள். நாள்தோறும் இளையராஜா பாடல்களைப் பாடியப்படியே பொழுதைக் கழித்தவன். வீட்டு விவகாரத்தில் மனைவியையும் மனைவியின் தம்பியையும் கொன்றுவிட்டு வந்தவன். பச்சை பலகை திறந்து வழிவிடும் சத்தம் சட்டென மேல் புளோக் அதிரக் கேட்கும். அது சாவுக்கான ஓசை. ஒருமுறை பெருங்காற்று வெடிப்பு அழுந்த வெளியேறி பரவும். கயிறு கழுத்தை நெருக்கியதும் கடைசி மூச்சுக் காற்றின் ஓசை. மனம் என்னவோ செய்யத் துவங்கியது. வந்ததிலிருந்து மூன்றுமுறை கேட்டுவிட்ட ஓசைகள் அவை.

“மேலயே சுத்திக்கிட்டு இருக்குடா… முடில!”

அவன் கபிலனிடம் சொன்ன கடைசி வாக்கியம் இது. இவ்விடத்தில் அந்த வாக்கியத்தை முழுவதுமாக கபிலன் அளவில் யாருமே புரிந்துகொள்ள இயலாது. மீண்டும் அவன் தலைக்கு மேல் பார்த்தான். அதே சுழற்சி கோபத்துடன் சுழன்று கொண்டிருந்தது.

“மச்சான் செண்டன்ஸ் கிடைச்சோனே செத்துறணும்… மாச கணக்கா வருச கணக்கா தூக்குக் கயிறுக்குக் காத்திருக்கறது இருக்கே… அதுக்கு சாவு எவ்ளவோ தேவலாம்…”

மீண்டும் தனசேகரின் குரல். பசுமையான மரணம் அது. நடந்து சில மணிநேரங்கள் மட்டுமே. கபிலன் மெல்ல கண்களை மூடினான். வெளியே உள்ள இருளுக்கும் உள்ளே தெரியும் இருளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. சிறைக் கம்பிகளை நகத்தால் கீறும் சத்தமும் கம்பிகளை உலுக்கும் சத்தமும் காதிற்கு சமீபத்தில் கேட்டது.

“ஏய்… செத்துருவம்டா… செத்துருவோம்… முடிலமா… அம்மா தாயே! காப்பாத்திரும்மா…”

எங்கோ தூரத்தில் ஏதோ ஒரு சிறைக்குள்ளிருந்து கேட்கும் சத்தமிது. விட்டுவிட்டு இப்படிப் பல குரல்கள் அவ்விடத்தின் சூன்யத்தை இசைத்துக் கொண்டே இருக்கும். சிறைக்கம்பியின் ஓரம் சாய்ந்துகொண்டே வலது கையை கம்பிக்கு வெளியில் தரையில் வைத்தான். எங்கோ காலடி சத்தங்கள் கேட்டுக் கொண்டே இருக்கின்றன. கண்கள் அப்படியே மயங்குகின்றன. காட்சிகள் பலகோணங்களுக்குப் பிளக்கின்றன. தூரத்தில் வினோஜா நடந்து வருகிறாள். அவள் தன் தலையைக் கையில் பிடித்திருக்கிறாள். சிறை இருளுக்குள்ளிருந்து மேலே பார்த்தேன். சுழற்சியில் சிவப்பு வர்ணம் சேர்ந்திருந்தது.

நீண்ட இருக்கையின் கோடியில் வினோஜாவின் அறுப்பட்டக் கழுத்துத் தொங்கிக் கொண்டிருந்தது இன்னமும் உயிர்ப்புடன் நினைவில் உள்ளது. இப்பொழுது வீட்டிற்குப் போனாலும் அவனால் அடையாளம் காட்ட முடியும். கபிலனும் வினோஜாவும் தொலைக்காட்சியில் சன் மியூசிக் பாடல் கேட்டுக் கொண்டிருந்தபோதுதான் அவன் உள்ளே வந்தான். அவன் வழக்கமாக வரும் நேரம் அல்ல அது. அவன் வரும்போது கபிலனால் அவனுடைய நெடியை அறிந்து கொள்ள முடியும். அது ஒரு வகையான சுருட்டு வாடை. அன்றும் அந்த நெடியை அவனால் மிக நெருக்கத்தில் உணர முடிந்தது. அவன் அப்படிச் சட்டென்று அவர்களிடையே நுழைவான் என்று கபிலன் எதிர்பார்க்காத நேரத்தில் கத்தியால் வினோஜாவின் கழுத்தைப் பதம் பார்த்தான். அவள் முற்றத்தை வெறித்தப்படியே தலையை கபிலனின் வலதுபக்க தோள்பட்டையில் சாய்த்திருந்ததால் அவனுக்குக் கழுத்தைக் குறிப்பார்க்க வசதியாக இருந்தது. இத்தனைக்கும் அவள் நேராகத்தான் அமர்ந்து கொண்டே அவளுடைய தொழிற்சாலைக்கு அணியும் சட்டையின் ஒரு பொத்தானைத் தைத்துக் கொண்டிருந்தாள். கபிலன்தான் அவளை வலுக்கட்டாயமாக தன் தோளின் மீது சரிய செய்தான்.

அவன் வாழ்க்கையில் இதுவரை கபிலன் அப்பேற்பட்ட பாவத்தைச் செய்ததே இல்லை. இப்பொழுதும் வினோஜாவின் கண்கள் அவனுக்குள்ளிருந்து அதை மட்டுமே மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கின்றன. அவனுடைய நடமாட்டம் இருப்பதை கபிலன் ஏன் எச்சரிக்கவில்லை அதனை ஒரு பொருட்டாக கருதவில்லை என்று அவள் கேள்விகளை உருவாக்கியபடியே இருக்கிறாள்.

“சார், என்னைக் கொன்னுற முடியுமா? கொஞ்சம் சொல்லுங்களென்…”

எதிரில் அப்படி யாரும் இல்லை. கபிலனின் வாய் சொந்தமாகவே யாரிடமோ பேசிக் கொண்டது. ஒருவேளை அந்த வரிகள் எப்பொழுதுதாவது யார் மனத்தையாவது தூண்டலாம்; அதன் வழி தனக்கு முன்னமே மரணம் நிகழலாம் என்று அவன் வாய்க்குத் தெரிந்திருக்கக்கூடும். காற்றில் கபிலனின் வாக்கியங்கள் குரல்கள் எப்பொழுதும் அலைந்து கொண்டே இருக்கின்றன.

பக்கத்து புளோக்கில் அடுத்த வாரம் தூக்கிலிடப்படப்போகும் ஒருவனுக்கு குர்ஆன் வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஒரு பிரிவிற்கு பத்து அறைகள் எனப் பிரிக்கப்பட்டிருந்த சூன்யவெளிக்கு அப்பால் சதா குரல்களும் அழுகைகளும் கேட்டுக் கொண்டே இருக்கும். மரணம் என்கிற மகா உண்மையை எதிர்க்கொள்ள மனத்திடம் தேவை. தனசேகர் நேற்று தனது கடைசி சாப்பாட்டை நாவில் வைத்து ருசிக்கும்போது என்ன நினைத்திருப்பான்? மனம் சட்டென பதற்றம் கொண்டது. மீண்டும் கண்களை இறுக மூடினான். இருளுக்கு நமது இருப்பைத் தொலைக்கும் சக்தி உண்டு. கபிலன் தன் இருப்பைத் தொலைக்க நினைக்கிறான். தான் இங்கு இல்லை. தான் ஒரு கோவிலில் இருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டான். பூஜை நடந்து கொண்டிருக்கிறது. சாம்பிராணி வாசம் அவனைச் சூழ்கிறது. மணியடிக்கும் ஓசை எழுகிறது. அப்படியே பக்தியில் மூழ்கலாம்.

கபிலன் வேலை செய்யும் தொழிற்சாலையில் ஒரு ஆப்பரேட்டராகப் பணியைத் துவங்கியவள் வினோஜா. அடிக்கடி பார்ப்பவர்களின் மீது ஒரு மேலான கவனம் தோன்றும் தருணம் என்பது அதிசயமான நிகழ்வுதான். காலை 8.00 மணிக்குத் துவங்கும் வேலை 5.00 மணிக்கு முடியும்வரை இந்த மனம் நான்கு சுவருக்குள்ளே என்னவெல்லாம் கற்பனை செய்து கொள்கிறது. இதுதான் உலகம் என்கிற நிலைக்கு கவனம் குவிந்து சுருங்கியும் விடுகின்றது. அச்சிறிய உலகத்தினுள்ளே சதாநேரமும் அவன் கண்களுக்குள் வினோஜா அகப்பட்டுக் கொண்டே இருந்தாள்.

மீண்டும் வினோஜாவின் கண்கள் அவனுக்குள் விழித்துக் கொண்டு அவன் மனத்தையே கவனித்துக் கொண்டிருக்கின்றன.

“அவன் வருவான் சார்… அவன் ஒரு பேய் சார்… இரத்தம் பார்க்காம போவ மாட்டான்…”

அவனை தான் கொல்ல வேண்டும் எனப் புலம்பிக் கொண்டிருந்தான். கொன்றே ஆக வேண்டும். தனக்கு முன்னே அவனுடைய மரணத்தைப் பார்த்துவிட வேண்டும் எனத் துடித்தான். இது பழிவாங்கல் அல்ல; சமன்படுத்துதல். வினோஜாவின் கண்கள் அவனிடம் கேட்கும் கோரிக்கையும் அதுதான். அவன் நிச்சயம் இங்கு வருவான் என்று கபிலனால் ஊகிக்க முடிகிறது. சில நாள்களாக அந்தச் சுருட்டு வாடையை அவனால் ஓரளவிற்கு அறிய முடிகிறது. எங்கோ தூரத்திலிருந்து காற்றில் வீசியப்படியே இருக்கின்றது.

“சார், அவன் வந்தா சொல்லுங்க. என்னய பார்க்க வருவான். நான் இங்க படற கஷ்டம் அவனுக்குப் பெரிய மகிழ்ச்சி சார்… அவன் ஒரு கிறுக்கன்…”

எதிர் சிறையில் தெரிந்த உருவத்திடம் கபிலனின் வாய் பேசிக் கொண்டிருந்தது. நன்றாக உற்றுக் கவனித்தான். அச்சிறையின் மெல்லிய இருளில் யாரோ அமர்ந்திருப்பதைப் போன்றே தெரிந்தது. கபிலனின் அப்பாவின் உருவமேதான். தொப்பை வயிறும் தாடியும் சிவந்த கண்களும். நிச்சயமாக அப்பாத்தான். உடல் சுருங்கி மனம் படப்படத்தது.

“என்னடா எழவெடுத்தவன…ரொம்ப ஆட்டமா? அடிச்சி கால உடைக்கட்டா…?”

அதே குரல்; அதே தொனி. மனம் நடுங்கி சிறையிலேயே அழத் துவங்கினான். அவனையறியாமல் சிறுநீர் தரையில் வடிந்து ஓடிக் கொண்டிருந்தது. மீண்டும் உற்று நோக்கினான். அச்சிறை காலியாகத்தான் இருந்திருக்க வேண்டும். வாளியில் இருந்த நீரை அள்ளி தரையில் ஊற்றினான். மூத்திர நெடி எங்கும் பரவிக் கொண்டிருந்தது, மேலே, சுழல் உக்கிரமடைய துவங்கியது. நினைவுகளின் கோபம் அது. மீண்டும் ஒரு வாளி தண்ணீரைத் தரையில் ஊற்றியடித்தான்.

அச்சிறைக்குள்ளிருந்து அப்பா மீண்டும் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவருடைய பார்வையிலிருந்து தப்பிப்பது அத்தனை எளிதல்ல. ஒரு சாக்கில் அவனை நுழைத்து தலைக்கீழாகக் கட்டி வைத்து வாழை மட்டையில் அடிக்கும்போது அவர் உச்சரிக்கும் ஒரே சொல் “எழவெடுத்தவனே!” என்பது மட்டும்தான்.

“சார் எங்கப்பா அங்க இருக்காறா சார்? கொஞ்சம் பாத்து சொல்லுங்களேன்…”

“டேய்…வாய மூடுடா… பைத்தியக்கார ஆஸ்பித்திரிக்கு அனுப்ப வேண்டியத எல்லாம் இங்க கொண்டு வந்து போட்டுடானுங்க…முடிலடா மண்டைக்கு மணி அடிக்குது…”

பக்கத்து சிறையில் உள்ள ஜோன். தன் தங்கையைக் கொலை செய்துவிட்டு வந்தவன். கொலை தொடர்பான குற்றவுணர்ச்சி அவனுக்கும் உண்டு. அப்பொழுதெல்லாம் கபிலனிடம் சொல்லி அழுவான். அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு உன் தங்கையின் நினைவுகள் உன்னைச் சுற்றி வட்டமிட்டப்படியேத்தான் இருக்கும் என்று கபிலன் சொன்னதுண்டு. நீ அதனை நினைக்க நினைக்க அது குரூரமாக மாறும். பின்னர், அதுவே உன்னை நீ அழித்துக் கொள்ளத் தூண்டும் என்று பலமுறை அறிவுரைத்துவிட்டான். அவன் பிதற்றுவது தன் மீதான வெறுப்பை அல்ல என்பதை கபிலனால் உணர முடிகிறது. வினோஜாவின் நினைவுகள் தன் அறையைச் சுற்றி போட்டிருக்கும் வட்டம் இலேசான இரத்த நிறத்தில் சுழன்று கொண்டே இருப்பதை அவனால் மீண்டும் உணர முடிகின்றது.

“வினோஜாமா… நான் இல்லடா… நான் ஒன்னும் செய்யலடா… அவுங்கத்தான் நம்பல. நீயுமா என்ன நம்பல?”

தூரத்தில் அவன் வந்து கொண்டிருப்பதைக் கபிலனால் உணர முடிந்தது. சுருட்டு வாடை மெல்ல சிறையின் அறையைச் சூழ்ந்து கொண்டிருந்தது. வாளியின் நுனியை உடைத்து அதன் கூர்மையாக இருந்த கிழித் துண்டை எடுத்து தன் கையில் தயாராகப் பிடித்துக் கொண்டான். அப்பாவும் அவனும் சேர்ந்து இப்பொழுது கபிலனின் அறைக்குள் நுழையலாம் என யூகித்துக் கொண்டான். சுவரில் இருந்த சிறுநீர் வீச்சம் மண்டைக்குள் எதையோ செய்து கொண்டிருந்தது. மேலேயிருந்த வினோஜாவின் நினைவுகள் இப்பொழுது ஒரு பேரலைக்குத் தயாராகிக் கொண்டே இராட்சத வேகத்தில் சுழன்று கொண்டிருந்தன.

“வினோஜா… அன்னிக்கு நீ சொன்ன உனக்கும் அந்தப் பங்களாவுக்கும் கடன் பெரச்சன மட்டும்தான்… வேற எந்தத் தொடர்பும் இல்லன்னு… நான் நம்பனனா இல்லயா? எனக்கு அது மட்டும் சந்தேகமா குழப்பமா இருக்கு வினோஜா… அன்னிக்கு இன்னொரு ஆளோட நடமாட்டம் இருக்குன்னு நான் மட்டுமில்ல பிள்ள… பக்கத்து வீட்டுக்காரனும் சொன்னான… அத யாருமே நம்பலயே…” என்றவாறு கபிலன் எதிர் சிறையைக் கவனித்தான். ‘அவன்’ நின்று கொண்டிருந்தான்.

-கே.பாலமுருகன்

வெண்பலகை குழுவிற்காக எழுதப்பட்ட சிறுகதை.

Share Button

About The Author

One Response so far.

  1. Ramasamy says:

    வாழ்த்துகள் நண்பரே