குறுங்கதை: குமாரி உணவகம்

பள்ளியில் ஒன்றாய்ப் படித்தத் தோழி நான் வேலை செய்யும் ஈப்போ நகரில் புதிதாக உணவகம் தொடங்கியிருப்பதாகச் சொல்லியிருந்தாள். பாலப்பம், தோசை, இட்லி எனக் காலை பசியாறைக்கு மட்டும் திறந்திருக்கும் என்றாள்.

“எப்பவாவது வேலைக்குச் சீக்கிரம் வந்துட்டனா கண்டிப்பா கடைக்கு வா…” என்று தினமும் குமாரி வாட்சாப் அனுப்பிவிட்டாள். கடையில் அவள் சுட்ட தோசை, இட்லி படங்களையெல்லாம் நாள்தோறும் அழகாகக் ‘கோலாஜ்’ வடிவிலான படங்களாக உருவாக்கி அனுப்பி வைப்பாள். ‘தோசைலாம் ஒரு பெரிய ‘மெனுவா?’ என நொந்து கொள்வேன். ஒருமுறை வாழ்த்துகள் எனச் சொன்னதோடு இன்னுமும் கடைக்குப் போக வேண்டும் எனத் தோன்றவில்லை.

‘லோக்டவுனில்’ இருந்தபோது தினமும் ‘கடை இன்று அடைப்பு’ என மட்டும் தகவல் அனுப்பிக் கொண்டிருந்தாள். ஆறுதல் சொல்லவும் முனையவில்லை. இதுவரை கடைக்கே போகாத எனக்கெதற்கு இந்தத் தகவல் என விட்டுவிட்டேன்.

நேற்று முழுவதும் எப்படி இருக்கிறாய், கடையை மீண்டும் திறந்துவிட்டாயா எனத் தொடர்ந்து மூன்றுமுறை வாட்சாப் அனுப்பியும் அவள் அதைப் பார்க்கவே இல்லை. மனம் என்னவோ போல் ஆகிவிட்டது. இடைநிலைப்பள்ளியில் படிக்கும்போது அம்மா சுட்டுத் தரும் பலகாரங்களைத் திருட்டுத்தனமாக எல்லாரிடமும் பகிர்ந்துவிட்டு அரை வயிறாக வீட்டுக்குப் போய்விடுவாள். 20 சென்க்கு இரண்டு வாழைப்பழம் பலகாரம் கிடைக்குமெனச் சிற்றுண்டி வரிசையில் நின்று தவித்துக் கொண்டிருந்த காலமது. குமாரியின் சாப்பாடு டப்பாதான் எங்களுக்குச் சிற்றுண்டி.

இன்று காலையில் முதல் வேலையாக விடிந்ததும் அவள் சொன்ன இடத்திற்குச் சென்றேன். ஒருவேளை கடை திறக்கப்பட்டிருந்தால் ஒரு பாலப்பம் சாப்பிடலாம் என முடிவெடுத்திருந்தேன். அவள் கொடுத்த முகவரியில் பெரிய சீன உணவகம் தான் இருந்தது. சந்தேகத்துடன் ‘கொய் தியோ’ சமைத்துக் கொண்டிருந்த சீன அக்காவிடம் விசாரித்தேன். பக்கத்தில் இருந்த ஒரு சிறிய தள்ளு வண்டியைக் காண்பித்துப் புன்னகையுடன் இதுதான் குமாரி உணவகம் என்றார். இன்று விடுமுறை, கடையைத் திறக்கவில்லை என்று கூறினார். சாமி படம் ஒட்டப்பட்டிருந்த இடத்தில் ஓர் அகல்விளக்கும் இருந்தது.

இனி தினமும் காலையில் பாலப்பம் சாப்பிட்டுவிட்டுத்தான் வேலைக்குப் போவதாக முடிவெடுத்துக் கொண்டேன்.

-கே.பாலமுருகன்

Share Button

About The Author

Comments are closed.