சிறுகதை: கண்ணாடி

1

2004: காலை 11.15

உடைந்ததன் அடையாளமாய் வலது மேற்மூலையில் ஒரு வளைவு கோடு. அதற்கு நடுவில் அம்மாவின் சிவப்புப் பொட்டுகள். பின்னாளில் அதனைச் சுத்தம் செய்ய வேண்டும் என அமுதாவிற்குத் தோன்றவில்லை. பழைய பழுப்புநிற அலமாரிக்குச் சற்றும் பொருந்தாமல் ஆங்காங்கே திட்டுத் திட்டாய் பரவிக் கிடக்கும் வெண்மை பூத்த தோற்றதுடன் கண்ணாடி பலமில்லாமல் கதவோடு ஒட்டிக் கிடந்தது. நின்றால் இடுப்பளவு மட்டுமே காட்டும். அதிலும் சற்றே குனிந்துதான் முகத்தை நன்றாக உற்று நோக்க வேண்டியிருக்கும்.

அம்மாவின் அறைக்கு வரும்போதெல்லாம் அந்தக் கண்ணாடியில் நின்று அமுதா சிறிது நேரம் தன்னைப் பார்த்துக் கொள்வாள். அதன் முன்னே அப்படி நிற்கும்போது காலத்தைத் தாண்டிச் செல்லும் ஒரு போதையுணர்வு ஏற்படும். வீட்டுச் சுவர்கள் விரிந்து பலகை சுவர்களாக மாறி அம்மா வெளுத்தக் கைலியின் இடதுபுற மடிப்பை இழுத்து இடுப்பில் செருகிக் கொண்டு ஈரச் சட்டையுடன் அறைக்குள் நுழைவதைப் போன்று கற்பனை செய்து கொள்வாள். அம்மாவைக் காலம் இன்னமும் கரைக்காமல் சேமித்து வைத்திருப்பது போலவே அக்கண்ணாடி வித்தைக் காட்டிக் கொண்டிருந்தது.

இதே அறையின் கட்டிலில் தன்னைப் படுக்க வைத்துவிட்டு அரண்கள் போல இரண்டு நீண்ட தலையணைகளை இரண்டு பக்கங்களிலும் வைத்துவிட்டு பாட்டி வீட்டு வேலைகள் செய்ய வெளியே போகும்போது “அமுதா கண்ணாடிய பாருங்க… அம்மா வருவாங்க…” என்றுத்தான் பாட்டி சொல்லிவிட்டுப் போவார். அமுதாவின் நான்கு வயதுவரை அவள் இந்த அறைக்குள்தான் உறங்குவாள். சன்னலைத் திறந்து வைத்திருந்தால் வீசும் மெல்லிய காற்றுக்கே அலமாரியின் கதவு திறந்து கொள்ளும். அதை அம்மா காட்டும் விளையாட்டைப் போலவே அமுதா கண்டு இரசிப்பாள்.

கட்டிலின் காலோடு கட்டி வைக்கப்பட்ட சக்கர வண்டியை முடிந்த மட்டிலும் இழுத்துக் கொண்டு கண்ணாடிவரை சென்று அமுதா தனக்கு எதிரே தெரியும் தன் உருவத்தைச் சுரண்டிக் கொண்டே இருப்பாள். முகத்தைக் கண்ணாடியோடு ஒட்டி வைத்து நாக்கால் அதனைச் சுவைப்பாள். அமுதாவின் எச்சில் கண்ணாடியில் வலிந்து பின்னர் காய்ந்துவிடும்.

தனக்குப் பிடிக்காத விளையாட்டுப் பொருள்களை அவள் தூக்கி வீசும் இடமும் அந்தக் கண்ணாடிதான். வன்முறையின் உச்சத்தைக் காட்டும் இடம் கண்ணாடித்தான் எனக் குழந்தைகளும் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என பாட்டி நொந்து கொள்வார். வீட்டில் அப்பாவின் கோபம் உச்சம் செல்லும்போதெல்லாம் ஒரு கண்ணாடி பொருள் நிச்சயம் உடையும். அது கண்ணாடி குவளையோ அல்லது சாப்பாட்டுத் தட்டாகவோ இருக்கும். அமுதா தூக்கி வீசும் விளையாட்டுப் பொருள்கள் பலமில்லாமல் கண்ணாடியை மென்மையாகத் தொடுமே தவிர வேறெந்த பாதகத்தையும் உருவாக்கியதில்லை.

“அமுதா அந்தக் கண்ணாடி முன்ன நின்னு என்ன அழகு பார்த்துக்கிட்டு இருக்கீயா? வெளில வா… உங்கம்மா மாதிரி பண்ணாத… ஏதோ தாய் வீட்டு சீதனம் மாதிரி அந்த அலமாரிய கூடவே கொண்டு வந்துட்டா… நீயும் அத கட்டிக்கிட்டு அழாத…” பாட்டியின் வாடிக்கையான பிதற்றல். ஓய்ந்து முடிவதற்குள் அறையிலிருந்து வெளியேறவில்லை என்றால் அடுத்த வசைகளை அடுக்கித் தயாராக வைத்திருப்பார். அமுதா கோபத்துடன் வெளியில் வந்தாள். கால்களைத் தரையில் பலமாக அடித்துக் கொண்டே பாட்டியைக் கடந்து சென்றாள்.

“உன்ன என் தலையில கட்டிட்டு உங்கம்மா போய்ட்டா… இந்த வயசுல எனக்கு இது தேவையா?” பாட்டி புலம்பிக் கொண்டே நாற்காலியில் கால் மேல் காலிட்டுக் கொண்டு கையில் கொரில்லா பொம்மையை வைத்து ஆராய்ந்து கொண்டிருந்த தம்பியின் கால்களைத் தட்டிவிட்டாள்.

“ஒனக்கு இந்தப் பொம்மத்தான் ஒரு கேடு…!”

அமுதா வரவேற்பறைக்கு வந்து தொலைக்காட்சி பார்ப்பதைப் போல பாவனைக் காட்டிக் கொண்டிருந்தாள். வீட்டு வேலைகள் அனைத்தும் காலையிலேயே செய்து முடித்துவிட்டாள். அம்மாவின் அறையில் அப்பா ஒருமுறை காட்டிய பழைய புகைப்பட ஆல்பத்தைத் தேடித்தான் உள்ளே சென்றிருந்தாள். நாளை குடும்ப உறுப்பினர்கள் அடங்கிய மர வடிவத்திலான வரைப்படம் ஒன்றனை செய்து புறப்பாட ஆசிரியரிடம் அனுப்பியாக வேண்டும். மீண்டும் அம்மாவின் அறைக்குள் சென்றால் பாட்டி திட்டுவார். அமுதா குடும்ப மர வரைப்படத்தை வரைந்துவிட்டாள். அதில் புகைப்படங்களை ஒட்டியாக வேண்டும்.

அம்மா இறந்த பின்னர் அவருடைய அறைக்குள் அப்பாவும் செல்வதில்லை. அம்மாவின் நினைவுகள் அழுத்துகின்றன எனப் பயந்து ஒரு நாள் அறையிலிருந்து பதறியடித்துக் கொண்டு வந்துவிட்டார். அன்று முதல் அப்பா வரவேற்பறையில் மெத்தையைப் போட்டுப் படுத்துறங்க ஆரம்பித்துவிட்டார். அமுதாவும் பாட்டியும் மட்டும்தான் சில வருடங்கள் அங்குப் படுத்திருந்தனர். இரவில் அமுதா ஏதோ சில குரல்கள் கேட்பதாகச் சொல்லி அழத் தொடங்கிய பின்னர் அந்த அறை முழுவதுமாக அடைப்பட்டது.

“அம்மாவோட ஆவி இந்த வீட்டுல இருக்கா?” இந்தக் கேள்வியை அமுதாவிடம் தம்பிகள் கேட்காத நாள் இல்லை. அதைக் கேட்டு ஆரம்பத்தில் அமுதாவிற்குச் சந்தேகமும் பயமும் அடர்ந்திருந்தன. அதைக் கண்டுபிடிக்கலாம் என 20 சென் சில்லறை காசை வைத்துப் பேயை அழைக்கும் விளையாட்டை விளையாடி கொண்டிருந்தபோது பேய்க்குப் பதிலாக பாட்டியிடம் நடுமுதுகில் அடி வாங்கிய போதுதான் அமுதாவிற்குப் பேயும் இல்லை பிசாசும் இல்லை என்கிற தெளிவே பிறந்தது.

“கா, அந்த ரூம்புக்குப் போய் என்ன பண்ண? பேய் வெளையாட்டு வெளையாண்டீயா?”

ஐந்து வயதாகியும் இன்னும் பால் புட்டியை வாயில் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு பேசிய தம்பியின் கன்னத்தைக் கிள்ள வேண்டும் என மட்டுமே அமுதாவிற்குத் தோன்றியது. அவனிடம் வாதம் செய்ய அவள் விரும்பவில்லை. அம்மாவின் வாசமும் கண்ணீரும் அவளது மனத்திற்குள் எப்பொழுதும் ஒரு மாயையைப் போல பிசுபிசுத்துக் கொண்டே இருந்தன.

பாட்டி மதிய உணவிற்குப் பின்னர் உறங்கும் நேரம் வரும். அக்கணத்தில்தான் அம்மாவின் அறைக்குள் மீண்டும் நுழையத் திட்டமிட்டாள். கடிகார முள்கள் முட்டிகாலிட்டு ஆயாசமாக நகர்ந்து கொண்டிருந்தன. அதனைப் பொறுமையுடன் பார்த்துக் கொண்டிருக்க அமுதாவிற்கு இருப்புக் கொள்ளவில்லை.

“கா… பாட்டி தூங்கிட்டாங்க…”

மதிய உணவு கொடுத்த அரை மயக்கத்தில் தம்பி மறவாமல் அதனை ஒப்புவித்தான். சாப்பிட்ட களைப்பு அமுதாவிடமும் இருந்தது. எழுந்து பாட்டியின் மூச்சிரைப்பை கவனித்தாள். பாட்டி இரும்பும் போதெல்லாம் சட்டென விழித்துவிட்டுச் சுற்றும் முற்றும் பார்க்கும் பழக்கமுடையவர். பாட்டியின் குறட்டை ஒலி சமமான இரைப்பில் இருந்தால் அதுதான் பாதுகாப்பான தருணம் என அமுதாவிற்குத் தெரியும். மெல்ல அடியெடுத்து வைத்து அம்மாவின் அறைக்கதவைத் திறந்தாள். தம்பிகள் தொலைக்காட்சியில் கார்ட்டூன் உலகத்தில் உலாவிக் கொண்டிருந்தார்கள். அதில் ஒருவன் அப்படியே தரையிலேயே தூங்கிவிட்டிருந்தான்.

அமுதா அறையின் விளக்கைத் தட்டவில்லை. விளக்கு கொசு சத்தமிடுவதைப் போல கொய்ங்ங்ங் என்கிற ஒலியைக் கிளப்பிவிடும். அதனால் பாதி இருளுக்குள்ளே கட்டிலின் கீழே அடைத்துக் கொண்டிருந்த பெட்டிகளை மெதுவாக நகர்த்தினாள். பழைய புகைப்பட ஆல்பம் அதனுள் ஒரு பெட்டியில்தான் இருக்கும். தூசு மண்டியிருந்த பெட்டிகள் கட்டிலின் கீழ்ப்பகுதியில் சிலந்தி வலைகளுடன் உறவு கொண்டிருந்தன. அதனைக் கையில் உடைத்தெறிந்து பெட்டிகளை ஒவ்வொன்றாக அமுதா வெளியில் எடுத்தாள். பாசைகள் சில அலறியடித்துக் கொண்டு திக்குத் தெரியாமல் சிதறி ஓடின. அமுதா பாசைகளுக்குப் பயப்படமாட்டாள். அதைக் கையில் பிடித்துப் பதறாமல் தூக்கி தூரம் வீசும் துணிச்சல் உடையவள். ஒரு பன்னிரெண்டு வயது சிறுமியின் வயதைத் தாண்டிய அசாத்தியமான குணங்கள் அவளிடம் இருந்தன.

கடைசி பெட்டி வரைக்கும் கட்டிலுக்கடியின் இருளைத் துழாவி தேடிவிட்டாள். அந்த ஆல்பம் மட்டும் தென்படவே இல்லை. களைத்து அப்படியே கட்டிலின் தடுப்புப் பலகையில் சாய்ந்து கொண்டே அலமாரிக்கு மேலே பார்த்தாள். அது அம்மாவின் பழைய அலமாரி. மேலே சில மூட்டைகள் தெரிந்தன. அம்மூட்டைகளின் கணம் தாளாமல் அலமாரி பிதுங்கி திணறிக் கொண்டிருப்பது போலவே அமுதா நினைத்துக் கொண்டாள்.

‘ஒருவேள இந்த மூட்டைக்குள்ள இருக்குமோ?’ மனம் அப்படி நினைக்கத் தோன்றினாலும் திடீரென கண்ணாடியின் பக்கம் போக அமுதா தயங்கினாள். முதலிலிருந்து கண்ணாடி ஏதோ தண்ணீரின் மேற்பரப்பைப் போல அசைகிறதோ என அமுதா சந்தேகித்துக் கொண்டிருந்தாள். சற்று முன்பு தொலைக்காட்சியில் பார்த்த ‘நேசனல் ஜோகராப்பி’ கடல் சுறாவைப் பற்றியது. அதனால் என்னவோ கண்ணாடி நீரைப் போன்று அலம்புவதாக நினைத்துக் கொண்டாள்.

புகைப்பட ஆல்பம் எப்படியும் தேடியாக வேண்டும். வேறு வழித் தெரியவில்லை. அந்தப் புகைப்பட ஆல்பமில்தான் அம்மா மிகவும் அழகாகத் தெரிவார். வீட்டுச் சுவரில் இருக்கும் அம்மாவின் மாலையிட்டப் புகைப்படம் அவளுக்குப் பிடிப்பதில்லை. அதைப் பார்ப்பதையும் அவள் தவிர்த்துதான் வந்தாள். அவளுக்கு வேண்டியது அம்மாவின் இளமைக்காலப் படங்கள். அதுவும் அம்மா சிவப்புப் பொட்டு வைத்திருக்கும் படம் அவள் ஞாபகத்தில் அப்படியே இருக்கிறது. அப்பா ஒருமுறை காட்டியபோது அப்படத்தையும் அலமாரி கண்ணாடியின் கோடியிலுள்ள பொட்டுகளையும் அவளே உருவகித்துக் கொண்டாள்.

அறையில் இருந்த நாற்காலியை நகர்த்தி அலமாரியின் பக்கம் கொண்டு வந்தாள். நாற்காலி போட்ட சிறுமுனகலில் பாட்டியின் குறட்டை இரைப்பின் சத்தம் மாறியது. அடுத்து அவருக்கு விழிப்பு வரக்கூடும் எனப் பயந்தாள். அதற்குள் நாற்காலியில் ஏறி மூட்டையைத் தொட முயன்றாள். அவளது உயரம் போதவில்லை. கால் விரல்களை ஊன்றி குதிக்காலை நன்றாக உயர்த்தியும் எட்டவில்லை. மெல்ல அவளது கைகள் கண்ணாடியைத் தழுவிச் சென்றது.

2

இரவு 8.25

இரவு வரை அமுதாவை அனைவரும் தேடிக் களைத்துவிட்டனர். கடைசிவரை அவள் எங்குப் போனாள் என யாருக்குமே தெரியவில்லை. அக்கம் பக்கம், பக்கத்து லோரோங் வரை அமுதாவின் அப்பாவும் அவரின் நண்பர்களும் தேடியும் அவள் கிடைக்கவில்லை.

“அமுதா அக்கா அம்மா ரூம்புக்குள்ளத்தான் போனாங்க…” என்பது மட்டும்தான் தம்பியின் ஒரே வாக்குமூலமாக இருந்தது. அதை வைத்துக் கொண்டு எங்குத் தேடுவது எனக் குழப்பமாக இருந்தது. தம்பி சொன்னதை யாரும் கேட்டதாகத் தெரியவில்லை. அப்பா மட்டும் அறைக்குள் நுழைந்து தேடிப் பார்த்து வந்துவிட்டார்.

“வெளில போனுச்சான்னு தெரில… தூங்கிக்கிட்டே இருங்க… உங்கனாலத்தான்…!”

அப்பா பாட்டியைத் திட்டிக் கொண்டே காவல்நிலையத்திற்குக் கிளம்பினார். தம்பிகள் பயந்து அரண்டு நாற்காலியில் ஒன்றாக அமர்ந்திருந்தனர். அவர்களின் விழிகளில் பயம் உள்ளார்ந்து கண்ணீரை அனைக்கட்டி வைத்திருந்தது. அதற்குள் பக்கத்து வீட்டு மாரியம்மா அக்காளும் அங்கு வந்துவிட்டாள்.

“மா… நான் பையனுங்கள கூட்டிட்டுப் போறன்… நீங்க இருக்கற பதற்றத்துல இவனுங்க தொல்லையா இருப்பானுங்க…” மாரியம்மா அக்கா அவளுடைய பிள்ளைகள் மூவரையும் அழைத்துச் சென்றுவிட்டாள். வீடு மீண்டும் மௌனமானது.

பாட்டி அழுது சோர்ந்துவிட்டார். அவர் வயதுக்கு இத்தனை புலம்பல்களைத் தாங்கிக் கொள்ள சக்தி இல்லாமல் பலவீனமாக கைகள் நடுங்க அமர்ந்திருந்தார்.

“என்ன பெத்த மவ… எங்கடி போய்ட்டே… மகராசி… வந்துருடியம்மா… உங்கம்மா உன்ன பெத்துட்டுப் போய்ட்டா… நீயும் போய்றாதடி…”

பாட்டியின் புலம்பல் மீண்டும் முதல் கட்டத்திலிருந்து துவங்கியது. மாலை 3 மணியிலிருந்து அமுதா வீட்டில் இல்லாததை உணர்ந்த பாட்டி வீடு முழுவதும் தேடி அயர்ந்து அப்படியே அமர்ந்துவிட்டாள். அப்பொழுது புலம்பலைத் துவங்கியவள் இப்பொழுது ஓய்ந்து மீண்டும் தொடங்கிவிட்டாள். அமுதாவின் அந்த ஏக்கமிக்க கண்கள் பாட்டியைத் துன்புறுத்திக் கொண்டிருந்தன. வழக்கமாகவே அமுதாவின் கண்கள் அவளுடைய அம்மாவை நினைவுப்படுத்தும் வகையில் ஒரே மாதிரி தோற்றமுடையவை. ஏக்கமிகு கண்கள். சட்டென அக்கண்களைப் பார்க்கும் யாருக்குமே கோபம் இருந்தால்கூட உடனே காணாமலாக்கும் ஆற்றல் அக்கண்களுக்குள் இருந்தன. அதனால்தான் பக்கத்து வீட்டுப் பையன்களை அமுதாவிற்குப் பேச்சுத் துணையாக இருக்கும் என வளர்க்கக் கேட்டுக் கொண்டாள். தம்பிகள் மூவரும் அமுதாவின் சிறுவயதிலிருந்து உடன் வளர்ந்தவர்கள்.

“என் ராசாத்தி… போனதிசை எங்க… என்ன பெத்த என் தாயி எங்கன கெடந்து தவிக்கிறாளோ?”

ஏறக்குறைய நள்ளிரவை எட்டிக் கொண்டிருந்தது. காவல்நிலையம் சென்ற அப்பா இன்னும் வரவில்லை. பாட்டி கண்கொட்டாமல் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தாள். கண்களில் உறக்கம் நிலைக்கொள்ளவில்லை. அமுதா வந்துவிடுவாள் என வாசற்கதவையே கவனித்துக் கொண்டிருந்தார். வீட்டின் திடீர் மௌனம் அவளை மெல்ல தின்று கொண்டிருந்தது.

3

நள்ளிரவு 2.10

அவள் அம்மாவின் அறைக்கதவைத் திறந்து வெளியில் வந்தாள். பாட்டி வாசலை பார்த்தப்படியே அமர்ந்திருந்தார். உறக்கத்திற்கும் விழிப்பிற்கும் நடுவில் ஊசலாடிக் கொண்டிருந்தன அவரது கண்கள்.

“பாட்டி!”

அமுதாவின் குரல் போலவே சத்தம் வீட்டிற்குள்ளிருந்து வந்தபோது பாட்டி அதிர்ச்சியில் திகைத்தார். சத்தம் கேட்டத் திசைக்குத் தயக்கத்துடன் திரும்பினார்.

“யாரு அது? அமுதாவா?”

பாட்டி அமுதா கிடைத்துவிட்டாள் என மெல்ல எழுந்து ஆவேசத்துடன் அவளை நோக்கி ஓடினார். அவரின் மேல்துண்டு நழுவி தரையில் விழுந்தது.

அவளின் அருகில் சென்றதும் கண்கள் இருண்டிருப்பதைக் கண்டு சட்டென அதிர்ச்சியில் கைகளை உதறிக் கொண்டு பாட்டி தூக்கத்திலிருந்து எழுந்தார். வீட்டைச் சுற்றிலும் பார்த்தார். மௌனத்தைப் பூசி மெழுகியிருந்த வீடு யாருமற்ற அமைதியில் அப்படியே காட்சியளித்தது. அந்த இருண்ட கண்கள் மட்டுமே பாட்டியின் நினைவில் நிலைத்திருந்தது. மீண்டும் மெல்ல எழுந்து வாசலைப் பார்த்தார்.

4

1975

லெட்சுமணன் தாத்தா பழுப்புநிறத்தில் பளபளப்புடன் இருந்த ஒரு பலகை அலமாரியை வீட்டிற்குக் கொண்டு வந்தார். ஸ்காப்ரோ நான்கில் எல்லப்பன் குடும்பம் வீடு மாறி சுங்கைப்பட்டாணி பட்டணத்திற்குச் சென்றுவிட்டார்கள். சாவியைத் தாத்தாவிடம் கொடுத்து எந்தப் பொருள் வேண்டுமோ எடுத்துக் கொள் என்று சொல்லிவிட்டார்கள்.

வீட்டில் அம்பிகாவிற்கு ஒரு அலமாரி இல்லை. துணியை எல்லாம் சாப்பாட்டுத் தட்டுகள் வைக்கப் பயன்படுத்தும் ஒரு கம்பி அடுக்கில் வைத்துக் கொண்டிருந்தாள். தாத்தாவிற்கு அது வெகுநாளாகவே உறுத்தலாக இருந்தது. பெண் பிள்ளைகள் தன் உடைகளை ஒரு பாதுகாப்பான அவர்களுக்கே உரிய ஓர் இடத்தில் வைத்துக் கொள்வதே நல்லது என நினைத்துக் கொண்டிருந்தார்.

“இந்தாடியம்மா உனக்குன்னு இனி இந்த அலமாரித்தான்… பத்திரமா வச்சுக்கோ…”

அம்பிகா பூரித்துப் போனாள். இரண்டே கதவுகள் உடைய சிறிய அலமாரி ஆனாலும் நல்ல திடமான பலகை. சுற்றிலும் முனைகளில் பூத்தண்டுகள் வளைந்து நெளிந்து நடனமாடுவதைப் போன்ற தோற்றத்தில் பலகையிலேயே செதுக்கப்பட்டிருந்தது. தாத்தா சுத்தமாகத் துடைத்துக் கொண்டு வந்திருந்தார். வாசனை குண்டுகளின் வாடை மட்டும் அப்படியே நீங்காமல் இருந்தது. காலியான அலமாரியில் மேல் அடுக்கில் மட்டும் ஒரு வாசனை குண்டு மீந்திருந்தது. அம்பிகா அதனையெடுத்து மோந்து பார்த்தாள். அலமாரியின் முகத்திலேயே இருந்த அத்தனை நீளமான கண்ணாடியை அம்பிகா பார்த்ததே இல்லை. அதுவரை அம்மா வைத்திருந்த சிறிய கண்ணாடியைப் பலகை தடுப்பில் முட்டுக் கொடுத்து வைத்துத் தெரிந்தும் தெரியாமல் வித்தைக் காட்டும் தன் உருவத்தைப் பார்த்துப் பழகியவளுக்கு அதுவே முதன்முறையாக முழு உருவத்தையும் பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டியது. அணிந்திருந்த பாவாடை வரை காட்டி நின்ற அந்தக் கண்ணாடியை ஆச்சர்யத்துடன் பார்த்தாள். எட்டிச் சென்று சுழன்றாள். ஒரு தேவதையைப் போல காட்சியளித்த அவளை கண்கொட்டாமல் பார்த்து நின்றாள்.

அங்கிருந்து பின்னர் அவர்கள் வீடு மாறி லெபாய்மான் கம்பத்திற்கு வந்தபோதும் அம்பிகா அந்த அலமாரியை விடவில்லை. அவளது ஒவ்வொரு வயது உயர்விலும் அந்த அமலாரி புதுப்புது கோலங்கள் பூண்டு கொண்டிருந்தன. லெபாய்மான் கம்பத்திற்கு வந்ததும் அம்பிகாவிற்குத் தனியான ஓர் அறை கிடைத்தது. அவளுடைய உலகில் அவள் மட்டுமே இருந்தாள்.

அலமாரியில் இருந்த பொம்மை படங்களைச் சுரண்டியெடுத்து பூக்கள், அழகான ஜாடிகளின் ஸ்டீக்கர் படங்களை ஒட்டிக் கொண்டாள். பின்னர், இரவில் தனிமை பயத்தைப் போக்க விநாயகர், முருகர் என சாமிப் படங்களையும் ஒட்டிக் கொண்டாள். அலமாரியில் இருந்த கண்ணாடித்தான் அம்பிகாவின் இன்னொரு தோழி. நாள் முழுவதும் அந்தக் கண்ணாடியின் முன்நின்று தன் அழகை வர்ணித்துக் கொள்வாள். எல்லா பக்கங்களும் திரும்பி தன் உடலைத் தானே இரசித்துக் கொள்வாள். நெற்றியிலிருக்கும் பொட்டுகளை அந்தக் கண்ணாடியின் மேல்மூலையில் ஒட்டி அழகு பார்த்தாள்.

5

1993

அம்பிகா தன் வயிற்றை கண்ணாடியின் முன்நின்று தடவி பார்த்துக் கொண்டாள். இன்னும் சில நாள்களில் தனது தாய்மை பூரணமடையும் என்கிற துள்ளல் அவளுக்குள். திருமணமாகி மறுவருடமே உண்டான மகிழ்ச்சியான செய்தி. ஒவ்வொருநாளும் அதைக் கண்ணாடியின் முன்நின்று வயிற்றின் அளவு பெருக்கத்தைக் கொண்டு இரசித்துக் கொண்டிருந்தாள்.

“அத்த… சட்டைலாம் வாங்கணும்… டபுள் செலவா இருக்கும்…” எனப் பாட்டியிடம் சொல்லி அம்பிகா புலம்பும்போதெல்லாம் “உன் புருஷன் பெரிய மொதலாளி அப்படியே வாங்கிட்டு வந்து குவிச்சிருவான்…” என நொந்து சிரித்துக் கொள்வார்.

அன்றைய இரவு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் முன்புகூட கடைசியாக கண்ணாடியின் முன்நின்று தன்னைத் தானே பார்த்துக் கொண்டு அம்பிகா வேண்டிக் கொண்டாள். அதற்குள் பனிக்குடம் உடைந்து கதறி அழத் தொடங்கியவள் அப்படியே அலமாரியின் பக்கத்தில் அடிவயிற்றைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தவளை அப்பாத்தான் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

“அத்த வலி உயிரு போகுது…”

அம்பிகாவின் கடைசி வார்த்தை அது.

6

நள்ளிரவு 2.35

“மா… மா… ஏஞ்சிருங்க…”

அப்பா பாட்டியை எழுப்பி அமர வைத்தார். கண்கள் மங்கிப் போயிருந்தன. திறக்க முடியாமல் சிரமப்பட்டார்.

“என்னம்மா ஆச்சு? சாப்டாதனாலயா…?”

பாட்டி மயக்கத்தில் அப்படியே உறங்கிப் போயிருந்தார். சுவரோடு சாய்ந்து உட்கார்ந்ததால் தூக்கத்தில் அப்படியே சரிந்து தரையில் கிடந்தார்.

“டேய்… குமாரு… கனவுனு நெனைக்கறன்… அமுதாடா… அவ அம்மா மாதிரியே நின்றிருந்தா… அவள பாத்த மாதிரியே இருந்துச்சி…”

பாட்டியின் வார்த்தைகள் குழப்பமடைந்தன.

“மா… கனவு கண்டுட்டுக் கண்டதயும் உளறாதீங்க…”

பாட்டி உளறியப்படியே மீண்டும் பேச்சைத் தொடர்ந்தார்.

“டேய் அமுதாவ எதுக்கும் அந்த அலமாரிக்குள்ள போய் பாருடா…” எனக் கத்தினார்.

அப்பா அம்மாவின் அறைக்குள் நுழைந்து அந்தப் பழைய அலமாரியை மெல்ல திறந்தார். கண்ணாடி அதிர்ந்து முனகியது. அமுதா உள்ளே சுருண்டு ஒரு குழந்தையைப் போல படுத்திருந்தாள். இரவில் அறைக்குள் தேடும்போது அலமாரிக்குள் தேடாமல் விட்டதை எண்ணிக் கலவரமடைந்த மனத்துடன் விரைந்து கைத்தாங்கலாய் அமுதாவைத் தூக்கினார்.

-கே.பாலமுருகன்

வெண்பலகை மாணவர்களுக்காக/இளையோர்களுக்காக எழுதிய சிறுகதை.

Share Button

About The Author

Comments are closed.