சிறுகதை: மலிவு

“பா, நொண்டிக்காரன்…”

“மா, அப்படிச் சொல்லக்கூடாது…”,

“வேற எப்படிப்பா சொல்றது…?”

கயல்விழி சிறிய கால்வாயைக் கவனத்துடன் தாண்டும்போது அவளது கால்களில் சிறிய துள்ளல் தெரிந்தது.

“அவுங்கலாம் பாவம்…”

“நான் அவுங்கள வேற எப்படிக் கூப்டறதுன்னு கேட்டன்பா,”

நெற்றியில் கைவைத்து ஓரக்கண்களில் என்னைப் பார்த்தாள். கயல்விழி வளர்ந்து எனது இடுப்பளவைத் தாண்டி வந்துவிட்டதை ஆச்சரியத்துடன் பார்த்தேன். தொலைக்காட்சி பார்க்கும்போது, புத்தகம் படித்துக் கொண்டிருக்கும்போது என அவள் கேட்கும் பல கேள்விகள் ஏற்கனவே அடர்ந்துவிட்ட வேலை அழுத்தங்களுக்கிடையே தலைக்கு மேல் கனத்துச் சுழல்கின்றன.

“அங்கவீனர்… உடல் ஊனமுற்றோர்னு சொல்லக்கூடாது… மாற்றுத்திறனாளிகள்… படிச்சதில்லையா?”

இரண்டு கைகளிலும் துண்டாக்கப்பட்ட கோழி இறைச்சிகள், காய்கறிகள் இருந்தன. அவள் தக்காளி இருந்த பையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்தாள். விரல்களில் பிடித்தால் தவறவிடலாம் என்கிற பயத்தில் பையின் பிடிநுனியைக் கைக்குள் விட்டு மணிக்கட்டில் ஏந்திக் கொண்டாள்.

“பா, ஏன் கஸ்த்தமான பேருலாம் சொல்றீங்க? அது நமக்கு நாம அவுங்கள பத்தி பேசும் போது பயன்படுத்திக்கலாம்… இப்ப நான் அவுங்ககிட்ட பேசப் போறன்னா எப்படிக் கூப்டறது?”

கேள்வியைத் தொடுக்கும் போதெல்லாம் அவளது புருவங்கள் மேலுயர்ந்து வலது நெற்றியில் தெரியும் சின்னஞ்சிறிய மச்சத்தைக் காணாமல் ஆக்கிவிடும். நெற்றிச் சுருக்கங்களிடையே அது காணாமல்போய் மீண்டும் தோன்றும். அதனை இரசித்துக் கொள்ள அவளது கேள்விகளைப் பொறுத்துக் கொள்ளலாம் என்று நினைப்பேன்.

“அங்கள்ன்னு கூப்டு… யாரா இருந்தா என்ன… அவுங்களும் மனுசாளுங்கத்தான…”

இருவரும் சந்தைக்கு எதிரிலுள்ள சீனக்கடையில் அமர்ந்து கொண்டோம். தீராத வெயில் தாகத்தையும் அசதியையும் உருவாக்கிவிட்டிருந்தது. நகரத்தை மடக்கி தன் கதகதப்பிற்குள் வைத்திருந்த பகல் பொழுதைக் கண்கொண்டு பார்க்க முடியவில்லை. முகமூடி மனிதர்கள் சந்தைக்குள் நுழைவதும் வெளியேறுவதுமாக பரப்பரத்துக் கொண்டிருந்தனர். சுகுனா இறால் வாங்கும் போராட்டத்திலிருந்து இன்னும் மீளவில்லை. பெரிய அளவு இறால் ஒரு கிலோ எப்படியும் 35 வெள்ளிக்குள்தான் என்று அங்கிருக்கும் மலாய்க்காரனிடம் வம்பிழுத்து முடித்துவிட்டு சுறா மீன் வேறு வாங்க வேண்டும் என்றிருக்கிறாள். எனக்கும் மீன்களுக்கும் வெகுதூரம். அதன் வீச்சத்தைத் தாங்கிக் கொள்ள முடியாது.

“பா… அந்த அங்கள் எவ்ள நேரம் அங்க நிப்பாரு…?”

வட்ட நாற்காலியைத் தரையில் வைத்து இழுத்துக் கொண்டே என்னருகில் நெருங்கி அமர்ந்து கொண்டாள். கடையில் இருந்தவர்கள் அச்சத்ததைக் கவனிக்கவில்லை. சத்தத்திற்குள் சத்தமாக அது கரைந்தது. இரண்டு சீன பாட்டிகள் மட்டும் சத்தமாகச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர். அதில் ஒருவர் பிறகு சமைப்பதற்கான காய்கறிகளை வெட்டிக் கொண்டிருந்தார். அவருடைய மூக்கின் வலப்பக்கத்தில் கயல்விழிக்கு இருப்பதைவிட பெரிதான மச்சம் தென்பட்டது. கடையின் வெளித்தூணியில் செருகப்பட்டிருந்த ஊதுபத்தி அணைந்து வெறும் குச்சிகள் மட்டும் புகைந்து கொண்டிருந்தன.

“பா… சொல்லுங்க…”

“உன்ன அந்த மச்சக்காரக் கிழவிக்கிட்ட பிடிச்சிக் கொடுத்துட்டுப் போய்றட்டா?”

சிரிப்பாள் என்று நினைத்தேன். ஆனால், பார்வையை அந்தச் சந்தையின் வாயிலில் வெகுநேரம் ஒற்றைக் காலில் நின்றுகொண்டே கையில் நெகிழிக் குவளையை ஏந்திக் கொண்டிருப்பவரையே அவள் கவனித்துக் கலவரமடைந்து கொண்டிருந்தாள்.

“என்னம்மா இப்ப டென்ஷ்னா இருக்க?”

மீண்டும் புருவங்களை மேலுயர்த்தி அடுத்த கேள்வியை உள்ளுக்குள் உருவாக்கிக் கொண்டிருந்தாள்.

“பா, அவருக்கு எல்லோரும் காசு போடறாங்க… நீங்களும் அவர பாவம்னு சொன்னீங்க…”

“ஆமாம் மா… நம்மலாம் வேலை செஞ்சி சம்பாரிக்குறோம். அவுங்களுக்கு இப்படிக் கால் கை போய் வேலையும் இல்லாமல் அடுத்தவங்கக்கிட்ட பிச்சை எடுத்து வாழ்றாங்க… அதான் பாவம்…”

மீண்டும் மௌனமானாள். கயல்விழி தனது ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளை வீட்டிற்குள் இருந்து கழித்துவிட்டாள். கோவிட் பெருந்தொற்றுக்குப் பயந்து அவளது ஒன்பதாவது வயது வீட்டுச் சுவர்களுக்குள்ளே தீர்ந்துவிட்டது. இப்பொழுதுதான் ஒன்றரை ஆண்டுக்குப் பின்னர் அவள் சந்தைக்கு வந்து மக்கள் கூட்டத்தைப் பார்க்கிறாள். அவளது கண்கள் விரிவதும் அடங்குவதுமாய் மாறிக் கொண்டிருப்பதைக் கவனிக்க முடிந்தது.

“பா, அவர பார்த்தா எனக்குப் பாவம் வரமாட்டுது… பாவம் மனசுல எப்படிப்பா வரும்…?”

“அது பாவம் இல்லடா… இரக்கம்… இப்ப கஷ்டப்படறவங்களா பார்த்தா நம்ம உதவி செய்றோம்ல… ஏன் செய்றோம்? நம்மக்கிட்ட இருக்கற இரக்கக்குணம்…”

“ஓ! அதான் இரக்கமா? அப்படின்னா நம்மகிட்ட இருக்கற இரக்கக்குணம் வெளில வரணும்னா யாராவது கால் இல்லாம கை இல்லாம வாழணும்தானப்பா?”

கேட்டுவிட்டு மீண்டும் கயல்விழி அந்தத் திசையையே கவனிக்கத் துவங்கினாள். எனக்குத் தொண்டை வரண்டிருந்தது. எதிரில் அமர்ந்திருந்த சீன வாலிபன் காப்பி ஐஸ் குடித்துக் கொண்டிருந்தான். சுகுனா வருவதற்குள் ஒரு மிடறு குளிர்ந்த நீரைத் தொண்டைக்குள் இறக்கினால் பரவாயில்லை என்று தோன்றியது.

“பா… உங்களத்தான் கேக்கறன்…”

“என்னம்மா? நீ இப்பத்தான மனுசாளுங்களையே பாக்கற? சும்மா தொண தொணன்னு…”

அன்றைய வெயில் கோபத்திற்குத் தாராளமாக உதவிக் கொண்டிருந்தது.

“பா, அவர பாருங்க… அவர்கிட்ட உள்ளதுல எதைப் பார்த்தா உங்களுக்கு மனசுல இரக்கம் வருது?”

எரிச்சலுடன் சந்தையின் வாசலில் வெகுநேரம் நின்று கொண்டிருந்த அவரைப் பார்த்தேன். ஒற்றைக் காலில் செருப்பில்லை. ஊன்றுகோல் ஆடாமல் அசையாமல் உடலோடு ஒட்டிவிட்டதைப் போல தென்பட்டது. மொத்த பாரத்தையும் அதில் இறக்கி அவரும் பல மணி நேரங்கள் அப்படியே நின்று கொண்டிருந்தார் என்று நினைக்கிறேன். கையில் பிடித்திருந்த நெகிழிக் குவளையில் ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன. அதனை அவர் விரட்டவும் இல்லை.

“ஆமாமா… அவர பார்த்தா பாவமாத்தான் இருக்கு…”

“அவருக்கிட்ட எந்த எடத்துல பாவம் இருக்குப்பா… எனக்குத் தெரிலயே…”

“அவரோட அந்த ஒத்தக் கால்… அத பாரு… பாவம் இரக்கம் எல்லாம் வரும்…”

கயல்விழி அவருடைய ஒற்றைக் காலைக் கவனித்தாள். கறுத்து ஆங்காங்கே வெள்ளைப் பூத்ததைப் போல தெரிந்தது. முதலில் அவரை நெருக்கத்தில் கடக்கும்போது விரல் இடுக்குகளில் தெரிந்த காயத்தையும் நினைவுப்படுத்திக் கொண்டேன். கயல்விழியும் அதனை நினைத்திருக்கலாம்.

“பா, இருக்கற காலு மேல ஏன் பாவப்படணும்? அதான் இருக்கே…”

“சரி, அப்ப இல்லாத காலு மேல பாவப்படு…”

கயல்விழி மீண்டும் எதையோ யோசித்தாள். சுவரில் ஒட்டப்பட்டிருந்த ‘பார் குறியீடுகளை’ ஸ்கேன் செய்து போய்க்கொண்டிருப்பவர்களில் சிலர் மட்டும் எப்பொழுதாவது அவருக்கு ஒரு வெள்ளி நோட்டைப் போடுவதைக் கயல்விழி பார்த்துக் கொண்டிருந்தாள்.

“பா, பார்த்தாதான் இரக்கம் வரும்னு சொன்னீங்க… இல்லாத காலை எப்படிப்பா பார்க்கறது?”

தொண்டையில் இருந்த தாகம் இப்பொழுது மனம் வரை பரவியிருந்தது. சுகுனா வந்துவிட்டால் விடுதலை கிடைக்கும் என்பதுபோல் ஊன்றுகோலுடன் நிற்கும் அவரைத் தாண்டி கவனம் சென்றது. வாயிலில் வந்துநின்ற ஒரு லோரியிலிருந்து காய்கறி கூடைகள் இறக்கப்பட்டுக் கொண்டிருந்தன. மீன்களை மேசையில் அடுக்கி வைத்திருந்த சீனன் ஒருவன் பைக்குள்ளிருந்து பனிக்கட்டிகளை அதன் மீது கொட்டினான். அதன் குளிர்ந்த தன்மையை உடலெல்லாம் பரவவிட்டுப் பார்த்தேன். வெயிலுக்கு இதமான உணர்வைக் கிளர்ந்தது.

“மா, ரொம்ப ஆராய்ச்சி செய்யாத… அவருக்குக் கால் இல்லன்னுதான் எல்லாரும் இரக்கப்படறாங்க. புரியுதா? நம்மளுக்கு கடவுள் எல்லாத்தையும் கொடுத்துருக்காரு. அவருக்கு அது இல்ல… அதான்…”

“ஓ! சரிப்பா. நம்மக்கிட்டு இருக்கு அதனால நாம கடவுளுக்கு நன்றி சொல்லணும். எனக்குப் புரிஞ்சிருச்சிப்பா. கால் இல்லாததுக்கு அவர் நன்றி சொல்வாராப்பா?”

“நீ ரொம்ப மூளைய போட்டு அலட்டிக்கற… அவருக்கு ஏதாச்சம் விபத்தாயிருக்கலாம்… இல்ல சீக்கா இருக்கும்… அது ஏன் உனக்கு? நீ நல்லாருக்கியா… அதுக்குக் கடவுளுக்கு நன்றி சொல்லு…”

கயல்விழி தரையைக் கவனித்தாள். நாற்காலி உயரமாக இருந்ததால் எட்டாமல் அந்தரத்தில் ஆடிக் கொண்டிருக்கும் அவளுடைய கால்களைக் கவனித்தாள். சீனத்தி ஒருவள் தோளுறித்த கோழிகளைச் சுடுநீரில் முக்கி மீண்டும் எடுத்து வெட்டுக் கட்டையின் மீது வைத்தாள். நகரம் மீண்டும் பரப்பரப்பாகி கொண்டிருந்தது.

“பா, அவர் மேல எனக்கு இரக்கம் வந்துருச்சின்னு நான் எப்படிக் கண்டுபிடிக்கறது? அது என்ன செய்யும்? இரக்கம் வந்துட்டா மனசு எப்படி இருக்கும்?”

கயல்விழி தனக்குள் தன்னையும் தன் உலகையும் தேடிக் கொண்டிருக்கிறாள். அவள் கண்களில் அத்தனை அழுத்தம் தெரிந்தன. அவளுடைய பின்தலையைத் தடவிக் கொடுத்தேன். கண்களில் இன்னமும் ஆற்றமைத்தான் எஞ்சியிருந்தன.

“மா, அதையெல்லாம் கண்டுபிடிக்கற மிஷின்லாம் இன்னும் வரல… அவர பாரு… பார்க்கும்போது ஐயயோ அவருக்கு இப்படி ஆச்சே… கடவுளே அவர நீதான் காப்பாத்தணும்… அப்படின்னு உன் மனசு சொன்னுச்சின்னா அதான் இரக்கம்…”

கயல்விழி நெஞ்சில் கைவைத்துக் கொண்டே மீண்டும் அவரைப் பார்த்தாள். அவர் இப்பொழுது தனது ஊன்றுகோலிலிருந்து விடுபட்டு நொண்டியடித்துத் தரையில் இலாவகமாக அமர்ந்தார். ஒரு துணியை விரித்துக் காலை அதன்மேல் நீட்டிக் கொண்டார். பக்கத்தில் இருந்த ஒரு புட்டியிலிருந்து நீரைப் பருகினார். கயல்விழி ஒவ்வொருமுறையும் அவரைப் பார்க்கும்போது எனது கண்களும் அவரை நோக்கின.

“என்னமா செய்ற நெஞ்சில கை வச்சு?”

“இரக்கம் வருதான்னு பாக்கறன்பா…”

எனக்கு அது வேடிக்கையாக இருந்தது. சிரித்தால் அவள் வருத்தப்படுவாள் என்பதால் அவளுடைய நடவடிக்கையையே உற்றுக் கவனிப்பது போல பாவனையை மாற்றிக் கொண்டேன்.

“பா, இரக்கம் வந்துட்டா என்ன அறிகுறி காட்டும்?”

என்னால் அதற்குமேல் பொறுமைக்கொள்ள இயலவில்லை. அறிவியல் ஆராய்ச்சியைப் போன்று கயல்விழியின் கேள்விகள் நீண்டு கொண்டே இருந்தன.

“ம்ம்ம்… காய்ச்சல், இருமல் வரும்!!!” எனச் சொல்லிவிட்டு கடையைச் சுற்றி பார்வையை அலையவிட்டேன்.

“பா, அது கொரொனா வந்தாதானே வரும்… நான் கேக்கறது இரக்கம்… நீங்க சொன்னீங்களே…”

“பள்ளிக்கூடத்துல சொல்லிக் கொடுக்கலயா?” சமாளிக்க அடுத்த உத்திகளை நாடிச் செல்லத் துவங்கினேன்.

“டீச்சர் கூகள் மீட்ல சொன்னாங்க… நல்ல செயல்களுக்கு பச்சை வர்ணம் தீட்டுன்னு…ஓ, அப்படின்னா இரக்கம் பச்சை கலர்ல இருக்குமா?”

“ஹலோ, ஆச்சி… ஒரு மினரல் போத்த கொடுங்க…” என்று மலாய்மொழியில் கேட்டேன். காய்கறி வெட்டிக் கொண்டிருந்தவள் இழுத்துக் கட்டியும் நெற்றியில் கொத்தாக வந்து விழுந்து கொண்டிருந்த முடியைச் சரிசெய்துவிட்டு கடைக்குள் பார்த்துக் கத்தினாள். சட்டென்று ஒரு பையன் கையில் நீர்ப்புட்டியுடன் வந்தான். அரைக்காற்சட்டையும் பொத்தல் சட்டையும் அணிந்திருந்தான். உதட்டை வலதுபக்கம் பிதுக்கிக் கொண்டே என்னை நோக்கி ஓடி வந்தான். உதட்டில் எதையோ விளையாடிக் கொண்டிருந்தான். கடைக்குள் கூர்ந்து கவனித்தேன். தரையில் சில புத்தகங்களை விரித்து வைத்து எதையோ எழுதி கொண்டிருந்திருக்க வேண்டும். அவன் அமர்வதுக்கென்று சிறிய இடம் அங்குக் காலியாக இருந்தது. புட்டியைத் திறந்து தொண்டையை நனைத்துக் கொண்டேன். அதற்குள் சுகுனாவும் சந்தையைவிட்டு வெளியே கையில் ஒரு நெகிழிப் பையுடன் நிற்பது தெரிந்தது.

“அதோ பாரு அம்மா வராங்க…”

சுகுனா தரையில் அமர்ந்திருந்த அவரின் அருகே சென்று ஒரு வெள்ளி நோட்டை நெகிழிக் குவளையில் போட்டுவிட்டுச் சாலையைத் தாண்டி எங்களிடம் வந்து கொண்டிருந்தாள்.

“தோ பாரு… உங்க அம்மா இப்ப செஞ்சாங்களே… அதான் இரக்கம்… அவுங்கக்கிட்ட கேட்டுக்கோ…” அப்பொழுதுதான் மனத்தில் ஒரு நிம்மதி கிடைத்தது போல உணர்ந்தேன்.

சுகுனா வந்ததும் கயல்விழியின் தலையில் தடவிக் கொடுத்துவிட்டு அவள் கையில் வைத்திருந்த தக்காளி பையை வாங்கிக் கொண்டாள்.

“விட்டா ஏமாத்திருவானுங்க… காண்டா நண்டு வாங்கலாம்னு பாத்தன்… யானை வெலைக்கு விக்கறானுங்க… நம்ம வீட்டுக்கிட்ட இருக்கற சீனன் கடையில வாங்கிக்கலாம்…” உள்ளே சுகுனாவின் சந்தை போராட்டத்தின் காட்டம் இன்னமும் குறையாமல் அப்படியே பேச்சில் தெறித்தன. ஓரிரு நிமிடங்களாகவது சந்தை வாசம் வீசும்.

மூவரும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழைய சாகா மகிழுந்தை நோக்கி நடக்கத் துவங்கினோம். கயல்விழி இப்பொழுது சுகுனாவின் கையைப் பிடித்துக் கொண்டாள்.

“மா, நீங்க இப்ப அவருக்கு ஏன் காசு போட்டீங்க?”

“பாவம்மா அவரு. கால் இல்ல… அதான்…”

சுகுனா கயல்விழியின் கையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு நாலாப்பக்கமும் பார்த்துக் கொண்டே சாலையைக் கடந்தாள். அதுவரை தரையில் அமர்ந்திருந்தவர் மீண்டும் சுவர் தடுப்பின் துணைக்கொண்டு எழுந்து நின்று கொண்டார். ஊன்றுகோலுடன் நிற்பதுதான் அவருக்கு வருமானம். நல்லவேளை இதனைக் கயல்விழி பார்க்கவில்லை.

“அப்படின்னா உங்களுக்கு இரக்கம் வந்துச்சிதானம்மா…?”

“ஆமாம்டா… அதான் இரக்கம்…”

“ஓ! அப்படின்னா ஒரு வெள்ளிய கொடுத்தா அதான் இரக்கமா…? இப்ப புரியுதுமா… அப்பா என்னனவோ சொல்லி என்ன கொழப்பிட்டாரு…”

கயல்விழி சொன்னதை சுகுனா கேட்கவில்லை. அதற்குள் எனக்கும் ஓர் அழைப்பு வந்துவிட்டது.

-கே.பாலமுருகன்

Share Button

About The Author

2 Responses so far.

  1. வணக்கம் ஐயா.இந்த சிறுகதை அனைத்து மாணவர்களுக்கும் மிகவும் பயனாக இருக்கும் என நான் நினைக்கிறேன்.நீங்கள் வாழ்வில் மேலும் நிறைய சாதிக்க நான் இறைவனை பிராத்திக்கிறேன்.

  2. Mitramurugiah says:

    அருமையான கதை ஐயா. யோசிக்க வைத்த கதை கரு. தங்களின் எழுத்து பணி தொடரட்டும் 👏👏