கொரோனாவும் எறும்புண்ணியும்: ஓர் இயற்கையின் சீற்றம்



‘சார்ஸ் தொற்றுக்கிருமி சம்பவத்திற்குப் பிறகும் ஒவ்வொருநாளும் குறைந்தது 1400 பன்றிகள் கொல்லப்பட்டு ஹங்கோங் எல்லையைக் கடந்து வுஹானுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன’

நான் எறும்புண்ணி. உலகில் அழிந்து வரும் மிருகங்களின் கூட்டத்தைச் சேர்ந்தவன். 2003ஆம் ஆண்டு என்னை வேட்டையாடக்கூடாது என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், வூஹானின் 20,000 கள்ளத்தனமான பண்ணைகளிலிருந்து பல்லாயிரம் மிருகங்கள் வேட்டையாடப்பட்டுக் கொல்லப்பட்டு வூஹானின் பிரபலமான Wet Market-க்குக் கொண்டு வரப்படுகின்றன என்கிற உண்மை கொரோனா பரவிய பிறகுத்தான் உங்களுக்கெல்லாம் தெரிய வந்தது அல்லவா? ஆமாம், நாங்கள் வாழ்ந்தால் என்ன அழிந்தால் என்ன?

நான் எறும்புகளையும் பூச்சிகளையும் மட்டும் தின்று அதன் மூலம் உயிர் வாழக்கூடிய ஓர் எளிய மிருகம். ஆனால் வூஹான் மார்க்கெட்டிற்குச் சென்றுள்ளீர்களா? பாம்பு, முதலை, வௌவால் இன்னும் என்னென்ன மிருகங்கள் உள்ளன என்பதை நாள் முழுவதும் நீங்கள் கணக்கிடலாம்.

சரி, ஏன் சீனாவில் இவ்வளவு மிருகங்கள் வேட்டையாடப்பட்டு உணவாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. அதற்கொரு வரலாறும் சொல்லப்படுகிறது. 1959-1961 வரை சீனாவில் ஏற்பட்ட மிகப்பெரிய பஞ்சத்தால் 3 கோடி மக்கள் இறந்துபோனார்கள் என்று சொல்லப்படுகிறது. அக்காலக்கட்டத்தில் ஏற்பட்ட கொடூர பஞ்சத்தால் கிடைக்கும் மிருகங்களைக் கொன்று சாப்பிடத் துவங்கிய ஒரு பழக்கம்தான் இன்றுவரை நவீன சமூகத்தால் போற்றப்பட்டும் வருகிறது. ஆனால், இது இப்பொழுது சீனாவின் சிக்கல் மட்டுமல்ல. உலகின் சிக்கலாகவும் மாறிவிட்டன. ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாக இறைச்சிகள் சாப்பிடப்படுகின்றன. இம்மண்ணில் உணவு தொடர்பான ஒரு புரட்சி வரும்வரை மனிதர்கள் வெறித்தனத்துடன் மிருகங்களை வேட்டையாடி தின்று கொண்டிருப்பதும் அதனால் இன்னும் பல இயற்கை எதிர்வினைகள் வருவதும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

‘கட்டுப்படுத்த முடியாத மனித நாக்குகளே கிருமிகளை உற்பத்தியும் செய்கின்றன’
என்ன செய்வது? இன்று உலகம் முழுவதும் துரித உணவுக்கும் கே.எப்.சி கோழிக்கும் நாக்குகள் அடிமையாகிவிட்டன அல்லவா?

தவளை, வாத்து, உடும்பு என்று எந்த மிருகத்தையும் விட்டு வைப்பதில்லை. உணவிற்கும் குணத்திற்குமான தொடர்பை இப்பொழுதாவது விளக்க நேரிடும் போல. அப்படியாக சட்டவிரோதமாகத்தான் டிசம்பர் மாதம் என்னை வூஹான் சந்தைக்குக் கொண்டு வந்தார்கள். இது என் தவறா? மிருகங்களான எங்களின் வாழ்விடங்கள் அனைத்தையும் சேதப்படுத்தி மாசுப்படுத்தி அழித்துக் கொண்டிருக்கும் மனித வர்க்கத்திற்குத் தெரியாமலில்லை; இயற்கையைச் சீண்டும்போது அதற்கான எதிர்வினையைச் சந்தித்துதான் ஆக வேண்டும் அல்லவா? கிருமிகள் இப்படியாகத்தான் தோன்றுகின்றன.

‘மிக அழகிய உயிரினமான மயில்களின் இரைச்சிகள் ஆயிரம் கணக்கில் இன்று இறைச்சி சந்தையில் பிரசித்திப் பெற்றுள்ளன’

என் உடலிலிருந்துதான் கொரோனா பரவியது என்று இன்னும் உலகத்தால் நிரூபிக்க முடியாத சூழலில் கிருமி எப்படி உருவாகியிருக்கும் என்று சிந்திக்க வாய்ப்புண்டா?

கிருமிகள் நம்மால் நம் அலட்சியத்தால்தான் உருவாகின்றன. ஒரு ரொட்டியைப் பாதி சாப்பிட்டுவிட்டு அதை அப்புரப்படுத்தாமல் அப்படியே வைத்துப் பாருங்கள். ஓரு சில நாட்களில் அந்த ரொட்டியில் கிருமி தொற்ற ஆரம்பிக்கும். ஆக, கிருமிகள் அபிவிருத்தி செய்வதற்கான வாய்ப்புகளை மனிதர்கள்தான் உருவாக்குகிறார்கள். அதற்குரிய ஓர் இடமாக பூமி மாறிக் கொண்டிருக்கிறது. கொரோனா மட்டுமல்ல இதைவிட கொடிய கிருமிகள் மேற்கொண்டும் வரலாம். கொரோனா குடும்பத்தைச் சேர்ந்த ஒருவகையான கிருமி மட்டுமே இப்பொழுது பரவி உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. மேற்கொண்டு அக்குடும்பத்தைச் சேர்ந்த கிருமிகளும் பரவத் துவங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எப்படியிருப்பினும் இயற்கையின் சீற்றத்தை எதிர்கொண்டே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

இதையே ‘கிருமி சுனாமி’ என்றும் அழைக்கலாம். மிக நுண்ணிய உயிர் என்றாலும் அவை மனித உடலுக்குள் உருவாக்கும் விளைவுகள் கணிக்க முடியாதவை ஆகும். அனைத்து மிருகங்களையும் வேட்டையாடி சாப்பிடுவது இயற்கைக்குப் புறம்பாகும் என மனிதர்கள் முதலில் உணர வேண்டும். கொரோனா பரவிக் கொண்டிருக்கும் இக்காலக்கட்டத்திலாவது சைவ உணவைக் கடைப்பிடிக்கவும். என்னைக் குறைச் சொல்வதை நிறுத்திவிட்டு உங்களைப் பாதுகாக்க இயற்கையை அழிக்காதீர்.

உலக முன்னேற்றத்திற்காக காடுகளை அழிக்கும் மலைகளைச் சுரண்டும் பன்னாட்டு நிருவனங்களின் அத்துமீறல்களை நோக்கி கேள்வி எழுப்ப ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு என்பதை உணருங்கள்.
சிதைவுண்டு கிடக்கும் பூமியில் நச்சு உணவுகளையே தின்று கொளுத்துக் கிடக்கும் எங்களை நீங்கள் சாப்பிட்டால், நீங்கள் உருவாக்கிய விஷத்தை நீங்களே மீண்டும் உட்கொள்வதற்குச் சமம் என்பதை இந்தக் கொரோனா தாக்குதலுக்குப் பிறகாவது உணருங்கள். இதை ஒவ்வொரு அரசும் கருத்தில் கொண்டு உணவு புரட்சியிலும் இயற்கை பசுமை திட்டங்களிலும் துரிதமாக ஈடுபட வேண்டும்.

இப்படிக்கு,
எறும்புண்ணி.

ஆக்கம்: கே.பாலமுருகன்

‘இந்தப் பூமியில் உயிர்வாழ உரிமையுள்ள எத்தனையோ கோடி மிருகங்களை மனிதர்கள் திண்பதற்கும் தன் விருப்பத்திற்குக் கொல்லவும் செய்கிறார்கள்’

-Deborah Cao, a professor at Griffith University in Australia

Share Button

About The Author

Comments are closed.