ஆள்துளையாத ஆழ்துளை கிணற்றிலிருந்து சுஜித் பேசுகிறேன் – ஒரு கடைசி வேண்டுதல்

ஒரு கடைசி வேண்டுதல்

உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சுஜித் இறப்பதற்கு முன் அளித்த வாக்குமூலம் இதுவாகக்கூட இருந்திருக்கலாம்:

 

அன்பு அம்மாவிற்கு…
நான் நான்கு நாட்களாக வீட்டில் இல்லை என்று எல்லோரும் என்னை நினைத்துக் கவலைப்பட்டீங்களா அம்மா?

நான் இங்க ஓர் இருட்டுக்குள்ள ஒளிஞ்சிருக்கன். என் கைகால்கள அசைக்க முடியல்லை, என்னால் மூச்சிவிட முடியல்லை. எனக்கு பயமாக இருக்கும்மா. நான் ‘சின்ன பிள்ளைத்தானம்மா?’

அம்மா இது என்ன இடம் மா? நம் வீடு எவ்வளவு பெருசா இருக்கும் தெரியுமா… இங்கு என்னால் நகரவே முடியல்லை. என் தலைல சேரும் சகதியும் விழுந்துகிட்டே இருக்கும்மா.

அம்மா, உன் கையால எனக்குச் சோறு ஊட்டி விடுவீயா? ரொம்ப பசிக்குதுமா. மயக்கமா இருக்கு. நான் பசி தாங்க மாட்டனேமா…

யாரோ என்னை இன்னும் இன்னும் கீழே அழுத்துறது போல இருக்குமா…அம்மா, பக்கத்தில யாருமா அவ்ள பெரிய சத்தம் போடறது? ஏதோ ஒன்னு அதிரும் அளவுக்கு நான் இருக்கும் சில அடி தூரத்துல என்னை நெருங்கிக்கிட்டே இருக்கே மா… அது நெருங்க நெருங்க நான் கொஞ்சம் கொஞ்சமா கீழே போய்க்கிட்டு இருக்கன்மா…

அம்மா என்னால மூச்சி விடவே முடிலம்மா…
என் பார்வை மங்குதுமா…
என்னைக் காப்பாற்ற நீ வரவே மாட்டீயாம்மா…
உன் வயித்துல பத்து மாசம் வச்சிருந்து கொண்டு வந்தீயே…
இப்ப நான் யாரோட வயித்துலம்மா இருக்கன்? ரொம்ப இருட்டா இருக்கும்மா…

அம்மா, அப்பா சொல்லுவாரு இந்த உலகம் ரொம்ப வளர்ந்துருச்சியா.. நீ நல்லா படிச்சி பெரிய ஆளா வரணும்… உன் படிப்புக்குத் தகுந்த முன்னேற்றம் இந்த உலகத்துல இருக்குனு… ஆனா, நான் நாலு நாளா இங்க இருக்கன்… அப்பா சொன்ன அந்த வளர்ச்சியோ முன்னேற்றமோ ஏன்ம்மா என்னைத் தூக்க வரல? நான் ‘சின்ன பிள்ளைத்தானம்மா?’

அம்மா, நான் உங்கள விட்டு ரொம்ப தூரம் போய்க்கிட்டு இருக்கன்மா… இதென்ன இடம் மா? ஆழ்துளை கிணறா? ஏன்ம்மா இவ்ள ஆழமா குழிய தோண்ட முடியுதுனா அதுக்கு ஒரு மூடிப் போட்டு வைக்க ஏன்மா யாருக்கும் தோணல? அவங்களோட அலட்சியத்துக்கு நான் என்னம்மா பாவம் செஞ்சன்?

பெரியவங்க செய்ற தப்புக்கு ஏன்ம்மா ஆழ்துளை கிணறு சின்ன பிள்ளைங்களோட உயிரை இவ்ள ஆக்ரோஷமா எடுத்துக்குது?

இது நிலத்துல விழுந்த ஓட்டையாம்மா? இல்லம்மா… இது எத்தனையோ கனவுகளோட உலகத்தை இன்னும் இரசிக்கக் காத்திருந்த என் வாழ்க்கைல விழுந்த ஓட்டைம்மா… இந்த மண்ணுல நீதி இருக்குனு சொன்னாங்களே அதுல ழுந்த ஓட்டைம்மா…

அம்மா
அம்மா
கண்ணுலாம் இருளுது…
மூச்சு முட்டுது…
கடைசி வரைக்கும்
உன் கைகள்
என்னைத் தூக்கும்னு
நம்பனனேம்மா…
ஐயா என் சாமின்னு சொன்னியேம்மா…
நான் எந்த இயந்திரத்தையும்
வளர்ச்சியையும் நம்பலம்மா…
உன் ஒரு வார்த்தையை மட்டும்தான்
கெட்டியா பிடிச்சிக்கிட்டு இருந்தன்மா…

அம்மா…
ம்மா…
எனக்காக ஒரே ஒரு உ தவி செய்ம்மா…
இந்த ஆழ்துளை கிணத்துல
விழுந்து சாகும்
கடைசி குழந்தையா இந்த ‘சுஜித்’
மட்டுமே இருக்கணும்மா…

மேல இருக்காங்களே
அவுங்ககிட்ட நீ எனக்காக சேர்த்து வச்சிருந்த
காசைலாம் கொடுத்து …
இந்தியா கிராமங்கள இருக்கும்
எல்லாம் ஆழ்துளை கிணத்தையும்
மூட சொல்லுமா.
சொல்லுவீயா?

இன்னொரு ‘சுஜித்’ சாகக்கூடாதுமா…
அவ்ள வேதனையா இருக்குமா…

‘ஆள்துளையாத ஆழ்துளை கிணற்றிலிருந்து’
காயங்களுடன்
‘சுஜித்’

எழுத்து
கே.பாலமுருகன் (சுஜித்திற்காக)

Share Button

About The Author

Comments are closed.