2018ஆம் ஆண்டிலிருந்து 2019 ஆண்டிற்குள்

காலத்திற்கு ஒரு வயது கூடும்போது நாமும் உடன் பயணிக்க நேர்கிறது. வேண்டாம் என்று பின்னால் ஓட காலம் அனுமதிப்பதில்லை. நாமும் காலமும் ஒரே கூட்டிற்குள் வாழும் இரட்டையர்கள் போல. ஒருவரையொருவர் சார்ந்திருந்து நகர்ந்து போகும் எதார்த்தமிக்க பாதை. இப்பொழுது பயணம் நீள்கிறப் புள்ளியில் இருக்கின்றோம். ஒருமுறை பின்னால் திரும்பிப் பார்க்கக்கூடிய சந்தர்ப்பத்தையும் காலம் வழங்குகிறது.

2018ஆம் ஆண்டில் அப்படி என்ன செய்துவிட்டோம் என்று நமக்கு நாமே கேட்டுக் கொள்ள வேண்டிய மாபெரும் கேள்வியின் முன் நானும் தயக்கத்துடன் நிற்கிறேன். ஒவ்வொரு வருடமும் உருவாக்கும் திட்டங்களில் சில நடந்துவிடுகின்றன; சில நடத்த முடியாமல் போய்விடுவதுமுண்டு; சில எதிர்பாராமல் நடந்துவிடுவதும் உண்டு.

 

2018 ஒரு மீள்பார்வை

  1. சிறுவர் நாவல்

2018ஆம் ஆண்டில் சிறுவர் நாவல் பாகம் மூன்று என் திட்டத்தில் இருந்து அதனை நிறைவேற்றினேன். சிறுவர் உலகிற்குள் சென்றால் மட்டுமே சிறுவர் நாவலுக்குரிய மொழியும் அதனைக் கட்டமைக்கும் மனமும் வாய்க்கும். ஆனால், அதற்குக் கொஞ்சம் காலத்தாமதம் ஏற்பட்டே எழுத முடிந்தது.

 

  1. காட்சித் தொடர்பியல் துறை விருது

அன்னை வேளாங்கன்னி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, காட்சித் தொடர்பியல் துறை எனக்கு ‘தமிழ் நாயகர் தனி நாயகர்’ விருது கிடைக்கப்பெற்றது கடந்தாண்டின் மிகப்பெரிய அங்கீகாரமாகக் கருதுகிறேன். காட்சி தொடர்பியல் துறையைச் சேர்ந்த பேராசியர்களின் முயற்சியோடு நடத்தப்பட்ட அவ்விழாவில் எனது சிறுவர் நாவல்கள் விமர்சிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதும், என் சினிமா நூல்கள் பேராசிரியர் திரு.வெற்றிச்செல்வன் அவர்களால் கருத்துரைக்கப்பட்டதுமே ஒரு படைப்பாளிக்கு மிக முக்கியமான களமாகும்.

  1. தமிழ்நாட்டு அரசு பாடநூலில் சிறுகதை

இவையனைத்தையும்விட கடந்தாண்டு என் படைப்புகளுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கியது தமிழ்நாட்டுப் பள்ளிப் பாடப்பிரிவால் 11ஆம் வகுப்பு சிறப்புத் தமிழ் பாடநூலில் என் ‘பேபி குட்டி’ சிறுகதை தேர்வானதுதான் என்று சொல்லலாம். அதுவே தமிழக அரசு பாடநூலில் இடம்பெறும் முதல் மலேசிய சிறுகதையும் ஆகும். இதற்கு முந்தைய தலைமுறையினரில் இத்தகைய அங்கீகாரம் ஓர் இலட்சியமாக இருந்தது என்றும் அது இப்பொழுது நிறைவேறியதாகவும் மறைந்த எம்.துரைராஜ் அவர்கள் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு கூறினார்.

 

  1. பாரதி விருது

நாமக்கல் மாவட்டத்தில் ஆசிரியர் தினக் கொண்டாட்டத்தில் பல்திறன் கொண்ட ஆசிரியர்கள் பேராசியரியர்கள் விருதுகள் கொடுத்து அங்கீகரிக்கப்பட்டார்கள். அச்சூழலில் வெளிநாட்டில் வாழும் ஒரு தமிழருக்குப் ‘பாரதி விருது’ கொடுத்து அங்கீகரித்தார்க> அத்தகைய விருதையும் முதன்முறையாக பெற்றேன். பாரதி எனது ஆசான். இலக்கியத்தில் பாரதியின் வழியாக உள்ளே வந்தவன் நான். அத்தகைய ஆளுமையின் பெயரில் ஒரு விருது கொடுக்கப்பட்டப்போது பொறுப்பு இன்னும் கூடியுள்ளதாகவே கருதினேன்.

 

  1. இலக்கிய நட்பு ராம்சந்தர் – சுஜா செல்லப்பன்

2018ஆம் ஆண்டில் கிடைக்கப்பெற்ற மிக முக்கியமான இலக்கிய நட்பு சுஜாவும் ராம்சந்தரும் என்றே சொல்லலாம். அவர்களுடனான என் இலக்கிய உரையாடல்கள், விமர்சனங்கள் சமரசங்கள் இல்லாதவை. அவர்கள் இருவரும் முகத்துதிக்காகப் புகழும் தன்மை இல்லாதவர்கள். விரிவான இலக்கிய வாசிப்பும் கலை ஈடுபாடும் கொண்ட இரு நண்பர்களும் எதார்த்தமானவர்களாக இருந்தார்கள். ஒரு வட்டத்திற்குள் அல்லது ஒரு குழுக்குள் அடங்காமல் தன்னிச்சையாகச் செயல்படும் அவர்களின் இருப்பு எனக்கொரு பலமாகத் தெரிந்தது. ராமின் ‘அப்புவின் உலகம்’ என்கிற சினிமா இதழிலும் சுஜாவின் அரூவிலும் என் படைப்புகள் பிரசுரமாயின; பிரசுரமாகும். நான் தனித்து இயங்கும் ஒரு சுதந்திரமான படைப்பாளி. எனக்கென்று குழுக்கள் இல்லை; எனக்கென்று எழுத பத்திரிகைகளும் இல்லை. ஆக, சிங்கை நண்பர்களான இவர்கள் இருவரும் எந்த நிபந்தனைகளும் விதிமுறைகளும் இன்றி பழகுகிறார்கள். அவர்களின் வழியாக ஒரு நல்ல தரமான இலக்கியத் தடங்கள் நோக்கிப் பயணிக்கத் தோன்றியது; தோன்றுகிறது.

 

6. துவான்கு பைனுன் கல்லூரியில் சிறுவர் நாவல் பட்டறை

இதுவரை சிறுகதை பட்டறைகள் நடத்தி வந்த எனக்கு இவ்வாண்டு நாவல் பட்டறை நடத்த முதல் வாய்ப்புக் கிட்டியது. எதிர்கால ஆசிரியர் வர்க்கத்தின் மனத்தில் தமிழ் நாவல்கள், சிறுவர் நாவல்கள் குறித்த தேடல்களை விதைக்க முடிந்த அப்பட்டறை மறக்க முடியாத அனுபவமாகும். விரிவுரைஞர் மணியரசன் அவர்களின் ஏற்பாட்டில் அப்பட்டறை நடந்தேறியது.

மேற்கண்ட ஆறு விடயங்கள் 2018ஆம் ஆண்டில் எனக்கு மகிழ்ச்சியளித்தவை; என்னை நோக்கி என்னை நகர்த்தியவை என்றே சொல்லலாம். என்றாலும் இன்னும் ஏதோ நிறைவேறாமல் மிச்சமிருக்கிறது என்கிற உணர்வோடுத்தான் 2019ஆம் ஆண்டை நோக்கி நகர்ந்துள்ளேன்.

 

2019ஆம் ஆண்டின் திட்டங்கள்

 

இவ்வாண்டு எந்தத் திட்டமும் முன்னமே போடக்கூடாது என்பதே திட்டம் ஆகும். நடப்பவை நல்லதே; காலம் தன்னகத்தே பல விடைகளுடன் நம்மோடு பயணிக்கும். நிறைய வாசிக்க வேண்டும்; நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற தேடலோடு நகர்கிறது அடுத்த கட்டம்.

நன்றி.

 

கே.பாலமுருகன்

Share Button

About The Author

Comments are closed.