FIFA World Cup 2018 – ஒர் இடைக்காலப் பார்வை: ஏமாற்றமும் அதிர்ச்சியும்

 

நான் எப்பொழுதுமான காற்பந்து இரசிகன் அல்ல; உலகக் கிண்ணப் போட்டியின் மீது மட்டும் மிகுந்த ஆர்வம் உண்டு. கடந்த 1994 முதல் உலகக் கிண்ணத்தைத் தீவிரமாக இரசித்து வருகிறேன். உலகத்தை ஓர் உருண்டையாக்கி அவரவர் திறமைக்கேற்ப கையாள்வதைப் போன்ற குதூகலத்தை உண்டாக்கும்.

இம்முறை நம்பிக்கையை உருவாக்கியிருக்கும் பிரபமில்லாத அணிகளில்,காற்பந்து ஜாம்பவன் என்று உலக மக்கள் கொண்டாடும் பிரேசிலுக்கே சவாலைக் கொடுத்த Switzerland முன்னிலை வகிக்கிறது. இரண்டாம் பாதியில் முழுவதுமாக விளையாட்டைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அசத்திவிட்டார்கள்.

அடுத்து, கவனத்தை ஈர்த்தக் காற்பந்து குழு Iceland ஆகும். அர்ஜெண்டினா குழுவிற்குச் சவால் கொடுத்துக் கதிக்கலங்க வைத்தது என்று சொல்லலாம். அடுத்ததாக இரண்டுமுறை உலகக் கிண்ணத்தை வென்ற பிரான்ஸிக்குக் கடுமையான போட்டியைக் கொடுத்த ‘ஆஸ்ட்ரோலியா’ ஆகும். அவ்விளையாட்டில் ஆஸ்ட்ரோலியா 2-1 என்று தோல்வியடைந்தாலும் மிகச் சிறப்பான போட்டியை உண்டாக்கியது என்றே சொல்லலாம்.

அடுத்து, போர்த்துகல், ஸ்பேய்ன் அணி மோதிய விளையாட்டுக் கவனித்தக்கது ஆகும். இரண்டுமே பலம் வாய்ந்த அணி. ஆனாலும், ஸ்பேய்ன் சிறப்பாக விளையாடியது என்றே சொல்ல வேண்டும். ரொனால்டோ ஒருவர் இல்லையென்றால் போர்த்துகல் 3 கோல்கள் அடித்திருக்குமா என்கிற கேள்வியும் நம்மிடையே உள்ளது.

அடுத்து, நம் எதிர்ப்பார்ப்புகளை உடைத்த அணிகள் வரிசையில் முதல் நிலையில் ஜெர்மனி ஏமாற்றத்தை உருவாக்கியுள்ளது. வாய்ப்பை நழுவவிடுதல் என்பது ஒரு பக்கம் இருக்க, ஜெர்மனி வாய்ப்பை உருவாக்கவே இல்லை என்பது பல இரசிகர்களின் மனக்குமுறல்.

அடுத்து, ஏமாற்றத்தை ஏற்படுத்திய அணி அர்ஜெண்டினா ஆகும். குறிப்பாக கிடைத்த அருமையான வாய்ப்பை ‘மெஸ்ஸி’ நழுவவிட்டது இரசிகர்களின் அதிருப்தியைக் கிளப்பி விட்டது. ‘ஐஸ்லேண்ட்’ போன்ற மிகச் சிறிய நாடு உலக அரங்கத்தில் இத்தனை வீரியத்துடன் எழுந்து நின்றது இதற்கு முன் உலக அளவில் ஜாம்பவான் என்று இடத்தைத் தக்கவைத்திருந்த அணிகளுக்குப் படிப்பினை என்றே சொல்லலாம்.

நடுவில் இருந்து கொண்டு ஆச்சர்யத்தை உண்டாக்கிய அணி, பிரேசில் ஆகும். திறமையாக ஆடினாலும் வாய்ப்புக் கிட்டவில்லை. குறிப்பாக ‘நெய்மார்’ காலில் பந்து வந்ததும் உடனே நான்கு எதிரணி ஆட்டக்காரர்கள் அவரைச் சூழ்ந்து நின்று தாக்குகிறார்கள். வாய்ப்பிருப்பின் பிரேசில் முன்னேறும்.

ஆயினும், பந்து என்பது அனுமாணிக்க இயலாத ஓர் அதிசயம். யாரையும் எங்கும் நிறுத்தும். பொறுத்திருந்த பார்ப்போம். என்னளவில் இவ்வாண்டு உலகக் கிண்ணத்தை ‘ஸ்பேய்ன்’ வெல்ல வாய்ப்புண்டு என்றே தோன்றுகிறது.

-கே.பாலமுருகன்

Share Button

About The Author

Comments are closed.