சிறுகதை: கால்கள்

அஞ்சலை அலறியடித்துக் கொண்டு ஓடி வரும்போது கணேசன் பத்து தீகா செங்கல் ஆலையில் இருந்தான். வெயில் எரித்துப் போட்ட காட்டத்தில் அப்படியே மல்லாந்து படுத்திருந்தவாறு மெல்ல வாயைத் திறந்து மூடிக் கொண்டிருந்தான். உடலின் உள்ளே அடைத்துக் கிடந்த மொத்த உஷ்ணத்தையும் வெளியேற்ற முயன்றான். ஒரு லாரி செங்கல்களை ஏற்றி முடித்த களைப்பு.

“கயலு மூங்கிலு கொட்டாய் ஒடைஞ்சி சேத்துல விழுந்துட்டா…”

கயல்விழி என்றதும் கணேசன் பக்கென்று எழுந்து அமர்ந்தான். தூரத்தில் வெறுங்காலுடன் அஞ்சலை ஓடி வந்தாள். அவளுடைய பதற்றம் புழுதியைக் கிளப்பிவிட்டபடி வரும் கால்களில் தெரிந்தது. செங்கல் ஆலையின் வாசலில் வந்து நின்றவள் கணேசனைக் கைக்காட்டி அழைத்தாள். இவனும் மகளுக்கு ஏதோ ஆகிவிட்டதெனக் கழற்றி சிமெண்டு தரையின் விளிம்பில் வைத்திருந்த சிலிப்பரை மறந்து ஓடத் துவங்கினான்.

செங்கல் துகள்கள் நிறைந்த மண். எதையும் பொருட்படுத்தாது கணேசன் அஞ்சலையுடன் வீட்டை நோக்கி ஓடினான்.

“ஐயோ! என்ன ஆச்சுடி? அப்பவே பயந்தன்… நெனைச்ச மாதிரி நடந்துருச்சி… நீ எங்க போயி தொலைஞ்ச?”

“ஐயோ… இங்கத்தான் சீனன் கடை வரைக்கும் போனங்க… அதுக்குள்ள இப்படி ஆச்சி…”

“அறிவிருக்கா உனக்கு? பிள்ளைய ஒண்டியா விட்டுட்டுப் போயிருக்க… ஐயோ! நான் என்ன பண்ணுவன்…”

வழியெல்லாம் கணேசன் பிதற்றிக் கொண்டே வந்தான். அந்த மூங்கில் கழிப்பறையைக் கடந்த மாதம்தான் கணேசன் செய்து கொடுத்தான். இதற்கு முன்பு பலகையில் வெட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்த கழிப்பறையின் சந்திலிருந்து பாம்புகள் நுழைந்துவிடும். பலமுறை கயல்விழி பார்த்துவிட்டுக் கழிப்பறைக்குப் போகாமல் அடம் செய்துவிடுவாள். அவளுடைய கழிப்பறை போராட்டம் குறிப்பாக இரவில் உச்சமாக ஒலிக்கும். கீழே உட்கார்ந்து கொண்டு கால்களை உதறுவாள். ஒரு ஆள் வேகமாக ஓடினாளே வீடு தாங்காமல் அதிரும். கயலுடைய சிறிய கால்கள் உண்டாக்கும் அதிர்வைச் சத்தமில்லாமல் வீடு விழுங்கிக் கொள்வது ஆச்சரியம்தான்.

“ஐயோ! என் பிள்ளைக்கு என்ன ஆச்சுன்னு தெரியலையா… யாராவது இருந்தா ஒடியாங்க…”

பதறியடித்துக் கொண்டு வீட்டைச் சேர்ந்ததும் கணேசன் வீட்டின் கீழடுக்கில் நுழைந்தான். ஊர்ந்து சென்று சேற்றுப் பரப்பை அடைந்தான். வீட்டின் கீழடுக்குச் சற்று இருளாக இருந்தது. அங்கு ஆற்றுக்கும் வீட்டின் மண்தரைக்கும் இடையிலிருந்த சேற்றில் கயல் இடுப்புவரை மூழ்கி கிடந்தாள்.

“பா… பா… காப்பாத்துப்பா… உடும்பு வரப்போது…”

கணேசனைப் பார்த்ததும் கயல் அலறத் தொடங்கினாள்.

“அசையாதம்மா… அசைஞ்சன்னா இன்னும் சேறு உள்ள இழுக்கும்… அப்படியே இரு… அப்பா வந்துட்டன்…”

குப்பைகளும் மலங்களும் கலந்த சேற்றில் கயல் போராடி தோற்றக் களைப்பில் சோர்ந்து தெரிந்தாள். கணேசனுக்கு அவளைப் பார்த்ததும் மேலும் அழுத்தமும் பதற்றமும் கூடின. அதுவரை பயந்திராத அந்த ஆற்றைக் கணேசன் முதன்முறையாக கடுஞ்சீற்றமும் பயமும் கலந்து பார்த்தான். கயலை உள்ளே இழுத்துக் கொள்ளும் அளவிற்கு ஆபத்தான ஆறு என்பதைக் கணேசன் அறிந்திருந்தான்.

அத்தாப் கம்பத்து வீடுகளுக்குக் கழிப்பறை என்பது ஒரு வெட்டவெளி ஏற்பாடு. மேக்கடை வீடு ஆற்றின் மேலே தூக்கி நிறுத்தப்பட்டிருந்தது. சொதசொதப்பான மண்தரைக்கு மேலே இரண்டடியில் வீடு. மண்ணைப் பிளந்து உள்ளே செருகப்பட்டிருக்கும் பெரிய மரத்தூண்கள். வீட்டின் உள்ளே இரண்டு இடங்கள் மட்டும்தான். ஒன்று படுத்துக் கொள்ளவும் சமையலுக்கும். அடுத்து அதன் கடைசி தொங்கலில் ஒரு சிறு பலகை தடுப்பிற்கு உள்ளே கழிப்பறை. ஓர் ஆள் உள்ளே நுழைந்தால் உட்கார மட்டுமே இடமுண்டு. உள்ளேயே குளித்தும் கொள்ள முடியும். பலகை சட்டங்களின் பிடியைப் பிடித்துக் கொண்டு உட்கார வேண்டும். பலகையைக் கணக்காக வெட்டிப் பிளந்து வைத்திருக்கும் இடத்திலிருந்து பார்த்தால் ஆற்றின் மேற்பரப்பு தெரியும். சில சமயங்கள் தண்ணீர் வற்றி வீட்டின் கீழ்ச்சட்டத் தூண்களைக் கெட்டியாகப் பிடித்திருக்கும் சகதியின் சொதசொதப்பான பரப்பு மட்டுமே தெரியும். அதனைப் பார்த்தபடிதான் உட்கார வேண்டும்.

“மா… பயமா இருக்குமா… உடும்பு வந்துரும்…”

கயல்விழியின் உச்சப் பிடிவாதமே மலம் கழிப்பதில் மட்டுமே இருந்தது. அதுவும் இரவில் உள்ளே போகவே மாட்டாள். மேலே எரிந்து கொண்டிருக்கும் மங்கிய பல்ப் வெளிச்சத்தில் கீழே ஒன்றும் தெரியாது. இருளில் ஆற்று நீரின் மெல்லிய சலசலப்பு மட்டுமே கேட்கும். அதுவும் நீர் உடும்பின் சத்தமாக இருக்கலாம் என கயல்விழி சுயமாகக் கற்பனை செய்து கொள்வாள். அது நாக்கை நீட்டியப்படியே தன்னைக் கவனித்துக் கொண்டிருப்பதாக அவளே பயந்து அலறுவாள். தேற்றி மீண்டும் உட்கார வைத்துவிட்டு வருவதற்குள் அஞ்சலைக்குப் போராட்டமாகிவிடும்.

“கயலு… கீழ ஆத்தப் பாக்காதடி… கண்ண மூடிக்கிட்டுப் போய்ட்டு வந்துரு…”

அப்பொழுதும், “மா, கக்கா வரலம்மா…” என்று சொல்லி சமாளித்துவிட்டு வந்துவிடுவாள். நள்ளிரவில் வயிற்று வலி தாளாமல் அஞ்சலை வீட்டுக்கு வெளியிலுள்ள மரத்தடிக்கு அழைத்துச் செல்வாள்.

“உனக்கு இதே பொழப்புடி… உள்ள ஜாமான்கொட்டாய் கட்டிக்கொடுத்தா இது வெளில வந்து தெறந்த வெளில போகுது…”

இருளுக்குள் தரையைப் பார்த்தபடி கயல்விழி கவனமாக அமர்ந்திருப்பாள். அம்மா சொல்வதும் திட்டுவதும் அவள் காதில் விழாது. தூரத்தில் ஆற்றுச் சலனம் மட்டுமே அவளுக்குள் பேரலையாக எழுந்து வரும். இங்கிருந்து இந்த ஆறு ஒரு சிற்ரோடையாக மாறி குறுகி சென்று பின்னர் நாற்பது மீட்டருக்கு அப்பால் மீண்டும் விரிந்து ஓடும். அத்தாப் கம்பத்தின் கடைசி வீடு அது. அதனாலேயே அசூயையும் வசதியும் ஒன்றரக் கலந்திருந்தன. ஆற்றினோரம் இருபது வீடுகள் கொண்ட நீள்வரிசை. கொட்டித் தீர்க்கும் அனைத்துக் குப்பைகளும் சிற்றோடையாக மாறும் இடத்தில் வந்து அடைத்துக் கொள்ளும். அது நிரம்பும்போது கணேசன் வீட்டின் கீழே பிளாஸ்டிக் குப்பைகள் முதல் சைக்கிள் டீயுப்கள் வரை சட்டங்களை வளைத்துக் கொள்ளும். இரவில் நீரோடும் ஓசை மாறியும் பெருகியும் வரும். அதைக் கேட்டு உறங்கி பழகிவிட்டார்கள்.

“யேங்க, ஆறு பொங்கிருச்சி… சுத்தம் செஞ்சுருங்களேன்…”

கணேசன் மறந்தாலும் அஞ்சலை ஆற்றில் குப்பைகள் வீட்டுக்குக் கீழாக நிறைந்துவிட்டதை நினைவுப்படுத்திவிடுவாள். கணேசன் வீட்டிக்கு அடியில் நுழைந்து நீண்ட கம்பியைக் கொண்டு குப்பைகளை ஆற்றோட்டத்திற்கேற்ப தள்ளுவான். இந்த வேலையை முடிக்க அரை நாள் எடுக்கும். மேட்டிலிருந்து வாங்கி வந்த கள்ளை ஒரு டப்பாவில் ஊற்றி வைத்துக் கொள்வான். விட்டுவிட்டு மேலேறி வந்து கள்ளைக் குடித்துவிட்டுத்தான் மீண்டும் கீழடுக்கிற்கு இறங்குவான். மிகவும் குறுகலான இடம். குனிந்து கொண்டே தோதாக படுத்தபடி குப்பைகளைத் தள்ள வேண்டும். அப்படித் தள்ளி சுத்தப்படுத்தினால்தான் வீட்டிலிருந்து வெளியேறும் அழுக்குகளையும் மலங்களையும் அப்புறப்படுத்தி ஆற்றோட்டத்தில் விட முடியும்.

“நாறுதுடி…தாங்க முடில…”

“அதான் மூனு நாளைக்கு ஒரு வாட்டி சுத்தம் செஞ்சிட்டா இப்படி நாறுமா? சொன்னா கேக்கறது இல்ல…”

நேற்றைக்கு வீட்டின் கீழடுக்கைச் சுத்தம் செய்ததால் இப்பொழுது கணேசனால் மாட்டிக் கொண்ட கயலை அடைய சுலபமாகிவிட்டது. அதற்குள் பக்கத்து வீட்டுப் பையன்கள் வீட்டைச் சுற்றி கூடிவிட்டனர். அவர்களின் சலசலப்பு பெருகி வீட்டின் அடியில் எதிரொலித்தது. கயல் போன்ற சிறு உருவம் கொண்டவர்கள் தாராளமாகக் கீழடுக்கில் நுழைந்து ஒளிந்து கொள்ள இயலும். கயலுக்கு அந்த விளையாட்டு மிகவும் விருப்பமானது. யாருக்கும் தெரியாமல் மதியத்தில் வீட்டின் கீழடுக்கில் நுழைந்து கொண்டு படுத்துக் கொள்வாள். அங்கிருந்து கொண்டு வீட்டுக்கு வருபவர்களின் கால்களைக் கவனிப்பாள்.

கணேசனின் கால்கள் வெண்மை பூத்திருக்கும். செங்கல் ஆலையில் வேலை செய்வதால் அந்த வெண்மை படிந்து பின்னர் கால்களில் அப்படியே நிலைத்துவிட்டது போன்று காட்சியளிக்கும். அம்மாவின் வலது காலின் தீக்காயம் அவருக்குத் தனி அழகு எனச் சொல்லி எல்லோரும் கேலி செய்வார்கள். மெலிந்த கால்கள். பெருவிரலின் நகம் கோணலாக இருக்கும். ஆள்களைப் பார்க்காமல் கயல் கால்களைக் கொண்டு யார் வருகிறார்கள் என்பதை அறிந்து கொண்டு சப்தம் எழுப்பி விளையாடுவாள்.

“கணேசன் ஹீ ஹீ ஹீ!!!!” எனக் கயல் கத்தும்போது அது அவளுடைய குரல்தான் எனத் தெரிந்தும் கணேசன் அலறுவது போல் பாவனை செய்து அவளை மகிழ்விப்பான்.

பெரும்பாலும் கயல் இங்குள்ள பிள்ளைகளோடு சேர மாட்டாள். கம்பத்தை விட்டுப் பெரிய சாலைக்கு அந்தப் பக்கமுள்ள ஆற்றோர வீடுகளுக்குச் சென்றுவிடுகிறார்கள் என அஞ்சலைக்கு அங்குள்ள பிள்ளைகளைப் பிடிக்காது. காலப்போக்கில் கயலுக்கும் அவர்களைப் பிடிக்காமல் போய்விட்டது. அதனால், வீட்டைச் சுற்றி அவளே பல விளையாட்டுகளைக் கண்டு பிடித்துக் கொண்டாள். அதில் ஒன்றுதான் வீட்டின் கீழடுக்கில் ஒளிந்து கொண்டு நோட்டமிடுவது. ஒரு பூனையைப் போன்று பகலை வேடிக்கை பார்த்தவாறு இருப்பாள். அவ்வப்போது சேற்றிலிருந்து நீர் உடும்பு வந்துவிடும் என்கிற அச்சமும் உடன் இருக்கும்.

“யக்கா, கயலு சேத்துல விழுந்துருச்சிக்கா… மாரியாத்தா மகளக் காப்பாத்து…”

அஞ்சலை வருவோரிடம் பயத்தில் புலம்பத் தொடங்கினாள். கணேசன் நிதானத்தை இழக்கவில்லை. கயலிடமிருந்து ஓரடியில் ஆறு சற்றே இறங்கி தடுப்புக் கம்பிகள் பக்கம் ஓடிக் கொண்டிருந்தது. சேறு பிடித்து வைத்திருக்கும் அவளுடைய கால்கள் சற்றுத் தளர்ந்தாலும் அவள் ஆற்றோட்டத்தில் சிக்கிக் கொள்வாள். நீந்தி சென்று அவளைப் பிடிப்பதற்குள் கம்பி தடுப்பில் மாட்டி கீழ்நோக்கி இருக்கும் அதன் கூர்முனைகளில் முகமோ அல்லது முதுகோ கிழிப்பட வாய்ப்புண்டு. கணேசனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. வீட்டில் நீர் சேமிக்கப் பயன்படுத்திய நீலத் தோம்பொன்று ஆற்றில் மிதந்து கொண்டிருந்தது.

“யேங்க, கயல தூக்கிட்டிங்களா? காப்பாத்திருங்க பிள்ளய…”

அஞ்சலை கீழே குனிந்து கத்தினாள். அவளுடைய குரலைக் கேட்டதும் கயல் மேலும் பரபரப்பானாள். சோர்ந்து உடைந்திருந்த குரலால் அம்மாவை அழைத்தாள். அச்சத்தம் கணேசனுக்கு மட்டும் கேட்டதே தவிர அதைத் தாண்டி போகவில்லை.

“மா… கயலு… அப்படியே இருடா… அசையாத செல்லம்… அப்பா வந்துட்டன்… சரியா?”

அவள் வழக்கமாக அணிந்து கொள்ளும் சிவப்புக் கவுனின் பின்கயிறு அவள் மூழ்கியிருந்த சேற்றில் பாழ்படாமல் அப்படியே மேலே கிடந்தது. கணேசன் ஊர்ந்து சேற்று முகவாயின் விளிம்புக்கு வந்துவிட்டான். மண்தரையில் கிடந்த ஜூஸ் போத்தலின் மூடி அவன் முட்டியைக் கிழித்திருந்தது. எரிச்சலைப் பொருத்துக் கொண்டு கையை நீட்டி அவளைத் தொட முயன்றான். விரல்களிலிருந்து இன்னும் நான்கடி தூரத்தில் கயல் இருந்தாள். தூரத்திலிருந்து பார்க்கப் பக்கத்தில் இருப்பது போல் தெரிந்த கயல் சற்றுத் தூரம் தள்ளிதான் இருந்தாள்.

கயல், கணேசனின் ஒரு பகுதியாக இருந்தாள். அஞ்சலையைவிட கணேசன் மீது அதிக உரிமை கொண்டவளாக இருந்தாள். அப்பா எந்நேரமும் தனக்கருகில் இருக்க வேண்டுமென விரும்புவாள். அதனாலேயே பள்ளி விடுமுறை நாள்களில் காலையில் அவள் விழித்தெழும் முன் கணேசன் வேலைக்குக் கிளம்பிவிடுவான். இல்லையென்றால் அவனை விட மாட்டாள். சைக்கிளில் ஏற்றிக் கொண்டு கம்பத்தை வலம் வர வேண்டுமென அடம் செய்வாள். கணேசனின் சைக்கிளில் கால்களை நீட்டிக் காற்றில் மோதவிட்டவாறு அமர்ந்திருப்பதில் அவ்வளவு குதூகலம் அவளுக்கு. உலகைச் சுற்றி வந்துவிட்ட திருப்தியுடன் இருப்பாள். வேறு யாராலும் அவளுக்கு அத்தகையதொரு மகிழ்ச்சியை வழங்கிவிட முடியாது.

கணேசனுடைய நேரம் அவனுடயதாக இல்லாமல் கயலுக்காக மட்டுமே செலவிட்டான். அவனுக்குச் சொல்லிக்கொள்ளும் அளவில் நண்பர்கள் கிடையாது. கள்ளை வாங்கிக் கொண்டு வந்து யாருக்கும் தெரியாமல் வீட்டினோரம் அமர்ந்து குடித்துவிட்டுப் படுத்துவிடுவான். கயல் ஒரு கணம்கூட அவனை வெளியே செல்ல விடமாட்டாள். அவளுக்குத் தெரியாமல் எங்கும் செல்லக் கணேசன் திட்டமிட வேண்டியிருக்கும். குளிக்கும்போது கழிப்பறையில் இருக்கும்போது அவளுக்குத் தெரியாமல் ஓடிவிடுவான்.

“ணே, மேலேந்து தூக்கிரலாமா?”

பக்கத்து வீட்டுப் பையன் விஜயன் கீழே ஊர்ந்து அவருக்குப் பின்னால் வந்து சேர்ந்தான்.

“டே, கயலோட பாரத்தையே அந்த மூங்கிலு தாங்கலடா… நீ போனன்னா மொத்தமா இடிஞ்சி அவத் தலையிலதான் விழும். ஆபத்துடா… ஏதாவது நீட்டுக் கட்ட இருக்கானு பாரு…”

விஜயன் மீண்டும் வெளியே ஓடிப்போய் அவன் வீட்டுக்குப் பக்கத்தில் கொய்யா அறுக்க வைத்திருந்த கட்டையைக் கொண்டு வந்தான். அதன் முனையில் பழத்தை அறுக்க வளைந்த கம்பி இருக்கும். அதனைக் கழற்றிவிட்டுக் கட்டையை மட்டும் கணேசனிடம் நீட்டினான்.

“மா… அப்பா இந்தக் கட்டய நீட்டறன்… அப்படியே கெட்டியா பிடிச்சிக்குறியா? அப்பா உன்ன மெதுவா இழுத்துருவன்…”

கணேசன் சொன்னதற்குக் கயல் பயந்த விழிகளோடு கட்டையைப் பார்த்தாள். மரணப் பயம் அவள் மீது முழுவதுமாக படிந்திருந்தது. மீண்டும் இந்த ஆற்றைவிட்டு வெளியேறி தூரத்தே தெரியும் மண் தரையில் ஓடியாடி விளையாடவும் குட்டியப்பன் நாயோடு துரத்திப் பிடித்து விளையாடவும் உள்ளே சேற்றுக்குள் அசையாமல் கிடக்கும் கால்களுக்கு வாய்ப்பில்லாதது போல் அதிர்ச்சியாலும் கவலையாலும் தோய்ந்து கிடந்தாள். கால்களால் சேற்றின் வழவழப்பை அவளால் உணர முடிந்தது. இடையிடையே கூராக ஏதோ ஒன்று காலை உரசிச் செல்வதாக உணர்ந்தாள். கால்கள் அவள் வசம் இல்லை. அப்படியே அசையாமல் கிடந்தாள்.

“மா… ஒன்னு நல்லா ஞாபகம் வச்சுக்கோ… கால மட்டும் அசைச்சிராத…அப்படியே சேத்துக்குள்ளே இருக்கட்டும்… சேத்துல வெளையாட வந்தேன்னு நெனைச்சிக்கோ… தோ… இன்னும் ரெண்டு நிமிசத்துல அப்பா உன்ன இழுத்துறவன்… சரியா?”

கயல், கணேசன் சொல்வதைக் கேட்டு அதனைச் செய்து பார்க்கும் நிதானத்தில் இல்லை. ஒன்பது வயது பிள்ளைக்கு சாத்தியமில்லாத பொறுமையை வரவழைக்கத்தான் கணேசன் ஆபத்தின் விளிம்பில் போராடிக் கொண்டிருந்தான்.

இந்த மூங்கில் கழிப்பறையைக் கணேசன், கயலுக்காகத்தான் செய்து கொடுத்தான். வழக்கம்போல் ஆற்றைப் பார்க்கக் தேவையிருக்காது. கழிக்கும் மலம் சாய்வாக வைக்கப்பட்டிருக்கும் மூங்கில் பிளவுகளின் வழியாகக் கீழே ஓடி விழுந்துவிடும். நான்கைந்து மூங்கிளைப் பிளந்து அதனைச் சற்றுக் கீழே இறக்கிச் சாய்வான அல்லூரைப் போன்று கம்பியில் இருகி கட்டிவிட்டான். மூங்கில் கம்புகளை ஒன்றொடொன்று இறுகி கட்டி இரு முனைகளிலும் இருக்கும் பலகை சட்டங்களின் பிடியோடு உட்கார்ந்து கொள்ளும் அளவில் கவனமாகத்தான் செய்திருந்தான். வீட்டின் உறுதியான சட்டங்களின் ஓரங்களைத் தாண்டி வீட்டிற்குள் போய் நீண்டிருக்கும் மூங்கிள் கால்களில் ஆணியும் அடித்திருந்தான். ஓர் ஆள் உள்ளே நுழைந்து வசதியாக உட்கார்ந்து கொள்வதில் எந்தச் சிக்கலும் ஏற்படாது என்றுதான் நினைத்திருந்தான்.

“அப்பயே டவுனு வீடொன்னு பாத்துப் போயிறலாம்னு சொன்னன்…”

வெளியில் அஞ்சலையின் புலம்பல் ஓயவில்லை. அவளும் அழுது ஓய்ந்திருந்தாள். குரலின் தொனி இறங்கி அதில் சோர்வும் கையறுநிலையும் கலந்திருந்தன. இந்தச் செங்கல் ஆலையில் வேலையை விட்டுவிட்டால் டவுனில் எந்த வேலையும் சரிப்பட்டு வராது என்பது கணேசனுக்குத் தெரியும். அதுவும் சிறுவயதில் ‘கேளாங் லாமா’ தோட்டத்திலிருந்து வந்ததிலிருந்து இந்தக் கம்பத்தை விட்டு அவன் நகர்ந்ததே இல்லை.

சென்ற வருடம் ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காந்தராவ் வீட்டின் பின்பகுதி கீழ்ச்சட்டம் உடைந்து அவன் வீடு சாய்ந்து கொண்டதை யாராலும் மறக்க முடியாது. எல்லோரும் வெளியேறி மழையில் நின்று கொண்டே ஆற்று வெள்ளத்தில் பிடிமானமில்லாமல் அசைந்து கொண்டிருந்த வீட்டைப் பார்த்தனர். விடிவதற்குள் வீடு ஆற்றோடு போய்விடும் என்றுதான் நினைத்தார்கள். எப்படியோ மழை ஓய்ந்ததும் வீடு தப்பித்துக் கொண்டது. இப்பொழுது நினைத்தாலும் வெள்ளக்காலத்தில் எல்லோருக்கும் பீதி கிளம்பிவிடும்.

அந்தச் சம்பவத்திற்கு அடுத்து இப்பொழுது கயல் சேற்றில் விழுந்த செய்தி கம்பத்தில் சட்டெனப் பரவியது. கணேசனின் நண்பர்கள் பலர் தூரத்தில் இருக்கும் தொழிற்சாலைகளில் வேலை செய்கின்றனர். உடனே அவர்களுக்குத் தகவலும் சொல்ல முடியாது. கணேசன் மெதுவாகக் கட்டையைக் கயல் பக்கம் கொண்டு போனான். கயல் அதன் முனையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டால் போதுமானது. சட்டென அவளை இழுத்துவிடலாம். நான்கடி தூரம்தான்.

“ணே, பாலத்துக்கு அந்தப் பக்கம் நிசாம் அங்கள்கிட்ட ‘போட்’ இருக்கும்… எடுத்துட்டு வரச்சொல்லட்டா? அதுல போய் அந்தப் பக்கத்துலேந்து கயல இழுத்துறலாம்…”

“இருடா… இதுலே இழுத்துறலாம்னு நெனைக்கறன்… எதுக்கும் நீ போய் சொல்லு… அதுக்குள்ள முடிஞ்சா நான் இழுத்துர்றன்…”

விஜயன் வீட்டின் கீழடுக்கிலிருந்து வெளியேறி பாலத்திற்கு அந்தப் பக்கமிருக்கும் மலாய்க்காரக் குடியிருப்பிற்கு ஓடினான்.

“கயலு… இந்தக் கட்டையக் கெட்டியா பிடிச்சிக்கோ… விட்டுறாத… அப்பா இழுக்கற வரைக்கும் பொறுத்துக்கோ… சரியா?”

கயல் தன்னைச் சூழ்ந்திருக்கும் சேற்றை உற்றுக் கவனித்தாள். காலுக்கடியில் ஏதேதோ ஊர்ந்து செல்வதும் உரசுவதுமாக இருப்பதாக உணர்ந்தாள். அவையெல்லாம் உடும்பு என்பதாகவே கற்பனை செய்தாள். மேலே உடைந்த மூங்கில் வாய்ப்பிளந்து அவளுடைய தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்தது. அது உடும்பின் நாக்கென நினைத்தாள். தன் உடலை மொத்தமாகப் பிடித்து அசைக்க முற்படும் சேற்றை நீர் உடும்பின் மொத்த வாயாக நினைக்கத் தொடங்கினாள். வீடும் மனிதர்களும் அவளுக்குத் தெரியவில்லை. இந்த ஆற்றிலிருக்கும் ஒரு ராட்சர உடும்பு தன்னைக் கௌவியிருப்பதாக அவள் உண்டாக்கிய கற்பனையின் உச்சத்தில் இருந்தாள்.

அவள் நினைத்தது போல கணேசனிடமிருந்து ஓர் உடும்பு நாக்கை நீட்டியபடி தன் சிறிய கால்களைச் சேற்றில் மென்மையாக வைத்துத் தன்னை நெருங்கிக் கொண்டிருப்பதைக் கவனித்தாள். யாருடைய குரல்களும் அவளுக்குக் கேட்கவில்லை. அந்த ஒல்லியான உடும்பு வெகுநாள் பசியுடன் தன்னை நெருங்குகிறது என அலறினாள்.

“பா… அன்னிக்கு நீ வீட்டுக்கு வந்தப்ப உன்கூட இன்னொரு கால் வந்துச்சே… அது யாரு? அம்மாவோட கால் இல்லயே?”

“கயலு… சும்மா கற்பனயில பேசிக்கிட்டு இருக்காத… அப்பாவே களைப்புல வந்தன்…”

“இல்லப்பா, அம்மா அன்னிக்கு மாரியம்மன் கோயிலுக்குப் போய்ட்டாங்க… நான் வீட்டுலக் கீழடுக்குல இருந்தன்… அப்பத்தான் பாத்தன்… அது யாரோட காலு?”

அன்று கணேசன் அது பேயின் கால்கள் எனச் சொல்லி அவளை மிரட்டி சமாளித்துவிட்டான். ஆனால், அந்தக் கால்கள்தான் சற்றுமுன் அவள் கழிப்பறையில் அமர்ந்திருக்கும்போது தண்ணீர் நிரம்பிய நீலத்தோம்பைத் தூக்கி மூங்கில் தரையின் மீது போட்டுவிட்டு ஓடியது எனக் கடைசிவரை கயலால் சொல்ல முடியவில்லை.

அம்மா எப்பொழுதும் கிண்டல் செய்யும் தன் ‘குட்டிஜப்பான்’ கால்களைப் பலம் கொண்டு அசைத்தாள். சேற்றின் ஒரு பகுதி அசைந்து ஆற்றோட்டத்தில் சரிந்தது.

  • கே.பாலமுருகன்
Share Button

About The Author

Comments are closed.