குறுங்கதை: நாக்கு

மாரியாய் பாட்டியின் இரண்டாவது மகனும் இறந்துவிட்டான். சிரமப்பட்டுதான் பாட்டியைத் தூக்கி வந்து அமர வைத்தனர். காதுகள் தாடை அளவிற்குத் தொங்கியிருந்தது. 100 வயதைத் தாண்டியவர் என எல்லோரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். சிலர் காலில் விழுந்து வணங்கினர். மெலிந்த உடல். ஒரு சிறுமி அமர்ந்திருப்பது போல் தெரிந்தது.

“பாட்டி இப்ப சாமி மாதிரி… ஆயுள் அதிகம் வேணும்னா அதோட கால்ல விழுந்து கும்புட்டுக்கோ…”

பாட்டியின் முகத்தில் சலனமே இல்லை. தன் முன்னே என்ன நிகழ்கிறது என்பதைக்கூட பாட்டியால் உணர முடியாது எனப் பேசிக் கொண்டனர். இரண்டாவது மகனுக்கு மாரடைப்பு. வயது எழுபது இருக்கும். மனைவி, பிள்ளைகள் அழுது ஆர்ப்பரித்து ஓய்ந்திருந்தனர். பாட்டி ஏதும் பேசாமல் அப்படியே உட்கார வைத்தத் தோரணை மாறாமல் இருந்தார்.

“பாட்டி, சாவு பொறப்பு எல்லாத்தயும் கடந்திருச்சி… அந்த மாதிரி இருக்க ஒரு ஆன்மீக மனசு கிடைக்கணும்…”

“பாட்டி தலையில கை வைச்சிச்சுன்னா பெரிய ஆசீர்வாதம்… ஒரு ரெண்டு வெள்ளி காலுகிட்ட வச்சிருங்க…”

இறப்பு வீடு எனும் பிரக்ஞையைத் தாண்டி எல்லோரின் பேச்சிலும் மரணப் பயம் வியாபித்திருந்தது. பிணத்தைத் தூக்கிச் செல்லும்வரை பாட்டியை யாரும் அமர்த்தி வைத்த இடத்திலிருந்து தூக்கவில்லை. அவருடைய கடைசி பையன் கோபால்தான் தூக்கி காரில் ஏற்ற வேண்டும். அவரும் உடல் அடக்கத்தில் வேலையாக இருந்தார்.

“கோபாலு பையன்கிட்ட சொல்லி பாட்டிய வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகச் சொல்லிரு… அதோட மயன் செத்ததுகூட தெரில…கல்லு மாதிரி கெடக்கு…”

எதிர்வீட்டு ஆள்கள் வந்து பாட்டியிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டனர். இன்னும் ஒரு சிலர் பாட்டியை வணங்கினர். கோபாலின் மகன் பாட்டியைத் தூக்கிச் செல்லும்போதும்கூட பாட்டியினுடைய கண்ணீரை யாரும் அறிந்திருக்கவில்லை. அது விழும் முன்னே காற்றில் கலந்தது.

– கே.பாலமுருகன்

About The Author