தைப்பூசத்தை முன்னிட்டு ‘தைக்கோ தர்மலிங்கத்துடன்’ ஒரு நேர்காணல்

 

thaipusam festival

வருகின்ற புதன்கிழமை நாடு முழுவதும் தைப்பூசம் நடைபெறவிருப்பதை முன்னிட்டு ‘வருத்தப்படாத காங்கையர் சங்கத்தின்’ தலைவர் தைக்கோ தர்மலிங்கத்தை ஒரு சிறப்பு நேர்காணல் செய்யப்பட்டிருந்தது. இவ்வருடம் தைப்பூசத்திற்காக மாபெரும் முன்னேற்றத் திட்டங்களுடன் அனைத்தையும் முறையாக வரையறுத்து அதன் சாரங்களைப் பகிர்ந்து கொண்டார்.

நிருபர்: வணக்கம் தைக்கோ. உங்களுக்கு எப்படி தைக்கோ என்று பெயர் வந்தது?

தைக்கோ: என் பெயர் தர்மலிங்கம்தான். கொஞ்சம் சேட்டை காட்டன நம்ம பையனுங்கள எல்லாத்தையும் ஓட ஓட விரட்டி அடிச்சேன். அப்பொழுதுலேந்து என்னை தைக்கோ என்றுத்தான் அழைப்பார்கள்.

நிருபர்: ஆகா அருமை. இந்த வரலாற்று பதிவை விரைவில் பாடநூலில் இணைக்க நான் பரிந்துரை செய்கிறேன். அடுத்து, உங்கள் வருத்தப்படாத காங்கையர் சங்கத்தின் நோக்கம் என்ன?

தைக்கோ: ஆம்பளைங்கன்னா சும்மாவா? வீரத்தைக் காட்டறதுக்கே எங்க சங்கத்தை ஆரம்பிச்சோம்.

நிருபர்: கேட்கும்பொழுதே சிலிர்க்கிறது ஐயா. எப்படியெல்லாம் வீரத்தைக் காட்டுவீர்கள்?

தைக்கோ: குறிப்பாக நாங்க… பார்த்தீங்கனா தைப்பூசம்தான் எங்களோட களம். அங்கத்தான் எங்கள் வீரத்தை நல்லா காட்டுவோம்.

நிருபர்: ஓ அப்படியா! என்ன செய்வீர்கள்? பால் குடம்… காவடி ஏதும்?

தைக்கோ: ஐயோ! அப்படில்லாம் இல்லைங்க… நாங்க தனி வழி.

நிருபர்: நீங்க தனி வழியா? தைப்பூசத்துக்கு எல்லாம் ஒரே வழித்தானே பயன்படுத்துவாங்க?

தைக்கோ: தம்பி என்ன சின்ன பிள்ள மாதிரி பேசிக்கிட்டு இருக்கீங்க? நாங்களாம் தைப்பூசத்துல கத்தியோடத்தான் சுத்துவோம். நாங்க தனி கட்சி…

நிருபர்: ஓ! அந்த தேங்கா வெட்டித் தர்றது… ஆளுங்களுக்கு உதவி செய்றது நீங்கத்தானா? நல்ல காரியம் ஆயிற்றே?…

தைக்கோ: தம்பி நான் சொல்றது அந்த வேலை இல்ல… எவனாவது எங்களைப் பார்த்து முறைச்சானா அவன் செத்தான்… கத்திக்கு வேலை கொடுத்துடுவோம்…

நிருபர்: வீரப் பரம்பரை நீங்கள் அல்லவா?

தைக்கோ: அப்புறம் சும்மாவா விட முடியும்? நாங்க அப்படியே கெத்தா நடப்போம்… எல்லோரும் தோள்ல கை வச்சுக்கிட்டு ரயில் மாதிரி நடப்போம்…

நிருபர்: யாராவது குறுக்க வந்தால்… பெண்கள்… பிள்ளைகள்?

தைக்கோ: நாங்க எதுக்கு வழிவிடணும்? நாங்க தைக்கோலா… பிள்ளைங்களோ பெண்களோ அதுலாம் எங்களுக்குப் பெரச்சனை இல்ல… அடிச்சி நவுத்திக்கிட்டுப் போய்கிட்டே இருப்போம்… எங்க வழியில யாரும் நிக்க முடியுமா?

நிருபர்: அருமை அருமை… உங்கள் வழி மகாத்மா வழியைப் போல… வேற என்ன செய்வீங்க?

தைக்கோ: ஒரு விசில் மாதிரி இருக்கும்… அதை ஊதிக்கிட்டே வருவோம். நாங்க வந்தால் அந்த இடமே அதிரும்.

நிருபர்: ஓ! அந்தக் காதைக் கிழிக்கும் சத்தம் ஏற்படுமே அதுவா? அதைக் கேட்டால் வயதானவர்கள் குழந்தைகள் எல்லாரும் அலறுவார்களே?

தைக்கோ: அதேதான்… அதான் எங்களுக்கு வேணும். அப்படியே அலறிக்கிட்டு ஓடணும்…

நிருபர்: உங்கள் பொதுநல சிந்தனை அப்படியே …. முத்தமிடத் தோன்றுகிறது. வேறு என்னென்ன நற்காரியங்கள் உங்கள் பட்டியலில் உள்ளன?

தைக்கோ: அப்புறம் என்னா? போத்தலை ஓப்பன் செஞ்சிட்டு நல்லா தண்ணீ அடிப்போம். அடிச்சிட்டு அப்படியே காவடி முன்னுக்குத் தெறிக்க விடுவோம். சும்மாவா?

நிருபர்: ஓ! யார் அந்த முருகருக்குத் தங்களின் காணிக்கையைச் செலுத்த பக்தியோடு போகும் அவர்களின் காவடியின் முன்பா?

தைக்கோ: யாரு காவடிலாம் முக்கியம் இல்ல தம்பி…. அப்படியே போத்தைய தலைல வச்சிக்கிட்டு சுத்துவோம்… ரோடே தேஞ்சிரும்…

நிருபர்: அற்புதம்! அற்புதம். பக்தி வெள்ளம் பெருகும் அல்லவா?

தைக்கோ: எல்லாரும் பயந்து ஓரமா ஒதுங்கிடுவாங்கன்னா பாத்துக்குங்களேன்… அப்புறம் எங்களுக்குன்னு  நல்லா சினிமா பாட்டா போட்டு இன்னும் வெறிய ஏத்துவாங்க…

நிருபர்: அருமையான திட்டம் ஐயா. வேறு ஏதும் மக்களுக்குச் சொல்ல விரும்புகிறீர்களா?

தைக்கோ: கோவிலுக்குப் போங்க… சாமி கும்பிடுங்க… மூனாவது நாளு சாமி ரதம் வரும் நல்லா ஜொலிக்கும். அதே மாதிரி நீங்களும் நல்லா ஜொலிக்கற மாதிரி சும்மா தகதகன்னு வாங்க. வீட்டுல நகை இருந்துச்சின்னா தாராளமா போட்டுட்டு வாங்க. எங்களுக்கும் காசு பாக்கணும்லே… அறுக்கும்போது கத்தாதீங்க… அதுதான் எங்க வேலையே…

நிருபர்: எதற்கு அடுத்து வீட்டு நகை?

தைக்கோ: எங்களோட சங்க நிதி அதான் தம்பி!!! அறுத்துட்டு ஓடிருவோம்… பாத்துக்குங்க…

நிருபர்: மிக்க நலம் ஐயா. உங்களை எப்படி அடையாளம் காண்பது?

தைக்கோ: ஜீன்ஸ் முட்டிக்கிட்ட கிழிஞ்சிருக்கும். அப்புறம் தலைல கலர் ‘டை’ அடிச்சிருப்போம்… மண்டைல அணில் பிள்ள உட்கார்ந்திருக்கோம்… ராத்திரிலகூட கருப்புக் கண்ணாடி போட்டிருப்போம்… அப்படியே கத்திக்கிட்டே  வருவோம்… இடிச்சி தள்ளுவோம்… அதுதான் நாங்க…

நிருபர்: உங்கள் சேவை ஒவ்வொரு தைப்பூசத்திலும் தொடர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு விடைபெறுகிறேன். அருமையான பயன்மிக்க ஒரு நேர்காணலுக்கு மிக்க நன்றி ஐயா. உங்களின் பொன்னான பொழுதிற்கு நன்றி.

(இப்படியாக தைக்கோ தர்மலிங்கம் தன் சங்க உறுப்பினர்களுடன் தைப்பூச வேட்டைக்குத் தயாரானார்)

குறிப்பு:

  1. இவர்களைப் போன்றவர்கள் உங்கள் வீட்டிலிருந்துகூட உருவாகி வரக்கூடும். அவர்களை நீங்கள் அறிந்து கொள்ள சரியான இடம் தைப்பூசம்தான். தைப்பூசம் ஆண்மையைக் காட்டும் வீரத்தைக் காட்டும் இடமல்ல; கொஞ்சம் மனத்தில் ஈரம் இருந்தால் போதும், பக்தியோடு வரும் பல பொதுமக்களின் மனமகிழ்ச்சிக்கு உறுதுணையாக அமையலாம்.
  2. நகை கடையோடு வராதீர்கள்; அது தங்கம் அல்ல எனத் திருடர்களுக்குத் தெரியாது.
  3. பெண் பிள்ளைகளைத் தனியாகக் கூட்டத்தில் சுற்ற விடாதீர்கள்.
  4. உங்கள் மகன்களை/ உங்கள் வீட்டு இளைஞர்கள் தைப்பூசத்திற்கு உடுத்திச் செல்லும் ஆடையின் மீது கவனம் செலுத்துங்கள். பண்பாட்டிற்குப் புறம்பாக இருந்தால் கண்டியுங்கள்.
  5. அவர்கள் வலிமையானவர்கள் நாம் வலிமையற்றவர்கள் என்று நினைக்காதீர். இந்தச் சமூகத்தைக் கட்டமைக்கும் பணி அனைவரிடமும் உள்ளது.
  6. குறிப்பாக, தயவு செய்து குப்பைகளை வீசாதீர்கள். தைப்பூசத்திற்குப் பிறகு நகரமே குப்பை மேடாகி கிடப்பது நமக்குத்தான் அவப்பெயரைக் கொண்டு வரும்.
  7. மற்றவர்கள் தங்களின் நேர்த்திக்கடனைச் செலுத்த ஒத்துழைப்பை வழங்குங்கள்.

மேற்கண்ட நேர்காணல் ஒரு கற்பனையே. யாரையும் குறிப்பிடுபவன அல்ல.

கே.பாலமுருகன்

Share Button

About The Author

2 Responses so far.

  1. Andy says:

    மண்டைல அணில் பிள்ள உட்கார்ந்திருக்கும்… ஹா…ஹ..ஹ… அருமையான படைப்பு. சிரிக்க மட்டுமல்ல.. கட்டயாம் சிந்திக்கனும்…

  2. Malathyponnuduraj says:

    சிறப்பு… நம் சமுதாயத்திற்குத் தேவையான கருத்து…