களம் இணைய இதழ் அறிமுகம்

இலக்கியத்திற்கான வெளியாக உருவாகியிருக்கும் ‘களம்’ இலக்கிய இணைய இதழ்:

http://www.kazhams.com

பல திசைகளிலிருந்து புறப்படும் இலக்கிய நகர்ச்சிகள் ஒரு நாட்டில் இலக்கியத்திற்கான வெளியை அதிகமாக்கும் என்கிற புரிதலுடன்தான் இவ்விணைய இதழை ஆரம்பிக்கத் தோன்றியது. எப்பொழுதுமே ஒரு குழுவாகச் செயல்படும்போது சில சமயங்களில் யாரோ ஒருவர் அக்குழுவை வழிநடத்த வேண்டிய தேவை உருவாகிறது. அதனாலேயே களம் இலக்கியக் குழுவாக மாற வேண்டியதன் அவசியத்தைப் பல மாதங்கள் சிந்தித்துக் கொண்டே இருந்தேன். இணைய இதழ் என்றும் வரும்போது அதற்கான குழு சார்ந்த கூட்டமைவுகள் மிகவும் குறைந்துவிடுகிறது. படைப்புகளைச் சேகரிக்க ஒருவர், திருத்தங்கள் செய்து அதனைப் பிரசுரிக்க ஒருவர் என இரண்டு பேரைக் கொண்டிருந்தாலே ஓர் இணைய இதழை நடத்திவிட முடியும் என்பதால் நானும் தினகரனும் இத்திட்டத்தைத் தொடங்க ஒப்புக் கொண்டோம்.

நண்பர் பாண்டியன் அவர்கள் ஆரம்பக்கட்ட களம் அச்சு இதழில் செயல்ப்பட்டதால் அவரிடம் இணைய இதழ் தொடர்பாகப் பேசினேன். இலக்கியம் சார்ந்த வேறு சில நடவடிக்கைகளில் ஈடுப்பட்டிருப்பதால் அவர் களம் இதழ் குழுவிலிருந்து விலகிக் கொள்வதாகத் தன் கருத்தை வெளிப்படுத்தினார். ஆகவே, ஏற்கனவே களம் சார்ந்து உருவான ஆசிரியர் குழுவில் நானும் தினகரனும் களம் இதழை இணையத்திற்குக் கொண்டு வந்தோம். முதல் இணைய இதழுக்குப் படைப்புகள் அனுப்பிய அனைத்துப் படைப்பாளர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இணைய இதழ் தொடங்கும் முன் களம் பற்றி எழுதிய அறிமுகப் பத்தி:

 

களம் சில நண்பர்களின் கூட்டு முயற்சியால், இலக்கியத்தை நோக்கி சமூகத்தை நகர்த்த வேண்டும்  என்பதற்காகத் தொடங்கப்பட்ட ஓர் இணைய இதழ். கடந்த 23.09.2017ஆம் நாளில் ஈப்போ நகரில் தோழி பதிப்பகத்தின் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அவ்விழாவில் நான் சந்தித்த இலக்கியத்தின் மீது தீவிரமான ஈடுபாடு கொண்ட சில நண்பர்கள்தான் இவ்விணைய இதழ் தொடங்குவதற்கான ஊக்கியை எனக்குள் உருவாக்கிவிட்டார்கள் என்று சொல்லலாம்.

களம் இதழ் கடந்த 2014ஆம் ஆண்டில் அச்சு இதழாக வெளிவந்தது. நடுநிலை என்கிற புரிதலுடன் நான், தினகரன், அ.பாண்டியன் ஆகியோர் இணைந்து வடக்கின் இதழாகக் களம் இதழை உருமாற்ற எண்ணி முதல் இதழ் கொண்டு வந்தோம். வெற்றிக்கரமாக 1000 இதழ்களை நாடு முழுவதும் கொண்டு செல்ல இயன்றது. ஆனால், அடுத்த இதழைக் கொண்டு வருவதில் பல சிரமங்களை எதிர்க்கொள்ள நேர்ந்தது. இருப்பினும் களம் என்கிற இதழ் திட்டம் குறித்து அவ்வப்போது நானும் தினகரனும் தொடர்ந்து உரையாடியிருக்கிறோம். அவற்றுள் இணைய இதழாக மாற்ற வேண்டும் என்கிற திட்டமும் இருக்கவே செய்தது. ஈப்போ சந்திப்பில் அது உறுதியானது என்றே சொல்லலாம். இலக்கியம் என்பது அவரவர் மனத்திலிருந்து வலுப்பெற்று சமூகத்தை நோக்கி விரிவதாகும். கலந்துரையாடல்கள், இலக்கிய சந்திப்புகள், நூல் விமர்சனங்கள், இதழ் முயற்சிகள் போன்றவை இலக்கியத்தின் செயல்பாட்டு தளமாகும். அவ்வகையில் களம் இதழைப் புதிய எழுத்தாளர்களையும் வாசகர்களையும் , இப்பொழுது இயங்கிக் கொண்டிருக்கும் தீவிர எழுத்தாளர்களையும் வாசகர்களையும் இணைக்கும் ஒரு களமாக நாங்கள் பாவிக்கிறோம். இது அடுத்த கட்டத்தை நோக்கி இணையத்திலேயே உழன்று கொண்டிருக்கும் ஓர் இளைஞர் கூட்டத்தை அசைத்துப் பார்க்கும் என நம்புகிறோம்.

இதழ் ஆசிரியர்

கே.பாலமுருகன்

01.10.2017

Share Button

About The Author

Comments are closed.