‘இறந்தகாலத்தின் ஓசைகள்’ சிறுகதை தொகுப்பில் இருக்கும் என் சிறுகதைகள் பற்றி ஒரு பார்வை

வருகின்ற 19 ஆகஸ்டு 2017 மாலை 6.00 மணிக்குச் சுங்கை பட்டாணியில் தோழி பதிப்பகத்தால் வெளியிடப்படும் என்னுடைய ‘இறந்தகாலத்தின் ஓசைகள்’ சிறுகதை தொகுப்பிலுள்ள ஒவ்வொரு சிறுகதைக்கும் ஒரு பின்னணியும் வரலாறும் உள்ளன. அவற்றை இக்கட்டுரையில் மீட்டுணர்கிறேன்.

இத்தொகுப்பிற்கான சிறுகதைகளைத் தேர்ந்தெடுக்கும் போது நானும் சு.யுவராஜன் அவர்களும் எந்தச் சமரசமும் இல்லாமல்தான் செயல்பட்டோம். தேவையற்றதாக அவர் கருதிய இரண்டு சிறுகதைகளை இத்தொகுப்பிலிருந்து நீக்குவதற்கு நான் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. நம்மை விட நம் சிறுகதைகளின் மீது கூர்மையான பார்வையுடையவர்கள் நம் வாசகர்களும் விமர்சகர்களும் தான்.

அவ்வகையில் மீதி உள்ள 10 சிறுகதைகளும் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் என்னை ஒரு சிறுகதையாளனாகச் சமூகத்தாலும் அமைப்புகளாலும் சக எழுத்தாளர்களாலும் அடையாளம் காட்டியவை என்றே சொல்லலாம். இத்தொகுப்பிலுள்ள அத்தனை சிறுகதைகளுக்கும் அம்முக்கிய த்துவம் உள்ளது. 2007ஆம் ஆண்டு தொடங்கி 2014ஆம் ஆண்டு வரை எழுதப்பட்ட இவ்வனைத்து சிறுகதைகளும் காலத்தைத் தாண்டியும் நினைவுக்கூறப்படுவதற்கும் பேசப்படுவதற்கும் அச்சிறுகதைகளின் யதார்த்தமும் வாழ்வியலின் மீது அவை கவிழ்ந்து கிடக்கும் ஆழமும் முக்கியம் என்றே எழுத்தாளர் சீ.முத்துசாமியும், சு,யுவராஜனும் எப்பொழுதும் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

  1. பேபி குட்டி

2014ஆம் ஆண்டில் ஜெயமோகன் மலேசியாவிற்கு வந்துபோன பிறகு உடனே எழுதிய சிறுகதை. எனது வலைத்தலத்தில் பதிவேற்றம் செய்திருந்தேன். இலக்கியத்தின் தீவிர வாசகரான சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி தொடங்கி எழுத்தாளர் ஜெயமோகன் வரை அனைவராலும் பாராட்டுப் பெற்ற சிறுகதையாக அது சட்டென தொய்ந்துகிடந்த என் சிறுகதை உலகைத் தூக்கி நிறுத்தியது என்றே சொல்லலாம். வெகுநாட்கள் இடைவெளிக்குப் பிறகு எழுதப்பட்ட இச்சிறுகதை என்னை மீண்டும் எனக்கு மீட்டுக் கொடுத்ததாகவே அடையாளம் காண்கிறேன். அதோடுமட்டுமல்லாமல் மின்னல் வானொலியில் சிறுகதை பிரிவில் இரண்டு முறை இச்சிறுகதை ஒலிபரப்பப்பட்டு மலேசிய வாசகர்களின் கவனத்தை ஈர்த்தது என்றே சொல்ல வேண்டும்.

  1. அலமாரி

2008ஆம் ஆண்டில் மக்கள் ஓசை பத்திரிகையில் பிரசுரமான சிறுகதை. அவ்வாண்டின் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் மாதாந்திர சிறுகதை தேர்வில் சிறந்த சிறுகதையாகத் தேர்வானது குறிப்பிடத்தக்கது. மேலும், என்னை முதலில் நல்ல சிறுகதை எழுத்தாளனாக அடையாளம் காட்டிய சிறுகதையாக இதனையே பலரும் குறிப்பிட்டார்கள். எனது ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி விரிவுரையாளர்கள் திரு.ப.தமிழ்மாறன், திரு.அ.பன்னீர் செல்வன், திரு.ந.பாஸ்கரன், அமரர் திரு.அர்மம் ராஜூ, எழுத்தாளர் பொ.சந்தியாகு மேலும் அக்காலக்கட்டத்தில் வாசித்த பலர் இச்சிறுகதையைச் சிலாகித்துப் பேசினர். சிறுகதை உலகில் எனக்கு ஏற்பட்ட ஒரு பெரும்திறப்பாக ‘அலமாரி’ சிறுகதையைக் குறிப்பிடலாம். அதோடுமட்டுமல்லாமல் ‘பண்புடன்’ கூகள் குழுமம் நடத்திய சிறுகதை போட்டியிலும் இக்கதை சிறந்த சிறுகதையாகத் தேர்வாகி பரிசையும் பெற்றது.

  1. இறந்தகாலத்தின் ஓசைகள்

2009ஆம் ஆண்டில் எழுதப்பட்ட இச்சிறுகதை கெடா மாநிலத் தமிழ் எழுத்தாளர் இயக்கம் நடத்திய சிறுகதை போட்டியில் முதல் பரிசைப் பெற்றது. அப்பொழுது அப்போட்டிக்கு நீதிபதியாக இருந்த மறைந்த மூத்த எழுத்தாளர் திரு.ரெ.கார்த்திகேசு அவர்கள் இச்சிறுகதையை மலேசிய நவீன இலக்கியத்தின் பாய்ச்சலாகக் கருதுவதாகக் குறிப்பிட்டிருந்தார். தனிப்பட்ட முறையிலும் இச்சிறுகதையின் இருண்மையும் மொழியும் அப்பொழுது மிகவும் புதியதாகத் தோன்றியதாக என்னிடமும் சீ.முத்துசாமி ஐயாவிடமும் விமர்சனப் பார்வையாக வெளிப்படுத்தியிருந்தார். ஒரு மூத்த இலக்கிய விமர்சகரிடமிருந்து கிடைக்கப்பெற்ற அத்தகைய ஊக்கமிக்க விமர்சனம் இச்சிறுகதையினாலேயே சாத்தியமானது.

  1. வீட்டைத் தொலைத்தவர்கள்

2012ஆம் ஆண்டு தினக்குரல் பத்திரிகையில் பிரசுரமான கதை. அப்பொழுது அப்பத்திரிகையின் ஞாயிறு பதிப்பாசிரியராக இருந்த திரு.ராஜசோழன் அவர்களால் பாராட்டுப் பெற்று பிரசுரத்திற்குத் தேர்வானது. இச்சிறுகதை என் தாத்தாவை நினைத்து எழுதப்பட்டவை. நேரடியான அனுபவத் தாக்கத்திலிருந்து உருவான சிறுகதை இது.

  1. பாட்டி வீட்டில் ஒரு கிணறு இருந்தது

இச்சிறுகதை 2011 ஆண்டில் எழுதப்பட்டு தமிழ்நாட்டின் ‘வார்த்தை’ இதழில் பிரசுரமானதாகும். இதுவும் ஓர் உண்மை சம்பவத்திலிருந்து கிளர்ந்தெழுந்த சிறுகதையே. வயோதிகர்களின் வாழ்க்கை எப்படிச் சிதைவுக்குள்ளாகி தூக்கியெறியப்படுகிறது என்பதன் கொடூரத்தைச் சொல்ல வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட சிறுகதை. எழுதி முடித்த நாளில் உறங்காமல் ஏற்பட்ட தவிப்பு இன்னமும் ஞாபகத்தில் இருக்கிறது.

  1. நடந்து கொண்டிருக்கிறார்கள்

மலேசியத் தேசிய பல்கலைக்கழகத்தின் 2007ஆம் ஆண்டு தேசிய அளவில் நடந்த சிறுகதை போட்டியில்  எனக்குப் முதல் பரிசினைப் பெற்று கொடுத்த சிறுகதை. அப்போட்டிக்கு நீதிபதியாகப் பணியாற்றிய டாக்டர் முல்லை இராமையா அவர்கள் சிறுகதையின் யதார்த்த பாணியையும் சிறுகதையில் பாவிக்கப்பட்டிருக்கும் வாழ்க்கையை வேறு கோணத்தில் அவதானிப்பு செய்யும் மொழியையும் பாராட்டிப் பேசினார்.

 

  1. உறங்கிக் கொண்டிருக்கிறார்கள்

மலேசியத் தேசியப் பல்கலைக்கழகத்தின் சிறுகதை போட்டியில் 2008ஆம் ஆண்டு இரண்டாம் நிலை பரிசைப் பெற்ற இச்சிறுகதை என் வாழ்வில் நான் கண்டு தாண்டி வந்த சில பாட்டிகளைப் பற்றியதாகும். இதே சிறுகதை தமிழ்நாட்டின் ‘யுகமாயினி’ இதழில் பிரசுரம் கண்டது குறிப்பிடத்தக்கதாகும்.

 

  1. செல்லம்மா பாட்டியின் மரணத்திற்கு வந்தவர்கள்

இச்சிறுகதை 2013ஆன் ஆண்டு எழுதப்பட்டு எனது சொந்த வலைத்தலத்தில் பிரசுரமானது. மரணம் குறித்து சமூகம் பொதுமனங்கள் எப்படி இரட்டை வேடங்களை அணிந்து கொள்கிறது என்பதைப் பற்றிய சிறுகதையாக இடம்பெற்றுள்ளது.

 

  1. லாந்தர் விளக்கும் காட்டேரிப் பாதையும்

இச்சிறுகதை 2015ஆம் ஆண்டில் எழுதப்பட்டு ‘திண்ணை’ இணைய இதழில் பிரசுரம் கண்டது. நான் முதன் முதலில் எழுத வந்த காலங்களில் என் படைப்புகளைப் பிரசுரித்தது ‘திண்ணை’ இணைய இதழ்தான். அங்குப் பிரசுரமான கவிதைகளைத்தான் சிங்கை பாலு மணிமாறன் ஒரு நூலாகத் தொகுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

  1. பாட்டியின் தோள் துண்டு

இச்சிறுகதை எனக்கு மிகவும் நெருக்கமான சிறுகதையாகும். 2010ஆம் ஆண்டில் எழுதப்பட்டு மக்கள் ஓசை பத்திரிகையிலும், பின்னர் 2012ஆம் ஆண்டில் வல்லினம் இணைய இதழிலும் இச்சிறுகதை பிரசுரமாகிக் கவனிக்கவும் பட்டது. சீ.முத்துசாமி மிகவும் சிலாகித்துப் பேசிய இச்சிறுகதை நண்பர் ஒருவரின் தயாரிப்பில் ஒரு குறும்படமாகவும் இயக்கப்படவிருப்பதை இங்கே அறிவிக்கிறேன்.

மேற்கண்ட பல சிறுகதைகளை வாசித்துக் கருத்துரைத்த எழுத்தாளர் மஹாத்மன் அவர்களுக்கும் அ.பாண்டியன் அவர்களுக்கும் நன்றி.

  • கே.பாலமுருகன்

 

Share Button

About The Author

Comments are closed.