யார் கொலையாளி? – பாகம் 2 ( ஒரு விசாரணைத் தொடர்)

கொல்லப்பட்டவளைப் பற்றிய விவரங்கள்:

இறந்தவரின் பெயர்: தினேஸ்வரி

இடம்: சேலாயாங் அம்பாட் அடுக்குமாடி

கொல்லப்பட்டவைக்கான காரணம்: தெரியவில்லை

கொல்லப்பட்ட விதம்: மணிக்கட்டில் சிறிய வெட்டுக்காயம், தலையில் மண்டை ஓட்டில் சிறிய பிளவு (கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார்), ஆங்காங்கே இரத்தக் கசிவு.

கொலை கண்டறியப்பட்ட நேரம்: 21 ஜூன் 2017, இரவு 8.45க்கு

கொலை செய்யப்பட்ட நாள்: கண்டறியப்பட்ட நாளில்  கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

கொல்லப்பட்டவரின் சில விவரங்கள்:

ஒரு தனியார் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த மாணவி. சொந்த வீடு டாமான்சாரா. இங்குக் கடந்த ஒரு வருடமாகத் தங்கிப் படிக்கிறார். தினமும் வேலைக்கு அதே கல்லூரியில் பயிலும் ஒரு மாணவருடன் செல்வாள். அவர்தான் அவளை இங்குக் கொண்டு வந்து விடுவதும்கூட. இரவில் எங்கும் வெளியில் போகும் பழக்கம் அவளுக்கு இல்லை. வீட்டுக்கு ஒரே பிள்ளை. ஏற்கனவே குடியிருந்த இன்னொரு பெண்ணுடன் சில கருத்து வேறுபாட்டால் தனியாகத் தங்க வேண்டிய நிலை கடந்த மார்ச் மாதத்தில் ஏற்பட்டுள்ளது.

காவல்துறை அதன் பிறகு ஒரு வாரம் தீவிர விசாரணையை மேற்கொண்டது.

தினேஸ்வரி பற்றிய முதலில் காவல் நிலையத்தில் தகவல் கூறிய பக்கத்து வீட்டு திரு.மூர்த்தியின் வாக்குமூலம்:

திரு.மூர்த்தி:

அன்றைய மதிய நேரம் இருக்கும், நான் வேலையில் அரைநாள் கேட்டு வீட்டுக்கு வந்துவிட்டேன். எங்கள் வீடு இரண்டாவது மாடியின் கடைசி. என் வீட்டுப் பக்கத்தில்தான் அந்தப் பெண் தங்கியிருந்தார். அமைதியான பெண் தான். ஆனால், கடந்த சில வாரங்களாக அவள் வீட்டுக்குள் கத்தும் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டே இருந்த்து. யாருடனோ கைப்பேசியில்தான் கத்திக் கொண்டிருக்கிறார் என யூகித்துக் கொண்டேன். வேறு எந்தக் கெட்டப் பழக்கமும் அவளிடம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. ஆனால், அவள் இறப்பதற்கு அன்றைய கடைசி ஒரு வாரம் மட்டும் அவள் வீட்டில் அவளுடைய வழக்கத்திற்கு மாறான சத்தம் மட்டும் விநோதமாகத் தெரிந்தது.

அவள் இறந்துவிட்ட அன்றைய நாளில் நான் வேலை முடிந்து வந்த சமயம் அவள் வீட்டுக்குள் கண்ணாடி குவளைகள் உடையும் சத்தமும் அவள் கத்தும் சத்தமும் அதிகரித்துக் கொண்டிருந்த்து. என் வீட்டில் மனைவியும் இல்லை. இருந்திருந்தால் அவளை உடனே அனுப்பி விசாரிக்கச் சொல்லியிருப்பேன். பெண் பிள்ளை தனியாக இருக்கும் வீடு என்பதால் முதலில் எனக்குத் தயக்கமாக இருந்தது.

பின்னர் மாலை 6.00 மணிக்கு மேல் ஒரு சிறிய குட்டித் தூக்கம் போட்டு மீண்டும் எழுந்தபோது பக்கத்து வீட்டில் சத்தமே இல்லை. குளித்துவிட்டு வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தேன். அவளுடைய வழக்கமான காலணி வைத்த இடத்தில் அப்படியே கிடந்தது. அவள் எங்கேயும் போகவில்லை என்றே தோன்றியது. ஏதோ வழக்கமான சண்டைத்தான் என அமைதியாக இருந்துவிட்டேன்.

மணி 8.00 இருக்கும் அவள் வீட்டில் விளக்கு எதுமே எரியவில்லை. வழக்கமாக அத்தனை மணிக்கு அவள் வீட்டில் இருந்தும் விளக்கேதும் போடாமலிருப்பது சற்று உறுத்தலாகவே இருந்தது. உடனே என் மனைவியை அழைத்து அந்தப் பெண் இருக்கும் வீட்டின் கதவைத் தட்டச் சொல்லியிருந்தேன். அவளும் தட்டித் தட்டிக் களைத்துப் போய் மீண்டும் வந்துவிட்டாள். எனக்கு அப்பொழுதுதான் சந்தேகம் வலுத்தது. உடனே, நானும் பலம் கொண்டு கதவைத் தட்டினேன் அப்பெண்ணின் பெயரைச் சொல்லி அழைத்தேன். அதன் பிறகுத்தான் உடனடியாகக் காவல் நிலையத்திற்குத் தொடர்புக் கொண்டேன்.

திரு.மூர்த்தியிடம் காவல்துறை எழுப்பியக் கேள்விகள்:

  1. உங்களுக்கும் தினேஸ்வரிக்கும் ஏதேனும் பேச்சு வார்த்தை இருந்ததுண்டா?

மூர்த்தி: அப்படி ஏதும் இல்லை. எப்பொழுதாவது படிக்கட்டில் சந்திக்க நேர்ந்தால் புன்னகைப்பார். அவ்வளவுத்தான்.

  1. ஒரு வருடம் பக்கத்து வீட்டில் இருந்த பெண்ணுடன் ஏன் எந்தப் பேச்சு வார்த்தையும் இல்லை?

மூர்த்தி: நாங்கள் வீட்டுக்கு வருவதே இருட்டியப் பிறகுத்தான். அந்தப் பெண்ணும் இரவில் அதில் உலாவமாட்டாள். ஆதலால், அவளைச் சந்தித்துப் பேசுவது சாத்தியமில்லாமல் போய்விட்டது.

  1. சந்தேகம்படும்படி வேறு யாரும் அவள் வீட்டுக்கு வந்ததுண்டா?

மூர்த்தி: அவளுடைய அம்மா இரண்டுமுறை வந்து தங்கியிருக்கிறார். அவள் அம்மாவுடன் ஒரு ஆள் வந்துவிட்டுப் போனார். அவர் யார் என்று கேட்கவில்லை.

  1. அவளைத் தினமும் கல்லூரிக்கு ஏற்றிச் செல்லும் பையனைப் பற்றி ஏதும் தெரியுமா?

மூர்த்தி: அந்தப் பையன் பார்க்க நல்ல பையன் மாதிரித்தான் தெரிந்தான். ஆனால், அவனுடன் ஏதும் பேசியதில்லை.

  1. தினேஸ்வரியுடன் தங்கியிருந்த மணிமாலா பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

மூர்த்தி: அந்தப் பெண் கொஞ்சம் பிரச்சனையான பெண்தான். நானே ஒருமுறை அப்பெண் குடி போதையில் படிக்கட்டில் ஏறிப் போனதைப் பார்த்துள்ளேன்.

  1. கொலை நடப்பதற்கு சில நாட்களுக்கு முன் ஏதாவது சந்தேகம்படும்படி ஆள் நடமாட்டம் இருந்ததா?

மூர்த்தி: இந்த இடத்தில் எந்தப் பாதுகாப்பும் இல்லை; பாதுகாவலர்களும் இல்லை. பாதிக்கு மேல் காலியான வீடுகள். ஆகவே, இரவில் நாங்கள் கூட வெளியே வருவதில்லை. என்னால் அப்படியேதும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

தினேஸ்வரி கல்லூரியில் படிக்கும் அவளைத் தினமும் ஏற்றிச் செல்லும் சரவணனின் வாக்குமூலம்:

தினேஸ்வரியை எனக்கு ஒரு வருடமாகத்தான் பழக்கம். கல்லூரியில் வைத்து அவர்தான் நான் அவர் தங்கியிருக்கும் இடத்தைத் தாண்டிப் போவதைத் தெரிந்து கொண்டு உதவிக் கேட்டார். எனக்கும் அது அத்தனை சிரம்மாகத் தெரியவில்லை. ஆகவே, ஒரு வருடமாக அவளை ஏற்றி மீண்டும் வீட்டில் விட்டுவிடுவேன்.

இரண்டு மூன்று தடவை அவளுடைய வீட்டுப் பிரச்சனையை என்னிடம் மனம் விட்டுப் பேசியிருக்கிறார். அவளுடைய அப்பா ஒரு போதைப்பித்தர் என்றும் அவரால் வீட்டில் நிம்மதி இல்லை என்றும் அவள் சொல்லியிருக்கிறாள். நிறைய தடவை அவளுடைய அம்மா அப்பாவுடன் சண்டை போட்டுவிட்டு இங்கு வந்து இவளுடன் தங்கியிருப்பதாகச் சொல்லியிருக்கிறார். ஆரம்பத்தில் ஒருசில நாள்கள் பதற்றமாகவே இருந்தாள். வீட்டில் அவளுக்கும் அவளுடன் தங்கியிருக்கும் மணிமாலாவிற்கு ஏதோ சில வாரங்களாகத் தொடர் பிரச்சனை என்று மட்டும் சொல்லியிருந்தாள். நான் கேட்கப்போக அது பெண்கள் தொடர்பான விசயம் எனச் சொல்ல மறுத்துவிட்டாள். ஒரேயொரு முறை அவளை நான் வீட்டில் இறக்கிவிட்டவுடன் அவளுடைய பக்கத்து வீட்டில் இருக்கும் ஒருவரின் மனைவி அவசரமாக ஓடி வந்து அவள் கையைப் பிடித்துக் கொண்டே படிக்கட்டில் ஏறினாள். ஏன் என்று விளங்கவில்லை. நானும் அதைப் பற்றி அவளிடம் கேட்கவும் இல்லை.

மற்ற நேரங்களில் எல்லாம் காரில் ஏறினால் எதாவது சினிமா பற்றியும், கல்லூரி கதைகள் பற்றியும்தான் பேசுவாள். மற்றப்படி தினேஸ்க்கும் எனக்கும் எந்தவிதமான ஆழ்ந்த நட்போ பழக்கமோ இல்லை.

தினேஸ்வரியுடன் முதலில் ஒன்றாகத் தங்கியிருந்த தோழி மணிமாலாவின் வாக்குமூலம்:

எனக்குத் தினேஸ்வரி என்றால் மிகவும் பிடிக்கும்தான். 6 மாதம் நாங்கள் ஒரே வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்தோம். அவளால் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. சின்ன சின்ன சண்டைகள் வரும்தான். ஆனால், அதனை நாங்கள் பெரிதுப்படுத்திக் கொள்ள மாட்டோம்.

எனக்கு ஒரு காதலர் இருந்தார். அவர் கோலாலம்பூரில் வேலை செய்கிறார். அவரை ஒருமுறையாவது என் வீட்டுக்கு வர வைக்க வேண்டுமென ஆசைப்பட்டேன். அவளிடம் அனுமதிக் கேட்கப் போகத்தான் எங்களுக்குச் சண்டை மாட்டிக் கொண்டது. நான் இத்தனைக்கும் தங்க வைக்கும்படிக்கூட கேட்கவில்லை. அவர் காலையில் வந்து மாலையில் போய்விடுவார் என்றுத்தான் சொல்லி வைத்திருந்தேன். அதைச் சொன்னதிலிருந்து தினேஸ்வரி என்னிடம் முகம் காட்டத் துவங்கினாள். அங்கிருந்துதான் சில கருத்து வேறுபாடுகள் தோன்றின. எனக்கும் வெறுப்பாகி நான் அங்கிருந்து வேறு வீட்டுக்கு மாறி வந்துவிட்டேன்.

 

தினேஸ்வரியின் நெருங்கியக் கல்லூரி தோழி சுஜித்தாவின் வாக்குமூலம்:

 கல்லூரி வந்த நாளிலிருந்து மணிமாலாவைவிட நான் தான் அவளுக்கு மிகவும் நெருக்கம். நான் இங்குள்ள ஆள் என்பதால் அவளுடன் தங்க முடியவில்லை. ஆனாலும் கல்லூரி நேரத்தில் நாங்கள் இருவரும் ஒன்றாகத்தான் இருப்போம். அவள் வீட்டுப் பிரச்சனைகளை எப்பொழுதும் என்னிடம் சொல்வாள். வீட்டில் அப்பாவினால் ஏற்பட்ட கடன் தொல்லைகள் பற்றியும் அவளுக்கும் மிரட்டல் வந்திருப்பதாகவும் சொல்லி அழுதும் இருக்கிறாள். என்னால் அப்பொழுது அவளுக்கு மன ஆறுதல் மட்டுமே சொல்ல முடிந்தது. அவள் இறப்பதற்குக் கடைசி ஒரு வாரம் அவள் கலவரமாகவே இருந்தாள். வகுப்பில்கூட அவள் முகம் ஒருவிதப் பதற்றத்துடனே இருந்தது.

சுஜித்தாவிடம் கேட்கப்பட்ட சில கேள்விகள்:

  1. அவளுக்கு வேறு யாருடனும் ஏதேனும் பிரச்சனைகள் இருந்ததாகச் சொல்லியதுண்டா?

சுஜித்தா: அவளைத் தினமும் வீட்டில் கொண்டு போய்விடும் சரவணன் பற்றி சிலமுறைகள் சொல்லி என்னிடம் கவலைப்பட்ட்துண்டு. அவர் எங்கள் கல்லூரியில் வேறு வகுப்பில் பயிலும் மாணவன்தான். அவருடைய பார்வையும் நடவடிக்கையும் சரியில்லை என்று மட்டும்தான் தினேஸ் என்னிடம் சொன்னாள். மேற்கொண்டு ஏதும் சொல்லவில்லை.

  1. மணிமாலா எப்படிப் பட்டவள்?

சுஜித்தா: மணிமாலா என் வfகுப்புத்தான். சதா கைப்பேசியில் யாருடனோ பேசிக் கொண்டே இருப்பாள். கொஞ்சம் கோபக்காரி. எடுத்தெறிந்து பேசிவிடும் பழக்கம் இருப்பதால் யாரும் அவளுடன் அவ்வளவாகப் பேச்சு வைத்துக் கொள்வதில்லை.

சந்தேகத்திற்குரிய தடயம் 1: பக்கத்துவீட்டுக்காரர் மூர்த்தி அன்று வேலை முடிந்து வரும்போது தினேஸ்வரியின் வீட்டில் இன்னொரு வகையான ஆண்கள் அணியும் காலணியையும் பார்த்திருக்கிறார். ஏனோ காவல்துறை விசாராணையில் அதனைக் குறிப்பிடவில்லை. அந்தக் காலணி கொலைக்குப் பிறகு அங்கு இல்லை.

சந்தேகத்திற்குரிய தடயம் 2: மணிமாலா அங்கிருந்து வேறு வீடு மாறிப்போன பிறகு பொருள்கள் எடுப்பதாகச் சொல்லி மூன்றுமுறை தினேஸ்வரியைச் சந்திக்க அங்கு வந்திருக்கிறாள். அவள் வரும்போதெல்லாம் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்படியென்ன பிரச்சனை என்று இதுவரை விசாரணையில் கண்டறியப்படவில்லை.

சந்தேகத்திற்குரிய தடயம் 3: தினேஸ்வரி தங்கியிருக்கும் வீட்டுக்கு மூன்று வீடு தள்ளியிருக்கும் ஒரு பெண்மணி கொலை நடந்த அன்றைய தினம் தினேஸ்வரியுடன் மதியம் வீட்டிற்குள் வேறு ஒரு பெண்ணும் நுழைந்ததாகத் தெரிவித்தார்.

சந்தேகத்திற்குரிய தடயம் 4: அன்றைய தினம் தினேஸ்வரி கல்லூரிக்கே செல்லவில்லை. ஆனால், காலையில் அவளை வழக்கம்போல சரவணன்தான் வந்து ஏற்றிச் சென்றிருக்கிறார். சரவணன் மட்டும்தான் கல்லூரிக்கு வந்ததாகக் குறிப்புகள் உள்ளன.

சந்தேகத்திற்குரிய தடயம் 5: தினேஸ்வரியின் கைப்பேசியில் ஆக்க் கடைசிவரை அவளுக்கு வந்த குறுந்தகவல்கள், புகைப்படங்கள், அழைப்புகள் பற்றிய விவரங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டிருந்தன.

சந்தேகத்திற்குரிய தடயம் 6: பக்கத்து வீட்டுக்காரர் மூர்த்திக்கும் தினேஸ்க்கும் நல்ல பேச்சு வார்த்தை இருந்துள்ளது. ஆனால், விசாரணையில் அவ்விசயம் வெளிவரவில்லை.

 

யார் கொலையாளி?

சந்தேக நபர் 1: பக்கத்து வீட்டுக்காரர் திரு.மூர்த்தி

சந்தேக நபர் 2: வீட்டுத் தோழி மணிமாலா

சந்தேக நபர் 3: சரவணன்

சந்தேக நபர் 4: அப்பாவிற்குக் கடன் கொடுத்த யாரோ…

சந்தேக நபர் 5: மர்ம நபர்

 

குறிப்பு: தினேஸ் இறப்பதற்கு முந்தைய இரவு அவளுக்குத் திடிர் கனவுகள் தோன்றி மறைகின்றன.

கனவு 1:  கருப்புநிறத்தில் ஓர் உருவம் அவள் வீட்டுக் கதவை விடாமல் தட்டிக் கொண்டிருக்கிறது.

கனவு 2: அவளுடைய ஒரு காலணி எங்கோ தொலைந்துவிடுகிறது. அதனைத் தேடி அவள் அலைகிறாள்.

கனவு 3: அவள் படுத்திருக்கும் படுக்கைக்குக் கீழே ஓர் உருவம் தன் தொலைந்த ஒரு காலணி ஜோடியைத் தேடுகிறது.

ஆக்கம்: கே .பாலமுருகன்

தொடர்புடைய பதிவுகள்:

யார் கொலையாளி – பாகம் 1

Share Button

About The Author

Comments are closed.