சீ.முத்துசாமி சிறுகதைகளில் குறியீட்டு மொழி ஓர் ஆய்வு

இலக்கியம் என்பது மொழியின் ஊடாக நிகழ்த்தப்படும் கலையாகும். மொழியே பிரதானமாக இருந்து இலக்கியப் படைப்புகளுக்கு வெளிப்பாட்டு தளத்தை உருவாக்குகிறது. மொழி என்பது காட்சிகளின், பொருள்களின், செயல் வடிவங்களின் பிரதிநிதியாக குறியீட்டு ஒழுங்குகளால் கட்டமைக்கப்பட்டுள்ளன. சொல் என்பதே ஒரு பொருளைக் குறிக்கும் பொருட்டு உருவானதே. பின்னர், அப்பொருள் சார்ந்து செயல் வடிவங்களுக்குரிய சொற்கள் பிறந்தன என்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். அதே மொழியைக் கொண்டுத்தான் மனிதன் தன் உணர்வுகளை நூதனமான முறையில் படைப்பிலக்கியத் திறன்களோடு இலக்கியமாகப் படைக்கத் துவங்கினான்.

அத்தகைய மொழியைக் கொண்டு புனையப்படும் இலக்கியம் அம்மொழியை எப்படிக் கையாள்கிறது என்பதைப் பற்றியும் அவற்றினூடாகக் குறியீட்டு மொழி எப்படி இலக்கியத்தில் உருவாகின்றன என்பதையும் இந்த ஆய்வில் சீ.முத்துசாமி, ரெ.கார்த்திகேசு ஆகிய இரண்டு மலேசியப் படைப்பாளிகளின் சிறுகதைகளை முன்வைத்து அலசியுள்ளேன்.

குறியீட்டு மொழி

குறியீட்டு மொழி என்றால் என்ன? மொழியில் குறியீடுகளாக வந்தமைவதையே நாம் குறியீட்டு மொழி என்கிறோம். ஒன்றைக் குறிக்கும் சொல், வேறொன்றின் பிரதிநிதியாக மொழிக்குள் வரும்போது அவை புதிய அர்த்தங்களைப் பெற்று இலக்கியத்தில் மீமொழிக்கான தரத்தை அடைகின்றன. சமையலறை கலைச்சொல்லாக மட்டுமே இருந்த தீயை அறிவுக்கு நிகரான பொருளுடன் பாரதி புதிய அர்த்தத்தைக் கொடுத்துத் தன் கவிதையில் புனையும்போது தீ என்கிற சொல் மீமொழி தரத்தைப் பெற்று மரபார்ந்த பொருளிலிருந்து இலக்கியத்திற்கான குறியீட்டு மொழியாக மாறுகிறது. அத்தகைய வகையில் பல எழுத்தாளர்களால் மீண்டும் மீண்டும் மறுகண்டுப்பிடிப்பு செய்யப்பட்ட பல சொற்கள் இன்று இலக்கியங்களில் குறியீட்டு மொழிகளாகப் பாவிக்கப்பட்டு வருகின்றன.

இலக்கியம் மீமொழியில் இயற்றப்படுகின்றது என்பதில் பாரதி தெளிவாக இருந்தார். ஒரு மொழியில் ஒரு சொல் வழங்குகின்ற மரபான பொருளைப் புரிந்து வைத்திருப்பதன் மூலம் மட்டுமே அம்மொழியில் இயற்றப்படும் ஓர் இலக்கியப் பிரதியை அத்தனை சாதாரணமாகப் புரிந்து கொள்ள முடியும் எனச் சொல்ல இயலாது. அம்மொழியில் தொடர்ந்து இயற்றப்படும் இலக்கியங்களை ஆராய்வதன் மூலம் அம்மொழியின் இலக்கியத்தில் கையாளப்பட்டிருக்கும் மீமொழியைக் கண்டறிந்து அதனையொட்டி விவாதிப்பதன் மூலம் குறியீட்டு மொழியின் பங்களிப்பை ஆழமாகப் புரிந்து கொள்ள முடியும். அக்குறியீட்டு மொழிகளுடன் பழக்கமாவதன் மூலமே அம்மொழியில் எழுதப்படும் இலக்கியப் படைப்புகளை மேலும் நுண்மையாகக் கருத்துணர்ந்து கொள்ள முடியும்.

 

தொடர்புடைய ஆய்வுகள்

மீமொழி தொடர்பான ஆய்வுக் கட்டுரையை இதற்கு முன் எழுத்தாளரும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் நெறியாளருமான திரு.ஜெயமோகன் அவர்களே தமிழில் தெளிவாக எழுதியுள்ளார். அவர் மகாகவி பாரதியை முன்வைத்து மீமொழிக்கான பயன்கள் பற்றி எழுதியுள்ளார். அடுத்ததாக தமிழ்ச்சூழலில் படிமக் கவிஞர் எனச் சொல்லப்படும் பிரமிள் அவர்களின் சில கட்டுரைகளில் கவிதையில் குறியீடு தொடர்பான சில விளக்கங்களை அளித்திருக்கிறார். அதேபோல தென்காசி கவிஞர் கலாப்பிரியா அவர்களும் குறியீடு தொடர்பான சில கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.

தரவுகள் சேகரிப்பு

ஜூன் 2012ஆம் ஆண்டில் முதல் பதிப்பாக வெளிவந்த சீ.முத்துசாமி அவர்களின் ‘அம்மாவின் கொடிக்கயிறும் எனது காளிங்க நர்த்தனமும்’ எனும் சிறுகதை நூலையும், ரெ.கார்த்திகேசு அவர்களின் ஜனவரி 2011ஆம் ஆண்டில் வெளிவந்த ‘நீர் மேல் எழுத்து’ எனும் சிறுகதை நூலையையும் இவ்வாய்க்கான தரவுகளாகப் பாவித்துள்ளேன்.

 

செயலாக்கம்

குறியீட்டு மொழியைப் பற்றி அறிந்து கொள்ளாமல் அல்லது அம்மொழியுடன் பழக்கப்படாமல் ஒருவன் இலக்கியத்திற்கான மொழியைக் கண்டடைவதில் சிரமத்தை எதிர்க்கொள்வான் என்பதை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

அன்று எனக்குள் இருந்த பறவை பறந்து சென்றது

என்கிற ஒரு வரியில் மற்ற அனைத்து சொற்களையும்விட பறவை எனும் சொல்லை மட்டும் கூர்ந்து அலச வேண்டியுள்ளது. தமிழ்மொழியில் நன்கு புலமை பெற்ற ஒருவர் அதெப்படி ஒரு மனிதனுக்குள் பறவை குடியிருக்க முடியும்? அதெப்படி அது நம் உடலுக்குள்ளிருந்து வெளியேறி பறக்க முடியும் என்கிற கேள்விகளை எழுப்பக்கூடும். நான் முன்பே கூறியதைப் போல ஒரு மொழியில் ஒரு சொல் பூர்வீகமாக வழங்கும் பொருளை மட்டும் கொண்டு அம்மொழியில் இயற்றப்படும் இலக்கியத்தின் ஆழ்பொருளைப் புரிந்து கொள்வது கடினமாகும்.

தமிழ் படைப்புகளில் இதுவரை பறவை என்கிற சொல் எப்படியெல்லாம் கையாளப்பட்டுள்ளது என்பதை ஒரு வாசகன் உற்றாராய வேண்டியுள்ளது. அவற்றை அவனுடைய வாசிப்பின் வழியே நன்குணர முடியும். அடுத்ததாக அக்குறிப்பிட்ட படைப்பில் அச்சொல் எத்தகைய அழுத்தத்தை வழங்குகிறது என்பதை மறுவாசிப்பில் கண்டறிய வேண்டும். தொடர்ந்து இரண்டையும் தொடர்புப்படுத்தி பறவை எனும் சொல்லில் மறைந்து கிடக்கும் பொருளைத் திறந்து காட்ட வேண்டும். இது ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய புரிதல் நிலையைக் கொண்டு மாறுப்படக்கூடும்.

சொல் பொருள் காலம்/சூழல்
பறவை சுதந்திரம் புதுக்கவிதைகள் தோன்றிய காலக்கட்டம்
பறவை விடுதலை உணர்வு புதுக்கவிதைகளின் மறுமலர்ச்சி

காலக்கட்டம்

பறவை அடிமைத்தனம் நவீன கவிதைகளின் காலக்கட்டம்

 

  • மேற்கண்ட அட்டவனையின்படி ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒரே சொல் பற்பல பொருள்களுடன் கவிதைகளில் புனையப்பட்டிருப்பதை அறிய முடிகிறது. ஒரு சொல்லை அக்கவிஞன் தேர்ந்தெடுத்து அதனைக் கவிதையில் முக்கியமான சொல்லாக/ குறியீடாக மாற்றுவதற்கு அக்காலக்கட்டத்தின் சூழலும் ஒரு காரணமாக அமைகின்றது. நாடு சுதந்திரம் அடைந்தும் சாதி, மதம், முதலாளியக் கொடுமைகள் இருந்த காலத்தில் சுதந்திரத் தாகத்தைப் புதுக்கவிதைகள் கொண்டாடின. அப்பொழுது பறவை எனும் சொல்லாக இருந்தாலும் அதைச் சுதந்திரத் தாகத்துடன் ஒரு கவிஞன் தன் கவிதைக்குள் பாவிப்பான். காலச்சூழலுக்கேற்ப ஒரு சொல் தான் கொண்டிருந்த ஒரு குறியீட்டை உதறித் தள்ளிவிட்டு இன்னொரு குறியீட்டைப் பெறுகின்றது. நவீன சூழலில் பறவை என்றால் தனக்குள் அடிமைப்பட்டுக் கிடக்கும் மனிதனின் மனத்தினைக் குறிப்பதாகச் சில கவிதைகளில் வாசிக்க நேர்கிறது. மன அகமி எனச் சொல்லக்கூடிய தனிமை, மன உளைச்சல், தாழ்வு மனப்பான்மை என மேலும் அகத்தை நோக்கி விரியக்கூடிய தன்னைத் தானே விசாரிக்கக்கூடிய நவீன இலக்கியத்தில் பறவை எனும் சொல் தன்னைத் தானே அல்லது தன் மனத்திற்குள் அடைப்பட்டுக் கிடக்கும் இன்னொரு தன்னைக் குறிக்கும் சொல்லாகப் பாவிக்கப்படுவதைக் கவனிக்க முடிகிறது.

 

அத்தனைகாலம் தேக்கி வைத்திருந்த

எனது மூளையில் முடங்கிக் கிடந்த

எல்லாவற்றையும் திறந்துவிட நேர்ந்தது.

அன்று எனக்குள் இருந்த பறவை பறந்து சென்றது

 

  • சல்மா தினேசுவரி, 2009

 

இக்கவிதையை முழுமையாகப் படிக்கும்போது பறவை எனும் சொல்லில் கவிஞன் காலமாற்றத்திற்கேற்ப புதிய பொருளைப் புதைக்கிறான் என்றே சொல்ல வேண்டும். அத்தனைகாலம் தன் அகத்தில் சிக்கிக் கிடந்த தன்னை ஒரு பறவையாகக் கருதுகிறான். அன்று அவற்றிலிருந்து அவனுக்கு விடுதலை கிடைத்திருப்பதைப் பறவை பறந்து சென்றது என்கிறான் என ஒரு புரிதலை உருவாக்கிக் கொள்ள முடிகிறது.

          ‘எல்லா பறவைகளின் நிழலிலும் ஒரு காகம் இருக்கிறது

  • கலாப்பிரியா

 

தலைப்பு: அம்மாவின் கொடிக்கயிறும் எனது காளிங்க நர்த்தனமும் (சீ.முத்துசாமி)

1970களில் மலேசிய இலக்கியத்தில் தடம் பதித்து தமிழின் மிக முக்கியமான பரிசுகளையும் விருதுகளையும் பெற்று மலேசிய இலக்கிய உலகிற்குப் பெருமை சேர்த்தவர் ‘மண் புழுக்கள்’ நாவலின் எழுத்தாளர் சீ.முத்துசாமி. மலேசிய நவீன இலக்கியத்தின் உந்துகோல் என்றே சொல்லலாம். அவருடைய சிறுகதை நூலைக் கொண்டு சீ.முத்துசாமி குறியீட்டு மொழியைக் கையாண்டிருக்கும் விதத்தைக் காணலாம்.

குறியீட்டு மொழிப் பட்டியல் 1

சிறுகதை: வழித்துணை

சொல்/வாக்கியம் பொருள்
இருளைப் போர்த்திப் படுத்து தூங்கும் மலைப்பாம்பாய் மலைப்பாம்பாய் எனும் சொல் இரவில் நீண்டு கிடக்கும் சாலையைக் குறிக்கப் பயன்படுத்தியுள்ளார்.
இரவின் கண்ணீர் துளிகள் இச்சொற்றொடர் முழுவதுமாக விடிந்தும் இன்னும் அகலாமல் இருக்கும் சிறிய இருளைக் குறிக்கிறது.
நிறைமாத கர்ப்பிணியின் செழுமை முழு நிலாவைக் குறிக்கிறார்

 

குறியீட்டு மொழிப் பட்டியல் 2

சிறுகதை: வனத்தின் குரல்

சொல்/வாக்கியம் பொருள்
இரயிலின் தாலாட்டில் தாலாட்டு என்பது இரயில் நகரும்போது ஏற்படும் அசைவை/ஆட்டத்தைக் குறிக்கிறது.
கோழித் தூக்கம் கணநிமிடத் தூக்கத்தைக் காட்டுகிறது.
பூமி பச்சை நிறத்தைப் பூசிக் கொண்டு… புற்களைக் காட்டுகிறது
வயல்வெளிகள் பூப்பெய்திய குதூகலத்தில்… இச்சொற்றொடரில் பூப்பெய்திய எனும் சொல் விளைந்த பயிர்களின் நிலையைக் குறிக்கிறது.
பறவை காற்றில் மிதந்து போனது பறத்தல் நிலையை இப்படிக் காட்டுகிறார்
காடு தொலைத்த நினைவுக்கூட இல்லாமல்… இக்கூற்றில் காடு என்பதை மனவளத்தைக் குறிக்கிறார்.
வனப்பிரளயம் மனப்போராட்டம்

 

 

குறியீட்டு மொழிப் பட்டியல் 3

சிறுகதை: தூண்டில் மீன்கள்

 

சொல்/வாக்கியம் பொருள்
மனச்சுவர்கள் சுவர் எனும் சொல் இவ்விடத்தில் மனத்தில் உள்ள தடைகள் எனலாம்.
எங்கள் வருகையைப் பொருட்படுத்தாமல் வேற்றுக்கிரகத்தில் இருந்த… வேற்றுக்கிரகம் என்பது அவர் வேறொரு சிந்தனையில் இருப்பதைக் குறிக்கிறது.

 

குறியீட்டு மொழிப் பட்டியல் 4

சிறுகதை: அம்மாவின் கொடிக்கயிறும் எனது காளிங்க நர்த்தனமும்

 

சொல்/வாக்கியம் பொருள்
உறுமலுடன் சீறிப்பாய்ந்து உள்வந்து நின்றது கார். இவ்விடத்தில் உறுமல் என்பது காரின் ஒலியையும் சீறிப்பாய்ந்து என்ற சொல் வேகமாக உள்ளே நுழைவதையும் குறிக்கிறது,
தாக்குதலின் முதல் குண்டு அவளிடமிருந்து வெளிப்பட்டது. தாக்குதல் என்பது சண்டையையும், குண்டு என்பது கடுங்கோபத்தில் உச்சரிக்கப்படும் வார்த்தைகளையும் குறிக்கின்றன.
ஒருவாரமாய் மந்திர உச்சாடனமாய், வீட்டில் விரவி மனப்பாடம் ஆகியிருந்த… மந்திர உச்சாடனம்: விடாமல் கிடைத்த திட்டையும், மனப்பாடம் என்பது மனத்தில் அவ்வார்த்தைகள் பதிந்திருப்பதையும் குறிக்கிறது.
காறி உமிழும் சடங்கு சடங்கு என்பது வீட்டில் வழக்கமாக நடக்கும் சண்டையைக் குறிக்கிறது.
கால்களில் அசுரப் பசி கால்களின் வேகத்தைக் காட்டுகிறது.
தலையில் மத யானை இவ்விடத்தில் மத யானை என்பது தலைக்கணத்தைக் குறிக்கிறது.

 

 

தலைப்பு: நீர் மேல் எழுத்து (ரெ.கார்த்திகேசு)

மலேசியாவின் மூத்தப் படைப்பாளியாகத் திகழ்ந்த அமரர் முனைவர் ரெ.கார்த்திகேசு அவர்கள் நல்ல விமர்சகராகவும் அறிவியல் புனைக்கதைகளில் தேர்ந்தவராகவும் அறியப்பட்டவர். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் துணைத்தகைவராவும் பதவி வகித்துள்ளார். அறிவியல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிய இவர் இதுவரை 20க்கும் மேற்பட்ட நூல்கள் இயற்றியுள்ளார்.

 

குறியீட்டு மொழிப் பட்டியல் 5

சிறுகதை: ஆக்கலும் அழித்தலும்

 

சொல்/வாக்கியம் பொருள்
இலக்கியக் குடுமிப்பிடி குடுமிப்பிடி என்பது வம்பு அல்லது விவாதங்களைக் காட்டுகிறது.
கலவரம் இக்கதை கலவரம் என்ற சொல்லை மனத்தில் நடக்கும் போராட்டம் எனக் குறிப்பிடுகிறது.
அழுகையின் சுருதி கூடியது சுருதி என்ற சொல் சத்தம் எனப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
வறண்டுபோன அந்திம காலம் அந்திம காலம் என்பது வயது முதிர்ந்த நிலையைக் காட்டுகிறது.
இதுதான் தினசரி நியதி நியதி என்பது அன்றாடக் கடமை என்பதைக் குறிக்கிறது.

 

குறியீட்டு மொழிப் பட்டியல் 6

சிறுகதை: மல்லியும் மழையும்

சொல்/வாக்கியம் பொருள்
மொட்டையாக வேண்டாம் எனச் சொல்லியாயிற்று. மொட்டை எனும் சொல் இங்கு சுருக்கமாக என்பதைக் குறிக்கிறது.
அவளுடைய சுறுசுறுப்பைப் பார்க்கும்போது உடலில் அணு உலை இருக்கலாம் என… இச்சொல் உடலில் இருக்கும் அதீதமான சக்தியைக் குறிக்கிறது.
மகிழ்ச்சியான விசயங்களை மட்டும் வடிகட்டிக் காட்டும் சித்திரங்கள் வடிகட்டி என்பது குறிப்பிட்டு எனப் பொருள் கொள்ளலாம்.
வானம் விசையைத் தட்டியதும்… விசை என்பது இவ்விடத்தில் மழையைக் குறிக்கிறது.

 

குறியீட்டு மொழிப் பட்டியல் 7

சிறுகதை: என் வயிற்றில் ஓர் எலி

 

சொல்/வாக்கியம் பொருள்
காலம் நினைவிலிருந்து எல்லாவற்றையும் துடைத்துப் போட்டிருந்தது. துடைத்தல் என்பது இவ்விடத்தில் மறத்தல் என்பதைக் குறிக்கிறது.
வயிற்றில் உள்ள எலிக்குத் தீனி போட்டார். இவ்வரியில் தீனி என்பது மருந்தைக் குறிக்கிறது. எலி என்பது சதா துன்புறுத்தும் நோயைக் குறிக்கிறது.

 

குறியீட்டு மொழிப் பட்டியல் 8

சிறுகதை: மௌனமாய்

 

சொல்/வாக்கியம் பொருள்
அழுகை பொங்கி நின்றது… பொங்கி என்பது வரப்போகும் அழுகையைக் குறிக்கிறது.
அவளுடைய வார்த்தைகள் மூச்சிரைத்தன. மூச்சிரைத்தன என்பது தடுமாறியதைக் காட்டுகிறது.
மனத்தில் உஷ்ணம் தாளாத வெய்யில் உஷ்ணம் தாளாத வெய்யில் என்பது மனத்தில் உள்ள கோபத்தைக் காட்டுகிறது.

 

ஒப்பீடு

இரண்டு எழுத்தாளர்களும் வயத்தால் மூத்தவர்கள் என்பதால் அவர்களின் சொற்கள் அவர்களின் புறச்சூழல் அனுபவங்களிலிருந்து பெறப்பட்டுள்ளதை மதிப்பிட முடிகிறது. இருவரின் வாழ்க்கையின் பின்னணியையும் ஆராயும்போது அவர்களின் இலக்கியத்திற்கான குறியீட்டு மொழிகளை அவர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவத்திலிருந்தே பெற்றிருக்கிறார்கள் எனத் தெரிய வருகிறது.

சீ.முத்துசாமி தோட்டப்புறப் பின்னணியில் வாழ்ந்தவர் என்பதாலும் அவருடைய பெரும்பாலான கதைகளில் தோட்டப்புறச் சூழல்களே பிரதானமாக வெளிப்படுவதாலும் பெரும்பாலான அவருடைய கதைகளில் அவர் பயன்படுத்தியிருக்கும் குறியீட்டு மொழிகள் இயற்கை சார்ந்ததாகவே இருக்கின்றன. மனத்தையும், எண்ணங்களையும் கூட அவர் கதைகளில் ஓர் இயற்கையின் குறியீடாகவே வந்து நிற்கின்றன.

ஆனால், ரெ.கார்த்திகேசு அவர்கள் அறிவியல் துறையில் முதுகலை முடித்தவர், மேலும் அறிவியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். ஆகவே, அவருடைய பெரும்பாலான கதைகளில் குறியீட்டு மொழியாக அறிவியல் கலைச்சொற்கள் புது அர்த்தம் பெற்று வந்திருப்பதை அதிகமாகக் காண முடிகிறது. துடைத்தல், பொங்கி, அணு உலை என அவருடைய கதைகளில் வேறொன்றின் குறியீடாக வரும் பெரும்பாலான சொற்கள் அவர் தன்னுடைய அனுபவமிக்க அறிவியல் துறையிலிருந்தே எடுக்கிறார் எனப் புலப்படுகிறது.

ஆகவே, ஒரு குறியீட்டு மொழி என்பது இலக்கியப் படைப்புகளில் இயந்து வர அந்தக் குறிப்பிட்ட எழுத்தாளரின் பின்புலம், அனுபவம், ஈடுபாடு சார்ந்தே முடிவு செய்யப்படுகிறது. ஒரு துறையில் இருக்கும் சொல்லை இலக்கியத்திற்குள் கொண்டு வந்து புதிய பொருளுடன் பயன்படுத்த அவரவரின் பின்புலமும் முக்கியப் பங்கை வகிக்கிறது. ஜெயமோகன் தரிசனம் என்கிற சொல்லைத் தன் சிறுகதையில் பாவிக்கிறார். தரிசனம் என்பது ஆன்மீகச் சொல்லிலிருந்து சிறுகதைக்குள் வேறொரு பொழிவுடன் கொண்டு வரப்படுகிறது என்று அர்த்தப்படும். கடவுளின் தரிசனம் என்றிருந்த சொல் வாழ்க்கையின் தரிசனமாக இலக்கியத்திற்குள் கொண்டு வரப்படுகிறது. இலக்கிய வெளியில் கதைக்களத்தின் கூர்மையை மேலும் ஆழமாக்கிக் காட்டவும், சூழ்நிலையை வேறொரு மொழியில் சொல்லி வளப்படுத்தவும் குறியீட்டு மொழிகள் உதவுகின்றன என்பதைச் சீ.முத்துசாமி கதைகளிலும் ரெ.கார்த்திகேசுவின் கதைகளிலும் பார்க்க முடிகிறது.

  • ஆக்கம்: கே.பாலமுருகன்
  • UPSI, பல்கலைக்கழகத்தில் நடந்த மொழியியல் உலக மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரை

 

 

மேற்கோள் நூல் பட்டியல்

  • சீ.முத்துசாமி. (2012). அம்மாவின் கொடிக்கயிறும் எனது காளிங்க நர்த்தனமும். சென்னை, சிவா பதிப்பகம்.
  • ரெ.கார்த்திகேசு. (2011). நீர் மேல் எழுத்து. கோலாலம்பூர், உமா பதிப்பகம்.
  • ஜெயமோகன் அகப்பக்கம்: நவீனக் கவிதைகள் ஏன் புரிவதில்லை? : http://www.jeyamohan.in/8156#.WMuBTG996M9
Share Button

About The Author