சபரிநாதன் கவிதைகள்: வாழ்க்கைக்குள் ஊடுபாய்ந்து செல்லும் வித்தை

2011ஆம் ஆண்டில் தமிழ்நாட்டுக்கு முதன்முறையாக வந்திருந்தபோது எழுத்தாளர் கோணங்கியின் வீட்டில்தான் இரண்டுநாள் தங்கியிருந்தேன். கோவில்பட்டியில் ஊர் முழுவதும் சுற்றி அலைந்துவிட்டு கழுகுமலை சிற்பங்கள், கொஞ்சம் உரையாடல் என பகல் நீர்த்துப் போய்க் கொண்டிருந்த நேரத்தில் மழையுடன் சபரிநாதன் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். என்னைவிட இளையவரான சபரிநாதனை அவர் வீட்டில் வைத்து நான், செல்மா, யவனிகா, கோணங்கி என நால்வரும் சந்தித்தோம். அப்பொழுது கோணங்கி மிகவும் உற்சாகத்துடன் சபரிநாதனின் ‘களம் – காலம் – ஆட்டம்’ எனும் கவிதை நூலைக் கொடுத்தார்.

இலக்கியத்தின் மீதான நாட்டம் காரணமாக மூன்றுமுறை தமிழ்நாட்டில் எழுத்தாளர்களின் வீடு வீடாகத் தேடி அலைந்தவன் நான். என் விடுமுறை காலம் மிகவும் குறுகியதுதான். ஆனாலும், மலேசியாவிலிருந்து தனியாகப் புறப்பட்டு 30க்கும் மேலான எழுத்தாளர்களை அவர்கள் ஊரிலேயே சென்று சந்தித்துள்ளேன். அதே துடிப்புடன் சபரிநாதனை அப்பொழுது பார்க்க நேர்ந்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதன் பிறகு அவருடன் தொடர்பில்லை என்றாலும் அன்று ஒரு தம்பி கிடைத்தான் என்ற மனநிலையுடன் தான் அந்த மழைநாளை நினைவுக்கூர்ந்துவிட முடிகிறது.

சபரிநாதனின் கவிதையில் இருக்கும் சொற்பிரயோகம் மிக நெருக்கமான உணர்வை ஏற்படுத்தக்கூடியது. அம்மாச்சி தன் கால்களின் மீது என்னைக் குப்புறப்போட்டுக் கதை சொல்லத் துவங்கும் அந்த நாட்களைச் சட்டென மனத்தில் ஊர்ந்திடச் செய்யும் அளவிற்கு அக்கவிதை தொகுப்பில் சில கவிதைகளைக் குறிப்பிடலாம். அவை கதையைப் போன்று ஒலிக்கும் கவிதைகள்.

காலத்தைக் கடத்திக் கொண்டு வரும் சொற்கள் அவை. அச்சொற்கள் அனைத்தையும் திரட்டி ஒரு காலத்தை உண்டு செய்யும் வித்தை சபரிநாதனின் கவிதைகளால் முடிகிறது. ஒரு பகற்கனவில் தோன்றும் நித்தியமற்ற உடைந்து சிதறி பின் கூடிநிற்கும் நடையாய் சபரிநாதன் தனக்கென ஒரு களத்தைக் கவிதையில் உருவாக்குகிறார்.

எனினும்

அப்பா எப்பொழுதுமே நம்ப முடியாதவராக இருந்தார்

வரும்போது திண்பண்டங்கள் குறிப்பாக ஓமப்பொடியும்

கடுப்பட்டிமிட்டாயும் வாங்கி வருபவராகவும்

மார்க் அட்டைகளோடு போகும்போது

சாமியாடியாக மாறுபவராகவும்

 

என அப்பாவைப் பற்றி சித்திரம் அவரின் மொத்த வாழ்வின் மிச்சங்களையும் எச்சங்களையும் ஊடுபாய்ந்து சொல்லிச் செல்லும் இடத்தில் அகநோக்குடைய கவிதைகளாக அவை பிரவாகமெடுத்துக் கொள்கின்றன. இதுபோன்று வாழ்வையும், திணையேக்கங்களையும், உறவுகளையும் அகநோக்குடன் மீட்டுணர்ந்து சொல்ல நேர்கிற இடங்களில் அவருடைய மொழி தன் கால்களை நீட்டி வழிக்கொடுத்து மிக நெருக்கத்துடன் கட்டியணைக்கிறது. சபரிநாதன் தன் காலத்தின் அனைத்து வாசகர்களையும் உள்ளிழுத்துக் கொள்வதற்கான சூட்சமம் இதுவே எனக் கருதுகிறேன். முதலில் ஒரு கவிஞன் அகநிலையிலிருந்து பேசக்கூடியவனாக இருந்தால் மட்டுமே கவிதை கூர்மைப்பெறும். நுணுக்கமான சொல்லாடல்களை அடையும். பாடுப்பொருள்களை உருவாக்கிக் கொண்டு வாழ்க்கைக்கு வெளியிலிருந்து கூவும் போக்கு சபரிநாதன் கவிதைகளில் இல்லை.

தமிழ் சூழலில் நிச்சயம் சபரிநாதனின் கவிதைகள் தனித்த இடம் பெறும். மேலும் அவருக்கு குமரகுருபரன் விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. வாழ்த்துகள் சபரி.

  • கே.பாலமுருகன்
Share Button

About The Author

One Response so far.