யார் கொலையாளி – பாகம் 1

கொல்லப்பட்டவனைப் பற்றிய விவரங்கள்:

இறந்தவன் பெயர்: வினோத்

இடம்: தாமான் கெனாரி

கொல்லப்பட்டவைக்கான காரணம்: தெரியவில்லை

கொல்லப்பட்ட விதம்:

கத்தியால் முகம் கீறப்பட்டுள்ளது. முகத்தில் மட்டும் 13 வெட்டுக் காயங்கள். கழுத்தில் ஆழமான வெட்டில் உயிர் போயிருக்கிறது. அவனுடைய சமையலறையில் கிடந்தான்.

கொலை கண்டறியப்பட்ட நேரம்: 21 மார்ச் 2016, காலை மணி 9.15க்கு

கொலை செய்யப்பட்ட நாள்: கண்டறியப்பட்ட நாளிலிருந்து இரண்டு நாளுக்கு முன்பு, இரவில் கொலை செய்யப்பட்டிருக்கலாம்.

கொல்லப்பட்டவனின் சில விவரங்கள்:

ஒரு தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக வேலை செய்கிறான். கடந்த ஐந்து வருடங்களாக இங்குத் தனியாகத்தான் தங்கியுள்ளான். அம்மா, அப்பா எல்லாம் ஜோகூரில் உள்ளார்கள். உடன் பிறந்தவர்கள் யாரும் இல்லை. வயது 26.

காவல்துறை இரண்டு வாரங்கள் தொடர் விசாரணையை மேற்கொண்டது.

 

வினோத் பற்றிய முதலில் காவல் நிலையத்தில் தகவல் கூறிய அவனுடைய நண்பன் முத்துவின் வாக்குமூலம்:

முத்து:

எப்பொழுதும் இரவில் நாங்கள் சந்திப்போம். இரவில் வெளி சாப்பாடுதான் என்பதால் நானும் அவனும் ஒன்றாகத்தான் சாப்பிட வெளியில் போவோம். அன்றைய இரவு அவனுக்குத் தொலைப்பேசியில் அழைத்தேன். காய்ச்சலாக இருந்ததால் என்னால் அங்கு வர இயலாது, என்னை வந்து ஏற்றிக் கொள்ள அவனுக்கு விடாமல் அழைத்தேன். பதிலே இல்லை. அசதியில் அப்படியே படுத்துறங்கிவிட்டேன். மறுநாளும் அவனுக்கு அழைத்தேன். அதே போல பதில் இல்லை என்றதும் எனக்குச் சந்தேகம் வந்துவிட்டது. நேராக வேலை முடிந்து வீட்டிற்குச் சென்றேன். வெளி விளக்கு அணையாமல் அப்படியே எரிந்து கொண்டிருந்தது. மோட்டாரின் ஹார்ன் அடித்தும் அழைத்தும் பார்த்தேன், அவனிடமிருந்து பதில் இல்லை. அவனோடு தொழிற்சாலையில் வேலை செய்யும் சிலருக்கு உடனே அழைப்பேசியின் மூலம் தொடர்பு கொண்டேன். அவன் அன்று வேலைக்கு வரவில்லை என்றும் நேற்றைய தினம் கூட ஏதோ அவசரம் என பாதியிலேயே தொழிற்சாலையிலிருந்து வெளியேறிவிட்டதாகத் தெரிவித்தார்கள்.

எனக்கு மேலும் அதிர்ச்சியாக இருந்தது. சொல்லாமல் எங்குப் போயிருப்பான் என்ன பிரச்சனை என எனக்கு விளங்கவில்லை. ஒருநாள் பொறுத்துப் பார்க்கலாம் என இருந்துவிட்டேன். மறுநாள் காலையில் மீண்டும் அவனுடைய அழைப்பேசிக்கு அழைத்தேன். கைப்பேசி அடைந்திருந்தது. மெல்ல தயங்கி அவனுடைய பெற்றோருக்குத் தொடர்பு கொண்டேன். அவர்கள் முதலில் பயந்துவிட்டார்கள்; பின்னர் எப்படியொ சமாளித்துவிட்டு உடனே காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். அவனுக்கு எதிரிகள் என்று யாரும் இருந்ததாகத் தெரியவில்லை.

ஆனால், அவனுக்கு ஒரு பெண்ணுடன் பழக்கம் இருந்தது. அவருடன் கடந்த வருடத்திலேயே கொஞ்சம் பிரச்சனையாகி விலகிவிட்டதாக என்னிடம் இரண்டுமுறை சொல்லியிருக்கிறான். அவள் பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்வதாக அவன் எப்பொழுதும் என்னிடம் சொல்வான். காதலில் உண்மை இல்லை என்றும் வருத்தப்பட்டுள்ளான். மேலும், அவன் வீட்டுப் பக்கத்து வீட்டுக்காரர் அவனுடன் இரண்டுமுறை சண்டை போட்டுள்ளார். வினோத்திற்குக் குடிக்கும் பழக்கம் உண்டு. ஆகவே, ஒருமுறை குடித்துவிட்டு அவர் வீட்டுக்குப் போய் சத்தம் போட்டதால் அந்த வீட்டுக் காரருக்கும் அவனுக்கும் கொஞ்சம் சிக்கல் இருக்கலாம் என நினைக்கிறேன். அவர் கொஞ்சம் கோபக்காரர். அவருடைய மனைவியைக்கூட அடித்துத் துன்புறுத்துவார் எனக் கேள்விப்பட்டுள்ளேன். காலையில் எழுந்து வீட்டின் முன் நின்று கொண்டு சொந்தமாகப் பேசிக் கொண்டிருப்பதை நான் பார்த்துள்ளேன். அவரையும் விசாரிப்பது நல்லது என நினைக்கிறேன்.

 

வினோத் அண்டை வீட்டாரின் வாக்குமூலம்:

வினோத் ஒரு நல்ல பையன். வீட்டில் உதவியென்றால் அடிக்கடி செய்வான். நாங்களும் அவ்வப்போது அவனுக்கு உணவு சமைத்துக் கொடுப்போம். விழாக்காலங்கள் அவன் ஜொகூருக்குப் போகவில்லை என்றால் எங்கள் வீட்டில்தான் இருப்பான். வீட்டில் நானும் என் மனைவியும் என் கடைசிப் பையன் மட்டும்தான் உள்ளோம். ஆகவே, அவன் இருந்த்து எங்களுக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும்.

நான் வழக்கமாக இரவில் சீக்கிரம் உறங்கிவிடுவேன். அன்று சலி மருந்து குடித்துவிட்டு பாதி மயக்கத்தில் இருந்தேன். வீட்டில் எல்லோரும் தூங்கிவிட்டார்கள். வழக்கமாக வினோத் வேலை முடிந்து ஆறு மணிகெல்லாம் வீட்டிற்கு வந்துவிடுவான். அன்று அவன் வரவே இல்லை. பாதி மயக்கத்தில் இருக்கும்போது அவனுடைய மோட்டார் சத்தம் மட்டும்தான் கேட்டது. அப்பொழுது மணி 9.00 இருக்கும். பிறகு கொஞ்ச நேரத்தில் நான் தூங்கிவிட்டேன். ஒன்றும் தெரியவில்லை. அதற்கு முந்தைய நாள் மட்டும் ஒரு ‘சாகா’ கருப்பு வர்ணம் கொண்ட கார் வெகுநேரம் அவன் வீட்டுக்கு கொஞ்சம் தள்ளி நின்றிருந்தது.

எனக்கு அவனுடைய நெருங்கிய நண்பன் முத்துவின் மீது கொஞ்சம் சந்தேகம் உண்டு. எப்பொழுதும் இவனிடம் பணம் கடன் கேட்டு தொல்லை கொடுப்பான். வினோத்தும் பணம் கொடுத்ததாகச் சொல்லியுள்ளான். அவனுக்கும் இவனுக்கும் பணம் தொடர்பாகச் சில நாள் பிரச்சனைகளும் வந்திருக்கின்றன. என்னிடமே வினோத் ஒருநாள் முத்துவினால் பிரச்சனையாக உள்ளது என்றும் சொல்லியிருக்கிறான். ஒரு வாரத்திற்கு முன் முத்துவிற்கும் வினோத்திற்கும் வீட்டின் முன்னே சண்டை. முத்துவைப் பிடித்து வெளியே தள்ளிவிட்டான். கொஞ்சம் வாய் சண்டையும் இருந்தது. அதன் பிறகு மீண்டும் முத்து வரப் போகத்தான் இருந்தான்.

 

சந்தேகத்திற்குரிய தடயம் 1: வினோத்தின் மோட்டார் வீட்டில் இல்லை, ஆனால் அவன் மோட்டாரில்தான் வீடு திரும்பியுள்ளான்.

சந்தேகத்திற்குரிய தடயம் 2: அவன் கொலை செய்யப்படுவதற்கு முந்தைய நாள் ஒரு கருப்பு நிற ‘சாகா’ கார் அவன் வீட்டின் முன் அல்லது கொஞ்சம் தள்ளி வெகுநேரம் காத்திருந்துள்ளது.

சந்தேகத்திற்குரிய தடயம் 3: வேலையிலிருந்து பாதியில் வெளியேறிய வினோத் இரவுவரை எங்குப் போயிருப்பான்?

சந்தேகத்திற்குரிய தடயம் 3: வினோத்திற்கு ஒரு பெண்ணுடனான தொடர்பு. அப்பெண்ணைப் பற்றிய தகவல்கள் இல்லை. வினோத் தொலைப்பேசியில் உரையாடிய எண்களில் அந்தப் பெண்ணைப் பற்றிய விவரங்களும் கிடைக்கப்படவில்லை.

சந்தேகத்திற்குரிய தடயம் 4: அவனுக்கு வேறு வகையிலான எதிரிகள் கிடையாது என்பதைக் காவல்துறை விசாரணையில் உறுதிப்படுத்தியுள்ளது.

 

தொழிற்சாலையில் வேலை செய்யும் வினோத்தின் நண்பன் முரளிதரனின் வாக்குமூலம்:

அன்று அவன் கொஞ்சம் பதற்றமாக இருந்தான். என்னிடம்கூட சரியாகப் பேசவில்லை. யாரிடமோ இரண்டு மூன்றுமுறை தொலைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தான். பிறகு வெளியேறிவன் தான். அன்று அவன் வழக்கத்திற்கு மாறாக்க் கொஞ்சம் வேறு மாதிரி தென்பட்டான். நானும் ஏதும் கேட்டுக் கொள்ளவில்லை. ஆனால், தொழிற்சாலையில் ஒரு வங்காளதேசியுடன் அவனுக்குப் பிரச்சனை இருந்தது. பலமுறை அதனால் அவர்களுக்கு வாக்குவாதங்கள் நடந்துள்ளன. வினோத் அவனை அடிக்கவும்கூட நினைத்துள்ளான். என்னிடமே வினோத் பலமுறை அந்த வங்காளத்தேசியை ஆள் வைத்து அடிக்கப் போவதாகவும் கூறியுள்ளான். அந்த வங்காளத்தேசி புத்த நம்பிக்கை உள்ளவன். அவன் செய்திருப்பான் என்றும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஆனால், சில நாட்களுக்கு முன்பிலிருந்து அந்த வங்காளத்தேசி வேலைக்கு வருவதும் இல்லை.

 

வினோத்தின் பின் வீட்டில் குடியிருக்கும் ரொசாலி முகமட் அவர்களின் வாக்குமூலம்:

 

மணி 9.40க்கு மேல் இருக்கும் என நினைக்கிறேன். எப்பொழுதும் அவனுடைய அறை விளக்கு மட்டும்தான் எரிந்து கொண்டிருக்கும். அன்று அவனுடைய சமையல் அறை விளக்கு மட்டும் வெகுநேரம் எரிந்து கொண்டிருந்தது. ஆனால், என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும், அவன் மட்டும் இல்லை, என்னால் வேறொரு உருவத்தின் நிழலையும் அன்று பார்க்க முடிந்தது. மற்றப்படி நான் எதையும் சந்தேகிக்கவில்லை. உடனே உறங்க சென்றுவிட்டேன்.

 

கொலை தொடர்பான சில குறிப்புகள்:

***குறிப்பு: வினோத்துடன் வேலை செய்து கொண்டிருந்த அந்த வங்காளத்தேசியைக் காவல்துறையினர் தேடிக் கொண்டிருக்கின்றனர். கொலை நடப்பதற்கு முந்தைய நாள் அவன் கள்ளத்தனமாக இங்குக் குடியேறியிருப்பதால் ஏதோ காவல்துறை சிக்கல் தொடர்பாகத் தலைமறைவாகிவிட்டதாகச் சிலர் கூறியுள்ளனர்.

*** கொலை நடப்பதற்கு முந்தைய நாள் வினோத்தின் அழைப்பேசிக்கு வந்த அனைத்து எண்களும் ‘விபரமில்லாத Private எண்களாகும்.

*** வினோத்தின் வீட்டில் மோட்டார் இல்லாததை அவனுடைய நண்பன் முத்து கடைசிவரை போலிஸ் வாக்குமூலத்தில் தெரிவிக்கவில்லை.

*** வினோத் இறப்பதற்கு முந்தைய நாள் இரவில் அவனுக்கொரு கனவு வருகிறது. அவன் ஒரு குளத்தில் குளித்துக் கொண்டிருக்கிறான். தாமரை பூக்கள் மிதந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு பூக்களும் அவன் உள்ளத்தில் குதுகலத்தை உண்டாக்குகின்றன. மொத்தமாக அனைத்துப் பூக்களும் அவனை நெருங்கி வருகின்றன. அவனைச் சுற்றி மோதுகின்றன. மூச்சுத் திணறல் எடுக்கவே அவன் குளத்திலிருந்து எழுந்து ஓடுகிறான். தாமரைகள் சட்டென பாம்புகளாக மாறி அவனைத் துரத்துகின்றன.

 

யார் கொலையாளி?

 

சந்தேக நபர் 1: வங்காளதேசி

சந்தேக நபர் 2: பழைய ‘மர்ம’ காதலி

சந்தேக நபர் 3: பக்கத்து வீட்டுக்காரர்

சந்தேக நபர் 4: வினோத் நண்பன் முத்து

சந்தேக நபர் 5: ‘சாகா’ வகை கார்

உங்கள் நியாயங்களை/வாதங்களை முன்வைத்து யார் கொலை செய்திருக்கலாம் என்பதை முடிவு செய்யுங்கள்.

 

ஆக்கம்: கே.பாலமுருகன்

Share Button

About The Author

Comments are closed.