பைரவா: ஒரு திரைப்பார்வை

பரதன் இயக்கத்தில் பொங்கலை முன்னிட்டு வெளியான ‘பைரவா’ திரைப்படத்தின் விமர்சனம் என்பதைவிட ஓர் எளிய திரைப்பார்வை என்றே சொல்லலாம். பெரும்பாலும் தமிழில் வெளிவரும் ‘மாஸ்’ கதாநாயகர்களின் படங்களில் இருக்கும் வழக்கமான ‘பார்மூலாக்கள்’ இப்படத்திலும் இருக்கின்றன. ஆனால், அவற்றுள் நம்மை இரசிக்க வைக்கும் பகுதிகளையும் மனத்தைக் கவலைக்குள்ளாக்கும் பகுதிகளையும் ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

 

  1. விஜய்

சண்டைக்காட்சிகளுக்கு மட்டுமே அவருக்கு வாய்ப்பிருந்தது. நடிப்பதற்கான, நடிப்பை வெளிப்படுத்துவதற்கான பகுதிகள் திரைக்கதையில் அத்தனை முக்கியம் பெறவில்லை. ஆனால், சண்டைக்காட்சிகளில் சலிக்காமல் இயந்து போயிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். விஜயின் உழைப்பு மொத்தத்திற்கும் அவருடைய படங்களில் அவர் நடிக்கும் சண்டைக்காட்சிகளே சாட்சி என நினைக்கிறேன். இத்தனை வருடங்களில் அவருடைய ‘stemina’ கொஞ்சமும் குறையவில்லை. துப்பாக்கி, கத்தி போன்ற மேலும் வலுவான கதைகளில் அவரை நடிக்க வைப்பதன் மூலம் மட்டுமே விஜயின் திறமைகளை மேலும் தமிழ் சூழலுக்குள் வணிகம் என்பதையும் தாண்டிக் கொண்டு போக முடியும் என நினைக்கிறேன். ஒரு திரைக்கதைக்குச் சண்டைக்காட்சிகள் மட்டுமே தரத்தைச் சேர்த்துவிடாது அல்லவா?

  1. இசை

‘சூது கௌவ்வும்’ ‘ஜிகர்தண்டா’, ‘மெட்ராஸ்’ படங்களின் வழியாக பொதுமக்களின் கவனத்தை ஈர்த்த இசையின் வழி ஒரு சர்வதேச உணர்வை வழங்கக்கூடிய இசை கலைஞராக சந்தோஷ் நாராயணன் அறியப்படத் துவங்கினார். இந்தியக் கலாச்சாரத்தினூடாக இசைக்கத் துவங்கி சிதறுண்டுபோன தமிழ் நவீன சமூகத்தின் ஊடாக வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல்மிக்க படைப்பாளி சந்தோஷ் நாராயணன். ‘கபாலி’ போன்ற மாஸ் ஜனரஞ்சகப் படத்தில் இசையை வியக்கத்தக்க வகையில் வழங்கிப் பெரும் பாராட்டையும் பெற்றார். ஆனால், அவையனைத்தையும் ஒரே படத்தில் கேள்விக்குறியாக்கிவிட்டார்.

சமீபத்தில் அனிருத் அவர்களின் ‘மார்க்கேட்’ கொஞ்சம் சரிந்து போனதும் சந்தோஷ் நாராயணன் தமிழில் கவனிக்கத்தக்க நிறைய படங்களுக்கு இசையமைக்கும் இசையமைப்பாளராக மாறத் துவங்கினார். கைவசம் நிறைய தமிழ்ப்படங்களுக்குத் தொடர்சியாக இசையமைத்துக் கொண்டிருக்கிறார். அதனால்தான் என்னவோ பைரவா படத்தின் இசையை அத்தனை அலட்சியமாக்கியுள்ளார். ‘கத்தி’ , ‘துப்பாக்கி’ போன்ற கடந்த விஜய் படங்களுக்குப் பலமாக இருந்ததே அதன் இசையும் பின்னணி இசையும்தான். ஆனால், பைரவா படத்தின் ‘வரலாம் வரலாம் வா பைரவா’ என்கிற பாடல் தவிர மற்ற அனைத்தும் நிற்கவில்லை. படம் முழுக்க வரும் ‘வரலாம் வரலாம் வா…’ என்ற பின்னணி இசை மட்டுமே உயிரூட்டுகிறது.

 

  1. கீர்த்தி சுரேஷ்

பெரும்பாலும், வணிக நோக்கமிக்க படங்கள் கதாநாயகிக்கும் கதாநாயகனுக்கும் இடையில் உருவாகும் காதலின் வழி வெளிப்படும் ஒரு வகையான இராசாயணத்தை அதிகமாகக் கவனப்படுத்தியிருக்கும். இப்படத்தில் விஜய்க்கும் கீர்த்தி சுரேஷ்க்கும் அந்த ஜனரஞ்சகக் காதல் உணர்வுகளும் இராசாயண பொருத்தமும் ஒத்தே வரவில்லை என்றுத்தான் சொல்ல வேண்டும். சமீபத்தில் தமிழ் சினிமாவில் மிகுந்த கவனம் பெற்று வரும் கீர்த்தி சுரேஷ் போன்ற கதாநாயகியின் நடிப்பின் மீதும் அவருடைய பாத்திரம் கதாநாயகனுடன் கொள்ளும் இராசாயணத் தொடர்பு குறித்தும் மேலும் கவனித்திருக்கலாம் என்றே தோன்றியது. ‘ரெமோ’ படத்தில் சிவக்கார்த்திகேயனுக்கும் கீர்த்தி சுரேஷ்க்கும் இடையில் இருந்த இராசாயணப் பொருத்தம் தொடர்பான சிறு கவனம்கூட இப்படத்தில் நிற்கவில்லை.

 

  1. கதை

சமூக அக்கறைமிக்க படைப்புகளில் கலைத்தன்மை குறைந்திருந்தாலும், கலைத்தன்மைமிக்க படைப்புகளில் சமூக அக்கறை இல்லாமல் இருந்தாலும் அதுவொரு சிறந்த படைப்பென கருத வாய்ப்பில்லாமல் போய்விடும். ‘கத்தி’ படத்தை நான் விரும்பிப் பார்த்ததற்கான காரணம் அப்படத்தில் விஜய் ஏற்றுக் கொண்ட சமூகப் பொறுப்பு. பல்லாயிரக்கணக்கான தன் இரசிகர்களிடம் நல்ல கருத்தைக் கொண்டு செல்ல அவர் எடுத்த முடிவின் பின்னால் ஏற்பட்ட ஈர்ப்பு. ஆனால், பைரவா படத்தில் சமூக அக்கறைமிக்க கருத்துகளை ஏற்றிருந்தாலும் ஏனோ படத்தின் மற்ற அம்சங்கள் அதனை வலுவாகத் தாங்கிப் பிடிக்க முடியாமல் தடுமாறியே உள்ளது.

கல்வி நிறுவனங்கள் செய்யும் மோசடிகளைச் சமூக அக்கறையுடன் வெளிப்படுத்திய படைப்பை வழங்க முயன்றிருந்தாலும் ‘பைரவா’ படத்தின் இயக்குனர் பரதனின் இயக்கப் போதாமைகள் படத்தை மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்ப்பதில் கொஞ்சம் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதை அனைத்து விஜய் இரசிகர்களும்கூட ஏற்றுக் கொண்டுத்தான் ஆக வேண்டும். மேலும், கீர்த்தி சுரேஷ், தம்பி இராமையா, இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் எனப் பலரும் பைராவைத் தாங்கிப் பிடிக்கத் தவறியுள்ளார்கள் என்பதை மிகுந்த கவலையுடன் சொல்லிக் கொள்ள நேரிடுகிறது.

படம் முழுக்கச் சோர்வில்லாமல் அத்தனை சக்தியையும் ஒன்று திரட்டி நடிக்கும் விஜய் போன்ற நடிகரின் திறமையை விரிவாக்க, தமிழில் இருக்கும் நல்ல இயக்குனர்கள் முன்வர வேண்டும் என்றே நினைக்கிறேன். விஜய் என்கிற நடிகரின் நடிப்பையும் உழைப்பையும் ஒரு வணிகத் துண்டாக மட்டுமே பாதி படங்களில் பயன்படுத்திய இயக்குனர் பேரரசுவிடமிருந்து கைப்பற்றி அதனைக் காப்பாற்றியது இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ்தான். மேலும், பல நல்ல இயக்குனர்களின் படங்களில் விஜய் நடித்தால் மட்டுமே அவருடைய அடுத்த கட்டம் சிறப்பானதாக இருக்கும். தலையில் ‘விக்’ போடாமல் நடிப்பில் ‘லைக்’ போட வைக்கும் ‘துப்பாக்கி’ விஜய்க்காக மீண்டும் காத்திருப்போம்.

  • கே.பாலமுருகன்
Share Button

About The Author

Comments are closed.