மொழிச் சிக்கலும் பன்முகச் சூழலும்

 

‘மொழி என்பது ஒரு தொடர்புக் கருவி மட்டுமல்ல; மனிதர்களுக்கிடையே ஓர் உளவியல் சமாதானத்தை வழங்கக்கூடியதும் ஆகும்’

ஆரம்பக் கல்வியை முடித்துவிட்டு இடைநிலைப்பள்ளிக்குச் செல்லும் நம் இந்திய மாணவர்கள் எதிர்க்கொள்ளும் மிகப்பெரிய சிக்கல் பன்முகச் சூழலுக்குள் பொருந்திப் போக முடியாமையே ஆகும். சீன, மலாய் இனத்தைச் சேர்ந்த மாணவர்களுடன் உறவாடி, நட்பை ஏற்படுத்திக் கொள்ள நம் இந்திய மாணவர்களுக்குப் பெரும் தடையாக இருப்பது மொழிக் குறித்த சிக்கலே. மிகச் சிறிய வயதிலே அவர்கள் பன்முக சூழலுக்குள் மொழி ரீதியிலான சிக்கலை எதிர்க்கொண்டு விலகி தனிமைப்படுத்திக் கொள்கிறார்கள். எந்தவொரு நட்பும் உறவும் மொழியைக் கொண்டு வெறும் தகவல்களையும் கட்டளைகளையும் மட்டும் பகிர்ந்துகொண்டு வளம் பெற முடியாது. ஒரு மொழியின் வழியாகத் தன் உணர்வுகளையும் கருத்துகளையும் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் பெற்றிருந்தாலே பன்முகச் சூழலின் கவனத்தைப் பெற முடியும்.

மலாய்மொழியில் அல்லது ஆங்கில மொழியில் உரையாட முடியாத அல்லது உரையாடத் தயங்கும் நம் மாணவர்கள் முதலில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்கிறார்கள். இதன் வழி தன் நட்பு வட்டத்தை இந்திய மாணவர்களுக்கே பாதுகாப்பாகக் கட்டமைத்துச் சுருக்கியும் கொள்கிறார்கள். பிறகு, இவ்விடைவேளி இனம் சார்ந்த அதீத உணர்வை வலுப்படுத்துகிறது. மொழிச் சிக்கலுள்ள மாணவர்கள் அவர்கள் யாருடன் உரையாடி உறவை உருவாக்கிக் கொள்ள முடியவில்லையோ அவர்களைத் தன் எதிரிகளாகக் கற்பித்துக் கொள்கிறார்கள். இதுவே, பின்னாளில் அவர்களுக்குள் இருக்கும் சிறு உளவியல் வேறுபாடுகளுக்கான வடிக்காலை உருவாக்க இயலாமல் வெடித்துச் சிதறுகிறது.

ஒரு மொழியின் வழி நம் உணர்வுகளையும் நியாயங்களையும் முன்வைத்துவிட முடியும் என்றாலே வெவ்வேறு இனத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் ஓர் உளவியல் சார்ந்த புரிதலை உருவாக்கிக் கொள்ள முடியும். அவ்வுளவியல் நிலைபாடுகளே அவர்களைத் தொடர்ந்து உரையாடுவதற்கான ஒரு சமாதானத்தையும் வாய்ப்பையும் வழங்கிவிடுகிறது. ஆகவே, இடைநிலைப்பள்ளிகளில் நம் மாணவர்கள் அங்கு அவர்கள் சந்திக்கும் முதன்முறையான பன்முகச் சூழலை எதிர்க்கொண்டு சமாளித்து அங்கிருந்து வெற்றிப் பெற்று வெளியேற வேண்டுமென்றால் அவர்களுக்கு மொழிச் சிக்கலே இருக்கக்கூடாது.

இப்பிரச்சனையைக் களைய ஆரம்பப்பள்ளிகள் தமிழ், மலாய், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் மாணவர்கள் திறம்படப் பேசும் திறனை வளர்க்க முன்வர வேண்டும். தமிழ் அறவாரியம் ஆறாம் ஆண்டு முடிந்ததும் 21 நாட்கள் மொழி சார்ந்த பயிலறங்குகளை நடத்துவது ஒருவகையில் மிக முக்கியமான முயற்சியாகும். அப்பயிலரங்கில் அவர்கள் மலாய் மொழியில் பேசிப் பழகுகிறார்கள்; படைப்புகளை ஒப்புவிக்கிறார்கள். பாராட்டத்தக்க ஒரு பயிலரங்கம் என்றாலும் இதுபோன்ற பன்மொழிப் பயிற்சிகளை முதலாம் ஆண்டிலிருந்தே பள்ளிகள் துரிதப்படுத்த வேண்டும் என நினைக்கிறேன்.

21ஆம் நூற்றாண்டின் மாணவன் ஒரு மொழிக்கு மேல் தெரிந்து வைத்திருப்பது மிக முக்கியமாகும். அதனைப் பெற்றோர்களும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். தன் மகனுக்கு/மகளுக்குத் தாய்மொழியில் இருக்கும் தொடர்பாற்றல் ஏன் பிறமொழிகளில்/ பன்முக மொழிகளில் இல்லை என்பதை அவர்கள் கவனப்படுத்த வேண்டும். எனக்குத் தெரிந்து கம்பத்தில் வாழும் பல ஏழை மாணவர்கள் மலாய்மொழியில் அத்தனை சிறப்பாகவும் இயல்பாகவும் பேசுவதைக் கண்டிருக்கிறேன். அப்பயிற்சியை அவர்கள் பயிரலங்கத்திலோ அல்லது பிரத்தியேக வகுப்புகளிலோ பெறவில்லை; மாற்றாக தன் அன்றாட வாழ்விலிருந்து வாழும் சூழலிலிருந்து பெற்றிருக்கிறார்கள்.

வசதிமிக்க அல்லது கெட்டிக்கார மாணவர்கள் எத்தனையோ பேர் மலாய்மொழியில் பிறருடன் இயல்பாகத் தொடர்புக்கொள்ள தயங்குவதை நாம் கண்டிருக்கக்கூடும். இச்சிக்கலை நாம் ஆரம்பப்பள்ளியிலேயே கவனித்துக் களைய வேண்டும். இல்லையேல் நாம் உருவாக்கி அனுப்பும் கெட்டிக்கார மாணவர்கள்கூட மொழிச் சிக்கலால் இடைநிலைப்பள்ளிகளில் தொடர்புத்திறனற்று தனிமைப்பட்டு வாழ நேரிடும். இத்தனிமை மிகவும் ஆபத்தானது என்று முன்பே குறிப்பிட்டிருந்தேன்.

ஆரம்பப்பள்ளிகளில் நாம் ஏற்கனவே நடைமுறையில் இருந்த சில திட்டங்களை மீண்டும் துரிதப்படுத்தி புதுப்பித்து அமல்படுத்தினாலே ஒரு பன்முகத் திறன் கொண்ட மாணவனை உருவாக்கிவிட முடியும் என்பதில் சந்தேகமில்லை. ஒரு குழந்தை சிந்திக்கத் துவங்குவது தன் தாய்மொழியில்தான் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், அக்குழந்தை வளர்ந்து வந்து நிற்கப் போகும் நிலம் பன்முகக் கலாச்சாரம் கொண்டவை என்பதில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தாய்மொழி மீதான அன்பும் பற்றும் வளத்துடன் இருக்க, நாம் வாழும் நிலத்தின் இன்னபிற மொழிகளிலும் ஆற்றல் பெற்றிருப்பது அவசியமாகும்.

சில திட்டங்கள்:

  1. மொழி வாரங்கள் – அவ்வாரம் மலாய்மொழி வாரம் என்றால் அனைத்து மாணவர்களும் தன் நண்பர்களிடமும் ஆசிரியர்களிடமும் பள்ளி ஊழியர்களிடமும் மலாய் மொழியில்தான் உரையாட முடியும்; கருத்துகளை வெளிப்படுத்த முடியும்.
  2. மலாய்மொழிப் போதிக்கும் ஆசிரியர் தன்னிடம் மாணவர்கள் மலாய்மொழியிலேயே உரையாட வழிவகுக்க வேண்டும்.
  3. மலாய் நாவல்கள்/ மலாய் சிறுகதைகளை வாசித்து அதைப் பற்றி மலாய் மொழியிலேயே பேசத் தூண்டலாம். (இதற்குப் பரிசுகளையும் வழங்கினால் மாணவர்கள் ஆர்வத்துடன் இருப்பர்)
  4. தினம் ஒரு தகவல் – தினமும் ஒரு மாணவனைத் தேர்ந்தெடுத்து அவனிடம் ஒரு தகவலைக் கூறி அதை மலாய்மொழியில் வகுப்பில் கூறப் பணித்தல். (ஒரு நெருக்கடி வரும்பொழுது எப்படியும் மாணவர்கள் பேச முயல்வார்கள்)

 

இப்படி இன்னும் பல திட்டங்களைப் பற்றி நாம் சிந்தித்து அதனைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். பெற்றோர்கள் வீட்டிலும் மெகாத் தொடர்களைப் பார்ப்பதை நிறுத்திவிட்டு மலாய், தமிழ் ஆங்கிலச் செய்திகளைப் பார்க்க உங்கள் பிள்ளைகளைத் தூண்ட வேண்டும்.

 

  • கே.பாலமுருகன்
Share Button

About The Author

Comments are closed.