விமர்சன யுகத்தில் வாழ்கிறோம் (தொடர்- 3) ‘வாசிப்பில்லாத படைப்பாளிகளின் படைப்புகளில் எப்பொழுதும் ஒரு சாயம் வெளுத்துப் போகக் காத்திருக்கும்’

critics-600x400

ஏன் விமர்சிக்க வேண்டும்? விமர்சனம் என்றால் என்ன? அதனுடைய பாதிப்புகள் என்ன? விமர்சனத்திற்குரிய மொழி எப்படி இருக்க வேண்டும்? எனக் கடந்த கட்டுரைகளில் கவனித்துவிட்டாயிற்று. சங்க இலக்கியம் தொடங்கி இன்றையநாள் எழுதப்படும் நவீனத்துவ இலக்கியம்வரை அனைத்துமே விமர்சனங்களின் ஊடே முன்னகர்ந்து வந்திருக்கிறன. மேலைநாட்டு இலக்கியம், செவ்விலக்கியம், நாட்டுப்புற இலக்கியம், பின்நவீன இலக்கியம், உலக இலக்கியம், மரபிலக்கியம், சிறுவர் இலக்கியம் என இலக்கியத்தின் கிளைகள் வளர்ந்தோங்கி நிற்கும் ஒரு காலக்கட்டத்தைத் தாண்டி இன்று அவையாவற்றையும் மீள்வாசிப்பு செய்து விமர்சிக்கும் விமர்சன சார்ந்து உரையாடும் ஒரு விமர்சன யுகத்தில் இருக்கிறோம். விமர்சனமின்றி ஒரு கலை ஏற்கப்பட்டிருந்தால் அக்கலை எப்பொழுதோ இறந்து போயிருக்கும். கலையின் இயல்பு துளிர்ப்பது என்றால் விமர்சனத்தின் பாங்கு அத்துளிர்ப்பினை ஊடறுத்துக் கத்திரித்து களையெடுத்து அதனைச் செம்மைப்படுத்துவது போன்றாகும்.

2017ஆம் ஆண்டு விமர்சனக் கலைக்குரிய வாசல்களைத் திறந்துவிடும் என நம்புகிறேன். ‘கடை விரித்தேன்;கொள்வார் இல்லை’ என்பார்கள். வாசகன் மிக முக்கியமானவன். வாசிப்பு ரீதியில் நாம் அடைந்த முதிர்ச்சியையும் அனுபவத்தையும் பரிசோதித்துக் கொள்ள நமக்கான ஓரே களம் விமர்சனம்தான். ஒரு வாசகனால் முன்னெடுக்கப்பட வேண்டிய கலை விமர்சனம் ஆகும். எழுத்தாளரே இன்னொரு எழுத்தாளரை விமர்சித்துக் கொள்ளும் ஒரு நிலையைத் தாண்டி வாசகன் விமர்சனத்திற்குரிய மொழியனுபவத்தையும் படைப்பிலக்கிய பார்வை நுணுக்கங்களையும் பெற்று இலக்கியத்தை நகர்த்தும் ஒரு நிலைக்கு வளர வேண்டும். எழுத்தாளனைவிட வாசகன் மிகவும் விசுவாசமானவன். ஓர் எழுத்தாளன் இன்னொரு எழுத்தாளனின் படைப்பை வாசிக்க நேர்கையில் இருக்கும் பாகுபாட்டுணர்வு, திறமையான வாசகனிடம் இருக்க வாய்ப்பில்லை. அவன் ஒரு தராசில் படைப்பை வைத்துவிட்டு இன்னொரு தராசில் தன் வாசிப்பனுபவத்தை வைக்கிறான்.

 

விமர்சன நுணுக்கத்தை எப்படிப் பெறுவது?

எப்படி ஒரு வாசகன் விமர்சிக்கும் நுணுக்கங்களைப் பெற முடியும் என ஓர் ஆரம்பநிலை வாசகனிடம் கேள்விகள் இருக்க வாய்ப்புண்டு. ‘அருமை’, ‘சூப்பர்’, ‘அருமையான கதை’ என்கிற முகநூல் சொல்லாடல்களைத் தாண்டி வர தொடர்வாசிப்பே ஒருவனைத் தேர்ந்த வாசகனாக மாற்றுகிறது. விமர்சனம் தொடர்பான நூல்களை வாசிக்கும்போது அவரவர் பார்வையில் எப்படியெல்லாம் விமர்சிக்கலாம் என்கிற ஒரு கருத்தினையையும் பெற்றுக் கொள்ள முடியும். இக்கட்டுரை அத்தகைய சில விசயங்களை மட்டும் அறிமுகப்படுத்த விளைகிறது.

விமர்சிக்கும்போது ஒரு வாசகன் கருத்தில் கொள்ள வேண்டியவற்றுள் சில:

  • ஒரு சிறுகதை முன்வைக்கும் கருப்பொருள்/ சிக்கல்/ வாழ்க்கை/ அனுபவம் ஆகியவற்றை கூர்ந்து கவனித்தல் வேண்டும்.
  • மொழிப்பயன்பாட்டை விசாரணை செய்ய வேண்டும்.
  • பாத்திர வார்ப்பு

அறிமுகநிலையில் இவை மூன்றினை கருத்தில் கொண்டு மீள்வாசிப்பு செய்யும்போது துரிதமான ஒரு விமர்சனப் பார்வையை ஒரு வாசகன் பெற முடியும் என நினைக்கிறேன். இம்மூன்றினையும் மூலையில் பொறுத்திக் கொண்டு வாசிக்கத் தொடங்குவதைவிட மறுவாசிப்பில் விமர்சன நோக்குடன் அப்படைப்பை அணுகும்போது மட்டுமே விமர்சினத்திற்கான முனைப்பு தோன்றும். அதனை ஒருங்கிணைத்து புறவொழுங்குடன் எழுதிடவும் துணைப்புரியும்.

mw-bd501_sm10th_20130531161626_mg

சிறுகதைக்குரிய கருப்பொருள்/கருத்து/அனுபவம் ஆகியவற்றை ஆராய்தல்

பெரும்பாலும் இன்றைய நவீன சிறுகதைகள் கருப்பொருளைத் தாங்கி படைக்கப்படுவதில்லை. ஒரு தருணத்திற்குள் ஒரு நிகழ்விற்குள் யதார்த்தமாக அவையாவும் புதையுண்டு இருப்பதை ஒரு வாசகனோ விமர்சகனோ கண்டுபிடித்து சமூகத்துடன் உரையாடுகிறான். ஒரு படைப்பு விட்டுச் செல்லும் இடைவேளிக்கும் அவ்விடைவேளியின் ஊடாக ஒரு விமர்சகன் கண்டறியும் நுட்பமான தேடலும்தான் இலக்கிய நுண்ணுணர்வை உண்டாக்குகிறது. ஆகவே, இன்றைய நவீன சிறுகதை குறித்தத் தொடர் உரையாடலுக்கு விமர்சனத்தின் பங்கு எத்தனை அவசியம் என அறிய முடியும்.

காலம் கடந்தும் நிற்கும் படைப்புகள்; காலாவதியாகி நிற்கும் படைப்புகள்; சமக்காலத்தில் நிற்கும் படைப்புகள்; காலம் கடந்தவைகளை சமக்காலத் தராசில் வைக்கும் படைப்புகள் எனப் படைப்பிலக்கியம் முன்வைக்கும் கருப்பொருள்கள்/கருத்தியல் ஆகியவற்றை நான்கு வகையிலும் பிரித்தறிந்து விவாதிக்கலாம். அதனைத் தொடர்புப்படுத்தியே ஒரு வாசகன்/விமர்சகன் மேற்கொண்டு ஒரு படைப்பை ஆராய முடியும்.

 

  1. காலம் கடந்தும் நிற்கும் படைப்புகள்

 

வண்ணநிலவன் எழுதிய ‘எஸ்தர்’ சிறுகதையை இன்று வாசித்தாலும் பழமையானதாகத் தெரியாது. அத்தகைய உணர்வை அப்படைப்பு வழங்காது. பஞ்சம் காரணமாகப் பிழைப்புத் தேடிப் போகும் ஒரு குடும்பம் அவ்வீட்டில் உடன்வர இயலாத நிலையில் இருக்கும் ஒரு பாட்டியைக் கருணை கொலை செய்கிறது. இதுதான் அச்சிறுகதை முன்வைக்கும் வாழ்க்கை. பஞ்சத்தின் விளைவுகளில் ஒன்றாக அச்சிறுகதை ‘விட்டுச் செல்வதன்’ பின்னால் இருக்கும் குரூரங்களைக் காட்சிப்படுத்துகிறது. ஆயினும், இக்காலம் சந்திக்கும் அக/புற சிக்கல்கள் வேறானவை. காலம் நகர்ந்து வேறு சூழலுக்குள் வந்துவிட்டது. ‘எஸ்தர்’ சிறுகதையை இப்போதைய உலகத்தில் இருக்கும்; நவீன பிரச்சனைகளின் வீச்சில் பழக்கம்கொண்ட மனத்துடன் வாசிக்க நேரும் ஒரு வாசகனுக்கு அவை உறுத்தாத ஒரு படைப்பிலக்கிய அனுபவத்தைத் தரும்.

அச்சிறுகதையின் தேர்ந்த ‘படைப்பிலக்கிய உச்சம்தான்’ எத்தனை காலம் கடந்தாலும் அப்படைப்பைத் தாங்கிக் கொண்டிருக்கிறது என்பதை உணர முடியும். வாழ்வின் தீராத எப்பொழுதும் இசைத்துக் கொண்டிருக்கும் திகட்டாத இசை அவை. இத்தகைய திகட்டாத ஒரு சிறுகதை உருவாவதற்கு மொழியும் ஒரு பெரும் பங்களிப்பைச் செய்கிறது என்றே சொல்ல வேண்டும். இவையாவும் நாம் வாசிக்கத் துவங்கும் முன்பே படைக்கப்பட்டவை/ நம் காலத்திற்கு முந்தியவை என்பதை உணர வேண்டும். அப்படைப்பு உருவாக்கப்பட்ட அக்காலத்தின் தேவையையும் இலக்கிய சூழலையும் பொருட்படுத்தியே அப்படைப்பை ஒரு வாசகன்/விமர்சகன் உற்றாராய முடியும். 1980களில் எழுதப்பட்ட ஒரு சிறுகதையை 2020ஆம் ஆண்டில் வைத்து இதுவெல்லாம் ஒரு சிறுகதையாக முடியுமா? இப்பொழுது எழுதப்படும் எஸ்.செந்தில்குமாரின் சிறுகதையைப் போல இருக்கிறதா அல்லது சு.யுவராஜன் சிறுகதையைப் போல இருக்கிறதா என விமர்சிக்க முயலும்போது நாம் நினைக்கும் விமர்சன ஒழுங்கு உடைந்துவிடுகிறது. ஆகவே, ஒரு படைப்பு எழுதப்பட்ட காலத்தை வாசகன் கருத்தில் கொள்வது அவசியம்.

vannanilavan-sisulthan1

  1. காலாவதியாகி நிற்கும் படைப்புகள்

இதுபோன்ற படைப்புகள் நிற்கும் எனச் சொல்வதைவிட கரைந்து காணாமல் போய்விடும் என்றுத்தான் சொல்ல வேண்டும். முன்பிருப்பவர்கள் சொன்னதையே அவர்கள் சொல்லியப் பாணியிலேயே படைப்பாக்குவது அப்படைப்பிற்கு மிகுந்த பலவீனமானதாகும். இதனைப் பரந்தப்பட்ட வாசிப்புள்ள வாசகன் கண்டறிந்துவிடுவான். வெகு இயல்பாக இச்சிறுகதை எந்தச் சாயலில் உள்ளது என்பதைச் சுட்டிக் காட்டிவிடுவான்.

ஆகவேதான், எழுத்தாளர் வல்லிக்கண்ணன், சுந்தர ராமசாமி ஆகியோர்கள் எப்பொழுதும் தன் நேர்காணலில் சொல்லும் விடயத்தை சகப் படைப்பாளிகள் கவனத்தில் கொண்டு வர வேண்டும். ‘வாசிப்பில்லாத படைப்பாளிகளின் படைப்புகளில் எப்பொழுதும் ஒரு சாயம் வெளுத்துப் போகக் காத்திருக்கும்’. சொன்னதையே திரும்பச் சொல்லல் என்பதைக்கூட சில சமயங்களில் அதன் தேவை குறித்து அனுமதித்துக் கொள்ளலாம். ஆனால், சொன்ன விசயத்தை, அவை சொல்லப்பட்ட விதத்திலேயே திரும்பச் சொல்லல் என்பது படைப்பிலக்கியம் பொறுத்தமட்டில் மிக மோசமானவை என்பதை வாசகன் எப்பொழுதும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதுபோன்ற படைப்புகளை அவன் நிராகரிக்கவும் துணிய வேண்டும்.

  1. சமக்காலத்தில் நிற்கும் படைப்புகள்

 

‘நான் இப்பொழுதும் இறங்கும் ஆறு’ என்கிற சேரனின் ஒரு கவிதை இவ்வேளையில் ஞாபகத்திற்கு வருகிறது. இருத்தலியல் தொடர்பான நல்ல உதாரண வரி. கண்ணாடியைப் போன்று சமக்காலத்தைப் பிரதிபலிக்கும் வகையிலான இலக்கியங்கள் மிக முக்கியமானவையாகும். நவீன காலத்தினைப் பதிவு செய்யும், நவீன சமூகத்தின் அக/புறச் சிக்கல்களை உரையாடும் இலக்கியங்களை ஒரு வாசகன் அடையாளம் காண முடியும். ஒரு சமூகம் பத்து வருடத்திற்கு முன் எதிர்க்கொண்ட பிரச்சனைகளும் தற்சமயம் எதிர்க்கொள்ளும் சிக்கல்களும் நிச்சயம் பலவகைகளில் மாறுப்பட்டு வந்திருந்திருக்கும். அதனைப் பதிவு செய்வதில், கொண்டு வந்து விவாதிப்பதில் இலக்கியத்திற்கும் பங்குண்டு.

‘நினைவேக்கம்’, ‘பிரிவேக்கம்’ ஆகிய அகம் சார்ந்த பிராந்திய உணர்வுகளின் வெளிப்பாட்டில் பதியப்படும் இலக்கியங்கள் பெரும்பாலும் சமக்காலத்தினைப் பொருட்படுத்தத் தவறிவிடும். இதனை ஒரு வாசகன் நன்கு உணர்ந்து வாசிப்பை மேற்கொள்ள வேண்டும். ஒரு படைப்பிற்குச் சமக்கால வாழ்வைப் பதிவு செய்வதில் அக்கறை இருத்தல் வேண்டும் என்பதனை ஒரு விமர்சகன் நன்குணர்ந்து தன்னுடைய வாசிப்பின் வழி மதிப்பிடுதல் முக்கியமாகும்.

 

  1. காலம் கடந்தவைகளை மீட்டெடுத்துப் பேசும் படைப்புகள்

 

ஒரு சில படைப்புகள் காலம் தாண்டிய பிரச்சனைகளை/ வாழ்க்கையை மீட்டுக் கொண்டு வந்து உரையாடும் தன்மைமிக்கவையாகும். ஆனால், அவை முன்பு சொல்லப்பட்ட விதத்திலிருந்து மாறுப்பட்டு அப்படைப்பாளரால் வேறுவகையில்/ வேறு உத்தியில் ‘utilization’ செய்யப்படுகிறது. இதனை ஒரு வாசகன்/விமர்சகன் நன்கு உற்றாராய வேண்டியுள்ளது. உடனே ஒரு படைப்பு பழையது என மறுக்கும் முன்பு அப்படைப்பு சொல்ல விழையும் கருப்பொருள் மீண்டும் சொல்லப்படுவதற்கான அவசியத்தையும், அவை சொல்லப்பட்டிருக்கும் விதத்தையும் கருத்தில் கொண்டு மதிப்பீடு செய்ய வேண்டும் என நினைக்கிறேன்.

அடுத்தக் கட்டுரையில், மொழிப் பயன்பாடு தொடர்பாக விரிவாக உரையாடலாம். விமர்சனம் சட்டென உதிர்க்கும் கலை அல்ல. வாசிப்பின் ஆழம் பொருட்டு உருவாகும் சுவை.

death-of-socrates-ab

 

பொதுப்புத்தி தளத்திலிருந்து தத்துவார்த்த விசாரணைக்கு உயர்த்தப்படாத யாவும் சிறந்த சிந்தனையாகாது என சாக்ரட்டீஸின் கூற்றை மீட்டுருவாக்கம் செய்கிறேன். பொதுபுத்தி தளங்களில் நிறுவப்படும் வாழ்க்கையைத் தத்துவார்த்த விசாரணைக்குள் ஆழ்த்தாத எதுவுமே சிறந்த படைப்பாகாது; அதனைக் கண்டறிய முயலாத வாசிப்பும், சிறந்த வாசிப்பாகாது என்பதை மீண்டும் ஞாபகப்படுத்திக் கொண்டு விமர்சனம் பற்றி உரையாட வேண்டியுள்ளது.

  • கே.பாலமுருகன்

 

Share Button

About The Author

Comments are closed.