கவிதை: கொலையுணர்வு

blackboard20erasing

கைக்கு எட்டாத கரும்பலகை

சொற்களை எகிறி குதித்து

அழிக்க முயல்கிறாள்

சிறுமி.

 

ஒவ்வொருமுறையும்

கால்கள் தரையைத் தொடும்போது

சொற்காளின்

பாதி உடல் அழிக்கப்படுகிறது.

 

எட்டாத சொற்களின்

மீத உடலைச் சிதைக்க

மீண்டும் குதிக்கிறாள்.

 

உடலின் மொத்தப்பலத்தை

கால்களில் திரட்டி

பாய்கிறாள் ஆவேசம்கொண்டு.

 

கடைசி சொல்லின்

உடலை அடையும்வரை

சோர்வில்லை விலகலுமில்லை.

 

கரும்பலகையின் கோடியில்

மிச்சமாக இருந்த ஒரு எழுத்தை

அழித்துவிட்டப் பிறகு

சிறுமியின் முகத்தில்

போர் முடிந்த களைப்பு.

 

கே.பாலமுருகன்

Share Button

About The Author

Comments are closed.