நூலாய்வு: உலகின் ஒரே அலைவரிசை/ நாட்டுப்புறப்பாடல்கள் – முத்தம்மாள் பழனிசாமி

muthammal

நாட்டுப்புற இலக்கியமும் பாடல்களும்

உலகம் முழுக்கவும் நாட்டுப்புற இலக்கியங்கள் வெவ்வேறான வடிவங்களில் வாய்மொழியாக அடுத்த தலைமுறைக்குச் சொல்லப்பட்டும் கற்பிக்கப்பட்டும் வருகின்றன. லத்தின் அமெரிக்கா நாட்டுப்புற கதைகள், பிரன்ச் நாட்டுப்புறக்கதைகள், வியாட்நாம், என ஒவ்வொரு சமூகமும் நாட்டுப்புற வாழ்வோடு பிணைந்திருக்கின்றன. பாடலும் கதையும்தான் நாட்டுப்புற இலக்கியத்தின் உச்சமான கலை வடிவமாகக் கருதப்படுகின்றன. முதுகுடி மக்களின் வாழ்வும் நிலப்பரப்பும் கதைகளாலும் பாடல்களாலும் ஆனவை.

நாட்டுப்புறப்பாடல் என்றால் என்ன?

நாட்டுப்புறம் எனச் சொல்லக்கூடிய கிராமமும் கிராமியம் சார்ந்த இடங்களிலும் பாடப்படும்/பாடப்பட்ட பாடல்களை நாட்டுப்புறப்பாடல் என்கிறோம். இந்த நாட்டுப்புறப்பாடல்கள் எங்கு, எவரால் எப்பொழுது பாடப்பட்டது என்பதற்கான தெளிவான குறிப்புகள் கிடையாது. ஒவ்வொரு தலைமுறையும் அவற்றை எல்லாம் தான் வாழ்ந்த சமூகத்தின் அடையாளமாக நினைவுகளின் வழி சேகரித்தே வந்துள்ளது. காடு கழனிகளிலும், தோட்ட வயல்களிலும், நிலத்தை உழும்போதும், ஏற்றம் இறைக்கும் போதும், நாற்று நடும் போதும், கதிர் அறுக்கும் போதும் நாட்டுப்புற மக்களால் பாடப்பட்டு அவர்களின் வாழ்வோடு இணைந்திருக்கின்றன நாட்டுப்புறப் பாடல்கள். தாலாட்டில் தொடங்கும் பாடல்கள் ஒப்பாரிவரை நீடித்து முடிவடைகிறது.

முத்தம்மாள் பழனிசாமியின் ஆய்வும் நூலும்

சுய முன்னேற்றத்திற்காகவும், பட்டப்படிப்பை முடிப்பதற்காகவும் மேற்கொள்ளப்படும் ஆய்வை, புத்தகமாக்கி விருதுகளைப் பெற்றுச் செல்பவர்களும், தன் மொண்ணையான பேச்சுகளின் மூலம் தன் பதவிக்கும் இருப்புக்கும் ஏற்ப தன் அறிவை வளர்த்துக்கொள்ளாமல் சோம்பி போய்க்கிடக்கும் கல்வியாளர்களும் எங்கும் நிரம்பியிருக்கும் ஒரு காலக்கட்டத்தில், எவ்வித சுயநலமும் எதிர்பார்ப்புமின்றி தன் சுயமான உழைப்பின் மூலம் ஆய்வை மேற்கொண்டு  திருமதி முத்தம்மாள் பழனிசாமி உருவாக்கியதுதான் இந்த நாட்டுப்புறப்பாடலில் என் பயணம் எனும் புத்தகம்.

நாட்டுப்புறப் பாடல்கள் பெரும்பாலும் வாய்மொழியாக இருந்தமையால் அதனைச் சேகரிப்பதிலும் பதிவு செய்வதிலும் கூடுதல் உழைப்பு தேவைப்படுகிறது.பெரும்பான்மையான நாட்டுப்புறப்பாடல்கள் பதிவு செய்யப்படாததாலும் சமூகத்தின் முதுகுடிகள் மறைந்துவிட்டதாலும், அவைத் தொகுக்கப்படாமல் அழிந்துவிட்டன.

ஆனால் கொங்கு வேளாலர் சமூகத்தைச் சேர்ந்த முத்தம்மாள் பழனிசாமி அவர்கள், அந்தச் சமூகத்தைச் சார்ந்த நாட்டுப்புறப்பாடல்களையும் அந்த வட்டார வழக்கில் பாடப்பட்ட பாடல்களையும் அதனுடன் ஒலிக்கும் வரலாற்றுப் பதிவுகளையும் மிகவும் நேர்மையாக ஆவணப்படுத்தியுள்ளார். அதுவும் அவர் இந்த ஆய்வைச் செய்யும்போது அவருக்கு 70 வயதையும் கடந்திருக்கும் என நினைக்கிறேன். இதுதான் எந்த ஆய்வையும் இதுவரை மேற்கொள்ளாத இளைஞனான என்னையும் ஆச்சர்யப்படுத்தியது. சமூகத்தை ஆவணப்படுத்துவதில் ஆய்வுக்கும் பயணத்திற்கும் உள்ள மகத்துவத்தை தன் நூல்களின் வழி உணர்த்தியவர் நூலாசிரியர் திருமதி முத்தம்மாள் அவர்கள். அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான விசயம் தான் சார்ந்த சமூகத்தின் வரலாற்றையும் இலக்கியத்தையும் ஆவணப்படுத்துவதில் அவருக்கிருக்கும் ஆர்வமும் தீவிரமும்தான். ஆனால் அவர் இந்த ஆய்வைச் செய்வதன் வழி தன்னைச் சார்ந்த சமூகத்தின் இனக்குழு மக்களின் பாடல்களை மீட்பதன் மூலம் சாதியத்தையும் சாதியம் சார்ந்த பிரக்ஞையையும் உருவாக்குகிறார் என எடுத்துக்கொள்ள முடியாது.

உலகப் பொதுவிற்கென பங்காற்றும் அளவிற்கு முத்தாம்மாள் தன் ஆளுமையை முன்னெடுப்பபது என்பது அவருக்கு விரயத்தைக் கொடுக்க நேரிடும். மேலும் அது கடுமையான ஒரு உழைப்பைச் சார்ந்த செயல்பாடும்கூட. ஆகவே தான் வளர்ந்து உணர்ந்த ஒரு சமூகத்தின் வரலாற்றை மீட்டெடுக்க வேண்டும் என முத்தம்மாள் முயற்சித்தது சாதி குறித்த பெருமிதமாக இருப்பினும், அதில் நேர்மையும் உழைப்பும் இருக்கவே செய்கின்றன.

பயணத்தின் மீது எப்பொழுதும் எனக்கு நம்பிக்கை உண்டு. பயணம் பலத்தரப்பட்ட மனிதர்களையும் அவர்களின் வாழ்வையும் நமக்கு அறிமுகப்படுத்தும். பல ஆளுமைகள் பயணம் செய்து தன்னை ஒரு அடையாளமாக நிறுவியுள்ளார்கள். ஒரு பயணத்தால் மட்டுமே அது சாத்தியப்படும் என்பதை நிறுபித்துள்ளார் முத்தம்மாள். அகிரா குரோசாவா சொன்னது போல, உலகத்தின் எங்கோ ஒரு கோடியில் இருக்கும் ஒரு மனிதன் நம்முடன் பகிர்ந்துகொள்ள ஏதோ ஒன்றை வைத்திருப்பான். பயணம் அவனைச் சென்றடைய ஒரே பாதையாகும். முத்தம்மாள் மேற்கொண்ட பயணங்கள் அவரால் ஒரு வரலாற்று வடிவத்தைத் திரட்டி நூலாகப் பிரசுரிக்க முடிந்திருக்கிறது.

ஒவ்வொரு தனி சமூகமும் ஒவ்வொரு காலக்கட்டத்தில் தன் துயரங்களையும் இடர்களையும் சுகத்துக்கங்களையும் பாடல்களின் வழியே வெளிப்படுத்திக் கடந்துள்ளார்கள் என்பதை இந்த நூலை வாசிக்கும்போது புரிந்துகொள்ள முடிகிறது. மீனவர்களின் வாழ்வென்பது நாட்டுப்புறப்பாடல்களாம் ஆங்காங்கே நிரப்பட்ட வெளியாகும். இதுபோல பாடல்களின் வழி கடல் கொடுக்கும் தனிமையையும் பெரும் மௌனத்தையும் கடப்பதற்கான புலனை அவர்கள் பெற்றிருந்தார்கள். சிறு வயதில் சுங்கைப்பட்டாணி பகுதியிலுள்ள மலாய் மீனவப்பகுதிகளுக்குச் சென்ற அனுபவங்கள் உண்டு. முன்பு அந்த சிறுநகரத்தின் ஒரு பகுதி மீனவர்களின் பகுதியாக இருந்தது. இப்பொழுது அவர்களைச் சார்ந்த ஒரு ஆட்கள் கூட அங்கு இல்லை. அவர்களில் கொஞ்சம் வயதான மீனவர்கள் படகில் ஏறி ஏதோ பழைய மலாய்ப்பாடலைப் பாடிக்கொண்டே தன் ஆற்றுப்பயணத்தைத் தொடங்குவார்கள். எல்லாம் சமூகத்திலும் மீனவர்களின் வாழ்வில் பாடல் ஒரு அங்கமாக இருந்திருக்கிறது.

முத்தம்மாள் அவர்கள் நாட்டுப்புறப்பாடல்களைத் தொகுக்கும் முன்பு அவருக்கும் அவரின் சின்னம்மாளுக்கும் ஏற்படும் சந்திப்பு மிக முக்கியமானது. எங்கோ விட்டுப்போன ஒன்றை அவர் அந்த இடத்தில் அந்தச் சந்திப்பில் கண்டடைகிறார். மனித துயரத்திற்கும் பாடலுக்கும் உள்ள நெருக்கமான உறவை முத்தம்மாள் அவர்களின் சின்னம்மாவின் இருப்பின் வழி வெளிப்படுகிறது. சிறு வயதிலேயே திருமணம் செய்துகொண்டு சஞ்சி கூலியாக மலாயா வந்துவிட்ட சின்னம்மாளைச் சந்திக்கும்போது, தன் துயரத்தின் அடர்த்தியை அவர் தன்னையறியாமல் “அத்தை மகனிருக்க அழகான நாடிருக்க” எனும் ஒலிக்கும் பாடலாகப் பாடி வெளிப்படுத்துகிறார். மேலும் அவர்தான் பல நாட்டுப்புறப்பாடல்களைப் பாடிக்காட்டி முத்தம்மாளுக்கு உதவி செய்துள்ளார்.

பிறப்பு முதல் இறப்புவரை பாடலோடு தன் வாழ்வை இணைப்பதன் மூலம் மனித சமூகம் ஒரு முக்கியமான அலைவரிசையை உருவாக்குகிறது. அது காலத்திற்கும் புதையுண்டு, மறைந்து, முதுகுடிகளுடன் கரைந்து, மீண்டும் யாரோ ஒருவரின் குரலின் வழி மீட்டெடுக்கப்படும் ஒரு வரலாறு என்றே கருதுகிறேன். அத்தகைய உணர்வைக் கொடுத்த இந்த நூல் இந்தக் காலக்கட்டத்திற்கு மிகவும் அவசியமானது.

முத்தம்மாள் இந்த நூலைத் தொகுப்பதற்காக யாரையெல்லாம் சந்தித்தார் என்பது முக்கியமானது:

  1. 1935இல் இந்தியாவிலிருந்து மலாயாவிற்கு வந்தவரான 88 வயது நிரம்பிய திருமதி மாரியம்மாள் கருப்பண்ணன்.
  2. 1953-இல் மலேசியாவில் இருந்து வந்த குமரசாமி என்பவரை திருமணம் செய்து கொண்டு பால்வெட்டு தொழிலாளியாக இருந்த 74 வயது நிரம்பிய திருமதி தாயாத்தாள் குமரசாமி.
  3. 1957இல் மலாயாவுக்கு வந்து பல வருடங்கள் பால்வெட்டு தொழிலாளியாக வேலை செய்து இன்னமும் சித்தியவான் தோட்டத்திலேயே வாழ்ந்து வரும் திருமதி தேவாத்தாள்.
  4. சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி பலத்தரப்பட்ட பாடல்களைப் பாடுவதி தேர்ச்சி பெற்ற திருமதி அருக்காணி.
  5. தமிழ்நாட்டிலிருந்து இங்கு வந்து பத்து வருடமாக வீட்டு வேலை செய்து கொண்டிருக்கும் திருமதி ராஜாமணி.

இவர்கள் அனைவரும் இந்த நாட்டுப்புறப்பாடல் நூலின் தொகுப்பிற்கு திருமதி முத்தம்மாள் அவர்களுக்குப் பெரிதும் துணைப்புரிந்துள்ளனர். இந்த நூல் பல பாகங்களாக நாட்டுப்புறப்பாடலின் வகைகளுக்கேற்ப மிக நேர்த்தியாகத் தொகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் நூலாசிரியர் பல முக்கியமான பாடல்களை வழங்கியுள்ளார். தாலாட்டுப்பாடல்கள், ஒப்பாரிப் பாடல்கள், குழந்தைகள் விளையாட்டுப்பாடல்கள், வண்ணான் வண்ணாத்தி பாடல்கள், தோட்டக்காட்டுப் பாடல்கள், விழாக்காலங்களில் பாடப்படும் பாடல்கள் என புத்தகம் எல்லாம்விதமான பாடல்களையும் பதிவு செய்திருக்கிறது.

  1. தாலாட்டுப்பாடல்கள்

மலேசியாவில் ஆயா கொட்டகையில் பிள்ளைகளை உறங்க வைக்க தோட்டங்களில் ஏதோ சில ஆயாக்கள் தாலாட்டுப் பாடல்களைப் பாடியதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். முத்தம்மாள் இந்த நூலில் ஒரு சில தாலாட்டுப்பாடல்களைப் பதிவு செய்துள்ளார். பெரும்பாலும் அவருடைய உறவினர்கள் பாடியதை மீட்டுணர்ந்தே தாலாட்டுப் பாடல்களை எழுதியுள்ளார்.

bookreview2

பெண்ணின் முதல் மகப்பேறு தாய்வீட்டில்தான் நடக்கும். இது மனநலம் உடல் நலம் கருதி மரபு வழியாக சமூகத்தில் உருவான ஒரு பழக்கமாகும். மகப்பேறு காலம் முடிந்து தாய் வீட்டை விட்டு கணவன் வீடு செல்லும் முறை பொண்ணுக்கு தாய் மாமன் ஆச்சி மாட்டைத் தருவார். மகள் வீட்டுக் குழந்தை ஆரோக்கியமாக வளர தாய் வீட்டுச் சீதனமாக மாமன் தரும் ஆச்சி மாட்டுக்கு ஒரு தாலாட்டுப் போன்ற பாடலை முத்தம்மால் இணைத்துள்ளார்.

உன் மாமன் கொடுத்தாச்சி கண்ணே

மலையேறி மேய்ந்து வரும் அதை

ஓடித் திருப்பையிலே உனக்கு

ஒருகால் சிலம்புதிரும்

சிலம்போ சிலம்பு என உன் மாமன்

சீமையெல்லாம் தேடி வாரார்

 

உன் மாமனுட கொல்லையிலே

மானு வந்து மேயுதடா- அதை

மறித்துத் திருப்பையிலே உனக்கு

மறுகால் சிலம்புதிரும்

சிலம்போ சிலம்பு என உன் மாமன்

சீமையெல்லாம் தேடி வாரார்

இப்படியா அப்பாடல் மாமன் கொடுத்தனுப்பிய தாய் வீட்டு சீதனமான ஆச்சி மாட்டைப் பற்றியே பாடப்பட்டுள்ளது. மேலும் தனக்குச் சொந்தமான தன் வீட்டில் குழந்தைகளுக்காக தன் அம்மா பாடிய சில பாடல்களையும் இங்குப் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முத்தம்மாள் அவர்கள் வெள்ளைக்காரரைத் திருமணம் செய்து கொண்டதால், அவருடைய அம்மா தன் பேரனுக்கு வெள்ளைக்காரர்கள் மீது வெறுப்பைக் காட்டுவது போல தாலாட்டுப் பாடல் பாடியிருப்பதாக முத்தம்மாள் இன்னொரு பாடலையும் இங்கே பதிவு செய்துள்ளார்.

“டூ டூ வெள்ளைக்காரன்

துப்பாக்கி வெள்ளைக்காரன்

மாடு தின்னும் வெள்ளைக்காரன்

மாயமாய் போவானாம்”

எனும் அப்பாடல் வெள்ளையர்களின் காலனிய ஆதிக்கத்தை எதிர்த்து வெளிப்படும் வெறுப்பாகவே பதிவாகியுள்ளது. இது நாட்டுப்புறப்பாடல் எனச் சொல்வதில் தயக்கம் இருக்கிறது. காரணம் காலனிய ஆதிக்கத்திற்குப் பிறகு சமூகம் தனது பண்டைய அடையாளத்தை இழந்து புதிய அரசியல் நிலப்பரப்பிற்கு ஆளாகிறது. அந்தக் காலக்கட்டத்தில் பாடப்படுவதை எப்படி நாட்டுப்புறம் என அடையாளப்படுத்த முடியும்?

 

  1. விளையாட்டுப் பாடல்கள்

இந்த வகையான பாடல்கள், குழந்தைகளுக்கு விளையாட்டுக் காட்டுவதற்குப் பாட்டிமார்கள் பாடும் பாடலை விளையாட்டுப் பாடலாகத் தொகுத்துள்ளார் முத்தம்மாள். மேலும் குழந்தைகளின் சுட்டித்தனங்களைக் கண்டு அவர்களைக் கொஞ்சுவதற்காகப் பாடப்பட்ட பாடல்களும் இடம்பெற்றுள்ளன. சிறுவர்கள் விளையாடும் போது பாடும் பாடல்களும் நாட்டுப்புற விளையாட்டுப் பாடல்கள் என சில வகைமாதிரிகளை இந்தப் புத்தகத்தில் தொகுத்துள்ளார்.

  • 5 கல் விளையாட்டு
  • கல்வி விளையாட்டு
  • கண்பொத்தி விளையாட்டு
  • தட்டாமலை சுற்றுதல் என அனைத்து விளையாட்டுக்களுக்கும் ஒரு பாடலை அறிமுகப்படுத்துகிறார்.

நாட்டுப்புறச் சூழலில் இந்த விளையாட்டுகளெல்லாம் இருந்திருக்குமா என்பதே கேள்வியாக இருக்க, இருப்பினும் நம் அடுத்த தலைமுறைகளுக்கு இதுபோல விளையாட்டின் மூலம் பாடல்களை அறிமுகப்படுத்த இயலும் என நினைக்கிறேன்.

நொண்டியடித்து விளையாடும்போது பாடப்படும் பாடல்:

நொண்டி நொண்டி நொடிச்சுக்கோ

வெல்லம் தாரேன் கடிச்சிக்கோ

துள்ளித் துள்ளி ஓடிக்கோ

கொள்ளுத் தரேன் கொறிச்சுக்கோ

எட்டி எட்டி குதிச்சுக்கோ

சட்டி தாரேன் கவிழ்த்துக்கோ

பிடிச்சுக்கோ – பிடிச்சுக்கோ

 

  1. கிராமியப் பாடல்கள்

நாட்டுப்புறப்பாடல்கள் பிரதிபலிக்க முயல்வதே கிராமியம் சார்ந்த வாழ்வைத்தான். ஆகவே கிராமியத்தைக் கொண்டாடக்கூடிய பாடல்கள் அதிகமாகவே புகுத்தப்பட்டுள்ளன. கிராமத்தில் ஆடு மேய்க்கும் பெண்கள் பாடும் பாடல்கள், கிராமத்து வண்டிப்பாடல்கள், வயலில் பாடப்படும் பாடல்கள், கும்மிப் பாட்டு, கரகப்பாட்டு, குமரிப் பெண்கள் மாமன்மார்களைக் கேலி செய்து பாடும் பாட்டு என கிராமிய வாழ்வை ஒவ்வொரு பகுதியாகப் பிரித்து தனித்துக் கொண்டாடக்கூடிய பாடல்கள் அப்பொழுதிலிருந்தே பாடப்பட்டு வருகின்றன.

சமூகத்தில் எப்பொழுதும் ஒழுக்க மீறலுக்குத் தண்டனைகளும் உபதேசங்களும் புறக்கணிப்புகளும் தாரளமாகவே இருப்பது வழக்கமாகும். ஆனால் கிராமிய வாழ்வியலில் ஒழுக்க மீறல்களுக்கான தண்டனைகள் கடுமையானதாகவும் மதத்தின் புனிதம் கெடாமலிருக்கும்படி கடவுளின் பெயரில் தண்டனைகளை வழங்குவதும் எனக் கேள்விப்பட்டிருக்கிறோம். முத்தம்மாள் பழனிசாமி இந்தப் புத்தகத்தில் நமக்கு அறிமுகபடுத்தும் ஒழுக்க மீறலுக்கான தண்டனை மிகுந்த நகைச்சுவையுடன் சொல்லப்பட்டிருக்கிறது.

ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்த வண்ணானும் வண்ணாத்தியும் தினமும் துணிகளைத் துவைப்பதற்காக ஆற்றங்கரைக்குச் செல்வதுண்டு. வண்ணாத்திக்கும் அங்கு ஆடு மேய்க்க வரும் இடையனுக்கும் கள்ளக் காதல் இருக்கிறது. ஆகையால் அவள் தினமும் இடையனுக்குச் சமைத்து அதை வைக்க, வண்ணானுக்குத் தெரியாமல் இடையன் அதைச் சாப்பிட்டுவிடுவான். இந்தச் செயல் வண்ணானுக்குத் தெரிந்ததும் அவன் கொடுக்கும் தண்டனையில் உள்ளம் தெளிந்து திருந்திவிடுவதாக அப்பாடல் மூன்று கட்டங்களாகப் பாடப்படுகிறது.

இடையனுக்குச் சமைத்த உணவை வைத்துவிட்டு, அவன் அறிந்துகொள்ளும்படி வண்ணாத்தி இப்படிப் பாடுகிறாள்:

ஆக்கி அரிச்சி வச்சேன் ஆஹூம்

அட்டாவியில் எடுத்து வச்சேன் ஆஹூம்

பருப்பைக் கடைந்து வச்சேன் ஆஹூம்

பசு நெய்யை எடுத்து வச்சேன் ஆஹூம்

 

அதைக் கேட்ட இடையனும் குறிப்பறிந்து அவள் ஆக்கி வைத்த உணவை ஒளிந்து நின்று சாப்பிட்டுவிடுகிறான். இப்படிப் பல நாட்களாக நடக்கும் கள்ளக்காதலை வண்ணான் ஒருநாள் அறிந்துகொள்கிறான். இடையனுக்குப் பாடம் புகட்ட எண்ணி, வண்ணாத்தி சமைத்த வைத்த உணவைச் சாப்பிட்டுவிட்டு, அதில் தன் மலத்தைக் கழித்து வைக்கிறான்.

மலத்தைக் கழித்து வைத்துவிட்டு ஆற்றில் துணி துவைத்துக்கொண்டே வண்ணான் இப்படிப் பாடுகிறான்:

சாடை அறிஞ்சிகிட்டேன் ஆஹூம்

சாணத்தைப் போட்டு வச்சேன் ஆஹூம்

நானும் தெளிந்துவிட்டேன் ஆஹூம்

நரகலையே போட்டு வச்சேன் ஆஹூம்

அவசரத்தில் அங்கு வந்து சேரும் இடையன் பானையிலுள்ள வண்ணானின் மலத்தைத் தின்றுவிடுகிறான். தின்றுவிட்டு புத்தித் தெளிந்துபோன இடையன் பதிலுக்குப் பாடுகிறான்:

வகையாக மாட்டிக்கிட்டேன் கூவே கூவே

வண்ணானின் மலத்தைத் தின்னேன் கூவே கூவே

புத்தி தெளிந்ததடா கூவே கூவே

பொண்ணாசை விட்டதடா கூவே கூவே

மேலும் இது போன்ற பாடல்கள் அரவாணிகளின் வாழ்வு, சோகம் என அவர்களின் உலகைச் சொல்வதாகவும் பாடப்பட்டுள்ளன. நாட்டுப்புறப்பாடல்கள் வெறும் கொண்டாட்டங்களை மட்டும் முன்னெடுக்கவில்லை, வாழ்வின் அடித்தட்டு மக்களின் துயரப்பட்ட வாழ்வையும் பாடிக்காட்டும் களமாக இருந்திருக்கிறது என இம்மாதிரியான பாடல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

 

  1. பால்காட்டுப் பாடல்கள்

இந்தியாவிலிருந்து தோட்டக்காட்டில் வேலை செய்வதற்காகக் கொண்டு வரப்பட்ட மக்களுடைய துயரத்தையும் வலியையும் வாழ்வையும் சொல்வதாக இந்த வகை பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. மேலும் இந்தப் பால்காட்டுப் பாடல்களைப் பாடியவர்கள் பெண்கள்தான் அதிகம். பால்வெட்டுத் தொழிலின் போதும், வெளிக்காட்டு வேலையின் போதும், பெண்கள் அனுபவிக்கும் துன்பத்தை அவர்கள் பாடலாகப் பாடுவது போலவே முத்தம்மாள் கொடுத்துள்ளார்.

கங்கானிமார்களின் சர்வதிகார முறைக்கு ஆளாகிச் சுரண்டபட்ட பெண்கள் ஏராளம். அவர்களின் இயலாமைக்கு ஒரு விலை வைத்திருக்கும் கங்கானிமார்களான அதிகாரத்தின் இடைத்தரகர்களாகச் செயல்பட்டவர்களின் மீதான கோபத்தை வெறுப்பை முழுக்கவும் பாடலின்வழி வெளிப்படுத்தியவர்கள் பால்காட்டில் வேலை செய்த பெண்களே. மேலும் கள்ளுக்கடை பாடல்கள், தோட்டக்காட்டுப்பாடல்கள் என தோட்டப்புறம் சார்ந்த அனைத்தையும் இந்தத் தொகுப்பில் காண முடிகிறது.

 

பால்காட்டுப் பாடல் 2

காலையில் வந்துட்டாண்டி

கருப்புச் சட்டைக் கங்காணி

 

 

கே.பாலமுருகன், 2011

Share Button

About The Author

Comments are closed.